Tuesday, April 29, 2025

ஒரு நாத்திகரும் அல்குலும்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்

கண்ணில் நல் அஃதுறுங் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்பது ஞான சம்பந்தரின் 3 ஆம் திருமுறையில் வரும் 24 ஆம் பதிகத்தின் முதல் பாடல். 

தமிழ்முறைத் திருமணங்களில் தாலிகட்டல் முடிந்தபின்  ”இல்லற வாழ்வு தொடங்கும் இருவரும் எதிர்காலத்தில் சிறக்க வாழும்படி சொல்லி, இப் பதிகத்தின் முதல் பாட்டான இதை திருமணத்தை நெறிப்படுத்துவோர் பாடுவார். பதிகத்தின் மிஞ்சிய 10 பாடல்களும் இதே கருத்தில் போகும். நற்பொருள் சொல்லும் இப்பதிகத்தை (குறிப்பாய் இதில் பயிலும் தமிழ்ச் சொற்களின் பொருள்களை) ஒழுங்காய் விளங்கிக் கொள்ளாது ஒரு நாத்திகர் தன் அரைகுறைப் புரிதலால், முட்டாள்தனமான உந்தலால், பதிகத்தினுள் முறையற்ற (ஆபாச) காமச் சொற்கள் பயில்வதாய்ச் சொல்லியிருந்தார். கீழே ஆங்கிலத்தில் வந்த கருத்தை படியுங்கள்.. 

----------------

In the following poems, 'Dravida Shishu' Thiru Gnana Sambandhar, a Brahmin sage, is appealing to the youngsters attracted to Buddhism and Jainism. "What do you have in these religions? You have to live a dry, womanless life there. Come to Shaivism.  My Lord himself is with a beautiful woman with big breasts, slender waist, long vulva and great character. No celibacy is needed here. You can live happily in our religion." 

---------------

தமிழ் அறியாத பல நாத்திகர் இது போன்ற தவறான புரிதலில் இப்போதும் இருக்கலாம். இக்கூற்றிற்கான காரணம் வேறொன்றுமில்லை.  

மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல

கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,

சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்

பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!     6

எனும் 6 ஆம் பாட்டில் ”அல்குல்” என்ற சொல் வந்துவிட்டதாம்; சம்பந்தர் கெட்ட வார்த்தை எல்லாம் பயின்று புத்த, செயின மாணவரை சிவ நெறிக்குள் அழைப்பதாய் இந்த  நாத்திகர் அலறுகிறார். (கந்தனுக்குப் புத்தி கவட்டிற்குள்ளே ” என்ற சொலவடை நாட்டுப் புறங்களில் உண்டு.) 

இப் பதிகமெழுந்த வரலாற்றையும் சூழ்நிலையையும் குறிப்பிட்ட நாத்திகர் அறியார் போலும். பாட்டெழுந்த காலத்தில் சம்பந்தருக்கு 14-15 அகவை இருந்திருக்கலாம். திருமறைக்காட்டுக் கோயிற் கதவைத் தம் பதிகங்களால் திறந்து மூடிய அப்பர் சம்பந்தரின் அருளிச் செயல்களுக்கு அப்புறம், அவரவர் வழியில் ஏகுவார். பாண்டிய அரசி மங்கையர்க்கரசி, முதலமைச்சர் குலச்சிறையார் ஆகியோரின் அழைப்பை ஏற்று மறைக்காட்டில் இருந்து  சம்பந்தர் மதிரைக்கு ஏகுவார். 

மதிரையில் செயினரோடு வாதாடி, வெற்றி கொண்டு, அடுத்த நாள் ஒரு சிவமடத்தில் சம்பந்தர்  தங்கியிருந்த போது அவருடைய தந்தை சிவபாத இருதயர் அங்கு வந்துசேர்வார். தந்தையைப் பார்த்த சம்பந்தருக்குச் சொந்த ஊரான சீர்காழியின் இறைவர் நினைப்பு வந்துவிடும்.பதிகப் 11 பாடல்களிலும்  ”சட்ட நாதன் எப்படி இருக்கார்? நலந்தானே?” என்று குறும்போடு இறைவனைப் பற்றிச் சம்பந்தர்  பேசுவார். 

நினைவில் கொள்க. தம் தந்தையாருக்கு முன்னால் சீர்காழி இறைவரை நினைந்து மதிரையில் சம்பந்தர் பாடும் பாட்டு இதுவாகும். தந்தைக்கு முன்னால் 14-15 அகவையில் உள்ள இளைஞர், அதுவும் ஒரு துறவி, காம எழுச்சியில் விழைவோர் சூழப் பாடுவாரோ? அப்படியோர் இழிந்த எண்ணம் இந் நாத்திகருக்கு ஏன் வந்தது? புரியவில்லை. ஒருவேளை விக்டோரிய காலத்துப் பழக்கமோ?

”அல்குல்” என்ற சொல்லுக்குப் பெண்குறி என்ற பொருள் திரிகடுகத்தில் தான் முதலில் எழுந்திருக்கிறது. சங்க காலத்தில் அப்பொருள் இல்லவே இல்லை. சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் கூடப் பெண்குறிப் பொருள் இல்லை. சீவக சிந்தாமணியில்  116 இடங்களில் அல்குல் பயின்றாலும் அது எந்தெந்தப் பொருள்களில் என்று நான் ஆயவில்லை. 

சங்க காலத்தில் அல்குலைப்  பயில யாரும் தயங்கியது போல் தெரியவில்லை. வெகு இயல்பாகவே இச்சொல்லைக் கையாண்டுள்ளார். தவிர, அல்குல் உறுப்பு பெண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண்களுக்கும் உண்டு. மாந்தவுடம்பில் ஒக்கல் (hip) என்றும், இடுப்பு (waist) என்றும் 2 வேறு இடங்களுண்டு. இடுப்பிற்கும் வயிற்றுக்கும் கீழே ஒரு முக்கோணம் போல் காட்சியளிக்கும், சற்று மேடான  உறுப்பே அல்குலாகும். இதிலிருந்து தான் 2 தொடைகளும் மாந்தருக்கு வெளிவந்து நீள்கின்றன. முன்னும் பின்னும் புடைத்து நிற்கும் இப் பகுதி அல்குலாகும்.தவிர, அல்குலின் பின்பகுதி புட்டமாகும்.   

இருப்பினும், இற்றை அகராதிகளில் பெண்குறிப் பொருள் கொடுத்திருப்பது உண்மை தான். சங்கம் மருவிய காலத்தில் (பொ.உ.4 ஆம் நூ.வில்) ஓர் இடக்கரடக்கலாய்ப்  பெண்குறிப் பொருள் எழுந்திருக்கலாம். ஒரு தமிழ்ப் பாட்டில், உரையில் அல்குல் என்ற சொல்லைக் கண்டவுடன், இடம், பொருள் ஏவல், காலம் பார்க்காமல் பெண்குறிப் பொருள் கொள்வது வடிகட்டிய முட்டாள்தனம். பாடலின் சூழ்நிலையைப்  பார்க்க வேண்டாமா? அல்குல் என்பதை இக்காலத்திற் பலரும் சொல்லத் தவிர்ப்பதோடு தப்பாகவும் புரிந்து கொள்கிறோம். பல அகரமுதலிகளிலும் தப்பான பொருளையே கொடுத்துள்ளார். உடற்கூறியல் தெரிந்தவர் இது போல் தவறாய்ச் சொல்ல மாட்டார்.  

