Sunday, January 19, 2020

பாசண்டச் சாத்தன் - 12

இனிப் பூரணை, பொற்கலை எனும் 2 வேறு மனைவியரைப் பார்ப்போம். இருவரும் இந்திரன் மக்களென முன் சொன்னது, பெரும்பாலும் பழன (புராண) வழிப் பட்ட  புனைவு உத்தியாகவே தெரிகிறது. ஏனெனில் பெரும்பாலான பழனங்கள் சான்றிலாக் கற்பனையே பேசும். 

மற்கலி கோசாளர் ஒரு துறவியா என்பதும் கூட ஆய்விற்கு உரியதே. கி.மு.800-600 களின் முனிவர் போல் அவர் தெரிகிறார். பழங்கால வேத முனிகளுக்கு குரு பத்தினிகள்/ மனைவிகள் இருந்தது போல் வேதமறுப்பு அறிவருக்கும் இருந்திருக்கலாம், வேத மறுப்பார் எல்லோருமே துறவிகள் என்பது ஒரு பால் கோடுதலாகும். 

மகாவீரர், புத்தரிடமிருந்து கோசாளரை வேறுபடுத்திக் காட்டுவது ”ஹாலாஹலா” என்ற பெண்ணோடு அவர் தொடர்புற்று வாழ்ந்ததே. அந்தக் குயவர் பெண்ணை தாசியென்று கூடப் புத்த, செயின ஆவணங்கள் பழித்துரைக்கும்.

இந்த நிலை ஏசு கிறித்துவிற்கும் கூட எழுந்தது. கடைசி நாள் வரை ”மேரி மக்தலேனா” எனும் சீடத்திப் பெண்  அவர் வரலாற்றில், ஏனென்று தெரியாதபடி வருவாள். அவளுக்கும் ஏசுவுக்கும் என்ன உறவு? - என்பதும் நமக்குத் தெரியாது. பிற்றைக் கத்தோலிக்கமும், ஏசுவின் சீடரும், அவளைத் தாசியென்றே சொல்வர். ஆங்காங்கு அவளைக் கதையில் தொட்டு, அதே போது கூடவே ஒதுக்கி, விவிலியப் புத்தாகமம் (New Testament) செல்லும். 

(கி.பி 500 க்கு முந்தைய, கத்தோலிக்க மதம் வலிமை பெறுவதற்கு முந்தைய) பல்வேறு ஆவணங்களை ஆய்ந்து, ”மரபார்ந்த யூதத்தை மாற்ற விழைந்த  யூதகுரு (Rabbi) போல் ஏசு இல்லற வாழ்வு நடத்தினார்” என்று சில ஆய்வர் சொல்வர். 

மேரி மக்தலேனாவை சீடப்பெண் என்றும், மனைவியென்றுங் கூடச் சொல்வர். (கிறித்துவ உலகில் 100 க்கு 98 பேர் மனைவி என்ற குறிப்பை ஏற்றதில்லை.) இயேசுவைக் குறுக்கில் (cross) அறைந்த பின் உரோமர், மரபுசார் யூதகுருமார் கையில் சிக்காது மேரி மக்தலேனாவும், ஏசுவின் குழந்தைகளும் தப்பி பிரான்சுக்கு ஓடியதாக ஒரு நுணவ (minority) மரபுண்டு.

மற்கலி வாழ்விலும் இது போல் ஒரு கதையுண்டு. ”ஒழுக்கங் குறைந்து, தாசி ஹாலாஹலா வீட்டில் மற்கலி தங்கினார்” எனப் புத்த, செயின ஆவணங்கள் சொல்லும். 

”புது நெறி போதித்தவர் ஒழுக்கக் குறைவோடு இருக்க வாய்ப்பு இல்லை” என்ற ஏரணத்தையும், அவரை நாடிப் பல்லாயிரவர் திரண்டதாய், அதே ஆவணங்கள் கூறுவதையும் பார்த்தால், ஒரு வேளை ஹாலாஹலா என்பாள் மற்கலியின் மனைவியோ? - எனுஞ் சிந்தனை நமக்கு எழுகிறது. 