சரி, சொல்லின் சொற்பிறப்பியல் பார்ப்போம். உல்> ஒல்> ஒல்கு> அல்கு> அல்குதல் = ஒடுங்குதல், சுருங்குதல், சிறுத்தல். சங்க காலத்தில் துளைப் பொருளை யாரும் இதற்குப் பொருத்தியதில்லை. அல்குதல் என்பது இன்னும் திரிந்து அஃகுதல் (= ஒடுங்குதல், சுருங்குதல்) என்ற சொல்லும் எழும். அல்குதலோடு இன்னும் 2 சொற்களை நிகண்டுகளில் சொல்வர். முதற்சொல் கடிதடம்; இச்சொல் எப்படி எழுந்தது? கடி = இடுப்பு; தடம் = உயர்/மேல் இடம். கடிதடம் = இடுப்பை ஒட்டியுள்ள உயர்ந்த, மேலான இடம். இங்கே பெண்குறிப் பொருள் இல்லை. அடுத்தது நிதம்பம். இதன் பொருளும் உயரிடம் தான்

இனியாவது நாத்திகர்கள் தமிழ் படிக்கட்டும்.

Tuesday, April 08, 2025

கவடி> கbaடி

 கவள்>கவள்+து = கவட்டு என்பது நம் உடம்பில், இடுப்பிற்குக் கீழே இரண்டாய்ப் பிரியும் மூட்டுப் பகுதியைக் குறிக்கும். வேடிக்கைச் சொலவடையாய் “கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே” என்கிறோம் அல்லவா? கவட்டு என்பது கவடு என்றும் சுருங்கும், கவட்டை என்றும் நீளும். கவட்டியென்றும் திரியும்.

எந்நேரமும் கூடும் கவட்டைப் போலவே ஒரு அணியினர் வியகம் (>வ்யூகம்) வகுத்து ”மறு அணியிலிருந்து பாடிக்கொண்டே ஏறி வருபவனைக் (ஏறாளி = rider)” கவைத்து அமுக்கிக் கட்டிப்போடும் ஆட்டத்தைக் கவடி என்கிறோம். எதிரணிக்காரன் பாடிவரும் பாட்டிலும் கூடக் “கவடி, கவடி” என்ற சொல் விடாது சொல்லப்படும். கவடி>கbaடியாகி இன்று இந்தியத் துணைக் கண்டம் எங்கணும் பரவி நிற்கிறது. 

கவடிப் பிடிப்பால் அந்த விளையாட்டிற்குப் பெயர் ஏற்பட்டது.

Friday, January 24, 2025

இணையதளம் தொடர்பான சொற்கள்

 நண்பர் @Udhaya sankar தன் இடுகையில் சில சொற்களைக் கொடுத்து:

----------------------

இணையதளங்களை தமிழில் உருவாக்க நடைமுறை சிக்கல்கள்.  நான் பார்த்தவரை

Menu

Faq's

Features

Hear It

Tutorials

Promote

Timeline

Get in Touch

Stock Photos

Vector Images

அதிகம் தேவைப்படும் இது போன்ற வார்த்தைகளுக்கு எளிமையான தமிழ் வார்த்தைகள் நான் பார்த்தவரை இல்லை

 ------------

என்று கேட்டிருந்தார். கீழே வருவது என் பரிந்துரை.

--------------------

Menu = நுவநை [இன்னின்ன இதில் அடக்கம் என நுவலும் உணவுப் பட்டியல்; நுவ(ல்)நை]

Faq's = அகேவி (அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்)

Features = படிதோற்றுகள் (வினைத்தொகையாய்ப் புரிந்துகொள்க.) 

Hear It = கேட்கவும்

Tutorials = சொல்லிக் கொடுப்புகள்

Promote = முன்நகர்த்து.

Timeline = காலக்கோடு

Get in Touch = தொடுப்பில் வருக.

Stock Photos = அஞ்சறைப் படங்கள்

Vector Images = வேயர்

வேயருக்கான விளக்கம். 

தென்பாண்டி நாட்டில் அக்காலத்தில் திறந்து கிடக்கும் (மாட்டு)வண்டிகள் பாரம் தூக்குவதற்கும், (மாடு அல்லது குதிரை இழுக்கும்) கூட்டு வண்டிகள் ஆட்களைக் கொண்டு செல்வதற்கும் பயனாகின. பெருந்தனக்காரர் வீடுகளில் 60/70 ஆண்டுகளுக்கு முன் கூட்டுவண்டி இலாத வீடே இருக்காது. கூட்டு வண்டியையே ஆங்கிலத்தில் wagon என்றார். மூங்கிற் கூரை கொண்டு வேயப்பட்ட வண்டி. ”கூட்டுவண்டி, வேய்ச்சகடு, வேய்வண்டி” என்று நம் மரபிற் சொல்லப் பெறும். பல நாட்டுப்புற வீடுகளில் வண்டியில் இருந்து கூட்டைக் கழற்றிப் பண்ணையிற் போட்டு வைத்திருப்பார். தேவைப்படும் போது, திறந்த வண்டியில் மூங்கிற் கூரையை எளிதாக மாட்டி ஆட்களைக் கொண்டுசெல்லும் வகையில் மாற்றிவிடலாம். ஆட்களைக் கொண்டு செல்வது (to carry) என்றாலே வேய்தல் வினை வேய்மாடம் போன்றவை உடனே வந்துவிடும். வேய்ச் சகட்டிற்குத் தேவையான மூங்கிலின் குச்சி, அம்பிற்கும் கூடப் பயன்படும்.  மூங்கிலைக் குறிக்கும் இன்னொரு சொல் வேய் ஆகும். அதோடு எச் சகட்டுப் பயணமும் (வண்டிப் பயணமும்) ஒரு திசை நோக்கியே அமையும். திசை, தொலைவு, கூடுகை என்ற மூன்று தன்மைகளையும் உணர்த்தும் சொல் வேய்> வேயர் என்றாகும் தொடர்புள்ள ஆங்கில விளக்கத்தைக் கீழே தருகிறேன்.

[ vector = "quantity having magnitude and direction," 1704, from L. vectophysics) r "one who carries or conveys, carrier," from pp. stem of vehere "carry, convey" (see vehicle) - vehicle 1612, "a medium through which a drug or medicine is administered," 1615 in the sense of "any means of conveying or transmitting," from Fr. véhicule, from L. vehiculum "means of transport, a vehicle," from vehere "to carry," from PIE *wegh- "to go, transport in a vehicle" (cf. O.E. wegan "to carry;" O.N. vegr, O.H.G. weg "way;" M.Du. wagen "wagon;" see wagon). Sense of "cart or other conveyance" first recorded 1656.]}


Wednesday, January 01, 2025

காரணம்

 குல்>குரு->கரு->கரு-த்தல் என்பது தோன்றல் கருத்து வேர். இது பின்னால் அரும்புதலையும் செய்தல் கருத்தையும் சுட்டும் வண்ணம் விரிந்தது. தமிழரின் நிறமாய் நெடுங்காலம் கருப்பையும் ஊடே சிறு வகையில் சிவப்பையும் சொல்வர். உடல் உழைப்பு கூடக்கூடக் கருத்த தோல் மேலும் கருக்கும். சிவத்த தோல் மேலும் சிவக்கும். கருமம், கருக்குதல் போன்றவை செயலைக் குறிக்க எழுந்த பெயர்ச் சொற்களாகும். செய்தற்கு உரிய ஓர் உடல் உறுப்பான கையை கரமென்றும் சொல்வோம். கரணம் என்பது செய்முறையையும், செயலையும் குறிக்கும். கரணி என்பவன் செய்பவன் ஆவான். கரதலம் = கைத்தலம். 

கரு->கார்->காரம் என்பது இன்னொரு இயல்பான வளர்ச்சி. தரு->தார்->தாரம், வரு->வார்->வாரம் என்பது போல் இதுவும் அமையும். காரம் = செயல், தொழில். காரன் = செய்பவன். தொழிலன். சங்கதத் தாக்கத்தால் காரம்>கார்யம்> காரியம் என்று வடதமிழில் (பாகதத்தில்) இது திரியலாம். இன்னும் சிலர் கார்+இயம் = காரியம் என்று இதைக்கொண்டு முற்றிலும் தமிழென்பார். காரம் என்பதன் வழி, தொழில் செய்வானைக் கார, காரு, காரி, காரின், காரிள் என்றும் பாகதத்தில் சொல்வார்.

ஒரு செயலோ, ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களோ நடந்தால் தான், இன்னொரு செயல் நடக்கும் என்று இக்கு நிளை (if condition) அமைந்தால், முதற் செயலைக் காரணம் என்றும் இரண்டால் செயலைக் காரம் அல்லது காரியம் என்றும் வட தமிழில் சொல்வார், காரணத்தைத் தமிழென்று எற்காத பாவாணர் காரணத்திற்கு இணையாய் கரணியம் என்ற புதுச்சொல்லைப் படைத்தார். இன்றோ காரம், காரன் ஆகியவற்றை ஏற்கும் பொழுது காரணத்தையும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கலாம் என எம்போன்றோர் சொல்கிறோம். அணம் என்பது நெருங்கியிருப்பதைக் குறிக்கும் சொல்லாக்க ஈறு.

காவல்

Police - காவலர், Security - பாது காவலர், Watchman - காவலாளி, Bodyguard - மெய்காவலர், Bouncer  - விடுதி காவலர் என்ற சொற்கள் பற்றி யாரோ ஒருவர் ஒருமுறை முகநூலில் கேட்டிருந்தார். காவலை வைத்தே எல்லாவற்றையும் நான் சொல்வது எவ்வளவு நாள் சரி என்று தெரியவில்லை. பயனாளர் பார்வையிற் சொற்கள் வேண்டுமென்றும் அவர் சொல்லியிருந்தார்.   

நகரம், ஊரோடு police ஐ இணைத்துச் சொல்வது பொருத்தமாகும் தான். poly என்பது நகரத்தைக் குறிக்கும். நகரத்தைப் பள்ளி, பாழி என ஒரு காலத்திற் குறித்தோம். (பட்டி = சிறு ஊர்.) பாழிகர்/பாழியர் என்பார் நகரக் காவலர். இன்று இச்சொல்லைச் சொல்ல முடியாது. (பாழி/ பள்ளி என்ற சொற்கள் வேறு பொருளைக் கொள்கின்றன. இத்தனைக்கும் திருச்சிராப்பள்ளி இன்றும் புழக்கத்தில் உள்ளது தான்.) வேறு ஒரு சொல் வேண்டும். முயல்வோம். 

இப்போதெல்லாம் பல ஊர்கள் புரமெனப் படுகின்றன. எனவே புரவகர் என்று police ஐச் சொல்லலாம். புரத்தல்/ புரவுதல் = காத்தல். புரவர் என்பது நகரக் காவலருக்கும் பெருமிதத்தைத் தரும். 

Security என்பது உயிர்களின் சொத்துக்களின் சேமத்தை உறுதிசெய்வது. எனவே சேமுறுதி என்பது Securityக்குச் சரி வரும். சேமுறுதியார் Security ஆட்களுக்குச் சரி வரும்.

Watch = கண்ணுறல். Watchman = கண்ணுறுவார்

Bodyguard  = மெய்க்காவலர்

Bouncer = வேண்டப் படாதவரை இழுத்துப் பிடித்துக் கட்டுபவர். புணைத்தல், பூணுதல் என்பன சேர்த்துக் கட்டுவதைக் குறிக்கும். புணையார் என்பது Bouncer க்குச் சரி வரும்.


எண்ணிப் பாருங்கள்.

Police = புரவர் 

Security = சேமுறுதி 

Watchman = கண்ணுறவார்

Bodyguard = மெய்க்காவலர் 

Bouncer = புணையார் 

காவல் என்பதை gaurd இற்கு மட்டும் பயன்படுத்தலாம். 

அன்புடன்,

இராம.கி. 

Thursday, December 26, 2024

Pressure Cooker.

 pressure cooker இக்குக் தமிழ் இணைச்சொல் கேட்கப் பட்டது.


குய்-தல் = வே-தல், எரி-தல், தாளி-த்தல் to boil, to burn, to fry. குய்-தல் சங்க இலக்கியத்தில் வெவ்வேறாய்ப் பயன்பட்டுள்ளது.

குரூஉ குய் புகை மழை மங்குலின் - மது 757
குவளை உண்கண் குய் புகை கழும - குறு 167/3
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் - புறம் 10/7
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் - புறம் 127/7
குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில் - புறம் 160/7
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில் - புறம் 250/1
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு - புறம் 397/13
குய்ய (1)
நெய் குய்ய ஊன் நவின்ற - புறம் 382/8
குய்யான் (1)
கனி குய்யான் கொழும் துவையர் - புறம் 360/5
குய்யிடு-தோறும் (1)
குய்யிடு-தோறும் ஆனாது ஆர்ப்ப - பதி 21/11
குய்யும் (1)
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு - நற் 380/1

குய்-தலின் நீட்சியாய், குய-த்தல் (= குயத்து + அல்), குய-க்கல் = (குயக்கு + அல்), குய-ப்பல் (= குயப்பு + அல்)
என்று மூ வகையாய்ச் சொல்ல முடியும். இதன் பெயர்ச் சொற்களாய் குயத்து = heat, குயக்கு = வெக்கு> வெக்கை = cook, குயப்பு = வெப்பு = சூடு, calory என்பனவற்றைச் சொல்லலாம்.

குயக்கி = cooker

pressure cooker = அழுத்தக் குயக்கி.

Saturday, December 14, 2024

திருகைகள் = nuts

 Hex nut = அறுகைத் திருகை

Lock nut பூட்டுத் திருகை

Jam nut = செம்முத் திருகை

Push nut = புகுத்துத் திருகை

Coupling nut = இணைப்புத் திருகை

square nut = சதுரத் திருகை

speed nut = விரைவுத் திருகை

Tee nut = T திருகை

wing nut = சிறகுத் திருகை

U-nut = U திருகை

Axle nut = அச்சுத் திருகை

castle nut = கோட்டைத் திருகை


Tuesday, December 03, 2024

By-law


ஒவ்வொரு குமுகாய அமைப்பிலும் அதில் பங்குபெறும் ஆட்கள், நடவடிக்கைகளுக்கு எனச் சில சட்ட திட்டங்கள் உண்டு. “இதற்கு இது அளவு” என வரும்போது நாம் எல்லைகள் பற்றிப் பேசுகிறோம். ஆங்கிலத்தில் இதை limit / boundary எனச் சொல்வார். 

law என்பது அளவுகளோடு (limit / boundary) தொடர்புடையது. இன்னின்ன செயல்களுக்கு இது எல்லை; இவ்வெல்லையை  மீறினால் இன்னின்ன தண்டனை என்பது law வின் பகுதிகள் ஆகும். இதற்கு அளவை, விதி என்ற சொல்லை பழந்தமிழர் பயன்படுத்தினர். இன்றும் pre-determined என்பதற்கு ஈடாக ”விதி”யைப் பயன்படுத்தும் நாம், அளவை என்ற சொல்லை பெரும்பாலும் மறந்தே விட்டோம். எல்லாவற்ரையும் சட்டம் என்றே சொல்லப் பழகிவிட்டோம். சட்டம் என்பது அமைப்பு வரிதியானது. அளவைகளின் தொகுதி சட்டம். சட்டத்தின் பகுதிகள் அளவைகளாகும். 

அளவையோடு தொடர்புற்றது அளகை = logic. இதற்கு ஏரணம் என்ற மற்றொரு சொல்லும் உண்டு. law விற்கும் logic -ற்கும் நிறையக் கணுக்கம் (connection) உண்டு. 

அளவையர் = lawyer. இதற்கு மாறாய் வழக்கறிஞர் என்று சொல்வது சற்று சரியில்லை. அதே பொழுது advocate என்பதற்கு வழக்குரைஞரே போதுமானது. இனி bylaw என்பதற்கு வருவோம். இதை

also by-law, late 13c., bilage "local ordinance," from Old Norse or Old Danish bi-lagu "town law," from byr "place where people dwell, town, village," from bua "to dwell" (from PIE root *bheue- "to be, exist, grow") + lagu "law" (see law). So, a local law pertaining to local residents, hence "a standing rule of a corporation or association for regulation of its organization and conduct." Sense influenced by by.

என்று ஆங்கிலத்தில் சொல்வர். ஒரு நிறுவனத்தை அமைக்கும் போது அரசின் சில அளவைகளுக்கும் அதிகமாய் இந்த நிறுவனத்திற்குள் அமையும் நடைமுறைகளுக்கு என சில எல்லைகள்/ வரம்புகளைக் குறியிருப்பர். இதற்கு உட்படும் அளவைகள் இவை என நிறுவன ஆவணத்தில் சொல்லியிருப்பர். அவையே by-laws எனப்படும்.

உட்படு அளவைகள் = by-laws. (வினைத் தொகை).


Sunday, December 01, 2024

திரு ஓங்கட்டும்.

 சுழற்குறி (சங்கதத்தில் இது சுவத்திகம்> ஸ்வஸ்திகம்) என்பது செயினத்திற்கும் அற்றுவிகத்திற்கும் பொதுவான சொல். (இப்போது ”இந்து” என்ற கலவை மதத்திற்கும் கூட அதைச் சொந்தம் என்பார்.பொதுக்கை நெறி பின்பற்றிய அரசியற் கட்சிகளும் கூட ஒரு காலத்தில் இக்குறியைத் தமதாய் ஏற்றுக் கொண்டன.) சுழற்குறி சுவற்குறியாகி ”ஓங்கட்டும்” என்ற பொருளில் நம்மூர்க் கல்வெட்டுகளில் இது பல காலம் குறிக்கப்பட்டது. கல்வெட்டுகளில் வெளிவரும் மெய்கீர்த்திகளில் முதற்சொல்லாய்  வரும் ”சுவல்த்தி திரு” என்பது ”சுவல்த்தி திரு> சுவற்றி திரு> சுவத்தி திரு> சுவஸ்திஸ்ரீ” என்று திரிந்து சங்கதத்தில் வெளிப்படும். இக்குறியீட்டை எப்படி விளங்கிக் கொள்வது? - என்பதே இந்த இடுகையின் பொருண்மை.



தமிழியில் இருந்து 2 ஒகர எழுத்துகளை எடுத்து ஒன்றின் குறுக்காய் இன்னொன்றைப் போட்டால்  சுவத்திக் குறி வந்துசேரும். அடுத்து நாகரிக் குறியீட்டில் அகரத்தோடு 2 புள்ளிகளை இட்டால் ”அம்” எனும் ஒலி வந்துசேருவதைப் போலவே, இங்கே சுவத்திக் குறியீட்டோடு 4 புள்ளிகள் இட்டால் ”ஓம்” என்ற ஒலி வந்து சேரும். ஓம் என்பது ஓம்புதலையும், ஓங்குதலையும் குறிக்கும். 


இக் குறியீட்டிற்குப் பக்கத்தில் ஸ்ரீ எனும் கிரந்தக் கூட்டெழுத்தை எழுதினால் ”திரு ஓங்கட்டும்” என்ற பொருள் வந்துவிடும். இதைத் தான் சுவஸ்திஸ்ரீ என்று கலவை எழுத்தில் எழுதினார். இரு வேறு மொழிகள், இரு வேறு எழுத்துகள் ஆகியவற்றின் கலவையே இச் சொல்.    

Sunday, November 24, 2024

வனம்

இச்சொல்லின் முதற் பயன்பாடு என்பது சங்கத அகரமுதலியில் வால்மீகி இராமாயணத்தில் தான் காட்டப் படுகிறது. அதே பொழுது, வேறு எந்த இந்தையிரோப்பிய மொழியிலும் இச்சொல்லிற்கு இணையாய் இன்னொரு சொல் காட்டப்படவில்லை. ஆய்ந்து பார்த்தால், சங்கதத்திற்கே கூட இது கடனாய் வந்தது போல் தெரிகிறது. மற்ற வட இந்திய மொழிகளிலும் கூட இச்சொல் பயனாகிறது. பொதுவான தமிழ் அகரமுதலிகளிலும் இச்சொல் உண்டு. (ஆனால் செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகரமுதலியில் இது ஏனோ இல்லை.)

ஆய்ந்து பார்த்தால், முரமுரப்பான அடித்தண்டு கொண்ட தாவரத்தை எப்படி முரம்> மரம் என்று நாம் சொற்பிறப்பு காட்ட முடியுமோ, அது போல் வலிய மரங்கள் கொண்ட காட்டை வல்>வன்>வனம் என்று சொல்லலாம் தான். ஓர்ந்து பார்த்தால் தமிழ்வழிச் சொற்பிறப்பு இதற்குச் சரியாய்ப் பொருந்துகிறது. ஆனாலும் பலர் ஐயங் கொள்கிறார். ஏன் என்று தெரியவில்லை.

https://valavu.blogspot.com/2022/12/blog-post.html


Sunday, October 13, 2024

stratamolite = தட்டமக் கல்

 இந்தச் சொல் stratum எனும் ஆங்கிலச்சொல்லோடு தொடர்புற்றது. இதற்கு "horizontal layer," 1590s, from Modern Latin special use of Latin stratum "thing spread out, coverlet, bedspread, horse-blanket; pavement," noun uses of neuter of stratus "prostrate, prone," past participle of sternere "to spread out, lay down, stretch out," from nasalized form of PIE root *stere- "to spread” என்று ஆங்கிலச் சொற்பிறப்பியலில் விளக்கஞ் சொல்வர். 

stratum என்பதோடு ”தட்டம்” தொடர்புள்ளது. தட்டிற் பெரியது தட்டம். சில மண்ணடுக்குகளும், கல்லடுக்குகளும் தட்டுத் தட்டாய்த் தோற்றங் காணும். அத்தோற்றம் வெவ்வேறு வகையில் ஏற்படலாம். இங்கே இது செந்நீலப் பட்டுயிரியால் (cayanobacteria) ஏற்படுகிறது. இதை வெறும் உயிர்வேதியற் சொல்லாய்ப் பாராது பொதுவாய்க் காண்பது நல்லது. 

தட்டத்தின்  மேல் சில இயல்திரிவு விதிகளைப் பொருத்திப் பார்த்தால், தமிழியம், இந்தையிரோப்பியம் ஆகிய இருவேறு மொழிக்குடும்பங்களின் ஊடே இருக்கும் இணைப்புப் புரியும். ”தட்டத்தில்” முதலில் வரும் தகரத்துள் ரகரவொலி நுழைத்தால், ’த’ என்பது ‘த்ர’ என்றாகும். ’த்ர’ நெடிலாகின், ’த்ரா’ ஆகும். முடிவில் ஸகர ஒலியை முன்னே சேர்த்தால், தட்டம்> த்ரட்டம்> த்ராட்டம்> ஸ்த்ராட்டம் = stratum என்றாகும். இதே விதிகள் எல்லாத் தமிழ்ச் சொற்களிலும் கையாளப் படுவதாய் நான் சொல்லவில்லை. மேலும்,”ஒரு மொழியின் திரிவாக இன்னொன்று அமைந்தது” என்றுஞ் சொல்லவில்லை. ”ஒரு மொழிக்குடும்பச் சொல்லுக்கும் இன்னொரு மொழிக்குடும்பச் சொல்லுக்கும் இடையில் வரும் இணைப்பைக் கண்டுபிடிக்க இதுபோன்ற விதிகள் பயனாகும்” என்று மட்டுமே சொல்கிறேன். 

பல்வேறு இந்தையிரோப்பியச் சொற்களையும், அதே பொருள் கொண்ட தமிழ்ச் சொற்களையும் ஒப்பிட்டுச் சில விதிகளைப் பட்டியலிட்டு வைத்துள்ளேன். அவற்றில் எது இங்கு பொருந்துமெனப் பார்க்கிறேன். உள்ளிருக்கும் தமிழ்ச் சொல்லை பெரும்பாலும் அடையாளங் காண முடிகிறது. சிக்கல் தருஞ் சொற்களைத் தனியாக வைத்து வேறு புதிய வகைப்பாடு இருக்கிறதா என்றுங் கற்றுக் கொள்கிறேன். இத்தகைய “செய்து பார்த்துச் சரி செய்யும்” முறையை நான் பயன்படுத்துவது கண்டே, அதை ஏற்காதவர் “நான் ஏதோ ஆங்கில ஒலிப்பில் சொற்கள் படைப்பதாய்” முரண் கொள்கிறார். 

வரலாற்று மொழியியலில் (historical linguistics) நான் செய்வது ஓர் அடிப்படை வேலை. ஒரு மொழிக் குடும்பத்திற்கும், இன்னொரு மொழிக் குடும்பத்திற்கும் இடையே சீரிய ஒழுங்குகள் இருக்கின்றனவா என்று அவதானிக்கிறோம். ஓர் அறிவியலாளன் என்பவன் இதைத்தான் செய்யமுடியும். நானும் அப்படித் தான் அணுகுகிறேன். இந்தையிரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் தமிழிய மொழிக் குடும்பத்திற்கும் உறவிருப்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். stratamo- என்பதிலும் இது இருக்கிறது. ஆயினும் என் மேற் பழி சொல்வது தொடர்கிறது. என்றிதற்கு விடிவு வருமோ? தெரியவில்லை. இனி இச் சொல்லுக்கு வருவோம்.   

stratum = தட்டம் என்றால், strata = தட்டங்கள் என்றும், stratify = தட்டாக்கு என்றுமாகும். stratum என்பதை முன்னொட்டாக மாற்றுகையில் strati-, strato-, stratamo- என்று 3 விதமாய் ஆங்கிலம் பயன் கொள்ளும். நாமும், தட்டய, தட்டக, தட்டம என்று 3 வகையில் நுணுகிய வேறுபாட்டைக் கொண்டு வரலாம். stratigraphy = தட்டய வரைவியல் அல்லது தட்டயக் கிறுவியல்; stratification = தட்டயவாக்கம் என்றும், stratocracy = தட்டக ஆட்சி, strato-cumulus = தட்டகக் குமியல், stratography = தட்டக வரைவியல் அல்லது தட்டகக் கிறுவியல், stratosphere = தட்டகக் கோளம், stratovolcano = தட்டக எரிமலை- என்றுஞ் சொல்லலாம். முடிவாக stratamo- = தட்டம- என்பதோடு கூட்டுச் சொல்லாக்க lite என்ற சொல்லைச் சேர்ப்பார். இது lithos என்ற கிரேக்கச் சொல்லின் இன்னொரு வடிவம் இதன் பொருள் கல் என்பதே. எனவே stratamolite என்பதைத் தட்டமக் கல் என்றே சொல்லலாம்.

அன்புடன்,

இராம.கி.   


Friday, June 21, 2024

பாவாணரும், குமரிக்கண்டமும்

 பாவணரை நான் பெரிதும் மதித்தவன். அவரை என் மொழியியல் வழிகாட்டியாய்க் கொண்டவன். இருந்தாலும் அவரை வழிபாடு செய்பவன் அல்லன். அவர் தவறிய இடங்கள் மிகப்பல. அவற்றில் ஒன்று இந்தக் குமரிக்கணடம். இன்னொன்று ”தமிழ் உலக முதன்மொழி” என்றது.


அவர் காலத்தில் இருந்த கடல்கிறுவியல் (oceanography) செய்திகளை, குறிப்பாக 1940 க்கு அப்புறம் வந்த செய்திகளை, அவர் அறியவில்லை. அப்போது கடல் ஆழம் பற்றிய விவரங்கள் யாருக்குமே தெரியாது. அவை 1950 களில் தான் வெளிப்பட்டன. மேலே கொடுக்கப்பட்ட படம், 1950 க்கு அப்புறமும், அதற்கு மேலும் நுண்மைப்பட்ட கடலியல் செய்திகளைக் கொண்டு உருவானது. எப்படிப் பார்த்தாலும், (அதை ஓரிடுகையில் சொல்லமுடியாது. ஒரு நூலே எழுத வேண்டும். குமரிக்கண்டம் பேசுகிறவர் எந்த அறிவியல் ஆதாரமும் தராமலேயே, வெறும் இலக்கியக் கூற்றையும், வழிபாட்டின் வழி தான் சார்ந்த அரசியல் கூற்றுக்களையுமே சொல்கிறார்.) Oceanography பற்றி அவர் எதுவுமே சொல்வதில்லை. அறிவியல் செய்திகளை ஒன்றுசேர்த்து ஆய்ந்தால் இற்றைக் குமரி முனைக்குக் கீழே ஒரு கண்டம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. வேறு கருத்து உள்ளவராய் நீங்கள் இருந்தால் ஆதாரம் கொடுங்கள், அவர், இவர் என்று பெரிய, பெரிய ஆளுமைகளின் பெயரைச் சொல்லாதீர்கள். Quoting names is not a scientific method.

எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்தவரில்லை. அது கடவுளுக்கு மட்டுமே முடியும். ஓர் அறிஞர் சொன்னவற்றில் எது சரி என்று அறிவியல்  அலசிப் பார்க்கிறது. எதை ஏற்க முடியுமோ, அதை ஏற்கிறது. அல்லாதவற்றை அது ஒதுக்குகிறது. அதற்காக குறிப்பிட்ட அறிஞர் செய்தவற்றின் புகழ் குறையாது.

உலகப்புகழ் பெற்ற ஐசக் நியுட்டனின் விதிகளை நம்பி உலகம் 150/200 ஆண்டுகள் நகர்ந்தது. பின்னால் ஐன்சுடைன் வந்து பூதியலின் (physics) அடிப்படையையே மாற்றினார். ஆனாலும் நியூட்டனின் மாகனவியலுக்கு (Newtonian mechanics) இன்றும் அரங்குண்டு. நியூட்டன் தேற்றுகள் (theories), நம் வேகம் ஒளி வேகத்திற்கு அருகில் வந்தால் மட்டுமே குழறுபடி ஆகின்றன. மற்றபடி அவர் விதிகள் குறைவேகத்தில் நன்றாகவே வேலை செய்கின்றன. எனவே தான், நியூட்டனை இன்றும் மதித்துப் பள்ளிகளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.

அதுபோல் பாவாணரின் மொழிக்கொள்கை Nostratic என்பது வரை சரியாக உள்ளது. அதற்கு மேல் கட்டாயம் சிக்கல் தருகிறது. நான் பட்டறிவால் இதைச் சொல்கிறேன். அவர் மேலை மொழிகளையே பெரிதும் பார்த்தார். ஆப்பிரிக்க, அமெரிக்க, தென்கிழக்கு ஆசிய, சைபீரிய, ஆர்க்குடிக் மொழிகள் தொடர்பான செய்திகள் அவர்காலத்தில் அவருக்குக் கிடடவில்லை. இன்று கிட்டுகின்றன. இன்று கிடைத்த எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், ”தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று” என்று மட்டுமே சொல்லமுடியும். முதன்மொழி என இப்போதைக்குச் சொல்ல முடியாது. இன்னும் பல தரவுகள் வேண்டும். இன்னும் பல ஆண்டுகள் ஆய்வும் செய்யவேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா? உலகப் புகழ்பெற்ற நியூட்டன் பூதியலில் மட்டுமின்றி மறைமுகமாய் தாழ் உலோகத்தை (low metal) இதள் (mercury) கொண்டு பொன்னாய் மாற்ற விழையும் "இரசாயனம் / இதள்வழிச் செலுத்தம் (Alchemistry) என்ற துறையிலும் 16 ஆண்டு காலம் பணிசெய்தார். ஆனால் அக் குறிப்புகளை எங்கும் வெளியிடாமல், தானே சேர்த்து வைத்தார். இன்று அவர் பூதியலார் என்று அறியப்படுகிறார். வேதியலார் என யாராவது சொல்கிறோமா? ஒருவர் வெற்றி பெற்ற புலத்தை வைத்தே பின்னாளில் அறியப் படுவார்.

பாவாணர் மொழியாளர், அதே பொழுது வரலாற்று, முந்தை வரலாற்று ஆசிரியர், கடலாய்வாளர் இல்லை, இதைப் புரிந்து கொள்ளுங்கள். அவருக்கு அறியாத இத்துறை பற்றி அவர் சொல்வது எடுபடாது. பாவாணரை எல்லோரும் போற்றுவோம். ஆனால் அவர் எல்லாம் அறிந்தவர் என்று கொள்ளாதீர். அவர் கடவுளில்லை. பாவாணரும் கிடுக்கி (criticize) அலசப் (analyse) பட வேண்டியவரே. அவரை மதித்துக் கொண்டே தான் இப்படிச் சொல்கிறேன். நாளைக்கு நான் சொன்னவற்றைத் தூக்கியெறியவும் யாரொவொரு இளைஞன் முன்வருவான். இதை மறவாதீர்

அவருடைய மொழியியல் வழிமுறையை நானும் பின்பற்றுகிறேன். தமிழ் உலக முதன்மொழி என்று சொல்ல இன்னும் பெருந்தரவுகள் எட்டவில்லை. Nostratic பெருங்குடும்பத்தில் தமிழியம் என்பது ஒரு முகன்மையான குடும்பம் என்று சொல்லக் கட்டாயம் தரவுகள் நம்மிடம் உள்ளன. நெஞ்சை நிமிர்த்தி நாம் சொல்லலாம். மற்றவைகளுக்குக் நாம் காத்திருக்கவேண்டும்.


Friday, June 07, 2024

ஒரு சில்லின் (cell) வாழ்க்கை.

 ஒரு சில்லின் சினைகளுக்குள் முறையான ஒருங்கம் (organization) அமைந்து,

செல்லுக்குத் தேவையானவற்றை உள்ளீர்த்துச் செரித்து,

தேவையில்லாதவற்றை வெளிப்பொழியும் செரிப்பொழிவு (metabolism)

சில்லிற்குள் தொடர்ந்து நடைபெற்று,
எவ்வளவு தான் வெளிச்சூழல் மாறினும்,

சில்லுக்குள் ஒரே சூழல் அமையும்படி

சில்லின் உள்நிலைப்பைக் (homeostasis) அமைத்துக் கொண்டு,
காலத்திற்கேற்ற, வளர்ச்சி (growth) காட்டி,
,
கொடிவழிப் புதுக்கத்தை (reproduction) விடாது நடத்தி,
வெளிச்சூழலுக்கேற்ப எதிர்விளைவும் (response) காட்டி,
எவ்வெழுச்சியை (evolution) விடாது

தொடர்ந்து நடைபெற வைத்து,இருக்குமானால்,
அந்தச் சில் வாழ்கிறதென்று பொருளாகும்

Thursday, May 30, 2024

தென்கிழக்கு ஆசியரும், தமிழரும்

தென்கிழக்கு ஆசிய நாகரிகங்களோடு  தமிழர்க்குத் தொடர்புள்ளது என்பதை நானென்றும் மறுத்ததில்லை. ”அங்குள்ள கோயில்களைக் கட்டியது தமிழரே” என்று சில வரலாற்றார்வலர் தம் ஆர்வக் கோளாற்றில் சொல்வதைத் தான் நான் மறுக்கிறேன். எதிர்க்கிறேன். ”கட்டியது அவர். துணை செய்தது தமிழர்” என்றுசொல்லுங்கள். முற்று முழுதாய் நீவீர் சொல்வதை நான் ஏற்பேன். 

இப்படி ஓர் அண்ணன்காரத் தோரணையை, தென்கிழக்கு ஆசிரியர் மேல் தமிழர் கொள்வது மிகமிகத் தவறு. கம்போடிய அரசகுடும்பத்திற்கும், பல்லவ அரசகுடும்பத்திற்கும் எவ்வளவு தான் உறவு சொன்னாலும், கம்போடிய அரசரைப் பல்லவர் என்று சொல்வது மிகமிகத் தவறு.  பிள்ளை இல்லாத பங்காளிகளுக்குள் பிள்ளைகளைத் தத்துக் கொடுப்பது ஒரு காலத்தில் தமிழரிடமிருந்த மரபே. ஆனாலும் அவரவர் ”விலாசத்தை”  மதிக்க வேண்டும் என்பதை ஆழப் புரிந்துகொண்டே இம்மரபு தொடர்ந்தது. அவரின் தனித் தன்மை மறுத்து, ”மடையரான உமக்கெல்லாம் நாங்களே சொல்லித் தந்தோம்” என்பது ”கருப்பருக்கும் செவ்விந்தியருக்கும் ஒன்றும் தெரியாது, வெள்ளையர் ஆன நாங்களே அவருக்கு எல்லாம் சொல்லித் தந்தோம்” என்ற இரோப்பியர் குடியேற்ற (colonial) மனப்பாங்கு கொண்டதை ஒக்கும். 

முற்றிலும் இது பொதுக்கை (fascist) மனப்பான்மை ஆகும். இப்பான்மையோடு  தொடர்ந்து நாம் பேசினால், உலகிலுள்ள பெரும்பாலோர் நம்மை மதியார், நமக்கு ஆதரவும் தரமாட்டார். நம்மூரிலுள்ள சில தமிழ் வறட்டு வாதருக்கு இந்தச் சூதானம் என்றுதான் புரியுமோ? தெரியவில்லை.



Monday, April 08, 2024

ambulance

 ஆங்கிலச் சொற்பிறப்பியலில், amble (v.): என்பதை early 14c., from Old French ambler, of a horse or other quadruped, "go at a steady, easy pace" (12c.), from Latin ambulare "to walk, to go about, take a walk," perhaps a compound of ambi- "around" (from PIE root *ambhi- "around") and -ulare, from PIE root *el- "to go" (source also of Greek ale "wandering," alaomai "wander about;" Latvian aluot "go around or astray"). Until 1590s used only of horses or persons on horseback. Related: Ambled; ambling. என்றும், 

ambulance (n.) என்பதை, 1798, "mobile or field hospital," from French ambulance, formerly (hôpital) ambulant (17c.), literally "walking (hospital)," from Latin ambulantem (nominative ambulans), present participle of ambulare "to walk, go about" (see amble) என்றும் லிளக்கிச் சொல்வர்.

இங்கே அலைதலும், அலம்புதலுமே சொல்லுக்குள் இருக்கும் அடிப்படைக் கருத்தாகும். பிரஞ்சில் சொல்லப்படும் (hôpital) ambulant என்ற கூட்டுச் சொல்லில் இக்காலத்தில் (hôpital) என்னும் முதற்சொல் தொக்கியே நிற்கிறது. சங்கதச் சொல்லான ஜல சமுத்ரத்தில், ஜல என்று இன்று யாருஞ் சொல்வதில்லை. சமுத்ரம் என்றே சுருங்கச் சொல்கிறோம். ”நிறைந்துகிடப்பது” என்றுமட்டுமே அதற்குப் பொருள். எந்தவொரு மொழியிலும், நாட்பட்ட பயன்பாட்டில் சில சொற்கள் இப்படி அடங்கியிருப்பது இயற்கை. 

மின்சாரம் என்பதில் இன்று சாரத்தை யாருஞ் சொல்வதில்லை. தொழில் நுட்பத்தில் தொழிலைத் தொகுத்து நுட்பியலாக்கிவிட்டோம். இதேபடி, ”பண்டுவ அலம்பூர்தி” என்று சொல்லத்தொடங்கிப் பின்னாளில் ”அலம்பூர்தி” என்றுமட்டுமே சொல்லலாம். பண்டுவம் உள்ளிருப்பது புரிந்துபோகும். (வட தமிழகத்தாருக்கு மருத்துவத்திற்கும் பண்டுவத்திற்கும் வேறுபாடு தெரியாது. தென்தமிழகத்தாருக்கு பண்டுவம் மிக இயல்பான சொல். பண்டுவத்திற்கும் மருத்துவத்திற்கும் சிறிய வேறுபாடுண்டு. எங்கெல்லாம் ”சிகிச்சை” என்ற வடசொல் வருகிறதோ, அங்கெல்லாம், “பண்டுவம்” என்று சொல்லலாம். இதில் மருந்தும் மட்டும் முகன்மையல்ல. அறுப்பு, காயம், மருந்து கட்டுதல், உடல் நிலை கவனித்துக்கொள்ளுதல் என எல்லாம் சேர்ந்தது. ஆங்கிலத்தில் MBBS Medicino bachelor and Bachelor of surgery என்று இரட்டைப் பட்டம் பெறுகிறார்கள். தமிழில் அவர்கள் இளம் மருத்துவராகவும் இளம் பண்டுவராகவும் ஆவதாகவே சொல்லவேண்டும். இதை விளக்கப்போனால் நீளும். 

அலம்பூர்திக்கு முன்னொட்டாய் மருத்துவம் சொல்வது சரிவராது. 

என் பரிந்துரை: (பண்டுவ) அலம்பூர்தி. 

இன்னொரு பரிந்துரையும் உண்டு. ambulance = ஆதுலி (ஆதுலர் = மருத்துவர், மருத்துவச்சி போன்று உடல்நலம் பேண உதவுவோர். இது பெருஞ்சோழர் காலத்துக் கல்வெட்டுச் சொல். இங்கு ஆதுலி என்பதால் நகரும் ஆதுல வண்டியைக் குறிக்கிறோம்.) 

அன்புடன்,

இராம.கி.    


Sunday, April 07, 2024

வேக்கைப் பண்டங்கள்

 வேக்கைப் பண்டங்கள்

கேக்கு = கடிகு
குக்கீ = குயிக்கி
வேஃபர்கள் இன்னும் ஓர்ந்துகொண்டுள்ளேன்.
பிரஞ்சு பிரை = பிரஞ்சு வறுவல்
பீஸ்ஸா = பிட்டிகை
பாஸ்தா = பிழிகை
பர்கர் = பருகர் (இது hamburger என் சுருக்கம். ஊர்ப்பெயரை அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
சூப் = சூப்பு
சாஸ் = சவறு
பப்ஸ் = புவ்வுகள் (ஒலிக்குறிப்பில் எழுந்த சொல்.)
bakery = வேக்கை


    அங்கப் ப்ரதக்ஷணம்

    அலங்கம் என்பது அங்கமானது என்று ஆய்வின் மூலம் உணர்கிறோம். (https://valavu.blogspot.com/2018/07/organ.html)
    தக்கணம் என்ற தமிழ்ச்சொல் தக்ஷணம் என்று சங்கதத்தில் திரியும். மீண்டும் அதைக் கடன்வாங்கித் தட்சணம் என்பார். சங்கத வழக்கிற்கு மாற்றாய் நம் ஊற்றில் உருவான தக்கணத்தையே வைத்துக் கொள்ளலாம். தக்கு + அணம் = தக்கணம். தங்குதல் = கீழேயிருத்தல். தக்கு என்பது தங்கு-தலில் பிறந்த பெயர்ச்சொல். தக்கணம் = கீழே அமையும் இருப்பு. அணம் = இருப்பு என்பதைக் குறிக்கும் சொல்லாக்க ஈறு.
    பரி-தல் = சுற்றி வருதல். பரிதக்கணம்> ப்ரதக்ஷணம் .
    அலங்கப் பரிதக்கணம் = அங்கப் ப்ரதக்ஷணம்.
    Like
    Comment
    Share

    Tuesday, March 26, 2024

    mutual

     mutual (adj.) late 15c., "reciprocally given and received," originally of feelings, from Old French mutuel (14c.), from Latin mutuus "reciprocal, done in exchange," from PIE root *mei- (1) "to change, go, move," "with derivatives referring to the exchange of goods and services within a society as regulated by custom or law" [Watkins

    நம் திருமணங்களில் மொய் எழுதுவோம். ஓர் உறவுக்காரர் வீட்டு விழாவில் நாம் மொய் எழுதினால் அவர் நம் வீட்டு விழாவில் மொய் எழுதவேண்டும் என்பது நம்மூரில் பலராலும் தொடர்ந்து காப்பாற்றப்படும்  மரபு. அடிப்படையில் மொய்யுறவு என்பது ஒரு reciprocal  relation. மேலே வரையறை படித்தால், நம்மூர் மொய்யின் பொருளைக் கொஞ்சம்  நீட்டலாம் என்று தோன்றுகிறது, மொய் அன்ன என்பது போல் கொள்க. அன்ன என்ற உவமை உருபு தொக்கலாம். தவறில்லை. அப்படிப் பார்த்தால், 

    mutual = மொய், மொய்ம்பு

    mutual respect = மொய் மதிப்பு (நான் மதிப்புக் கொடுத்தால், எனவே நீயும் மதிப்புக் கொடு.)

    mutual friend = மொய்த் தோழர் (எனக்கும் தோழர், எனவே உனக்கும் தோழர்) 

    mutual fund = மொய்ம்பு நிதி.

    mutually attractive = மொய்யாய் ஈர்க்கும்படி (எனக்கும் ஈர்ப்பு, எனவே உனக்கும் ஈர்ப்பு) 

    mutually exclusive = மொய்யாய் விடுக்கும்படி (எனக்கு விடுப்பு, எனவே உனக்கும் விடுப்பு) 

    mutually interactive = மெய்யாய் இடையாற்றும்படி. (நான் இடையாற்றுகிறேன், எனவே நீயும் இடையாற்று,)

    "programming language and scripting languages are not mutually exclusive terms" இதைத் தமிழில் எப்படிச்சொல்லலாம்?

    நிரல் மொழியும்,  எழுதுவிப்பு மொழியும், மொய்ம்பாக விடும்படியான தீர்மங்கள் இல்லை 

    (இந்த மொய்யுறவின் ஒரு பகுதியார் பங்காளிகள். நம் தந்தைவழிச் சொத்துரிமையாளர், இன்னொருவர் சுற்றத்தார் இதில் தந்தை வழியில் சொத்துரிமை உறவில்லா எல்லோரும், தாய்வழிச் சுற்றத்தாரும் அடங்குவர். சொத்துரிமைச் சட்டங்கள் இன்று மாறிவிட்ட்ன என இது பற்றிப் பேசினால் குழப்பமே.)

    Monday, February 12, 2024

    க(/சி)ல்லிகம் - silicon

     silica (n.) என்பது "hard silicon dioxide," 1801 - ஐக் குறிக்கும். இது Latin silex (genitive silicis) "flint, pebble," என்ற சொல்லால் எழுந்தது. silica என்ற சொல் alumina, soda போன்ற சொற்களைப் போல் ஆகாரமிட்டு எழுந்தது. siica வின் வேர் சில் என்பது தான். "flint, pebble." 

    கல்லுதலும் சில்லுதலும் குறுத்தல், சிறுத்தல் பொருள் கொண்டவை. ஒரு பாறையில் இருந்து குல்லி>குத்தித் தெறிக்க வைத்துக் கிடைப்பதைக் குல்>கல் என்றும், இன்னொன்றைச் சில் என்றும் சொல்வார். கல்லும் சில்லும் எப்படி தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வேர்களாயின என்பது வேறு புலம். ஆயினும் அவற்றைப் பொது வேர்கள் என்று சொன்னால் ஏற்க மறுக்கும் மொழியியலாளர் உலகில் மிகுதி. குறிப்பாகத் தமிழறியாது, அதற்கு முயற்சியும் செய்யாது சங்கத மயக்கத்தில் இழைந்து, தமிழ் முன்மையைக் கேலிசெய்யும் மேலை மொழியியலார் மிகுதி. ”ஏதோ இந்தையிரோப்பியத்தையும் தமிழியத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கவே கூடாது” என்பது போல் racial thinking இல் பேசுவோரும் உள்ளார்.    

    எல்லாப் பாறைகளிலும் சில்லும் போது சில்லுகளும், குருனைகளும் (grains) கிட்டும். மண், மணல், களி போன்றவற்றில் சில் போன்ற குருனைகளே உள்ளன. மள்> மண் என்பது சில்கள்/கல்கள் செறிந்தது அதாவது அவற்றின் அடர்த்தி அல்லது திணிவு (density) கூடியது. மண்ணில் கொஞ்சம் ஈரமும் இருக்கும். மணல் என்பது செறிவு, அடர்த்தி, திணிவு இல்லாதது. கல்>கள்>களி என்பது ஈரம் கூடிக் குழைந்து போன நிலை.  

    silica வில் இருந்து பிரித்தெடுத்த silicon மாழையைச் கல்லிகம் அல்லது சில்லிகம் எனலாம்.  

    silicon valley = க(/சி)ல்லிக விளை. விளை என்ற சொல் valley க்கு இணையாய் நெல்லை, குமரி மாவட்டங்களில் உண்டு. அருவி இருக்க நீர்வீழ்ச்சி படைத்தது போல் விளை இருக்க யாரோ பள்ளத்தாக்கு படைத்துள்ளார்.


    Wednesday, January 31, 2024

    சாமி

     சாமி என்ற சொல்லின் பெண்பால் பெயரைக் கவிஞர் இரவாக் கபிலன் தன் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தார்.அந்தச் சொல் பால் குறிக்காச் சொல். அதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று இறைப்படிமம், இன்னொன்று துறவி. (ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம்.) 

    முதலில் இறைப் படிமத்திற்கு வருவோம். அது மரம், மண், கல், மாழை என்று பலவற்றால் அமையும். எதில் செய்தாலும் பளபள என்று ஒளி தரும் படி, இருட்டிலும் ஓரளவு தெரியும்படி, தேய்த்துப் பளபளப்புக் கூட்டியே செய்வர். சொல்>சொலித்தல், சொலுத்தல் போன்றவை ஒளியோடு இருக்கும் நிலையைக் குறிக்கும். சொல்>சொலுவம் = படிமம். சொலுவத்தைச் சொருபம் என்று சங்கதம் ஆக்கும். 

    இனி ஒளிக்கு வருவோம். சூரியன் சாயும் நேரததில் வெள்ளொளி தெறித்து வெவ்வேறு நிறங்கள் பிரிந்து மறுபளித்தோ, ஒளிமுறித்தோ காட்டும். சாயும் நேரத்தை சாயுங்காலம் என்பார். அந்நேரத்தில் சூரியன் சாம்புகிறது. பொழுது (சூரியனுக்கு இன்னொரு பெயர்) சாயும் காலத்தைச் சாம்பும்> சாமும் காலம் என்றும் சொல்லலாம். 

    மாலை மங்கும் நேரத்தில் சாம்பி> சாமித் தெரியும் சொலுவம் சாமி என்று அழைக்கப்பட்டது. இன்றும் கோயில் கருவறை இருட்டில் வெறும் அகல் விளக்கு ஒளியில் இறைப் படிவம் மங்கலாய்ச் சாமித் தெரிவதால் அது சாமி என்றும் அழைக்கப்பட்டது. எல்லா இறைப் படிமங்களுக்கும் இது பொதுவான சொல்.  

    சாமி என்ற சொல் இந்தையிரோப்பியனில் கிடையாது. சங்கதம், பாகதம் சேர்ந்த வடபுல மொழிகளில் தமிழ் சார்ந்த கோயில் பண்பாட்டால் பயனாகிறது.அது அங்கு கடன் சொல். “இந்து மதம்” என்று இன்று சொல்லப்படும் கலவை மதப்பெயர் உண்மையில் தென்னக ஆகம மரபையே குறிப்பிடுகிறது. எல்லாவற்றையும் ஆரியம் என்பது அறியாமை.

    இனித் துறவிகளுக்கு வருவோம். பொ.உ.மு. 2500 க்கு முன்னால், தனிச்சொத்து ஏற்படுவதற்கு முன்னால், நிலைத்த மருத, நகர வாழ்க்கைக்கு முன்னால், துறவு என்ற சிந்தனை மாந்தருள் எழ வாய்ப்பேயில்லை. சொத்தின் நேரெதிர்ச் சிந்தனை துறவாகும். கண்ணை மூடிக்கொண்டு சம்மணம் கொட்டிச் சிந்தனையை ஒன்றுகூட்டித் தானிப்பது தானம் ஆனது. தானத்தைத் தான் சங்கதம் த்யானம் என்றாக்கும். சம்முதல் என்பது 2 கால்களையும் ஒன்றேபோல் கூட்டி உட்காருவது. இச் சமநிலையில் இருந்துசெய்யும் தானம் சமதானம்  இது சமயம் எனப்பட்டது. இச்சிந்தனை நிலைப்பைக் கடவுளை நம்புபவனும் செய்யலாம். கடவுளை நம்பாது தன்மனத்தை ஒருங்குபடுத்த விழைபவனும் செய்யலாம். சமயம் என்பது ஓர் ஒருங்குபட்ட சிந்தனை. அவ்வளவு தான்.

    சமயத்தில் ஆழ்ந்தவன் சமயி. சம்முதலின், சமயுதலின் நீட்சி சாமுதல். சாமுகிறவன் சாமி. தானம் செய்பவன் என்று அதற்குப் பொருள் அமையும். மற்கலியும், வர்த்தமானனும், புத்தனும் சாமிகள். அதனால் தான் பகவான் என்றும் அவர் அழைக்கப்பட்டார். சாமி என்ற இத் தனிச்சொல் பால் ஏற்காது. பால் ஏற்க வேண்டுமெனில் கூட்டுச்சொல் வேண்டும் துறவேற்ற சாமிகளில் ஆண் சாமியும் உண்டு. பெண் சாமியும் உண்டு.