ஏனெனில் புத்தரோடும், மகாவீரரோடும் ஒப்பிடப்படும் ஒருவர் துறவு பூணாததே அவரின் பின்பற்றிகளுக்கும், எதிரிகளுக்கும் பெருத்த சங்கடத்தை விளைத்திருக்கும். (நம்காலத்தில் நடந்த பெரியார்- மணியம்மை திருமணமும் இதுபோல் சிக்கலைப் பலருக்கும் கொடுத்தது. அம் மணத்தால் பெரியாரைப் பழித்தோர் ஏராளம். அதில் பின்பற்றிகள், எதிரிகள் என இருவரும் உண்டு.)

சரி, அது என்ன விந்தைப்பெயர் ”ஹாலாஹலா”? - எனுங் கேள்வி அடுத்தெழும். நிலவின் வாகு நிலையைக் (phases of moon) கலை என்றும், திகழி> திதி என்றும் தமிழில்  சொல்வார். 30 திகழியில் முதற்கலை, அமையுவா (=அமாவாசை) என்றும், 15 ஆம் கலை பூரணை (=பௌர்ணமி) என்றும் சொல்லப்படும். 

முழுவொளி பெற்ற பூரணை நிலவு நாள், பொல்+ கலை= பொற்கலை ஆகும். இதைப் பால் நிலவென்றுஞ் சொல்வர். கன்னடப் பலுக்கில் ”பால்” ஹாலு ஆகும். (தக்கணப் பாதையின் தெற்கு நீட்சி  கருநாடக வழியில் தான் நடந்தது.) தமிழியப் பலுக்கலில் ஈர் உயிருக்கு இடைப்பட்ட ககரம் இயல்பாய் மெலியும்.

எனவே இரு திரிவையும் சேர்த்துப்பார்த்தால் பொற்கலை= பால்கலை> ஹாலுகலா> ஹாலுஹலா> ஹாலாஹலா என்று வடக்கே இச்சொல் போகும் போது நடக்கக் கூடியதே. நான் புரிந்துகொண்ட வரை பொற்கலையும் பால்கலையும் ஹாலாஹலாவும் ஒன்றே.

பூரணை எனும் இன்னொரு தேவி பற்றி அறியப் பூரணகாயவர் பற்றி அறிய வேண்டும். மற்கலிக்கு மூத்தவரான பூரணர் மற்கலியின் அறிவரணியில் இரட்டை போலவே இயங்கினார். (புத்த நூலான சம்யுக்த நிகாய வழி இதை விளங்கிக் கொள்கிறோம்.) 

மற்கலியின் நியதி வாதமும், பூரணரின் இயல்பு வாதமும், பக்குடுக்கைக் கணியாரின் அணுவியமும் ஒன்றுசேர்ந்தே அற்றுவிக நெறி என்ற பொதுநெறி எழுந்தது. மற்கலியின் பணிக்கால நடுவில் பூரணர் இறந்து போனார். ஆனால் அற்றுவிக முழுமைக்கும் காட்டு யாரெனில், எல்லோரும் பூரணரை மட்டுமே அடையாளங் காட்டுவர். இது செயின ஆவணங்களின், புத்த ஆவணங்களின் வழி பெறப்படும் செய்தியாகும். 

கி.பி. 450 இல் எழுந்த மணிமேகலையிலும், நீலகேசி (கி.பி.900) , ஹரி பத்ராவின் ”சத்தர்சன சமுச்சயம்” என்ற புத்த நூலின் உரையான குண ரத்னாவின் ”தர்க்க ரகசிய தீபிகா” நூலிலும் ( கி.பி1400 ) பூரணரின் நுண்மாண் நுழைபுலம் (பூரண அறிவு = எல்லாமறிந்த நிலை) விதந்து பேசப்படும். ஒருவேளை 96 வேதமறுப்பு நூல்களை அவர் கரைத்துக் குடித்திருந்தார் போலும். அதனாற்றான் இந்த இலக்கியங்களில் வரும் ஆசீவிக வாதங்களுக்கு அவரே முன்னவர் ஆகிறார். 

பூரணர் என்பது பழந்தமிழில் இயற்பெயர் போல்  தெரியவில்லை. காரணப் பெயராகவும் பட்டப் பெயராகவும் (title) தெரிகிறது,  குணமும் குணியும் (குணம் உள்ளவர் குணி) பிரிக்கமுடியா என ஆசீவகம் சொன்னதாய் ”மேகலை” சொல்லும். காயவர்> காசபர் (kAssapa) என்பது குடிப்பெயர் ஆகலாம்.  பூரணர் இடமாய் குக்குட மாநகர் (குக்குடம் = கோழி. உறையூர் = கோழியூர்> சோழியூர்) சொல்லப்படும். முன்சொன்ன பிடவூருக்கு அருகில் இப்பெருநகர் உள்ளது.

குணம்/ குணி என்ற எடுகோளில் ”குணம் எவ்வகையிலும் ஆளுமைப் படுத்தப் படலாம்” என்று சொல்வர்.  பிற்கால ஆசீவிகரிடம் பூரணரின் ஆணாளுமை மறைந்து பெண்ணாளுமையாய் அது உருவகிக்கப் பட்டது போலும். 

பூரணை என்ற தேவி, கோசாளருக்கு அணிமையாய், பூரணத் தன்மையோடு உருவகிக்கப் பட்ட வடிவம். விண்ணவத்தில் பெருமாளை உருவகிக்கும் போது ஒரு பார்வையில் இலக்குமன், இராமன், சீதை எனவும்,  இன்னொரு பார்வையில்  (இலக்குமி என்ற) சீதேவி,  இராமன், பூதேவி எனவும் அமையும்.

(தென்னக விண்ணவத்தின் மறுபளிப்பான) வட பாகவதச் சமயத்தில் இராம, இலக்குவ சீதை பாவமே பலருக்கும் முன்வரும் வடிவாகும். சத்திய பாமா, கண்ணன், உருக்குமினி படிமம் அவரில் பெரிதும் குறைந்திருக்கும். இதற்கு மாறாய்த் தெற்கே சீதேவி, பூதேவி, பெருமாள் சேர்ந்த படிமம் அதிகமாயும், இலக்குமன், சீதை, இராமன் சேர்ந்த படிமம் குறைவாயும் விரும்பப்படும்.

பொதுவாகத் தெற்கே, எந்தப் படிமத்திற்கும் 2 தேவியர் என்ற கருத்தீடு ஊடு வருவது அதிகம்.. பிள்ளையாருக்குக் கூடச் சித்தி, புத்தி எனப் பெண் அடையாளங்களைச் சொல்வர். எனவே பூரணரைப் பூரணையாகப் படிமங் கொள்ளும் கருத்தீடு தென்னகத் தாக்கம் கொண்டது. பூரணை, புட்கலை பற்றிக் கந்த புராணத்தில், கச்சியப்பர்,

காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

என்பார். சில ஐயனார் கோயில்களில் 2 தேவியரின்றி ஐயனார் திருநிலை தனியாகவும் உண்டு. சிலவற்றில் அகவை முதிர்ந்த தோற்றமும், சிலவற்றில் புனிற்றிளமைத் தோற்றமும் காட்டப்படும். பின்னால் 13/14 ஆம் நூற்றாண்டில் ஆசீவிக நெறி என்பது இடந்தெரியாமல் அழிந்த பின், புனிற்றிளம் தோற்றங் காட்டும் பந்தள நாட்டின் ஐயப்பன் கதை ஏற்றப் பட்டது போலும். அது எப்படி, ஏன் நடந்தது? - என்ற ஆய்வை நான் செய்ததில்லை. யாராவது செய்தால் சிறக்கும். கட்டாயம் அது பின்னால் வந்த கதை.

அன்புடன்,
இராம.கி.

No comments: