Thursday, September 27, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 3

"அரக்கர் என்பவர் கருமைகூடிய சிவந்த நிறத்துத் தனி இனத்தார் (tribe); நாவலந்தீவில் இருந்த பல இனத்தவர் போல இவரும் ஒருவர்" என்ற செய்தியோடு, இன்னுஞ் சில பழம் பாடல்களை அடுத்துப் பார்க்கலாம்.

பழைய இராமாயணம் ஒன்று தமிழில் இருந்திருக்க வேண்டும் என்பது "ஆசிரிய மாலை" என்னும் தொகுப்பு நூலின் வழி தெரிகிறது. ஆசிரியப் பாக்களினால் ஆன நூல்களிலிருந்து சில பாடல்கள் தொகுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்ட நூல் ஆசிரியமாலையாகும். 

எத்தனையோ தமிழ் இலக்கியங்களை நம்முடைய கவனமின்மை காரணமாயும், பல்வேறு மூடத் தனங்களாலும், இழந்தது போல், இந்த ஆசிரிய மாலையும் நமக்கு முழுமையாகக் கிடைக்காதபடி ஆயிருக்கிறது. நல்ல வேளையாக, ஆசிரிய மாலையில் இருந்து ஒரு சில பாட்டுக்களையாவது புறத்திரட்டு என்னும் தொகைநூலில் சேர்த்திருக்கிறார். 

இது தவிர, தொல்காப்பியத்திற்கான நச்சினார்க்கினியர் உரையிலும் ஓரிரு பழைய இராமாயணப் பாட்டுக்கள் கிடைக்கின்றன. புறத்திரட்டு என்பது திரு. வையாபுரிப் பிள்ளையின் எடுவிப்பில் (editing), சென்னைப் பல்கலைக் கழக வாயிலாய் வெளியிடப்பட்டிருக்கிறது. (அண்மையில் கூட இதன் மறுஅச்சு வெளி வந்திருக்கிறது.). இதே போல "மறைந்து போன தமிழ்நூல்கள்" என்ற தலைப்பில் மயிலை. சீனி. வேங்கடசாமியாரால் வெளிவந்த பொத்தகத்திலும் இந்தப் பழைய இராமாயணப் பாடல்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

[இந்தப் பாடல்களை இணையத்தில் எங்களைப் போன்ற பலருக்கும் அறிமுகம் செய்து விளக்கியவர் நண்பர் அட்லாண்டா பெரியண்ணன் சந்திர சேகரன் ஆவார். Remnants of Tamil Works lost over the years - I, pazaya rAmAyaNam (in Tamil Script, TSCII format) என்று தேடினால் அவர் வலையில் இட்டது கிடைக்கும். (அவரைப் போன்றவர்கள் இன்று தமிழ் இணையத்தில் இல்லாதது ஓர் இழப்பே!) 

இந்தப் பாடல்கள் வால்மீகி இராமாயணத்தில் இல்லாத நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது பற்றி பெர்க்லி பல்கலைத் தமிழ்-வடமொழிப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு (George Hart) "The Poems of Ancient Tamil: their milieu and their Sanskrit counterparts", (1975) எனும் நூலில் சொல்வதாக பெ.சந்திரசேகரன் சொல்வார்.]

பழைய இராமாயணம் என்று மேலே சொன்னாலும், கிடைத்தது என்னவோ, ஐந்து பாடல்கள் தாம். இந்தப் பழைய இராமாயணம், கம்ப ராமாயணத்திற்கும் முந்தி இருந்திருக்க வேண்டும்; எந்தக் காலமென உறுதியாக சொல்ல முடிய வில்லை. அதன் நடையையும் (தேவாரம், நாலாயிரப் பனுவல்களுக்கும் முந்திய காலங்களில் தான் அகவல் நடை பெரிதும் விரும்பப் பெற்றது. பிற்காலங்களில் விருத்தப் பாக்கள் கூடிவிட்டன), சொல்லாட்சிகளையும் பார்த்தால், பெரும்பாலும் சங்ககாலக் கடைசியில் உருவாகி இருக்க வாய்ப்புண்டு என்றே ஊகிக்கிறோம். ஆசிரிய மாலையில் வரும் பழைய இராமாயணப் பாக்கள் எல்லாமே போர்க்களம் பற்றியதாய் உள்ளன. மற்ற பாட்டுக்கள் எல்லாம் சுவடி அழிந்ததில் தொலைந்தன போலும்.

முதற்பாட்டு:

மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து
கான்உறை வாழ்க்கையில் கலந்த இராமன்
மாஅ இரலை வேட்டம் போகித்
தலைமகள் பிரிந்த தனிமையன் தனாது
சுற்றமும் சேணிடை அதுவே முற்றியது
நஞ்சுகறைப் படுத்த புன்மிடற்(று) இறைவன்
உலகுபொதி உருவமொடு தொகைஇத் தலைநாள்
வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி
வன்தோள் ஆண்தகை ஊரே அன்றே
சொல்முறை மறந்தனம் வாழி
வில்லும் உண்(டு)அவற்(கு) அந்நாள் ஆங்கே
மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும்
நீலக் குவளை நிறனும் பாழ்பட
இலங்கை அகழி மூன்றும் அரக்கியர்
கருங்கான் நெடுமழைக் கண்ணும் விளிம்(பு)அழிந்து
பெருநீர் உகுத்தன மாதோ வதுவக்
குரங்குதொழில் ஆண்ட இராமன்
அலங்குதட(று) ஒள்வாள் அகன்ற ஞான்றே.

இராமனின் தனிமை இலங்கையின் அழிவில் முடிந்ததை இந்தப் பா சொல்லுகிறது. இனிக் கீழே ஒவ்வொரு பாவுக்கும், நானறிந்த வகையில் உரை சொல்லி என் புரிதலையும் கொடுத்துள்ளேன். இந்த உரைகளுக்கும், புரிதலுக்கும் நானே பொறுப்பு. ஒருவேளை கம்பனை இன்னும் ஆழ்ந்து படித்தால், சிற்சில இடங்களில் மாறுபட இயலும். நண்பர்கள் முயன்று உரிய பொருளைப் பலருக்கும் உணர்த்தினால் நல்லது.

--------------------------
அகவையில் மூத்த தந்தையின் ஏவலால், ஊரைத் துறந்து, காட்டுவாழ்க்கையில் கலந்துபோன இராமன், பெரிய கலைமான் வேட்டையில் ஈடுபட்டுத் தன் தலைவியைப் பிரிந்த தனிமையாகி, தன்னுடைய சுற்றத்தையும் விட்டுத் விலகுமாறு முடிந்ததால், நஞ்சுகறைப் பட்ட கழுத்துடைய இறைவன், உலகாளும் அம்மையொடு சேர்ந்திருந்த தலைநாளில், பனிமலை இமயத்தை அசைத்தெடுத்த பெரும் வன்தோள் ஆண்தகையின் (அதாவது இராவணனின்) ஊர் முற்றுகையுற்றது.

கொலைக்குரங்குகளின் தொழிலை ஆண்ட இராமனின் ஒளி மின்னும் வாள் அதன் உறையை விட்டு அகன்ற பொழுது, நீண்டமழையில் கருங்காடு எல்லையில்லாமல் நீர் உகுப்பது போல, அரக்கிப் பெண்களின் சிவந்தவரிப் புறத் தோற்றமும், குவளை மலர் போன்ற நிறமும் பாழ்பட, இலங்கையின் மூன்று அகழிகளும், பாழ்பட்டன. சொல்முறை மறந்தோமோ! வாழி ! அவன் வில்லும் அந்த நாளில் அங்கு தான் இருந்தது.
------------------------

மேலே சொன்ன விவரிப்புச் செய்தியில் முகன்மையானது, இராவணனின் கோட்டை மூன்று பக்கம் அகழி கொண்டது என்று சொல்வதாகும். இதன் மூலம், கோட்டையின் இன்னொரு பக்கம் கடலாக இருந்திருக்கக் கூடும் என உணர்கிறோம். இவ் விவரிப்பு கம்பனின் இராம காதைக்கு முற்றிலும் மாறுபட்டது. 

(இராமாயணத்தில் பல்வேறு வேற்றங்கள் -versions - உண்டு என்பது தமிழிலும் இதன்வழி உண்மையாகிறது. ஆசிரிய மாலையில் வரும் பழைய இராமாயணத்திற்கும், கம்பராமாயணத்திற்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன.) 

கம்பனில் இராவணனின் கோட்டைக்கு 4 பக்க அகழியும் வாயில்களும் சொல்லப் படும். மேலே "வன்தோள் ஆண்டகை" என்று இராவணன் சிறப்பாகவே சொல்லப் படுகிறான். அரக்கிப் பெண்களின் நிறம் குவளை மலர் போன்று சொல்லப் படுகிறது. செங்கீற்றுப் பாய்ந்த கருநிறம் குவளை நிறமாகும். ("அவன் பெருமானர் மகன் (son of a brahmin); அவனைப் போய் இவர்கள் ஆதரிக்கிறார்களே?" என்ற இந்துத்துவக்காரர்களின் சதுரப் பேச்சு - smart talk - இங்கு எடுபட முடியாது. அரக்கர் தனி இனம் என்று தான், அரக்கியரின் நிறம் குறிப்பது வழியாக, அறிகிறோம்.)

இனி இரண்டாம் பாட்டிற்கு வருவோம்.

இருசுடர் இயங்காப் பெருமூ(து) இலங்கை
நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை
எண்(கு) இடை மிடைந்த பைங்கண் சேனையிற்
பச்சை போர்த்த பலபுறத் தண்ணடை
எச்சார் மருங்கினும் எயிற்புறத்(து) இறுத்தலின்
கடல்சூழ் அரணம் போன்றது
உடல்சின வேந்தன் முற்றிய ஊரே.

-----------------------------------
கதிரும் நிலவும் உலவாத, பெரும் முது இலங்கையை பெருந்தோள் இராமன் வெற்றி கொண்ட போது, கரடிகள் இடைநிறைந்த, சினத்தால் பசித்த சேனை, மதிற்புறத்து எந்தப் பக்கம் நெருங்கினாலும், பச்சை போர்த்திய பல்வகை மருத நிலப்புறம் இருந்ததால், உடல் சினந்த வேந்தன் முற்றுகையிட்ட ஊர் கடல் சூழ்ந்த அரணம் போன்று ஆனது.
-----------------------------------

பாடலின் வழி நாம் கூர்ந்து கவனிக்கும் செய்திகளுக்கு வருவோம். முற்றுகையின் போது இராமனின் உடல் சினந்து காணப்படுகிறது. அவன் இயல்பான ஒரு மாந்தனாகவே, (கம்பனில் சொல்வது போல் கடவுள் அல்ல,) இந்தச் சொல்லாட்சியில் அறியப் படுகிறான். போர் வெற்றி கொண்ட நாள் அமையுவா நாளாக (கதிரும் நிலவும் உலவாத அமாவாசை நாளாக) அறியப் பெறுகிறது. (கம்பராமாயணத்தில் இச் செய்தியை நான் இன்னும் ஒத்துப் பார்க்கவில்லை)

கோட்டையின் மூன்று பக்கத்திலும் சுற்றி இருந்தது மருத நிலப்புறம். கம்பன் சொல்லுவது போல மலையும் காடும் சூழ்ந்த அணுக்கம் நான்கு திசையிலுமாய் விவரிக்கப் படவில்லை. திரிகூடமலை இங்கு உணர்த்தப் படவில்லை. 

(கம்பன் விவரிக்கும் யுத்த காண்டத்தில் மரா மரங்களும், கடம்ப மரங்களும் கணக்கற்று குரக்கினத்தால் பிடுங்கப் படுகின்றன; கல்லும், பாறைகளும் பெயர்க்கப் படுகின்றன.) 

கம்பன் விவரிக்கும் இடமும், இந்த இடமும் வேறுபடுகின்றன. மருத நிலப்புறம் என்பது "பலபுறத் தண்ணடை" என்ற சொல்லாட்சியால் இங்கு உணர்த்தப் படுகிறது. இக் குறிப்பு கம்பனோடு ஒப்பிட்டால் முற்றிலும் வேறுபடுகிறது. கம்பன் சொல்லும் இடம் வேறு எதோ விவரிப்பைக் குறிக்கிறது. 

கம்பன் கூறும் இடம் இன்றைய இலங்கையாக இருக்க வாய்ப்பில்லை என்றே கம்பனை ஆழ்ந்து படிப்போர் உணரமுடியும். (இற்றை இலங்கையின் புவியியல் தெரிந்தவர் அதை ஆய்வு செய்யவேண்டும். இலங்கையின் புவியியல் குறிப்பு பற்றி நான் தெரிந்தவற்றைப் பின்னால் சொல்கிறேன்.)

மூன்றாவது பாட்டு இராவணனின் வள்ளன்மையையும், மள்ளரின் வீரத்தினால் நொச்சித் தடந்தகையை (strategy) அவன் வகுத்ததையும் பாடுகிறது.

மேலது வானத்து மூவா நகரும்,
கீழது நாகர் நாடும் புடையன
திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
கண்நுதல் வானவன் காதலின் இருந்த
குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்
தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்த இலங்கையில்
வாடா நொச்சி வகுத்தனன்
மாலை வெண்குடை அரக்கர் கோவே.

---------------------------------
மேலே வானத்தில் அழியா நிற்கும் அமராவதி நகரிலும், கீழே நாகருடைய நாட்டிலும் பெருகிக் கிடப்பவற்றையும், எட்டுத் திசை காப்பாளர்களின் தேசக் கோட்டையையும், சூறையாடுவதாய்ச் சூளுரைத்து, அவற்றைக் கவர்ந்து, முன்பு பெற்ற பல்வேறு விழுநிதியெல்லாம், அந்த வழியில், நெற்றிக்கண் முதல்வனின் மேல் உள்ள பற்றிமையால் (பக்தியால்) கயிலைக் குன்றை ஏந்திய தடக்கைகள் இப்பொழுது தொழிற்படும்படி, தோலா வலிமையோடு, தன் நிழலுக்குக் கீழே வாழ்ந்த வல்லமை பொருந்திய மள்ளருக்கு அள்ளிக் கொடுத்து ஏற்படுத்திய இலங்கையின் மருதப் புறத்து மதிலைக் காக்கும் படி நொச்சி ஏற்பாட்டை வகுத்தான், மாலையொடு வெண்கொற்றக் குடையிந் கீழ் வீற்றிருக்கும் அரக்கர் அரசன்.
---------------------------------

மேலே வானம், கீழே பாதலம் (இதற்குப் புவியின் அடியில் என்ற பொருளை மட்டும் கொள்ள வேண்டியதில்லை. இவர் இருக்கும் புவிமட்டத்திற்குக் கீழே உள்ள இடம் கூடப் பாதலம் தான். பாதலம் என்பது கிட்டத்தட்ட இன்றையப் பொருண்மையான பள்ளத்தாக்கையே குறிக்கிறது. காட்டாக மலை மேட்டிலிருந்து பார்த்தால் கீழுள்ள இடத்தைப் பாதலம் என்றே பேச்சுவழக்கில் சொல்லுவார்.), சுற்றிலும் எட்டுத் திசையிலும் இருக்கும் நாடுகளில் இராவணனின் அதிகாரம் நிலவியதாக புலவர் சொல்கிறார்.

இப் பத்துத் தலையிலும் (தலை என்பதற்குத் தமிழில் திசை என்றும் பொருள் உண்டு.) இவன் ஆட்சி எடுபட வேண்டுமானால், இராவணன் பத்துத் தலையான் என்று சொல்லுவது இயல்பே. பின்னால் பத்துத் தலையான் என்று உடல் அமைவோடு குழம்பினரோ, என்னவோ?

இவன் பத்துத் தலையிலும் சூறையாடியது கூட வியப்பில்லை. "ஆ, அரக்கன், அதனால் சூறையாடினான்" என்று அச்சடித்துப் பார்க்கும் வேலையெல்லாம் தேவையில்லை. சூறையாடும் செயலை நாவலந்தீவில் பல அரசரும், தலைவரும் வெவ்வேறு கால நிலைகளில் செய்திருக்கிறார். வேண்டுமானால் புறநானூற்றுப் பாட்டுக்கள் சிலவற்றைப் படித்துப் பார்க்கலாம். ("ஆகா, தமிழனைச் சொல்லிவிட்டான்" என்று தேவைக்கு மீறி உணர்ச்சி வயப் படாமல், இயல்பான முறையில் மேலே உள்ள பாவின் வரிகளைப் புரிந்து கொள்வது நல்லது. எந்தக் காலத்திலும் தடியெடுத்தவன் எல்லாம் தண்டற்காரன் தான். இந்தத் தடியெடுப்பை இராவணனும் செய்வான், இராமனும் செய்வான்; செய்திருக்கிறான்.)

இராவணன் கயிலையை அசைத்ததும், அவன் சிவநெறியாளன் என்பதும் இப் பாடலில் பெரிதும் பேசப் படுகிறது. தமிழரின் இலக்கியத்தில் இராவணன் ஒரு சிவ வழிபாட்டாளன் என்பது அழுத்தமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த எண்ணம் நெடுநாட்கள் தமிழரிடையே இருந்திருக்கலாம். (கலித்தொகை 38 இலும், இராவணன் இமயமலைக்கு அடியில் சிவனின் அழுத்தலால் சிக்கிய கதை சொல்லப் படும்.

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல - கலி 38:1-5

---------------------------
அந்தணன் என்ற சொல்லைப் பார்த்துப் "பெருமானராய்ச் சிவனைச் சொல்லிவிட்டார் இந்தப் புலவர்" என்று படையெடுத்துக் கொண்டு யாரும் வர வேண்டாம். அந்தன்> அந்தனன்> அந்தணன் என்ற சொல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் பார்ப்பனரைக் குறிக்கவில்லை. அப்படிக் குறிப்பதாகப் பலரும் பரப்புரை செய்கிறார்கள்; அது தவறு. 

பெருமானர், பார்ப்பனர், அந்தணர் என்ற சொற்களின் பொருண்மைகள் பல்வேறு நிகழ்ப்புக்களுடன் (agenda) விதம் விதமாக நம் முன்னால் திரிக்கப் படுகின்றன. பொதுவாக, அத்தன் = தலைவன், ஐயன், பெரியவன் என்ற பொருளையே அந்தணன் என்ற சொல் குறிக்கிறது. தமிழறிஞர் இளங்குமரன் "அந்தணன்" என்ற சொற்பிறப்பை அழகாக எடுத்துரைப்பார். என் முந்தையக் கட்டுரைகளில் அவரை எடுத்துரைத்து வழி மொழிந்திருக்கிறேன்.)
-------------------------------

கலித்தொகைப் பாடலை விடுத்து, ஆசிரிய மாலையில் வரும் மூன்றாவது பழைய இராமாயணப் பாடலுக்கு மீண்டும், வருவோம்.

தன்னால் வாழும் படையினருக்கும், மக்களுக்கும் பல நிதியங்களை இராவணன் அள்ளிக் கொடுத்திருக்கிறான்; அவர்களோடு பெரிதும் ஒன்றியிருக்கிறான். அவர்களால் தான் அவன் தலைநகரே கட்டப் பட்டிருக்கிறது. (அவனுக்காக உயிர்கொடுக்கவும் தயங்காதவராய் அவர் இருந்திருக்க வேண்டும். அவன் கொடுங்கோலனாய் இருந்திருந்தால் இது முடியாது.)

மள்ளர் என்பது மேலே வீரரைக் குறிக்கும் கடைந்தெடுத்த தமிழ்ச்சொல். அது மட்டுமல்லாது, கோட்டை மதிலைக் காக்க இராவணன் நொச்சித் தடந்தகையை (strategy) வகுத்தான் என்று சொல்லும் போது தொல்காப்பிய வழித் தமிழ்ப் போர்முறை இங்கு குறிக்கப் படுகிறது. கம்பரும் கூட யுத்த காண்டத்தின் அணிவகுப்புப் படலத்தில், இராவணன் முன்னே நிகும்பன் தம் பகைவரை இகழ்ந்து கூறுவதாக ஒரு பாடலை வைப்பார்:

எழுபது வெள்ளத் துற்ற குரக்கினம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்
அழவநீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர்

என்று அது வரும். "குரக்கினம் எழுபது வெள்ளம் சேனை வைத்து இருந்தால் என்ன? உன்னிடம் ஆயிரம் வெள்ளம் சேனை இருக்கிறது. அவருடைய உழிஞைத் தடந்தகையை (strategy) முறியடிக்க நொச்சித் தடந்தகையை (strategy) தன் உச்சியில் உன் ஊர் கொண்டுள்ளது" என்று சொல்லும் இந்தக் கம்பர் பாடல் ஆசிரிய மாலையின் தாக்கம் கொண்டதாகவே உள்ளது. இந்தப் போர் தமிழ்முறைப் படியே தான் இரு புலவராலும் புரிந்து கொள்ளப் படுகிறது. [மிண்டும் சொல்லுகிறேன். இங்குள்ள "போர்முறை" தமிழ்முறைப் படியே சொல்லப் படுகிறது. "இராவணன் தமிழனா, தமிழன் இல்லையா?" என்று தொங்கிய வண்ணம் தாவ நினைப்போர், மேலே கொடுத்துள்ள பட்டகைகளை - facts - குழப்பிக் கொள்ளக் கூடாது.]

அடுத்து நான்காம் பாட்டிற்குப் போவோம்.

இருபால் சேனையும் நனிமருண்டு நோக்க
முடுகியல் பெருவிசை உரவுக்கடும் கொட்பின்
எண்திசை மருங்கினும் எண்ணிறைந்து தோன்றினும்
ஒருதனி அனுமன் கைஅகன்று பரப்பிய
வன்மரம் துணிபட வேறுபல நோன்படை
வழங்கி அகம்பன்தோள் படையாக ஓச்சி
ஆங்க,
அனுமன் அங்கையின் அழுத்தலில் தனாது
வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம்கரிந்(து)
உயிர்போகு செந்நெறி பெறாமையின்
பொருகளத்து நின்றன நெடும்சேண் பொழுதே.

-----------------------------
பெரும்விசையோடு, முடுகி எறிந்த வலிந்த கடுஞ் சுழற்சியில், எட்டுத் திசை மருங்கிலும் எண்ணமுடியாத படி தோன்றினாலும், தனி ஒருவனான அனுமன் தன் கையை அகற்றி வீசிய வலியமரம் உடைந்து போக, பல்வேறு நோன்புகளால் பெற்ற படைகளை வீசியும் அழியாததால், பெருமான் (பிரமன்) கொடுத்த வேற்படையை வீசிப் போதியதாக்க, அனுமன் உள்ளங்கையின் அழுத்தலால் தன்னுடைய வலிந்த தலையோடு உடல் புகுந்து தைக்க, முகம் கரிந்து, உயிர் போகும் விதி பெறாமையால், இருபக்கத்துச் சேனையும் மிகுந்து மருண்டு நோக்கிய படி, நெடிதுயர்ந்த பொழுதுக்கும், போர்க்களத்து நின்றன.
-----------------------------

இங்கே முன்னால் பிரமனிடம் தான் பெற்ற படையை வீசி  இராவணன்  இலக்குவனை அயரச் செய்தது கூறப் படுகிறது. (பெருமான் என்ற வடபுலத்துத் தெய்வக் குறிப்பு இங்கே பதிவு செய்யப் படுகிறது.) இந்தப் படையை வீசும் போது, குறுக்கே அனுமன் தடுத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. (அந்தச் செய்தி கம்பனில் கிடையாது.) ஆனால் யார் மேல் இராவணன் எறிந்தான் என்று இப் பாடலை வைத்துச் சொல்ல முடியவில்லை. நல்ல வேளையாக, கம்பனின் இராம காதை உதவிக்கு வருகிறது. இராவணன் எறிந்த அகம்பன் (=நான்முகன்) வேல் இலக்குவனை மயங்க வைத்ததாக இரு பாட்டுக்கள் கம்பனில் (யுத்த காண்டம், முதற் போர்புரி படலத்தில்) இருக்கின்றன.

வில்லினால் இவன் வெலப்படான் எனச் சினம் வீங்க
கொல்லும் நாள் இன்று இது எனச் சிந்தையில் கொண்டான்
பல்லினால் இதழ் அதுக்கினன் பருவலிக் கரத்தால்
எல்லின் நான்முகன் கொடுத்த ஓர் வேல் எடுத்து எறிந்தான்

எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்துப்
பொறிந்து போய் உக, தீ உக, விசையினின் பொங்கி
செறிந்த தாரவன் மார்பிடை சென்றது சிந்தை
அறிந்த மைந்தனும் அமர்நெடுங் களத்திடை அயர்ந்தான்.

இந்த 2 பாட்டுகளின் உதவியோடு ஆசிரிய மாலையின் பாட்டைப் பார்த்தால் பொருள் சட்டென்று விளங்குகிறது. "வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம் கரிந்(து)" என்ற இலக்குவனின் நிலை கம்பனில் சொல்லப் படவில்லை. அங்கு இலக்குவன் ஆதிசேடனின் அவதாரம் என்பதால் இலக்குவன் பட்ட வலியும், முகம் கரிதலும் சொல்லப் படாது "அவன் அயர்ந்தான்" என்று மேலோட்டமாய்ப் பூசியதுபோல் சொல்லப் படும். இரண்டு சேனையும் இச் சண்டையைக் கவனித்து மருண்டு போய் நிற்கின்றன.

இனி ஐந்தாம் பாட்டிற்கு வருவோம்.

கடலும் மலையும் நேர்படக் கிடந்த
மண்ண வளாக நுண்வெயில் தகளினும்
நொய்தால் அம்ம தானே இஃ(து)எவன்
குறித்தன நெடியான் கொல்லோ மொய்தவ
வாங்குசிலை இராமன் தம்பி ஆங்(கு)அவன்
அடிபொறை ஆற்றின் அல்லது
முடிபொறை ஆற்றலன் படிபொறை குறித்தே.

இடுகையை வேகமாய் முடிக்க வேண்டிய நிலையில் இந்தப் பாடலின் உரையை கம்பனோடு ஒப்பிட்டு "எந்த நிகழ்வை இது குறிக்கிறது?" என்று ஆய்ந்து எழுத முடியாது இருப்பதால், பாட்டை மட்டுமே தருகிறேன். இலக்குவன் பெயரை நேரே குறித்த தமிழ்ப் பழம்பாடல் இது ஒன்றாகத் தான் இருக்கும்.

"அரக்கர் என்பவர் வெறுக்கப் படத்தக்கவர்" என்ற சுமையேற்றிய பார்வை இந்தியத் துணைக் கண்டத்தில் பெரிதும் பரப்பப் பட்டுள்ளது. மேலே உள்ள 5 பாக்களைப் படித்தால், அந்தப் பார்வை ஒரு பக்கப் பார்வை என்பதைக் குறிப்பால் அறியமுடியும். ஒருபக்கம் குரக்கினமும், இராமனும், அவனைச் சார்ந்தவரும்; இன்னொரு பக்கம் அரக்கர் என்ற அளவிலேயே நொதுமலாய்ச் (neutral) செய்திகள் சொல்லப் படுகின்றன.

இனி அடுத்த இடுகையில் அரக்கர் பற்றிக் கொஞ்சமும், சேது பற்றி நிறையவும் பேசுவோம். (அகம் 70 பற்றிய செய்தி அங்குதான் வருகிறது)

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 23, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 2

புறம் 378 கீழ்வருமாறு போகிறது.

தென்பரதவர் மிடல் சாய
வடவடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத்து அன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கென வகுத்த வல்ல மிகப் பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழி தந்தோனே! அதுகண்
இலம்பாடு இழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ் சேர் மதரணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்(கு)
அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே
இருங்கிளை தலைமை எய்தி
அரும்படர் எவ்வ முழந்த தன் தலையே

இந்தப் பாடலின் காலத்தில், சோழரின் அரசு தெற்கே கடற்கரையை ஒட்டிப் பரவவொட்டாமல், தடுத்ததில் பரதவரின் பங்கும், வேங்கடத்திற்கும் வடக்கே பரவவொட்டாமல் தடுத்ததில் வடுகரின் பங்கும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. (முன்னே சொன்னது போல் இளஞ்சேட்சென்னி - கரிகாலன் II ஆகியோர் தான் பெருஞ்சோழர் அரசை உருவாக்கியவர்கள். அதனால் தான் கரிகாலனுக்கு அவ்வளவு பெயர் தமிழர் வரலாற்றில் ஏற்பட்டது. பரதவரை வென்றி கொண்டதெல்லாம், சோழ அரசின் தொடக்க காலங்களில் நடந்திருக்க வேண்டும். ஒரு பேரரசின் தொடக்கம், நிலைப்பு, முடிவு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால், இந்தப் பாட்டைச் சங்கம் முடிகின்ற காலத்துக்கு அருகில் கி.பி. 150-க்குத் தள்ளுவது கொஞ்சமும் சரி வராது. மீண்டும், மீண்டும், கி.மு. 200ல் இருந்து கி.பி. 200 என்ற 400 ஆண்டு காலத்தையே சுற்றிக் கொண்டு சங்க காலத்தைக் கொள்ளுவது, முன்னே சொன்ன செங்குட்டுவன் - கயவாகு என்னும் சம காலப் பொருத்தத்தால் அமையும் செக்குமாட்டுச் சுற்று. அதைவிட்டு வெளியே வந்தால் தான், சங்க காலம் என்பது ஆய்வாளருக்குச் சரியாகப் புலப்படும்.

குறிப்பாக, அண்மைக்கால அகழ்வு ஆய்வுகளும், தமிழிக் கல்வெட்டு ஆய்வுகளும், சங்க காலத்தை கி.மு.400-கி.பி.200 என்ற 600 கால அகண்ட இடைவெளிக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. இன்னும் கொடுமணலும், ஆதிச்ச நல்லூரும் முழுதாக ஆயப்படவில்லை. இது வரை இங்கு நடந்த 5% ஆய்வுகளே தமிழக வரலாற்றை அசைத்து, 200 ஆண்டிற்கு அகலப் படுத்தியிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் பலரும் இன்னும் கி.அ. நீலகண்ட சாத்திரியாரிடமும், ஐராவதம் மகாதேவனிடமும் இருந்து கொண்டிருந்தால் எப்படி? ஆற்றில் பெரும்நீர் சாத்திரியாருக்கும் அப்புறம், திரு. மகாதேவனின் தமிழிக் கல்வெட்டு ஆய்வுக் காலத்திற்கு அப்புறம், ஓடிவிட்டது. அண்மைக்கால 10, 15 ஆண்டு ஆய்வுகளைக் கூர்ந்து கவனிக்குமாறு சொல்லுகிறேன். முனைவர் கா.ராஜனின் "தொல்லியல் நோக்கில் சங்க காலம்" - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004 ஆம் ஆண்டு வெளியீட்டை படித்துப் பார்த்தால் நான் சொல்லுவது புரிபடும்.)

புறம் 378 ஆம் பாடலின் முதற் பன்னிரு வரிகளில் இளஞ்சேட் சென்னியைப் புகழும் புலவர் (அவற்றை நான் இங்கு விளக்கவில்லை), அதற்கு அடுத்த வரிகளில், அரசன் தனக்கு முன்பு தந்த நகைகளைத் தன் சுற்றத்தார் அணிந்து கொள்ளத் தெரியாமல் தடுமாறிய காட்சியை விவரித்துச் சிரிக்கிறார். "இப்பொழுது இவன் கொடுக்கப் போகும் செல்வம் என்ன பாடுபடும்?" என்பதே அவர் உள்ளத்தே எழும் குறுகுறுப்பு.

"வறுமையைச் சட்டென்று இழந்த தன் சுற்றத்தார் விரலிற் செறிந்து கொள்ளுவதைச் (அதாவது மோதிரத்தை) செவியிற் தோடாய்ப் போட்டுக் கொண்டும், செவியிற் போடும் தோட்டை, மோதிரம் ஆக்கியும், அரையில் போடும் இடுப்புச் சங்கிலியைக் கழுத்திற் போட்டும், கழுத்துச் சங்கிலியை அரையில் போட்டுக் கொண்டும், தடுமாறியது எப்படி இருந்ததாம்?"

மிகுந்த கோவத்தில் (கருந்தெறல் என்றால் அது ஒரு பொருள்) இருக்கும் இராமனின் மனைவி சீதையை வலிமிகுந்த அரக்கன் கவர்ந்து கொண்டு போன போது, நிலத்தின்மேல் நகைகளைத் தூக்கி விட்டெறிந்தாளே (இங்கே கொஞ்சம் ஊன்றி ஓர்ந்தால், வான்வழி சீதையைக் கொண்டுபோன செய்தியும் கூட இந்தப் பாட்டில் மறைந்து நிற்பது புலப்படும்), அந்த ஒளிமிகுந்த நகைகளை அள்ளி, இப்படித் தாறுமாறாக அணிந்து கொண்ட, வான் கலத்திற்குக் (aircraft) கீழே இருந்த குரங்குகளின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தது போல இருந்ததாம்.

இந்தக் குரங்குகளை எப்படி நாம் புரிந்து கொள்ள வேண்டும்? வெறும் சிறு குரங்குகள் என்றா? அல்லது மாந்தக் குரங்குகள் என்றா? இந்தப் பாட்டில் அதற்குக் குறிப்பில்லை. (செம்முகப் பெருங்கிளை என்பது உறுதியாகச் சிறு குரங்குகளைக் காட்டவில்லை. மாந்தக் குரங்குகளா, காட்டு மனிதர்களா என்பது அவரவர் விழைவு :-)) ஆனால் வலித்தகை அரக்கன் என்பது குறிப்பிடப் படுகிறது. இந்த அரக்கனுக்குப் பொருள் காணும் போது ஒருமையை வைத்துப் பார்ப்பது சரியாக அமையாது. அரக்கர் என்னும் பன்மைச் சொல்லாட்சியை வைத்துப் பார்க்க வேண்டும். "இந்த அரக்கன் சீதையைக் கவர்ந்து போனான்" என்பது கதைப்படி சரியான கூற்றுத் தான். இதற்கு மறுதலைக் கூற்றாய் "பெண்ணைக் கவர்பவன் எல்லாம் அரக்கன்" என்று சொல்ல முடியுமோ? அப்புறம் என்ன இராட்சதன், இராக்கதன்? ஓர் அரக்கன் கவர்ந்தது விதப்பான செயல். அதே பொழுது அரக்கன் என்பது பொதுமைப் பெயர்.

எப்படி வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர், இயக்கர், மாந்தர் என்பவை பொதுமைப் பெயரோ, அதைப் போல அரக்கர் என்பதும் பொதுமைப் பெயரே! பொதுவாகப் பொதுமைப் பெயர்கள் எல்லாம் விதப்பான பொருளில் எழுந்து நாளாவட்டத்தில் பொதுமைப் பட்டுப் பின் மற்ற விதப்பான பொருண்மைகளையும் குறிக்குமாப் போலப் பேச்சில் பயன்படுவது பல மொழிகளிலும் நடப்பது தான்.

அமெரிக்காவில் கருப்பர் அல்லாதவருக்கு, கருப்பர் மேல் இருக்கும் ஓர் சுமையேற்றிய பார்வையை இங்கு குறிப்பிட விழைகிறேன். 1980ல் ஒருமுறை மாண்ட்ரியாலில் இருந்து என் குடும்பத்துடன் அமெரிக்காவின் கிழக்குக் கரை நகரங்கள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே வாசிங்டன் நகருக்கும் போக முற்பட்டேன். மாண்ட்ரியாலில் என்னோடு இருந்த பல தமிழரும்/இந்தியரும், கனேடிய வெள்ளைக்காரர்களும், என்னைக் கலவரப்படுத்தி "வாசிங்டன் என்பது கருப்பர்நகரம். நீ கவனமாக இருக்க வேண்டும்; பொது இடங்ளிலும், பேருந்து, தொடரி (train) போன்றவற்றிலும் உன் உடமை, குடும்பம் ஆகியவற்றின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்" என்றெல்லாம் அவரவரின் பொதுப் புத்திக்கு ஏற்பச் சொல்லி கருப்பர் மேல் ஒரு பூதகரத் தன்மையை எனக்கு ஊட்டினார்கள். நானும் கலவரப்பட்டுத் தான் வாசிங்டன் போனேன். ஆனால் அங்கு நடந்ததே வேறு கதை. (அதை இங்கு சொன்னால் தடம் மாறிவிடும்). பின்னால் என் முட்டாள் தனம் கண்டு நானே வெட்கப் பட்டுப் போனேன். "கேப்பையில் நெய்வடிகிறது" என்று சொன்னால், கேட்பவனுக்கு எங்கே புத்தி போயிற்று? - என்று நினைத்து அமைந்துகொண்டேன். வெகு எளிதில் ஆதிக்கப் பார்வை என்பதைப் பொதுப்புத்தி மூலம் புதியவருக்கும் பரவி விடும் உலகம் இது.

பொதுவாக ஆதிக்கக்காரர்கள் தங்களுடைய குமுகப் பார்வையை தாங்கள் கையாளும் மொழிக்குள்ளும் சுமையேற்றி வைப்பார்கள். விவரம் தெரியாத மற்றவரும் தற்சிந்தனை இல்லாமல் அந்த ஆதிக்கப் பார்வையை தம்மை அறியாமலே கைக்கொள்ளுவார்கள். "கருப்பரா? கவனம்" என்ற தொடர் எவ்வளவு சுமையேற்றிய பார்வையோ, அதே போல "கிராதகன்" என்ற சுமையேற்றிய பார்வையும் வேத நெறியின் காலத்தில் இருந்தே நாவலந்தீவில் பரப்பப் பட்டிருக்கிறது. (எப்படி மேல்சாதி இளைஞரிடம் ஆதிக்கச் சிந்தனையாளர் கீழ்சாதியார் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஒருசார்ப்பட இயக்கி வைப்போர்களோ அதே போல, இன்னொரு மதத்தாரை "கொம்பு முளைத்தவர், பயங்கரவாதிகள்" என்று பொதுப்புத்தியில் சுமையேற்றி வைக்கும் அடிப்படை மதவாதிகள் போல) "கிராதகன்" என்ற சொல்லும் இந்தியர்களின் அடிமனத்தில் சுமையேற்றப் பட்டிருக்கிறது.

கிராதர் என்பவர் கருத்தவர்களே - கருப்பானவர்களே! இவர்களைத்தான் இன்றைய மாந்தவியல் Mon-khmer என்றும். முண்டா மொழி பேசுகிறவர்கள் என்றும் கூறும். இவர்களே இன்றைக்கும் வடபுலத்தின் ஆதிக் குடிகள். கருத்தர் என்ற நிறவழிச் சொல்லை நாளாவட்டத்தில் சுமையேற்றி வடமொழியின் வழியாக இந்திய மொழிகள் பலவற்றிலும் "கிராதகன்" என்ற கொடுமைப் பொருள் கொண்ட சொல்லை உருவாக்கவில்லையா? கிராதகன் கொடுமையானவன் என்ற இரண்டாம் வழிப் பொருளை வைத்துக் கொண்டு முதற்பொருளை விட்டொழிப்பது சிந்தனைத் தாக்கம் தானே? முதற்பொருள் கருப்பு என்பதே. "அவன் கருப்பா, அப்பொழுது கிராதகன் என்பது சரிதான்" என்று எத்தனை மக்கள் மனத்தில் அனிச்சைச் செயலாய் சொற்கள் ஆளப்படுகின்றன? இத்தனைக்கும் இன்று புனிதம் என்று சொல்லப்படும் கங்கை எனும் கருப்பு ஆற்றிற்குக் கூட முதலில் கிராத் என்ற பெயர்தான், இருக்கு வேதம் முடிந்த காலத்தில், இருந்திருக்கிறது.

இருக்கு வேதத்தின் நாயகர்களான திவோதசும், அவன் மகனான சுதாசும் கி.மு.1200 களில் ஆரிய சப்தசிந்துவில் இருந்த சம்பரனென்னும் கிராத அரசனுடன் போர் புரிந்து அவர்களை மலைக்கு ஓடச் செய்து தங்கள் ஆட்சியை நிலைத்துக் கொள்ளுவார்கள். இருக்கு வேதத்தின் குறிப்பிடத்தக்க பகுதி இதைப் பற்றித் தான் பேசுகிறது. "வேதத்தில் அது இருக்கிறது, இது இருக்கிறது" என்ற கற்பனை வாதங்களைத் தூக்கி எறிந்து இருக்கைக் கூர்ந்து படித்தால், "அது வெற்றி பெற்றவர் எழுதிய இலக்கியம், தாங்கள் வெற்றிபெறுவதற்காகத் தங்கள் தெய்வங்களிடம் வேண்டிக் கொண்ட முல்லைநிலப் பாடல்களின் தொகுப்பு" என்பது புரியும். (வேதம் அநாதியானது; அது 4000, 5000 ஆண்டுகளுக்கு முந்தியது என்ற கருத்தை நான் ஏற்பவன் அல்லன். எனக்குக் காதுகுத்தி மிகுந்த ஆண்டுகள் ஆயிற்று. பல ஆய்வாளர்களும் கி.மு.1200 யைத்தான் இருக்கு வேதத்தின் தொடக்க காலமாகவும் கி.மு.1000 ஐ அதன் இறுதிக் காலமாகவும் சொல்லுகிறார்கள்.)

வரலாற்றிற்குச் சற்று முற்பட்ட காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மக்கள் பெரும்பாலும் நிறம் பற்றியும், ஓரளவு இடம் பற்றியுமே, அறியப் பட்டார்கள். இனக்குழுக்கள் காலத்தில் அது இயற்கையே. மேலே கொடுத்த பட்டியலில் வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர், இயக்கர், மாந்தர் என்ற எல்லாச் சொற்களுமே நிறத்தை ஒட்டி ஏற்பட்ட பழைய சொற்கள் தான்.

ஒவ்வொரு சொல்லாக எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

முதலில் வரும் சொல் பார்ப்பனர். கீற்று வலைத்தளத்தில் வரும் செய்திமடல் சூலை 2006ல் "பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?" என்ற கட்டுரையை இரா.மதிவாணன் எழுதியிருப்பார். அதில் பால்-பார்ப்பு-பார்ப்பார் என்று வெண்மைநிறம் கருதியே பார்ப்பனர் என்ற சொல் எழுந்தது என்று அழுத்தமாக நிறுவியிருப்பார். (இன்றையப் பார்ப்பனர் பலரும் நிறம் மாறிக் கிடப்பது வரலாறு 3200 ஆண்டுகள் நகர்ந்துவிட்டதை உணர்த்துகிறது.) பேரா. இராகுல சங்கிருத்தியாயனும், "ரிக்வேத கால ஆரியர்கள்" என்ற தன் பொத்தகத்தின் மூன்றாம் அதிகாரத்தில் (வர்ணமும், வர்க்கமும்) இருக்கு வேதத்தின் பல செய்யுட்தொகுப்புகளை எடுத்துரைத்து ஆரியரின் வண்ணம் பால்நிறம் என்றே நிறுவுவார். (ஆரியர் என்று ஒருவரும் இல்லை; ஆரியர் அல்லாதவர் என்று ஒருவரும் இல்லை என்று பூ சுற்றப் பார்க்கும் வாதத்தைப் புறம் தள்ளுவோம்.) ஆரியரின் முடி வண்ணம் இரோப்பியர் பலரைப் போலத் தீ நிறம் - பொன் நிறம் தான்; blonde.

தேவர் என்ற சொல் தீயென்னும் சொல்லில் இருந்து கிளைத்தது என்று பாவாணர் தன் நூல்களில் ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார். தேவர் என்பவர் பொன் நிறத்தவர்; பொன் முடியாளர்.

(வெள்ளைக்காரர் என்ற சொல்லுக்கு நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை. அதே போலக் கருத்தர், கருப்பர் என்பதற்கும் நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை.)

நாகர் என்பவரும் கருப்பரே. யா என்னும் கருமைக் கருத்தில் இருந்து ந்யா>ஞா>நா என்ற வளர்ச்சியில் நாகர் என்ற சொல் பிறக்கும். (தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகப் ஆய்வறிஞர் ப.அருளியாரின் "யா" என்ற கருவூலம் படித்து ஓர்ந்து பார்க்க வேண்டிய பொத்தகம்.) நாகரின் சுருக்கம் தான் நக்கர் என்பது ஆகும். நக்கவாரம் என்னும் nicobar -இல் வசிக்கும் மக்களை நக்க சாரணர் என்றே மணிமேகலை குறிக்கும். நக்கர் என்ற சொல் தெரிந்தோ தெரியாமலோ இந்தையிரோப்பிய மொழிகள் எங்கும் பரவி இன்று உலகெங்கும் nigger, negro என்று பரவிக் கிடக்கிறது. (இதையெல்லாம் சொன்னால், இது என்ன அபத்தம், மம்போ-ஜம்போ என்று சொல்லுவதற்கும் கேலிசெய்வதற்கும் பெயரில்லாத சிலர் முன்னிகை தர முன்வருவார்கள். இவர்களின் வறட்டுத் தனத்திற்கு எல்லை இல்லை. நாவல் பற்றிச் சொல்ல வேண்டியது நிறையக் கிடக்கிறது. அதற்கும் இன்னொரு நாள் வரவேண்டும்.)

இயக்கர் என்ற ஈழத்தீவின் பழங்குடிகளும் (இவர்களின் தலைவனாகக் குபேரனை வடமொழித் தொன்மங்கள் உருவகஞ் செய்யும்) கருப்பரே. யா என்னும் வேரின் வழி யக்கர் இயக்கராவர்.

யாவகர் (கருப்பர்) இருந்த தீவு யாவகம்>ஸ்யாகவகம்>சாவகம் = java என்னும் இந்தோனேசியத் தீவு. வாரணர் என்பரும் கருப்பரே. வாரணத் தீவு = borneo தீவு.

(இன்னும் சொன்னால் சேரர், சோழர், பாண்டியர் என்பவை கூட நிறத் தொடர்பில் பண்பாடு ஒட்டிய பெயர்கள் தான். அவற்றின் விளக்கத்தை இங்கு சொல்லாமற் தவிர்க்கிறேன்.)

ஆகக் கருப்பர் தென் ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மிகுந்தே இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் கி.மு. 60000 ல் தொடங்கிய கருப்பர் சோமாலியா, தெற்கு அரேபியா, ஈராக், ஈரான், கூர்ச்சரம், மாராட்டியம், கொண்கானம், சேரலம், பாண்டியம் (அங்கிருந்து ஒரு ஈற்றாக ஈழம்), சோழம், கலிங்கம், அங்கம் எனக் கடற்கரை வழியே போய், பின் தென்கிழக்கு ஆசியா வழியாக முடிவில் ஆத்திரேலியா வரை இன்னொரு ஈற்றாக அங்குள்ள பழங்குடிகளாக கி.மு.40000த்தில் முடிந்ததாக அண்மைக்கால Y chromosome மாந்த ஆய்வு ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. நம்முடைய பிரான்மலைக் கள்ளரை ஆய்வு செய்திருக்காவிட்டால் இந்த மாந்தப் பரம்பல் தெரியாமலே போயிருக்கும். இந்த ஆதிக் கருப்பரை M130 வகையினர் - கடற்கரை மக்கள் - coastal people - என ஈனியல் (genetics) குறிக்கும்.

கருப்பரும் வெளுப்பரும் இந்தத் துணைக்கண்டம் வந்தது போக இன்னும் சில இடைப்பட்ட நிறத்தவரும் இங்கு வந்து சேர்ந்த மற்றவர்களில் குறிப்பிட வேண்டியவர்கள் M20 எனப்படும் இந்தியர்கள் (இவர்கள் இங்கு வந்து சேர்ந்து 35000 ஆண்டுகள் ஆகிவிட்டன; திராவிடர் எனப்படுவோர் இவர்தான். என்னதான் இந்துத்துவக் காரர்கள் "திராவிடம் என்பது மொழி பற்றிய கருத்தீடு; அதை இனங்கள் பற்றிய முடிவிற்குள் நுழைக்கக் கூடாது" என்று முறுக்கிக் கொண்டாலும் அறிவியல் அப்படித்தான் போகிறது), 9000 ஆண்டுகளுக்கு முன்வந்த ஒரு குழுவினர், 3500 ஆண்டுகளுக்கும் முன்னால் வந்த இன்னொரு குழுவினர் ஆகியோராகும்.

"Language of Harappans", "The Civilized Demons: The Harappans in Rgveda" என்ற இரு பொத்தகங்களின் வழியாக அசுரர்/அரக்கர் என்போரை ஆரியருக்கு முன்வந்த கூட்டத்தார் என்று மாலதி J ஷெண்கேயும், "Deciphering the Indus Script" என்ற தன் பொத்தகம், மற்ற கட்டுரைகள் மூலமாய் திரு. அசுகோ பர்போலாவும் இரட்டை நிலைக் குடியேற்றத்தை உணர்த்தியிருப்பார்கள். ஈனியல் குறித்துக் காட்டும் 9000, 3500 ஆண்டுகள் இந்த இரட்டை நிலைக் குடியேற்றத்திற்கு அடையாளம் காட்டுகின்றன.

அரக்கர் (அசுரர்) என்பவருக்கும், தேவர் என்பவருக்கும் இடையே இருந்த போராட்டம், துருக்கியில் ஹிட்டைட் தொடங்கி பாபிலோனியாவில் அசூர் நாகரிகம் வழி (இன்றைய சிரியா அசூர்களின் நினைவில் எழுந்த பெயர்தான். பாபிலோனிய அரசன் அசுர் பனிபால் - இப்படி அடுத்தடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம்), இரானில் செண்ட் அவத்தா வரை பல தெற்றுக்கள் தென்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்திலும் அடையாளம் தென்படுகிறது. அசுரர்-தேவர் போராட்டம் பற்றிய பல தொன்மங்கள் ஒன்றுக்குள் ஒன்றாய் இந்த நீண்ட நிலப்பகுதியில் உருவெடுத்திருக்கின்றன. இந்த நிலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டமும் ஒரு பகுதியே!

அரக்கர் என்பவர் அரக்கு நிறத்தவர். - கருஞ்சிவப்பு. தமிழ்ப் பொருண்மை தான் சரியான புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. இன்றைக்குக் கருப்பருக்கும் வெள்ளைக்காரருக்கும் இடையில் coloured என்று சொல்லுகிறார்களே, அந்த கலப்பினத்தவர் போல இருப்பது அரக்கு நிறம். அமெரிக்காவில் coloured என்பவரை வெள்ளை நிறத்தாருடன் யார் சேர்த்துப் பேசுகிறார்கள்? அவரும் கருப்பு நிறத்தாரின் தாயாதியாகத்தானே எண்ணப் படுகிறார்?

வருணம் பற்றி இவ்வளவு எழுதியதற்கு நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் வருணம் நிலைக்க வேண்டும் என்று சொல்பவன் அல்லன். நம்மை அறியாமலேயே வருணச் சொற்கள் சுமையேற்றிய நிலையில் நம்மால் பயன்படுத்தப் படுகின்றன என்பதை இங்கு உணர்த்த வேண்டியிருந்தது. அரக்கன் என்ற சொல்லை ஏரணத்தோடு புரிந்து கொள்ள வேண்டும்.

நடைமுறையில் "அரக்கன் கருப்பனோடு சேர்த்தே எண்ணப் படுவான்". இருக்கு அப்படித்தான் சொல்லுகிறது. அடுத்த செய்திக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, September 22, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 1

அண்மையில் "இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு" என்ற இடுகையில் திரு.குமரன் சங்க இலக்கியத்தில் வரும் இராம காதைச் செய்தியைச் (புறம் 378) சொல்லியிருந்தார். அரக்கன் என்ற சொல்லாட்சி அந்தப் பதிவிலும், அதன் பின்னூடங்களிலும் பெரிதும் பேசப்பட்டது. "அப்படி ஒரு கவனிப்பு அந்தச் சொல்லுக்கு ஏன் வந்தது?" என்று முதலில் எனக்குப் புரிபடவில்லை. "வௌவியவன் தமிழன் அல்லன், அரக்கனே! தமிழரையும், அரக்கரையும், (அதே போல தமிழரையும், குரங்குகளையும்) ஒன்றாய் எண்ணிக் குழம்பலாகாது" என்ற கருத்தும் அந்த இடுகையில் உணர்த்தப் பெற்றது. இந்த உணர்விப்பினுள், "அரக்கருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா?" என்ற கேள்வியும் கூடத் தொக்கி நிற்கிறது. (பொதுவாய் இராட்சசன், இராக்கதன் என்ற சுமையேற்றிக் கிடக்கும் வட சொற்திரிவுகளைக் காட்டிலும் அரக்கன் என்ற எளிய தமிழ்ச் சொல்லின் பொருண்மையை நேரடியாய்ப் பார்ப்பது நம்மைச் சரியான புரிதற் பாதையில் கொண்டு செல்லும். எங்கும் வடமொழிக் கண்ணாடியை வைத்துக் கொண்டே, வழி தேடுவது நம்மில் பலருக்கும் வாடிக்கையாகி விட்டது. இதில் திராவிடச் சிந்தனையாரும் விதிவிலக்கல்ல போலும். வேதநெறி, மனுநீதிகளின் இடைவிடாத் தாக்கத்தால், ஒருசார்க் கோடலாய்த் தமிழர், தம் சிந்தனை இழப்பது வருத்தமாய் இருக்கிறது.)

"அரக்கர் என்பவர் யார்?" என்ற கேள்விக்கு நாம் போகுமுன்னால், குறிப்பிட்ட புறம் 378 பாடலின் காலத்தைப் புரிந்து கொள்ளுவது நலம் பயக்கும். இந்தப் பாடல் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை முன்னிறுத்தி, ஊன்பொதி பசுங்குடையார் பாடியது (பாடாண் திணை, இயன்மொழித் துறை).

[ஊன்பொதி பசுங்குடையார் என்பது புலவரின் இயற்பெயரல்ல; காரணப் பெயர். தென்பாண்டி நாட்டில் இன்றும் கூடப் பெரும் விழாக்களில் (காட்டாக கோயில்களில் ஆடி மாதம் நடைபெறும் படையல்களில்) பெரும் பானைகளையோ, மாழைக் (metallic) கலசங்களையோ, தேடிக் கொண்டு இருக்காமல், பச்சைப் பனையோலையில் பின்னிய கூடைகளையே, விழாச்சோறு முகந்து கொள்ளவும், ஊன் போன்றவற்றைப் பொதிந்து கொள்ளவும், பயனுறுத்துவார்கள். பசுங்குடை என்ற சொல்லாட்சி பசுங்கூடையை உணர்த்தும் திரிவாகும். பூக்குடல் என்பது பூக்கூடையை உணர்த்துமல்லவா? அதைப் போல குடை என்ற சொல் இங்கு கூடையை உணர்த்தியது. ஊன்பொதி பசுங்குடை என்ற அழகான சொல்லாட்சியைத் தன்னுடைய வேறொரு பாவில் இந்தப் புலவர் பயன்படுத்தியிருக்க வேண்டும்; ஆனால் அந்தச் சொல்லாட்சி உடைய பாடல் நமக்குக் கிடைக்கவில்லை. தொகுப்பாளரின் உரையை வைத்தே புலவரின் பெயர்க்காரணத்தை நாம் அறிந்து கொள்ளுகிறோம்.] இதே அரசனை இதே புலவர் புறம் 10 (பாடாண் திணை, இயன்மொழி, பூவைநிலைத் துறை), புறம் 203 (பாடாண் திணை, பரிசில் துறை), புறம் 370 (வாகைத் திணை, மறக்கள வழித் துறை) ஆகிய பாடல்களிலும் பாடியிருக்கிறார். இது தவிர இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகம் 375 இலும் இளம்பெருஞ்சென்னி என்ற குறிப்பு இருக்கிறது.

இளஞ் சேட்சென்னியும், இளம் பெருஞ்சென்னியும் ஒரே ஆளாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தமிழிய மொழிகளின் சொல்வளத்தைக் கவனித்துப் பார்த்தால் புரிபடும். சேடு, சேட்டு என்பவை உயர்வு, பெரியநிலை, தொலைவு போன்றவற்றைப் பழந்தமிழிற் குறிக்கும். சேண்மை என்ற சொல்லும் கூட இன்றைக்குத் தொலைவைக் குறிப்பது தான். மலையாளத்தில் பெரியவனைக் குறிக்கச் சேட்டன் என்றும், பெரியவளை சேட்டத்தி என்றும் சொல்லுகிறார்கள் அல்லவா? சேள் என்பது தான் இதன் வேர். மூவேந்தர்களில் பெருஞ்சேரல், நெடுஞ்சேரலாதன், பெருவழுதி, நெடுஞ்செழியன், பெருங்கிள்ளி, பெருவளத்தான், மாவளத்தான், பெருஞ்சோழன் என்று சொல்லப்படும் பெயர்கள் பெருஞ்சென்னி - சேட்சென்னி என்ற பெயரையும் இயலுமை ஆக்குகின்றன. இளஞ்சேட்சென்னி என்பவன் இன்னொரு சேட்சென்னியின் இளவலாய் இருந்திருக்கலாம்.

இந்தச் சோழன் இளஞ்சேட்சென்னியை, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், பாமுளூர் எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், புறநானூற்றுத் தொகுப்பாளர் குறிப்பிடுவார். பாழி என்ற பெயரில், தமிழ்கூறும் நல்லுலகில், சங்க காலத்தில், பல ஊர்கள் இருந்திருக்கின்றன. பொதுவாய்ப் பாழி என்பது இயற்கைக் குகையைக் குறிக்கும். (ஆசீவகத் துறவிகளின் வாழ்விடங்கள் பாழி என்றே நம் இலக்கியங்களில் குறிக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி என்பது பொதுவாய்ச் செயினர், போதியர் ஆகியோரின் இருப்பிடங்களைக் குறிக்கும்.) செருப்பாழி என்பதில் வரும் செரு என்பது திரு என்ற பொருள் கொண்ட ஒரு முன்னொட்டு. (சேரே திரட்சி என்பது தொல்காப்பிய உரியியல்; செருப்பாழி என்பது பெரிய, திரண்ட குகை என்ற பொருள் கொள்ளும்.) செரு என்ற முன்னொட்டு திரு என்ற பொருளைக் குறித்ததற்குச் சான்றாக, திருத்தணிகையையைச் செருத்தணி என்று சொல்லும் வழக்கம் அகரமுதலிகளில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. வடுகரைப் பெருஞ்சென்னி வெற்றி கொண்ட செய்தி புறம் 378 இலும், அகம் 375 இலும் வருவதால், வேங்கடத்தை ஒட்டி இந்தச் செருப்பாழி இருந்திருக்கலாம். (சரியான இடத்தைக் குறிக்க முடியவில்லை.)

சென்னி என்பது ஓர் இனக்குழுப் பெயர். (சென்னியர் என்ற சொல்லும் செம்பியர் என்ற சொல்லும் ஒரே வேரில் உருவானவை தாம்.) சோழர்கள் தொடக்க காலத்தில் பல்வேறு பகுதிகளில் (அழுந்தூர், ஆமூர், கழார், குடந்தை, பருவூர், பெருந்துறை, போர், வல்லம் ஆகிய ஊர்கள்) தனித் தனி இனக்குழுக்களாய் கி.மு. 500/400க்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வோர் இனக்குழுவும் இன்னொன்றை வென்றி கொண்டு, இணைந்து, பின்னர் பெரும் இனக்குழுக்களாகி, சென்னி, கிள்ளி என்று இரு பெரிய இனக்குழுக்கள் மட்டுமே கடைசியில் அமைந்து, முடிவில் பெருஞ்சோழராய் உருவாகி இருக்கிறார்கள்.

கி.மு. 500/400க்கு அண்மையில் அழுந்தூரில் தொடங்கிய சென்னி வகைச் சோழர் கொஞ்சம் கொஞ்சமாய் பெருஞ்சோழராகி, நெய்தலங்கானலுக்கு வந்து (நெய்தலங்கானல் என்பது காவிரிப்பூம் பட்டினத்திற்கு மிக அருகில் உள்ள ஊர்), முடிவில் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டதும், கிள்ளி வகைச் சோழர்கள் இதே போலச் வேறு சிறிய ஊர்களில் தொடங்கி, முடிவில் உறையூரைத் தலைநகராக்கி ஆண்டதுமாய் இருக்கும் தொடக்க காலச் சோழர் வரலாற்றை சங்க இலக்கியங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே பொழுது சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக்குழுவின் தலைவர்களாய் வேந்தர்கள் கி.மு.7 ஆம் நூற்றாண்டு அளவில் இருந்ததைத் தொல்காப்பியம் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.ஆகச் சங்க இலக்கியம், தொல்காப்பியம் என்ற இரண்டு தரவுகளையும் பார்க்கும் போது, கி.மு.700ல் இருந்து கி.மு.500 வரை ஒரு 200 ஆண்டு காலத் வரலாறு இன்னமும் தெளிவு படாமல் இருக்கிறது.

சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக் குழுக்களின் தோற்றம், வரலாறு, மரபுகள், தொன்மங்கள் பற்றி இந்த இடுகையில் நான் விவரிக்கவில்லை. அதற்கு இன்னொரு இடுகைதான் செய்ய வேண்டும்.

சங்க கால வரலாறு என்பது சரியாக எழுதப் படாமல், கால முரண்பாடுகளோடேயே தான் இன்றும் இருக்கிறது. குறிப்பாக செங்குட்டுவன், கயவாகு என்ற தவறான சமகாலப் பொருத்தலால், கி.பி.171-193 என்று செக்கில் சிக்கிக் கொண்டு, முன்னேற முடியாமல், தமிழக வரலாறு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் கிடைக்கும் தமிழிக் கல்வெட்டுக்களையும், அகழாய்வுச் செய்திகளையும், சங்க கால அரசர்களின் நாணயங்களையும், சங்க இலக்கியங்களோடு பொருத்திப் பார்க்கும் போது, "செங்குட்டுவன் - முதலாம் கயவாகு ஆகியோர் சம காலத்தவர்" என்ற முன்னீட்டை முற்றிலும் ஒதுக்கினால் தான் தமிழர் வரலாறு சரியாகும் போல் தெரிகிறது. சிலப்பதிகாரத்தின் பதிகத்திற்குப் பின்னாலும், புகார்க் காண்டத்திற்கு முன்னாலும் வரும் உரைபெறு கட்டுரைக்கும், சிலம்பின் கடைசியில் வரும் வரந்தரு காதைக்கும் இடையே தெரியும் பெருத்த உள் முரண்பாடுகள் நம்மைப் பெரிதும் ஓர்ந்து பார்க்க வைக்கின்றன. பெரும்பாலும் வரந்தரு காதை என்பது காப்பியத்தோடு ஒன்றுபடாமல், பின்னோர் செய்து ஒட்டியதோ என்று எண்ண வைக்கிறது. அதே போல உரைபெறு கட்டுரையும் ஆசிரியர் இளங்கோவடிகளால் சேர்க்கப் படாமல், பின்னவர்களால் இணைக்கப் பட்டிருக்கக் கூடும். [சிலம்பு பற்றி இங்கு பேசினால் அது வேறு புலனத்திற்குக் கொண்டு போகும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.]

இந்த முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் எழுந்த அண்மைக்கால இரு வரலாற்று முயற்சிகள் ஆவணப்படுத்தப் பட்டு இருக்கின்றன. [அவற்றில் முதல் ஆவணம் பேரா. பே.க. வேலாயுதம் (பெரியார் ஈவெ.ரா. கல்லூரி, திருச்சி) ப.சீனிவாசன் (திருச்சி நாணயவியல் கழகம்) ஆகியோர் இணைந்து திருச்சி நாணயவியல் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் 23/2/1997 வெளியிடப்பட்ட "சங்க கால மன்னர் வரிசை" என்னும் சிறு கையேடு ஆகும். இரண்டாவது, "சங்க கால மன்னர்களின் காலநிலை - தொகுதி 1" மற்றும் "சங்க கால மன்னர்களின் காலநிலை - தொகுதி 2" என்ற இரு பொத்தகங்களாய், டாக்டர் பத்மஜா ரமேஷ், வி.பி. புருஷோத்தமன் ஆகியோரால் எழுதப்பட்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சிஐ.டி. வளாகம், தரமணி, சென்னை மூலம் 2000 த்தாம் ஆண்டில் வெளியிடப் பட்டது.]

மேலே சொன்ன ஆய்வாளர்களில், திருவளர். பத்மஜா ரமேஷ், திரு. புருஷோத்தமன் ஆகியோர் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியும், உருவப்பல் தேர் இளஞ்சேட்சென்னியும் ஒருவரே என்ற கருத்துக் கொள்கிறார்கள். உருவப்பல் தேர் இளஞ்சேட்சென்னியை முதற் கரிகாலனின் மகனாகவும், இரண்டாம் கரிகாலனின் தந்தையாகவும் பொருநராற்றுப் படை ஆதாரத்தின் மூலம் இவர்கள் அடையாளப் படுத்துவார்கள். அவர்கள் கூற்றின் படி, உருவப்பல் தேர் இளஞ்சேட் சென்னியின் காலத்தில், கிள்ளி வகைச் சோழர்களின் ஆட்சி ஓர் அண்ணுமுடிவிற்குக் (near end) கொண்டு வரப்படுகிறது. இளஞ்சேட்சென்னியின் பேரன், இரண்டாம் கரிகாலனின் மகன் ஆன நலங்கிள்ளி - இளஞ்சேட்சென்னி என்ற இரட்டைப் பெயரெடுத்து, கிள்ளிவகை அரசரின் கடைசி அரசனான நெடுங்கிள்ளியைத் தொலைத்தெறிவதோடு, கிள்ளிகளின் குல ஆட்சி உறையூரில் முற்றிலும் முடிந்து போகிறது. தலைநகரும் அதற்கு அப்புறம் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து உறையூருக்கே மாறுகிறது.

முன்னே சொன்ன இரண்டு ஆவணங்களையும் படித்தால் ஒன்றிற்கொன்று முரணாகச் சில காலநிலைகளும், உடன்பாட்டில் சில காலநிலைகளும் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த ஆவணங்களை ஆழ்ந்து படித்து அதில் இருக்கின்ற ஒன்றாமைகளை (inconsistencies) உணர்ந்ததால், மூல இலக்கியங்களையும், கல்வெட்டு விவரங்களையும், மீண்டும் படித்து, சங்க கால நிலையை நான் தற்போது ஆய்ந்து கொண்டு இருக்கிறேன். சங்க இலக்கியப் பாடல் எழுதியோரையும், பாடப்பட்டவரையும் பொருத்தி இந்தக் காலத்தியப் பிணைய அலசல் (network analysis) முறை மூலம் என் ஆய்வு நடத்தப் படுகிறது. ஆய்வு முடியச் சற்று காலம் ஆகலாம்.

இப்போதைக்கு நான் முந்தைய ஆய்வாளர்களின் முடிவுகளையே இங்கு கொடுக்கிறேன். ஊன்பொதி பசுங்குடையாரின் பாடற்காலத்தை, மேலே சொன்ன முதல் ஆவணத்தின் மூலம் கிட்டத் தட்ட கி.மு.325 - 250 என்றும், இரண்டாம் ஆவணத்தின் மூலம் கி.மு.250-225 என்றும் முடிவு செய்யலாம். ஆக இராமகாதை பற்றிய செய்திகள் கி.மு.250 அளவிலேயே தமிழில் பதிவு செய்யப் பட்டதாகச் சொல்ல வேண்டும்.

சங்க இலக்கியத்து இராம காதைச் செய்திகளுக்கு புறம் 378 தவிர, அகம் 70, கலி - 38 என இன்னும் இரு சான்றுகளும் உண்டு. சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பழமொழி நானூற்றிலும் ஒரு குறிப்பு உள்ளது. "இராமகாதை வரலாற்றுச் செய்தியா, அன்றி தொன்மச் செய்தியா?" என்பது அவ்வளவு முகன்மையானது அல்ல. இங்கே காதுற்ற செய்தி காதையாயிற்று. அவ்வளவு தான். அதைத் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தத் தடை இருக்க முடியுமோ? அதே பொழுது, அப்படிப் பயனுறுத்தியதாலே "அது வரலாறா, தொன்மமா?" என்ற கேள்விக்கு மறுமொழித்ததாய்க் கொள்ளவும் கூடாது.

இனிப் பாடலுக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, August 21, 2007

நுணலும் அடவும்

இரவெல்லாம் ஓயாது எகத்தாள மழைப்பொழிவு;
மழைகுறையத் தூறலிடை, மடுவெங்கும் நீரொதுங்க,
எங்கேயோ தோட்டத்தில், ஏறிவரும் நுணலோசை;
நள்ளிரவில் துயில்விலக்கி, நான்விழிக்கும் கவனிப்பு;

o0o

குக்கூகுக் குக்கூகுக் கூடிவரும் குழுத்தாளம்;
எப்படித்தான் மழைப்பொழிவு இங்கதிகம் ஆகிவிட்டால்,
குக்குவக்கும் தவளையெலாம் குரலெடுக்கச் செய்திடுமோ?
சுரந்துவர உள்ளோடும் சூழ்க்குமத்தை யாரறிவார்?

o0o

நுவலுகின்ற நுணப்பாலே, நுணலென்று சொன்னார்கள்;
திவலைகொளும் நீர்ப்பரப்பின் திரையோங்கித் தனைக்காக்கும்
தவளையதின் குரலெடுப்பு தவழரவிற் கெதிரொலிப்பா?
எத்தனைநாள் ஆடுபுலி ஆட்டமிங்கே நடந்திருக்கும்?

o0o

நடைபழகக் காலையிலே நகருகின்ற சாலையெலாம்,
சீருந்தும், இருவளையும், சிதைத்தொழித்த நுணல்தேய்ப்பு;
நீர்தவிர்த்து, நிலம்நாடி, நேர்ந்ததுதான் எதற்காக?
தன்னேர்ச்சி தமக்கென்றே தெரியாத தடுமாற்றோ?

o0o

என்னதொரு அடவு இது, என்முன்னே எழும்காட்சி?

அன்புடன்,
இராம.கி.

சீருந்து = car
இருவளை = two wheeler
அடவு = design
தன்னேர்ச்சி = accident

Saturday, August 18, 2007

வலைச் சொற்கள் (webterms)

வலைச் சொற்கள் (webterms) என்ற தலைப்பில் wall paper, banner, ring tone, mobile, gadget, widget, screen saver ஆகியவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களை விக்சனரி மடற்குழுவில் கேட்டிருந்தார்கள். அதற்கான பரிந்துரையை அங்கு பதிந்தது போக, இங்கும் பதிந்து வைக்கிறேன்.

* wall paper
சுவர்த் தாள் என்றே இதைச் சொல்லலாம். [அப்படிச் சொல்லக் கூச்சப் படவேண்டாம்.] சுவரில் பொதிக்க வேண்டிய தாள் சுவர்த் தாள் தானே? அந்தச் சுவர் மெய்யான சுவராகவோ, மெய்நிகர் சுவராகவோ இருக்கலாம்; அதனால் என்ன? நான் இப்படிச் சொல்லுவதற்கு ஒரு காரணம் உண்டு. திரைப்படமும் விளம்பரங்களும் வந்த நாளாக, ஒரு 60, 65 ஆண்டுகளில், தமிழ்கூறு உலகம் எங்கணும் wall poster - சுவரொட்டி பற்றிச் சொல்லி வருகிறார்கள் தானே?

இந்தச் சுவரொட்டி என்ற சொல்லின் கருத்து நன்கு நமக்கு ஊறிவிட்டது. அதை ஒட்டி, சுவர்த் தாள் என்பதும் நமக்கு எளிதில் புரிபடும். இன்னும் துல்லியம் கருதினால், wall poster என்பதை சுவர்ப் பொதிப்பு என்றும் கூடச் சொல்ல முற்படுவேன். ஏனென்றால், ஒட்டுதலைக் காட்டிலும் பொதிதல் = பொருத்துதல் என்ற வினை நன்றாக பொருந்தும். பின்னணி என்ற சொல் இங்கு பொருந்தி வராது. அது பின்னால் அணி செய்தல் (= வரிசைப்படுத்தி அடுக்குதல்) என்று வேறு ஓர் ஆழமான பொருளை உணர்த்தி, background என்று கொண்டுவந்து விடும்.

* banner
பதாகை என்ற சொல் பலநாட்களாய் இருப்பது தான்.

* ring tone
கறங்கும் (அல்லது கலிங்கும்) தொனி. [கறங்குதல் அல்லது கலிங்குதல் = ஒலித்தல்; எவ்வளவுநாள் தான் மணியோசை என்று ஒப்புமைச் சொல்லையே சொல்லிக் கொண்டு இருப்பது? நம்முடைய சரியான சொற்களை மறுபடியும் புழங்க விடுவோமே? எங்கெல்லாம் ring என்று ஒலிக்குறிப்பு வினைச் சொல் வருகிறதோ, அங்கெல்லாம் கறங்குதலைப் (அல்லது கலிங்குதலைப்) புழங்கலாம். கொஞ்சம் கூடத் தயக்கம் வேண்டாம்.]

* mobile
நகர் (இடை) பேசி. mobile person = நகராளி; cell phone = செல்(லிடை) பேசி

* gadget
1886, gadjet (but said to date back to 1850s), sailors' slang word for any small mechanical thing or part of a ship for which they lacked, or forgot, a name; perhaps from Fr. ga^chette "catchpiece of a mechanism," dim. of ga^che "staple of a lock."

தமிழில் staple of the lock என்பதைக் கொக்கி என்றுதான் சொல்லுகிறோம்; பூட்டைத் திறந்து காட்டி, "சாவியை இப்படிப் போட்டுத் திறந்தா, இந்தக் கொக்கி இந்தக் காடைக்குள்ளே விழணும்பா" என்று சொல்லுகிறோம் இல்லையா? கொக்கும், கொடுக்கும் ஒன்றுதான். "வளைந்த பொருத்து" என்று பொருள்.

கொடுக்காப் புளிப் பழம் சாப்பிட்டிருக்கிறீர்களோ? வளைந்து சுருண்டு கிடக்கும் பழம் கொடுக்காப் புளி. சற்றே மெலிந்த புளிப்புடன், சுவையாக இருக்கும் பழம். இன்றைக்கு நகர்ப்புறத் தமிழர்கள் சற்றும் அறியாத பழம். நாட்டுப்புறங்களிலும் அழிந்து கொண்டிருக்கும் பழம். [தமிழ்நாட்டின் வளத்தில் இன்னும் ஒன்றாய் அழிந்து கொண்டிருக்கிறது.] அதில் வரும் கொடுக்கு என்ற முன்னொட்டு வளைந்த நீட்டத்தைக் குறிக்கும்.

வால் என்பதற்குக் கூட கொடுக்கு என்ற பொருள் உண்டு. கொ(டு)க்கின் சிறியது கொ(டு)க்கட்டை. மேலை மொழிகளில் get என்று வருவது போல கட்டை என்ற சொல் நம் மொழியில் சிறியதைக் குறிக்கும் பின்னொட்டாய் அமைய முடியும். கொக்கட்டை என்பதைச் சொல்லுவதற்குப் பெரிதாய்த் தோன்றினால், அல்லது தயங்கினால், கொக்கை என்றே கூட gadget -யைச் சொல்லலாம். கொக்கை - catchpiece of a mechanism என்று சொல்ல முடியும்.

* widget
"gadget, small manufactured item," c.1920, Amer.Eng., probably an alteration of gadget, perhaps based on which it.

எங்கோ ஓரிடத்தில் இடுங்கி, ஒட்டிக் கொண்டு கொடுக்காய் இருக்கும் ஒரு பொருத்தை, இடுக்கை என்றே சொல்லலாம். விக்கிப்பீடியாவிற்குள் போனால், widget என்பதற்கு கீழே உள்ள விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். இடுக்கை என்று நான் பரிந்துரைக்கும் சொல் அவைகளுக்கும் பொருந்தியே வருகிறது.
---------------------------------
Widget may refer to:
Widget (economics), a placeholder name for an object or, more specifically, a mechanical or other manufactured device
In computing:
Widget engine, such as Dashboard widgets for Apple's Mac OS X v10.4, Windows Vista Sidebar, KlipFolio or Yahoo! Widgets (aka Konfabulator)
GUI widget, a component of a graphical user interface that the user interacts with
Web widget, a third party item that can be embedded in a web page
Mobile widget, a third party item that can be embedded in a mobile phone
Widget (beer), the nitrogen widget in cans and bottles of beer
Widget (comics), a character in Marvel Comics
Widget (name), in-house name for the Delta Air Lines corporate logo
Widget (TV series), a 1990's animated television series
Widget (tool), a small scraping tool consisting of a blade and a handle, used to remove paint from glass
Widget (Burnout move), A swift horizontal karate chop to the throat, best delivered to the throat or trachea.

The term was first applied to user interface elements during Project Athena in the 1980s. The word was chosen because "all other common terms were overloaded with inappropriate connotations" and ஖ since the project's Intrinsics toolkit associated each widget with a window of the underlying X Window System ஖ because of the common prefix with the word window. [1]
-------------------------------------

* screen saver
A screensaver is a computer program originally designed to conserve the image quality of computer displays by blanking the screen, or filling it with moving images or patterns when the computer was not in use. Today, screensavers are primarily used for entertainment or security purposes.

அந்தக் காலத்தில் இருந்த cathode ray display களில் ஒரே படத்தைத் தொடர்ச்சியாகக் காட்டிக் கொண்டிருந்தால் அப்படியே அந்தப் படத்தை அழிக்க முடியாமல் கணித்திரை பொரிந்து பொட்டுவிழுந்தாற் போல தொடர்ச்சியாய் நிழல் தோற்றம் காட்டக் கூடும். to "save" the screen from burn-in என்பதற்காக இந்த screen saver நிரலிகள் எழுந்தன. இவற்றைக் கணித்திரைக் காப்பிகள் அல்லது கணித்திரைச் சேமிகள் என்று சொல்லலாம். நாளாவட்டத்தில் தமிழ்ப் புழக்கம் கூடினால், கணி என்பதை விட்டுவிடலாம். அப்பொழுது திரைச் சேமிகள் என்பது பழகிவிடும்.

அன்புடன்,
இராம.கி.

Monday, August 13, 2007

வேங்கடத்து நெடியோன் - 3

பின்னால் வந்த எல்லா ஆழ்வார் பாடல்களிலும், "வேங்கடத்தான், வேங்கடவன், வேங்கட வாணன், வேங்கடத்துள்ளான், வேங்கடத்து உறைவான், வேங்கடத்து நின்றான், வேங்கடமுடையான், வேங்கட நாடன், வேங்கடக் கோன், வேங்கட மேயோன், வேங்கடப் பொருப்பன், வேங்கட வெற்பன், வேங்கடாத்தரி, வேங்கட வேதியன், வேங்கடத்து ஆயன், வேங்கடத்து எந்தை, வேங்கடத்து அண்ணல், நீள் வேங்கடத்து எந்தை, திருமலையான், வட மாமலை உச்சி, நெடுவரை உச்சி மேலோன், நெடியோன்" என்ற பெயர்களே ஆளப் படுகின்றன. அந்த மலையும் கூட ஆழ்வார் பாடல்களில் வேங்கடம், வடமலை, திருமலை, அண்ணல் மலை என்றே அழைக்கப் படுகிறது.

ஸ்ரீநிவாசன் என்ற பெயர் ஆழ்வார் பாடல்களில் வேங்கடத்தை ஒட்டி எங்கும் குறிக்கப் படவே இல்லை. பெரும்பாலும், அந்தப் பெயர் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே, விண்ணவர் வழக்கில், எழுந்திருக்க வேண்டும். இதை உறுதி செய்ய, பேரரசுச் சோழர்களின் பிற்காலக் கல்வெட்டுக்கள், பிற்காலப் பாண்டியரின் கல்வெட்டுக்கள், விசயநகரப் பேரரசின் கல்வெட்டுக்கள் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். அது ஒரு பெரிய வேலை என்பதால், இன்னும் நான் செய்யாதிருக்கிறேன். (புறனடையாக, திருமலை - திருப்பதி தேவத்தானத்தார் வெளியிட்ட "முந்தையக் கல்வெட்டுக்கள்" என்ற தொகுதியை மட்டும் பார்த்துச் சில செய்திகளைக் கீழே சொல்லியிருக்கிறேன்.)

ஸ்ரீநிவாசன் என்ற பெயர் எப்படி எழுந்திருக்க முடியும்? வடமொழிப் பொருளாய் srinivaasa என்பதற்கு மோனியர் வில்லியம்சில் abode of Sri என்று "திருமகள் இவனுக்குள்ளே குடியிருப்பதைச்" சொல்லுகிறது. அதாவது "திரு வாழும் இடத்தான்" என்றே ஸ்ரீநிவாசனுக்குப் பொருள் கொள்ளுகிறது. [தஞ்சாவூர்ப் பக்கம் "திருவாழத்தான்" என்று சொல்வார்களே, நினைவுக்கு வருகிறதா?] ஆனால் சொற்பிறப்பு அதில் காட்டப் படவில்லை. இந்தச் சொல் பயிலும் இடங்களாய், kaavya, chandomanjari, bhaagavata puraana ஆகிய மூன்றும் அந்த அகரமுதலியில் காட்டப் படுகின்றன.

வாய்மொழியாய் தொன்மக் கதைகளாய் இருந்த வடமொழிக் காவியங்கள் எழுத்து வடிவில் எழுந்தது குத்தர்கள் (=குப்தர்கள்) காலத்தில், சங்க காலத்திற்குப் பின்னால் (கி.பி 300-400) தான்; சந்தமஞ்சரியின் காலம் எனக்குத் தெரியவில்லை; தேடிப் பார்க்க வேண்டும். பாகவத புராணம் சேர்ந்த 18 புராணங்கள் பிற்காலத்தில் கி.பி. 600-1400 க்குள் எழுதப் பட்டதாகத் தான் பல ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். ஸ்ரீ - நி - வாசன் என்பதைப் பிரித்து திருமகள் மார்பில் உறைபவன் என்று தலை கீழாகச் சொல்வதும், பொருந்தாதைப் பொருந்தச் சொல்வதாகத் தெரியும் சமய விளக்கம் ஆகும். [பல சமய விளக்கங்கள், நம் வரலாற்றைப் புறம் தள்ளி, தமிழ் வழக்கைப் புறம் தள்ளி, ஏன் வடமொழி இலக்கணத்தையும் கூடப் புறம் தள்ளி, சொல்லப் படுகின்றன. அந்த விளக்கங்களைக் கேட்பவர்களும் ஏதேனும் அவக்காரம் வந்துவிடுமோ என்று எதிர்க் கேள்வி கேட்பதைக் குறைத்துக் கொண்டு விடுகிறார்கள். எல்லாமே chaltha hai என்று ஆகிவிடுகிறது.]

நாம் மேலும் நினைவு கொள்ள வேண்டியது "மேல் திருப்பதியில் தாயாருக்கு இடம் கிடையாது, அங்கே பெருமாள் மட்டும் தான்" என்ற செய்தியாகும். மேலே மூலவரின் பெயர் திருவேங்கடமுடையான் என்றே இருக்கிறது. (அது ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது.); வேங்கடாசலபதி என்பது வேங்கட மலையானைப் பாதி வடமொழியாக்கி இருபிறப்பிச் சொல்லாய்க் கூப்பிடுவது; பாலாஜி என்பது மிக, மிக அண்மைக் காலப் பெயர். ஸ்ரீநிவாசன் என்ற பெயர் பற்றித்தான் இங்கு பேசிக் கொண்டு இருக்கிறோம். மேல் திருப்பதியின் ஊருலவருக்கு (=உற்சவருக்கு) மணவாளப் பெருமாள் என்றுதான் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்; இந்தக் காலத்தில் அதையும் வடமொழியாக்கி கல்யாண வெங்கடேசர் என்று சொல்லுகிறார்கள்; தமிழ்ப்பெயர் போயே போயிந்தி. ஆனாலும் வேங்கடமுடையான் என்ற கருத்து வடமொழிப் பெயர்ப்பின் உள்ளே நின்று தொனிக்கிறது.

தாயார் அலர்மேல்மங்கை (பத்மாவதி என்பது அப்படியே வடமொழிப் பெயர்ப்பு) திருச்சானூரில் தனித்து இருப்பதாக மரபு. (தமிழ்ப் பேச்சுவழக்கில் இது அலமேலு என்று சுருங்கும்.)

கீழ்த் திருப்பதியில் உறையும் பெருமாளுக்குக் கல்வெட்டுகளின் படிக் கோவிந்தப் பெருமாள் என்றே பெயர். (இன்றைக்கு அதையும் கோவிந்தராசனாக்கித் தமிழல்லாத தோற்றம் காட்டுகிறார்கள். இந்தக் கோவிந்தன் பேரில் தான் திருமலையில் பற்றாளர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கூறுகிறார்கள்.) கீழ்த் திருப்பதியில் உள்ள தாயாருக்குப் புண்டரீக வல்லி என்று பெயர். இதுவும் அலர்மேல் மங்கையின் இன்னொரு வடமொழிப் பெயர்ப்புத் தான்.

காலவோட்டத்தில் வெவ்வேறு காரணங்களால், மூலவருக்கே பேர் மாற்றம் செய்த கதைகள் தமிழ்நாட்டுக் கோயில் வரலாறுகளில் நெடுகவே உண்டு. (முட்டாள் தனமாக, தமிழ்ச் சொல்லின் மூலப் பொருள் புரியாமல், வேறொரு வழிப் பொருளைக் கொண்டு, அதை வடமொழிக்கு மாற்றி அதற்கும் ஒரு தொன்மம் படைக்கும் கூத்துக்கள் நிறையவே உண்டு. திருமரைக்காடு, திருமறைக்காடாகி, வேதாரண்யம் என்று மொழிமாற்றம் பெற்ற கதை பலருக்கும் தெரியும். இது போன்ற கதைகள், காதில் பூவைத்திருப்பவர்கள் இருக்கும் வரை, தொடரும்.) காட்டாக, சென்னை முகப்பேரியில் (முகப்பு ஏரி = முகப்பேரி) இருக்கும் சந்தான சீனிவாசப் பெருமாளுக்கு பழைய பெயர் ஒன்று உண்டு. அந்தக் கோயிலில் இருக்கும் 18 ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களைப் படித்தால் மூலவரின் பழைய பெயர் ஆதிகேசவப் பெருமாள் என்று இருந்திருப்பது புலப்படும். ஆனால் வணிக மயமாகிப் போன இன்றைய நாளில் அதற்குப் பெயர் சந்தான சீனிவாசப் பெருமாள் என்று ஆகிவிட்டது. (கோயிலுக்குள் வணிகம் வளர, வளர, கல்வெட்டுக்கள் வெகுவிரைவில் அழிந்து கொண்டிருக்கின்றன. வணிக நோக்கில் நம் கோயில்கள் அழிவது ஏராளம், ஏராளம்.)

எப்படி என்றால், நாம் 40 ஆண்டு கால வரலாற்றிற்கு முன்னால் போக வேண்டும். 1968ல் சென்னையில் ஒரு பெரிய பொருட்காட்சி நடத்தினார்கள். அப்பொழுது அண்ணா நகர் என்னும் குடியிருப்பு உருவாக்கப் பட்டது. இந்தப் பெருமாள் கோயில் ஒரு தனியார் நிலத்தில், அந்தக் குடும்பத்தின் பரம்பரைப் பொறுப்பில், இன்றைய அண்ணா நகர் ரவுண்டானாவிற்கு அருகில் 1968 -ல் இருந்தது. பின் அண்ணா நகர் அமைந்த போது, நிலம் கொள்முதலில் அப்படியே கல், கல்லாகப் பெயர்த்து, இன்றைய முகப்பேரிக்குப் போயிருக்கிறது. (இத்தனைக்கும் கோயில் 8, 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.) முகப்பேரிக்குப் போன பிற்பாடு தான், மூலவர் பெயர் மாறியிருக்கிறது. முகப்பேரி என்ற புது இடத்தின் பொருளையே மாற்றி யாரோ ஒரு விவரமானவர், "எதில் மக்கள் சிக்குவார்கள்?" என்று பார்த்து, "மகப்பேறு கொடுப்பவர்" என்று ஒரு கதையை இட்டுக் கட்டி, முகப்பேரிக்கு மாறாய் மகப்பேறு என்று இல்லாத பொருள் சொல்லி, மேலும் "சீனிவாசன் என்றால் ஆட்கள் கூடுவார்கள்" என்ற உந்துதலில் "சந்தான சீனிவாசப் பெருமாள்" என்று கூட்டுப் பெயரை உருவாக்கி, அதுவரை இல்லாத ஒரு தொன்மத்தையும் உருவாக்கி, 1993 - 94 ல் அண்ணா நகரெங்கும் ஒரு பெரிய பரப்புரை செய்து, கூட்டம் கூட்டி, இன்று கோயில் ஓகோ என்று இருக்கிறது. (எனக்குப் பிடித்த பெருமாள் கோயில்களில், மூலவரின் திருமேனிகளில், இதுவும் ஒன்று என்பது வேறு புலனம். நான் சொல்ல வருவது இப்படி இட்டுக் கட்டும் தொன்மங்கள் பற்றியே ஆகும்.)

நெடியோன் கோயில் எப்படி ஸ்ரீநிவாசன் கோயில் ஆனது? மீண்டும் ஸ்ரீ - நி - வாசன் என்ற வடமொழிப் பிரிப்பிற்கு வருவோம். வாசன் என்பவன் வசிக்கிறவன். "திரு மார்பில் இருக்க, வசிக்கிறவன்" என்றால் அது மிகவும் பொதுமையாக இருக்கிறது; திருமால் கோயில்கள் எல்லாவற்றிலும் தான், மேலே சிலம்பின் காடுகாண் காதை 11:41-51- இற் சொன்னது போல், விண்ணவன் என்பவன் "நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு" இருக்கிறான். "நலங்கிளர்" என்று சொல்லும் போது திருமகள் ஆரத்தில் இருக்கிறாள் என்று பொருள். திருவும் நலமும் ஒன்றுதான்.

தவிர, பதிதல் என்பற்குத் தமிழில் உள்ள பொருள் "ஓரிடத்தில் இருப்பதும், வசிப்பதும் தான்". பதிதல்>வதிதல் என்று திரியும். வதிதல் என்பது வடமொழிப் பலுக்கில் வசித்தல் என்று ஆகும். திருப்பதியான் என்பதே தமிழ் முறைப்படி ஸ்ரீநிவாசன் என்ற பொருள்தான் கொள்ளும். ஆனால் திருப்பதி என்பது திருமலை அல்லவே? அது மலையடிவார ஊர் அல்லவா? மேலே இருக்கும் திருமேனிக்கு திருப்பதியான் என்ற பெயரை நாம் எப்படிச் சொல்லுவது? திருமலையான் என்றல்லவா சொல்ல வேண்டும்? (திருமலையான் என்ற பேரும் பல விண்ணவர்களுக்கு இருக்கிறதல்லவா?) திரு. ஜி.ராகவன் சொன்னது போல் திருக்குடி என்றெல்லாம் புதிதாகச் சொல்ல வேண்டுவதில்லை. திருப்பதியான் என்ற சொல்லே மேலோட்டப் பொருண்மையைப் பார்த்த வகையில் (ஆழ்ந்த பொருண்மையில் அல்ல) ஸ்ரீநிவாசனுக்கு இணையாய் அமைய முடியும்.

ஆனாலும் ஏதோ ஒன்று இடிக்கிறது.

வேங்கடத்தில் இருப்பவனுக்கு என்று ஓர் ஓரிமை (uniqueness) இருக்க வேண்டுமே? அது என்ன? ஆறு அரத்து (=அறுத்து) வந்த அரங்கத்தில் இருப்பவன் அரங்கன் என்று ஆனதைப் போல, கீழே தலத்தில் சாய்ந்து கிடப்பவன் தல சயனப் பெருமாள் (கடல் மல்லையில் இருக்கும் பெருமாள்) என்று ஆனது போல, ஒரு விதப்பான பெயர் அல்லவா வேங்கடத்தில் இருப்பவனுக்கு அமைய வேண்டும்? ஸ்ரீநிவாசனில் அப்படி ஒரு விதப்பு இல்லையே? "திருவானவள் தன்னுள்ளே வசிக்க இருப்பவன்" என்பது ஒரு தட்டையான பெயராய், இருக்கும் இடத்திற்குப் பொருந்தாத பெயராய், அமைகிறதே? இத்தனைக்கும் அருகில் திருமகள் இல்லாமல் அங்கே அவன் தனித்து நிற்கிறானே? அப்புறம் எப்படி ஸ்ரீநிவாசன் என்று வரும்? ஆனாலும் அந்தப் பெயர் இன்று வழக்கில் இருக்கிறது.

இனி நி என்ற வடமொழி இடைச்சொல்லிற்கும் வருவோம். அதற்கு என்ன பொருள்? மோனியர் வில்லியம்சில் down, back, in, into, within என்ற பொருண்மைகளைக் கொடுத்து இந்தச் சொல் வினைச்சொல் அல்லது பெயர்ச்சொல்லின் முன்னொட்டாய் சேர்க்கப் படும் என்றும், சில போது எதிர்மறைப் பொருள் கொண்டு தரவும் இது சேர்க்கப் படும் என்றும் குறித்திருக்கிறது. அப்படியானால், இடைச்சொல்லின் பொருள் பார்க்கும் போது, ஓடு, உடன் என்ற பொருட்பாடுகள் இல்லாத நிலையில், திருவோடு உறைபவன், திருமகள் கேள்வன் என்ற இணைச்சொற்களாய்க் காட்டப்படுபவை எல்லாம் பொருத்தம் இல்லாதவையாகவே தோன்றுகின்றன.

ஸ்ரீநிவாசன் என்ற பெயரைக் கல்வெட்டுக்களில் பதிவு செய்ததை, திருப்பதியை ஒட்டி உள்ள கல்வெட்டுக்களில் பார்த்தால் அது மிகுந்த ஆண்டுகள் கழித்து, விசயநகர அரச காலத்தில் தான் பதிவு செய்யப் படுகிறது. காட்டாக, திருமலை-திருப்பதி தேவத்தானம் 1998ல் வெளியிட்ட "முந்தைய கல்வெட்டுக்கள்" என்ற பொத்தகத்தில் 199 ஆம் கல்வெட்டாய், திருமலைக் கோயிலின் முதற் சுற்றாலையில் (=பிரகாரத்தில்) ஆவணப் பதிவு அறையின் (record room) வெளியோடியில் (verandah) வடக்குச் சுவரின் வெளிப்பக்கத்தில் இருக்கும் கல்வெட்டில் 4 வது வரியில், "திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களில் முதலியார் திருக்கலிகன்றிதாஸர் அகரமான ஸ்ரீநிவாச புரத்தில்" என்ற குறிப்பு வருகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1444 அளவில் இருக்கலாம்.

இதே கல்வெட்டில் திருமலைப் பெருமாளின் பெயர் வேங்கடமுடையான் என்றே குறிக்கப் படுகிறது. முதலியார் என்ற வழக்கு அந்தக் காலத்தில் சாதியைக் குறிப்பிடும் சொல் அல்ல; அதற்கு முன்னவர், முதலாகக் கருதப்படும் பெரியவர், என்றே பொருள் உண்டு. கலிகன்றி என்பது திருமங்கையாழ்வாரின் இயற்பெயர். கலிகன்றிதாஸர் என்பது கலிகன்றிக்குத் தாஸர் என்று பொருளில் ஒரு விண்ணவப் பார்ப்பனரைக் குறிக்கிறது. அகரம் என்ற தமிழ்ச்சொல் இன்று அக்ரஹாரம் என்று திரிக்கப் பட்டு வடமொழி போல் தோற்றம் காட்டும் அருமையான தமிழ்ச்சொல். அகரம் என்பது இங்கே பார்ப்பனர் குடியிருப்பு.

ஆக 1444 ல் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீநிவாசபுரம் என்பது கீழ்த்திருப்பதியின் அருகே உள்ள குடியிருப்பு. திருப்பதியான் என்ற பொருளை ஸ்ரீநிவாசன் என்ற சொல் தரும் என்று முன்னே குறித்திருந்ததை நினைவு கொள்ளுங்கள். அடுத்து அதே பொத்தகத்தில் குறிப்பிடப்படும் கல்வெட்டு எண் 201 இலும் இந்த ஸ்ரீனிவாசபுரம் குறிப்பிடப்படுகிறது. தவிர அந்தக் குடியிருப்பினுடைய இயற்பெயரும் சித்தக் குட்டை என்றும் 201- ஆம் கல்வெட்டில் சொல்லப் படுகிறது.

பொதுவாகப் பல்லவர் காலத்தில் இருந்து, சோழ, பாண்டிய, விசய நகர அரசு வரை, அரசர்கள் பல்வேறு காரணங்களுக்காக, ஓர் இயல் ஊரை அங்கு ஏற்கனவே இருப்போரிடமிருந்து வரி காரணங்களால் வலிந்தோ, பணம் கொடுத்து வாங்கி மெலிந்தோ, பெற்று, பார்ப்பனருக்குத் தானமாய்க் கொடுப்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. அப்பொழுது விண்ணவன் கோயிலைச் சேர்ந்த பார்ப்பனருக்கு உரிமையாய் அமைந்தால் அந்த ஊர் திருவிடையாட்டம் என்று சொல்லப் படும். [சிவன் கோயிலுக்குக் கொடுத்தால் தேவதானம் என்றும், அல்லிருமைப் (அத்வைதப்) பார்ப்பனருக்குக் கொடுத்தால் அது பெருமதேயம் (ப்ரம்ம தேயம்) என்றும், சைனருக்குக் கொடுக்கும் போது பள்ளிச்சந்தம் என்றும் சொல்லப் படும்.] இந்த 201 ஆம் கல்வெட்டின் படி சித்தக் குட்டை என்னும் ஊரே ஸ்ரீநிவாசபுரம் என்ற பெயரில் திருவிடையாட்டமாய் மாறியிருக்கிறது. (சித்தக் குட்டை என்ற பெயர் சைன, ஆசீவகம் பற்றி ஓர்ந்து பார்க்கத் தூண்டுகிறது. ஆய்வு செய்ய வேண்டும்.)

202- ஆம் கல்வெட்டிலும், 217 - ஆம் கல்வெட்டிலும் (இதன்படி, ஸ்ரீநிவாசபுரம் என்னும் குடியிருப்பு திருப்பதியில் தென்சீர்மையில் சிங்கர் கோயில் தெருவுக்குத் தெற்கில் இருந்திருக்கலாம்.) 224 - ஆம் கல்வெட்டிலும் (ஸ்ரீநிவாச புரத்தில் வீர நரசிம்ஹப் பெருமாள் கோயில் இருந்தது.) மேற்கொண்டு சில செய்திகளை அறிகிறோம்.

ஆக ஸ்ரீநிவாசபுரம் என்ற சொல் கீழ்த் திருப்பதியை ஒட்டியே இருந்திருக்கிறது. "எப்பொழுது திருமலையின் மூலவருக்கு இந்தப் பெயர் போனது?" என்ற கேள்விக்கு நான் பார்த்தவரை விடை தெரியவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். விசயநகரக் கல்வெட்டுக்களிலும் கூட திருமலையின் மூலவர் வேங்கடமுடையான் என்றே அழைக்கப் படுகிறார்.

இனி, நான் சொல்லப் போவது ஒரு முன்னீடு (proposal) மட்டுமே; இது முடிந்த முடிவு அல்ல. எனவே யாரும் பாய்ந்து வந்துவிடாதீர்கள். எந்த ஓர் ஆய்விற்கும் முதலில் முன்னீடு வேண்டும். பின்னால் அதை நிறுவிக்கலாம், அல்லது, தூக்கிப் போடலாம். எது சரி என்று எனக்கு இப்பொழுது தெரியாது.

பொதுவாய், நெடியோன், உயர்ந்தோன் என்பதைத் தமிழில் நிவந்தோன் என்றும் சொல்லலாம். நிவத்தல் என்பது உயர்தல், வளர்தல், மேலாதல். இவை அத்தனையும் திருவிக்கிரம அவதாரத்தில் நடந்தவையே. நிவத்தலின் இன்னுமொரு வடமொழித் திரிவாய் நிவேதனம் என்ற சொல் கிளர்ந்து தெய்வத் திருமேனிகளின் முன்னால் தமிழ் ஆகம முறைப்படி படையலை உயர்த்திக் காட்டுவது குறிப்பிடப்படும். (படையலை உயர்த்திக் காட்டுவது வேதமுறையே கிடையாது. அது ஆகம முறை. வேத முறையில் கீழ்நோக்கிச் சாய்த்து ஆகுதி ஆக்க வேண்டும்.)

(வேதமுறை வேறு, ஆகம முறை வேறு என்று சொன்னால் பலரும் புருவத்தை உயர்த்தலாம், இது என்ன குழப்பம் என்றும் நினைக்கலாம். வேதநெறிக்காரர்கள், அல்லிருமைக்காரர்கள், கோயிலுக்குள் புகுந்தது எல்லாம் பின்னால் வந்த மரபு. வரலாற்றின் ஒரு பொழுதில் இந்த வேதம், ஆகமம் ஆகிய இருவேறு முறைகளும் தனித்தே வைக்கப் பட்டு இருந்தன. பின்னால் ஏதோ ஓர் உந்துதலில், சேர்ந்து போயின. இந்தக் கால சிவநெறி, விண்ணவ நெறி ஆகியவற்றில் இருக்கும் கோயிலொழுகுகள் ஆகமநெறி, வேதநெறிப் பழக்கங்களின் கூட்டுக் கலவையே ஆகும்.)

நிவேதத்தை மீண்டும் தமிழில் கடன் வாங்கி நிவேத்தியம்>நைவேத்தியம் என்று சொல்ல முற்படுவார்கள். தமிழ்ப் பலுக்கோடு இருக்க வேண்டுமானால் நிவந்தம் என்றே நைவேத்தியத்தைச் சொல்லலாம். நமக்கும் நம் ஆகம முறைகள் ஒழுங்காய்ப் புரிபடும். [கோயிலுக்கென முன்வந்து உரிமையாய் விடும் நிலமும் கூடத் தமிழ்க் கல்வெட்டுகளில் நிவந்தம் என்றே குறிக்கப் படும். முன்வருவதும் தமிழ்மரபில், ஓர் உயர்ச்சி தான்.]

இனி, விந்த மலை என்பது, விஞ்ச மலை என்று போலி ஒலிப்புப் பெறுவதைப் போல, அய்ந்து என்பது அஞ்சு என்று ஆவதைப் போல, நிவந்தன்>நிவஞ்சன் என்று ஆகிப் பின்னால் நிவாஞ்சன்>நிவாசன் என்று மூக்கொலி இல்லாமல் ஆவதும் மொழிப் பலுக்கலில் இயல்பாக அமையக் கூடியது தான். (வந்தாங்க என்பது எங்கள் பக்கம் வந்தாக என்று ஆவது எப்படி? வைதாங்க/வைஞ்சாங்க/வைதாக என்பதெல்லாம் வசை என்னும் பெயர்ச்சொல்லை எப்படி உருவாக்குகிறது?) அப்படி நிவாசன் என்று ஆகும் போது நெடியோன் என்ற பொருளும் நீண்டு நிலைக்கிறது. ஆனால் இதற்குச் சான்று? இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைப்பின் சொல்லுகிறேன். அதே பொழுது, "திருமகளைத் தன் மார்பில் இருக்க வைத்திருப்பவன்" என்ற பொருள் ஏரண முறையில் பார்த்தால் சரியென்று தோன்றவில்லை.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். திருமலையான், "நெடியோன்" என்றுதான் தொன்றுதொட்டு 2500 ஆண்டுகளாய் தமிழில் அழைக்கப் பெறுகிறான் என்று அழுத்தமாகச் சொல்லலாம்.

இதுவரை மேலே சொன்னவற்றில் நான் தொடாத ஒரு புலனமும் உண்டு. திருமலையான் நெடியோன் மட்டும் தானா அல்லது இரண்டுருவின் கலப்பா என்ற அய்யத்தைப் பற்றியது. (இங்கே கருத்தியல் கலப்பைச் சொல்லவில்லை; அந்தத் திருமேனியில் நம் கண்களுக்குத் தெரியக் கூடிய சிற்பக் கூறுகளையே பார்க்கச் சொல்லுகிறேன். அந்தப் பெரிய நாமம் .......) கீழே உள்ள பாடலை ஆழ்ந்து படியுங்கள். இது இயல் விவரிப்பா, அன்றி மனத்துள் எழுந்த கருத்தியல் உருவகமா?

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து

- பேயாழ்வர், மூன்றாம் திருவந்தாதி 63.

அன்புடன்,
இராம.கி.

Thursday, August 09, 2007

வேங்கடத்து நெடியோன் - 2

வேங்கட மலையையும், அதில் திருமால் குடிகொண்டுள்ளதையும், அவன் பெயர் நெடியோன் என்பதையும் நமக்குக் கிடைத்தவற்றில் முதலில் பதிவு செய்த ஆவணம் சிலப்பதிகாரம் தான். நாம் கவனிக்க வேண்டியது நெடியோன் என்ற பெயர். [அந்தப் பெயரின் விளக்கம், "வாமனத்தின் முடிவில் எடுக்கும் திருவிக்கிரமத் அவதாரத்தால்" என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கதை தமிழ் இலக்கியங்களில் நெடுகவே பயின்று வந்திருக்கிறது. அப்படி ஒரு தாக்கம் ஏற்படவேண்டுமானால், அந்தத் தொன்மங்கள் இங்கு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு உண்டு.] "நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்" என்று குறிப்பிட்டுக் காடுகாண் காதை 11:148 ல் சொல்லப்படும். இந்த அவதாரக் கதையில் வரும் மாவ(ல்)லி மன்னன் ஒரு சேர அரசனாய் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

(இன்றைக்கும் மாவல்லி ஒவ்வொரு ஓணத்தன்றும் கேரளத்தில் நினைவு கூரப்படுகிறான்.) அவன் அரக்கன் என்பது நிறம் கருதியே அன்றி வேறாய் இருக்க வாய்ப்பு இல்லை. அரக்கு நிறம் என்பதும் தமிழர் நிறம் தான். மாந்தளிர் நிறம் அரக்குத் தானே? சேரமான் மாவண் கோ, விளங்கில் மாவண் கடலன், மாவண் புல்லி, மாவண் கிள்ளி எனப் பல்வேறு அரசர்களும், வேந்தர்களும் சங்க காலத்தில் சொல்லப் படுகிறார்கள். இந்த மா என்னும் முன்னொட்டு அவன் தமிழ் அரசன் என்று உணர்த்திவிடுகிறது. மாவல்லியின் தாத்தன் பெருகலாதன் என்பதும் கூடப் பெருஞ்சேரலாதன்>பெருங்கேரலாதன்>பெருங்கலாதன்>பெருகலாதன் என்ற திரிவில் அமையக் கூடிய பெயரே. அப்படி அய்யுறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஆதன் என்னும் பெயரீறு சேர அரசர் பலருக்கும் இருந்திருக்கிறது. இரண்டு, மாவலியின் வழியில் வந்தவன், சோழன் மாவண் கிள்ளிக்குப் பெண் கொடுத்ததாக மணிமேகலைக் காவியத்தில் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதையில் (16:53-55)

நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி என்னும் திருத்தேவி ------

என்று பதிவு செய்யப் படும். இதே மாவண் கிள்ளியைச் செங்குட்டுவனின் மைத்துனன் என்று சிலம்பில் இளங்கோவடிகளும் பதிவு செய்வார். செங்குட்டுவனின் தாய் ஞாயிற்றுச் சோழன் என்று சிலம்பில் காணப்படும். ஆனால், பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்திற்கான பதிகத்தில் "குடவர்கோன் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி மகள் ஈன்ற மகன்" என்று மணக்கிள்ளியாக "ஞாயிற்றுச் சோழன்" என்னும் செங்குட்டுவனின் தாய்வழித் தாத்தனை உணர்த்தும். இத்தகைய உறவு முறையால் மாவல்லி என்பவன் சேரனாய் இருக்கவே பெரிதும் வாய்ப்பு உண்டு.

நெடியோன் என்ற பெயர் திருமாலுக்கு சிலம்பின் பல இடங்களிலும் பயிலப்படுகிறது. சிலம்பின் இந்திர விழவூர் எடுத்த காதை 5: 169-174 ல், புகாரில் இருந்த பல்வேறு கோயில்களைப் பற்றிச் சொல்லும் போது

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வண்குடை மன்னவன் கோயிலும்

என்று நெடியோன் பெயரை இளங்கோவடிகள் பதிவு செய்வார். சிலம்பின் கடலாடு காதை 6: 28-31 வரிகளில்

சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சயம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும், தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டி ---------

என்று சொல்லி வேங்கட மலையும் பதிவு செய்யப் படும். அடுத்து, சிலம்பு வேனிற்காதை 8:1-2 ல்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு

என்ற புகழ்பெற்ற வரிகளின் மூலம் வேங்கட மலை என்பது அந்த நெடியோனின் குன்றம் என்றும், சிலம்பின் காலத்தில் தமிழ் வரப்பைக் குறிப்பதில் நெடியோன் குன்றத்தின் பெயர் அழுத்தமாகவே பயன்படும். மேலே நாடுகாண் காதை 10: 9-10 ல்

அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டத்து வலஞ்செயாக் கழிந்து

என்று திருவரங்கத்தைப் பதிவு செய்ததோடு நில்லாமல், விரிவாகக் காடுகாண் காதை 11:41-51 ல், திரு வேங்கடமும், செங்கண் நெடியோனும் கீழ்வரும் வரிகளால் விரிவாகச் சொல்லப் படுவார்கள்.

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

இந்த வரிகளில் மிக விரிவாக நெடியோனின் உருவம் வரையப் படுகிறது. வேங்கடத்தில் ஓர் அருவி இருந்ததாகச் சொல்லப் படுகிறது; (வேங்கடம் பற்றிய சங்கப் பாடல்கள் பலவற்றிலும் இந்த அருவி குறிப்பிட்டுச் சொல்லப் படுகிறது. ஆனால் இன்று அந்த அருவியைக் காணோம்.) மலையின் உச்சியில் கோயில் இருந்திருக்கிறது. ஒரு பக்கம் ஞாயிறும், இன்னொரு பக்கம் திங்களும் இருக்க, இடைநிலையில் மின்னல் எனும் கோடி உடுத்து, வில்லைப் பூண்டு, மேகம் நிற்பது போல சக்கரத்தையும் சங்கையும் தாமரைக் கைகளில் தாங்கி, மார்பில் ஆரம் அணிந்து, தங்க ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் என்ற விவரிப்பைப் படிக்கும் போது, இன்றுள்ள பெருமாளின் திருமேனி அப்படியே நம் கண்முன் தோன்றுகிறது.

இந்தச் சொற்களைப் படிக்கும் போது திருமலையின் நெடியோன் திருமேனி திருவிக்கிரம அவதாரத்தைக் குறிக்கிறது என்றும் (செங்கண் மால் என்னும் குறிப்பு நரசிங்க அவதாரத்திலும், திருவிக்கிரம அவதாரத்திலும் ஆழமாய்க் குறிக்கப் படும் குறியீடுகள். திருமலையில் இருப்பவன் திருவிக்கிரமனே என்ற குறிப்பு சிலம்பில் ஆழவே வெளிப்படுகிறது. முதலாழ்வார் பாடல்களையும் கூர்ந்து படித்தால் இந்தச் செங்கண்மால் என்னும் குறியீடு புலப்படும்.), அந்த அவதாரத்தில் தாயார் உடன் வருவது இல்லை என்பதும் புலப்படும். சிலம்பில் துன்ப மாலை 18: 4 ல் "நெடுமால் அடி" என்ற சொல்லாட்சியும், அழற்படு காதை 22: 60 ல், "உரைசால் சிறப்பின் நெடியோன்" என்ற சொல்லாட்சியும் கூட "நெடியோன்" என்ற பெயரின் ஆழ்ந்த ஆட்சியை உறுதி செய்கின்றன. நெடியோன் என்று இல்லாமல், உயர்ந்தவன் என்ற பெயரில் ஊர்காண் காதை 14:8 ல், "உவணச் சேவல் உயர்ந்தோன் நியமம்" என்று வரும் கருத்து வேறு ஒரு பரிமானத்தைக் கொடுக்கும். நெடியோன் தவிர அந்தக் காலத்தில் பெரிதும் பயன்பட்ட பெயர்களை அடுக்கிச் சொல்லுவது ஆய்ச்சியர் குரவை 17: படர்க்கைப் பரவல் 2 ல் வரும் பாட்டாகும்.

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்யக்
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!

பெரியோன், மாயோன், விண்ணவன், கரியவன் என்ற பெயர்கள் எல்லாம் வேங்கட மலை பற்றி மட்டுமே சொல்லப் படுவதில்லை. ஆனால் நெடியோன் என்ற பெயர் தான் அங்கு விதப்பாகவே பேசப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 08, 2007

வேங்கடத்து நெடியோன் - 1

அண்மையில் வேங்கடமுடையானின் இற்றைக் காலப் பெயரான "சீனிவாசனைத் தமிழில் சொல்ல முடியாதா?" என்பது பற்றிய உரையாடல் திரு. கண்ணபிரான் ரவிசங்கரின் வலைப்பதிவில் எழுந்தது. அந்தப் பதிவையும், அதில் வந்த பின்னூட்டுக்களையும் படித்த போது, "உடனடியாக எழுதாது, கொஞ்சம் ஆற அமரச் சரிபார்த்து, உறுதி செய்து, பின் எழுதலாம்" என முன்னிகை தருவதைத் தவிர்த்தேன். அச் சரிபார்ப்பு இப்பொழுது ஓரளவு முடிந்த நிலையில், சொல்லாய்வு, முற்கால வரலாறு ஆகியவை சேர்த்து, இந்தப் பதிவில் சொல்கிறேன்.

நமக்குக் கிடைத்த தரவுகளில், வேங்கடத்தை  முதலில் குறிப்பிட்ட சான்று தொல்காப்பியத்தில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகத்து" என்று தொடங்கும் பனம்பாரனாரின் சிறப்புப் பாயிரத்தில் உள்ளது. இதில் வேங்கடம், மலையை மட்டும் குறித்ததா என உறுதி சொல்ல முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டு வடஎல்லையில் இன்றுள்ள வேங்கடமலை ஆயின், அது வடகிழக்கில் மீச்சிறிய இடங்குறித்ததாய் அமையும். தவிர, இற்றை வட எல்லையே சங்க காலத்தில், அதற்கு முந்தைய தொல்காப்பியக் காலத்தில் இருந்ததாய்ச் சொல்ல முடியாது. மாமூலனாரையும், காரவேலன் கல்வெட்டையும் படித்தால், அற்றை வட எல்லை இன்னும் வடக்கே என்றே தோன்றுகிறது. இதுவரை செய்த என்னாய்வில் அது எதுவென என்னால் சொல்ல முடியவில்லை. 

வட எல்லை வடகிழக்கிலுள்ள மீச்சிறு எல்லையைக் குறிக்காது கிழக்கிருந்து மேற்கு வரை ஓர் அகண்ட பட்டையைக் குறித்தால் வட எல்லை என்பதில் நல்ல பொருளுண்டு. தொல்காப்பிய உரை எழுதிய இளம்பூரணர் (11 ஆம் நூ.) தன் உரையில் என்ன காரணத்தாலோ, வேங்கடத்தைத் திருமாலோடு பொருத்திச் சொல்லார். ஆனால் 14 ஆம் நூ. நச்சினார்க்கினியரோ நிலங்கடந்த நெடுமுடி அண்ணலாகிய திருமால் உறையும் மலையாக வேங்கட மலையைக் கூறுவார். 19, 20 ஆம் ஆண்டு உரையாசிரியரும், தமிழாசிரியரும் நச்சினார்க்கினியர் அளவிற்கு இளம்பூரணரை ஓதாக் காரணத்தால் நெடியோன், திருமாலாய் மட்டுமே எண்ணப்படுகிறான். 

திருமாலை மட்டுமின்றி, சிவன், அனுமன், ஏன் சாத்தார நெட்டையன்,  உருவகத்தால் நெடிதுயர்ந்த குன்று-மலை என ‘நெடியோன்’ குறிக்கலாம். சிவனை மதுரைக் காஞ்சி , “மழுவாள் நெடியோன்” என்று சொல்லும். அவனை மாதேவன், பெருந்தேவன் என்பது கூட அவனின் நெடுமையாலும், , பெருமையாலும் ஆகலாம். 

வேங்கடம் என்பதைச், சங்கப் பாடல்களில் 14 இடங்களில் (அகம் 27, 61, 83, 141, 209, 211, 213, 265, 393, புறம் 381, 385, 389, 391) காணலாம். உரையாசிரியர்களின் கூற்றுகளைத் தவிர்த்து, பொருள்களை ஓர்ந்து பார்த்தால், இற்றைத்  திருமலை மட்டுமின்றி, வேறொரு  மலைத் தொடரையும், அதை ஒட்டிய பகுதிகளையும் குறித்திருக்கலாம். 

அதாவது வேங்கடம் என்பது மலை, தொடர், அதைச்சுற்றிய பகுதிகள் என விரிந்தே பொருள்கொள்ள வேண்டும். அப்பகுதிகள் எவ்வளவு தொலைவு இருக்கும் என்பது அடுத்த கேள்வி. இற்றை வேங்கடப் பகுதிகள் சங்க காலத்தில் (கி.மு. 600 - கி.பி. 300) நமக்குத் தெரிந்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய், திரையனுக்குக் கீழும் (இவன் தொண்டைமான் இளந்திரையனுக்கு முன்னோனாய் இருக்கலாம்), மாவண் புல்லி என்ற குறுநில அரசனுக்குக் கீழாயும், ஆதனுங்கனுக்குக் கீழாயும் (இவன் மோரிய அரசன் பிந்துசாரனின் படையெடுப்புக் காலத்தில் இருந்துள்ளான். இவன் பற்றிய செய்தி அறதப் பழைய காலம்.) இருந்ததாக அடையாளப் படுகின்றன. இக் குறுநில மன்னரின் தொடர்ச்சிவரிசை நமக்குக் கிட்டவில்லை. எனினும், இப் பகுதிகள் தமிழ்பேசும் பகுதிகளாய் இருந்தன என்றே அறிகிறோம்.

இந்தப் 14 பாடல்களிலும், ஓரிடத்தில் கூட, வேங்கடத்தின் திருமால், திருமால் கோயில் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப் படாதது வியப்பையே அளிக்கிறது. "பரங்குன்றைக் குறிக்கும் போதெல்லாம், விட்டு விடாது, முருகனைச் சேர்த்துக் குறிக்கும் சங்கப் பாடல்கள், வேங்கடத்தைச் சொல்லும் போது மட்டும், கூடவே திருமால், திருமால் கோயிலைக் குறிக்காது போனது ஏன்?" - என்பது நமக்குக் கேள்விக் குறியாய் இருக்கிறது. இத்தனைக்கும் வேறு பல இடங்களில் சங்கப் பாடல்கள் மாயோனையும், வாலியோனையும் அழுத்தமாகக் குறிக்கின்றன. முல்லைநிலத் தெய்வம் மாயோன் தானே? (வாலியோன் மாயோனின் அண்ணன்; இவனைக் குறிப்பிடும் வழக்கம் சங்க இலக்கியத்தில் கொஞ்சம் அதிகம் தான். வாலியோனை வழிபாட்டிற் சிறப்பிப்பது பழந்தமிழகமும், இன்றைய ஒரிசாவும் தான்.)

பொதுவாகச் சங்க இலக்கியத்தில் பாலைத்திணையில் (சங்க இலக்கியத்தில் இந்தத் திணைப் பாட்டுக்கள் மிகுதியாய் உள்ளன.) பொருள்வயின் பிரிதலைக் குறிக்கும் எல்லா இடங்களிலும், சிலம்பில் (11:63-67) சொல்லப் படுவது போல்,

"வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலம் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்"

என்ற அளவில் முல்லையும் குறிஞ்சியும் திரிந்த இடமே பாலை என்பதாக ஒரு தமிழ் நாட்டு வரையறையைக் குறிப்பதாகக் கொள்ள முடியவில்லை. அவை வேறு ஏதோ ஒரு நிலைத்த இடத்தை, அதுவும் தமிழ்கூறும் உலகைத் தவிர்த்து, ஒரு மொழிபெயர் தேயமாகவே, குறிப்பதைக் கவனிக்க முடியும். அதோடு வேங்கடம் என்ற சொல், வெறும் மலையை மட்டும் அல்லாது, வெய்யிலில் வேகும் பகுதியையே முதலில் குறித்திருக்க வேண்டுமோ என்றும் ஐயுற வேண்டியிருக்கிறது.

(இயற்பொருளின் படி, வேகும் கடம் என்பது, வெய்யிலால் சுட்டெரிக்கும் இடம் என்பது, வேங்கடம் என்றாகும்; கடம் என்பதற்கு பாவம் என்ற பொருள் கூறி சமய உணர்வில் விளக்கப் பார்ப்பது வேண்டாத வேலை. எல்லாவற்றிற்கும் சமயத் திருகையே - twist - விளக்கமாய் அளித்துக் கொண்டிருந்தால் வரலாறு என்பது சரியாய் விளங்காமல் போகும். பாவம் - புண்ணியம் போன்ற கருத்துக்கள் எல்லாம் மெய்யியல் வழியாக வந்தவை. மெய்யியற் சிந்தனை தமிழ்க் குமுகாயத்தில் அழுந்தியது கி.மு. 200 களுக்கு அப்புறமே. தொடக்க காலத்தில் தெய்வ வழிபாடு இருந்தது; ஆனாற் சமய நெறி கிடையாது. 2300-2500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இடப்பெயர்கள் பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே அமைந்திருப்பதை நாவலந்தீவின் பல இடங்களின் பெயர்களில் பார்க்கலாம்.)

தென்னிந்தியாவிலேயே கோடைகாலத்தில் மிகுந்து வேகும் பகுதி ஆந்திரத்தில் இருக்கும் இராயலசீமைப் பகுதியே ஆகும். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், சங்க இலக்கியத்தில் பாலையாகக் குறிப்பிடப்படும் வேங்கடப் பகுதி, ஒரு பெரிய நிலப்பரப்பாய், குறிப்பாகக் கண்ண பெண்ணை (கிருட்டிணா) ஆற்றில் இருந்து வட பெண்ணை ஆறு வரைக்கும் இருக்கும் இந்தக் கால இராயல சீமைப் பகுதியாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு என்று சில ஆய்வாளர்கள் குறிப்பார்கள். இது மொழிபெயர் தேயம். தமிழும் வடுகும் ஒன்றிற்கொன்று ஊடுறுவிய பகுதி.

தவிரப் பொருள்வயின் பிரிவது என்பதை "வணிகம் கருதியே பிரிந்திருக்க வேண்டும்" என்று கொண்டால், அந்த வணிகம் நிலம்வழி நடந்தது என்றால், அது வடக்கு நோக்கி இருந்திருக்கவே வாய்ப்புண்டு. அந்த வணிகத்தில் வடவெல்லை மகதமாகவே கி.மு.600-400 களில் அமைந்திருக்கலாம். மகதத்திற்கும், தமிழ்கூறு உலகத்திற்கும், பிந்துசாரன் (= மோரிய அரசன் அசோகனின் தந்தை) காலம் தவிர்த்து, நந்தர், மோரியர் என்று வரும் காலங்களில் கனிவான உறவு குறைபடாமலே இருந்திருக்கிறது. தவிர, அந்தக் கால மொழிபெயர் தேயமாய் தமிழகத்திற்கு அடுத்தாற்போல இருந்தவை, வட மேற்கே இருந்த நூற்றுவ கன்னரின் (= சாதவ கன்னரின்) அரசும், வடகிழக்கே இருந்த கலிங்க அரசுமே ஆகும்.

நூற்றுவர் கன்னரை தோழமை கொண்ட தமிழரசர் என்றே சிலம்பு பேசுகிறது. கலிங்க அரசன் காரவேலனின் கல்வெட்டும், தமிழ் மூவேந்தரின் நீண்ட காலக் கூட்டணியைப் பகைமை இல்லாமலேயே குறிக்கிறது. எனவே நூற்றுவர் கன்னர் அரசின் வழியாகவும், கலிங்க அரசின் வழியாகவும் மகதம் வரை செல்லும் வாணிகம் நடந்திருக்க வேண்டும். குடிலரின் (=கௌடில்யரின்) பொருள்நூல் (=அர்த்த சாத்திரம்) தெரிவிக்கும் ஒரு சில வணிகப் பண்டங்கள் தெற்கிருந்து போனவையாகவே தெரிகின்றன. பொதுவாகச் சங்க இலக்கியங்களில் கிடைக்கும் நந்தரின் அரசுச் செய்திகளும் மகதத்திற்கும் தமிழகத்திற்குமான உறவு மேம்பட்டே இருந்திருப்பதை உறுதிப் படுத்துகின்றன.

பழந் தமிழகத்தில் இருந்து (இது இன்றையத் தமிழகமும், கேரளமும், தென்கன்னடமும் சேர்ந்த ஒருபகுதி.) வடக்கே போக இரண்டு வழிகள் தான் உண்டு. ஒருவழியில், எருமைநாட்டைக் கடந்து (= மைசூர் நாடு; அதுவும் அன்று முழுமையாய்த் தமிழ் பேசி இருந்த நிலம் தான். இன்றையத் தென்கன்னட நாடு முழுமையும் அன்றைக்குத் தமிழ் பேசும் நிலமாய்த் தான் இருந்தது. இதைக் கல்வெட்டுக்களும், கன்னட மொழி வளர்ந்த நிலையும், கன்னட இலக்கியங்கள் பிறந்த வரலாறும் தெளிவாகவே உணர வைக்கின்றன.) சமண வெள்ளைக்குளம் (=ஸ்ரவண பெலகுளா) வழியாக இன்றைய ஔரங்காபாதிற்கு அருகில் கோதாவரி ஆற்றின் வடகரையில் இருக்கும் நூற்றுவர் கன்னரின் முதல் தலைநகரான படித்தானம் போய் அங்கிருந்து மகத அரசின் தக்கணப் பாதையைப் பிடிக்க வேண்டும். (படித்தானம்>பயித்தானம்>பைத்தான்; நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை இருக்கிறது. படித்தானத்திற்குச் சற்று அருகில் தான் எல்லோரா மற்றும் அசந்தா மலைக் குகைகளும் இருக்கின்றன.)

மகத அரசின் தக்கணப் பாதை கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானத்தில் தொடங்கி, அசந்தா, எல்லோரா வழியாக, வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசருக்கு வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, அப்புறம் உஞ்சைக்குப் (உச்செயினி) போய், மேலே பில்சா வந்து, பின்னால் நேர்வடக்கே திரும்பி, தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பிக்கு வந்து, அதற்கு அப்புறம் அயோத்தி என்ற சாகேதத்தில் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேரும். (சாவத்தி என்பது கோசலத்தின் தலைநகர். கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள். இராமாயணக் கதையில் வரும் கோசலம் இராமனின் தாய் பிறந்த நாடு. மகத அரசின் பேர்பெற்ற முதலரசன் பிம்பிசாரன்; அவனுடைய மைத்துனன் ஒரு கோசலத்து மன்னன் தான். மகத்திற்கும் கோசலத்திற்கும் இருந்த உறவு 18 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சேதுச் சீமைக்கும், சிவகங்கைச் சீமைக்கும் இடையே இருந்த மாமன் - மச்சான் உறவு போன்றுதான்; ஒருசமயம் இழைந்து கொள்ளுவார்கள்; மறுசமயம் அடித்துக் கொள்ளுவார்கள்.)

தெற்கிருந்து வடக்கே போவதற்கு இன்னொரு வழி, வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்த வேங்கடப் பகுதியைக் கடந்து அமராவதி வந்து (புத்த நெறியின் தென்பகுதித் தலைமைப் பீடம் போன்றது.) அங்கிருந்து கலிங்கம் வழியாக மகதத்துள் வந்து சேருவது. அமராவதியில் இருந்து படித்தானத்திற்குக் குறுக்கில் ஒரு கிடைப் பாதையும் உண்டு.

பழங்கால நாகரிக வளர்ச்சியையும், அரசர்கள் படையெடுத்ததையும், வணிகப் போக்கையும் புரிந்து கொள்ள எண்ணுகிறவர்கள் இந்தப் பாதைகள் போன போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால், ஒழுங்காக இந்திய வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

சங்க கால வேந்தர்களும், பின்னால் பேரரசுச் சோழர்களும் கொங்கு நாட்டையும் (>கங்க நாடு), அதிகன் நாட்டையும் (அசோகனின் கல்வெட்டில் குறிக்கப் படும் சத்திய புத்த நாடு) கைக்குள் வைத்துக் கொள்ளாத பொழுது, இந்த வேந்தர்கள் நாட்டு வணிகர்கள், இரண்டாவது வழியான வேங்கடப் பகுதி வழியாகக் கலிங்கம் போய்த்தான் மகதம் செல்ல நேரிடும். நாட்டில் செல்வம் கொழிக்க விரும்பிய தமிழக அரசருக்கு மாராட்டியம், கலிங்கம் ஆகிய இரண்டில் யாரோ ஒருவர் இவர்கள் பக்கம் சார்ந்து இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். மகதத்தை நோக்கிய வணிகம் இல்லாமால் தமிழ்நாட்டு அரசுகள் நெடுங்காலம் தரிக்க முடியாது.

முன்பு சொன்னது போல், வேங்கடப் பகுதியின் வடக்கு என்பது இன்றையத் தெற்கு ஆந்திரத்தையே, அதாவது வடுகு மொழி பெரிதும் பேசும் தேயத்தையே குறிப்பதாகத் தோற்றுகிறது. அந்தக் கால வடுகு என்பது நமக்கு வடக்கில் உள்ள மொழி என்றே புரிந்து கொள்ளப் பட்டது; அதே பொழுது, பாகத மொழி பேசிய நூற்றுவர் கன்னருக்கு அது தெனுகு (தெற்கு) மொழியாய் ஆனது. தெனுகு (=தெலுகு; தெனுங்கு; தெலுங்கு) பேசும் இடத்திலும் தமிழ் மொழி அங்கங்கே ஊடாகப் விரவி இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நூற்றுவர் கன்னர்கள் தங்கள் காசுகளின் ஒருபக்கம் தமிழிலும் பொறித்திருக்க மாட்டார்கள் அல்லவா? வேங்கடம் என்பது தமிழ் கூறும் உலகிற்கு எல்லையாக இருக்குமானால், அந்தப் பெயரையே வைத்து எல்லை ஒட்டிய பகுதிகளையும் குறிப்பது மாந்தருக்கு இருக்கும் வழக்கம் தான். இது எப்படியென்றால், இன்றைக்கும் தெலுங்கர்கள் தமிழர்களை அரவமாடு என்று குறிப்பதைப் போல என்று கொள்ள வேண்டும்.

[தமிழ்நாட்டின் வடபகுதி மண்டலங்களாய் அருவா நாடு, அருவா வடதலை நாடு என்று இரண்டைப் பழங்காலத்தில் குறிப்பார்கள். பழைய ஆர்கா நாடு>அருகா நாடு (>அருவா நாடு) தான் இன்றைய வட ஆர்க்காடும், தென் ஆர்க்காடும் சேர்ந்த நிலப்பரப்பு ஆகும். ஆர்கா நாடு>ஆர்க்காடு என்று ஆனது. அருவா வடதலை என்பது இன்றைய ஆந்திர மாநிலம் சேர்ந்த சித்தூர், நெல்லூர் மாவட்டங்களாகும். (அவை இரண்டும் பெரும்பான்மையர் தமிழ் பேசிய இடங்களாய்த் தான் 1956/57 வரை இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட குழப்பத்தில் இந்த மாவட்டங்களையும், இது போல கன்னடமாநிலத்திற்கும், கேரள மாநிலத்திற்கும் நாம் இழந்த பகுதிகளும் உண்டு. இப்படிப் பெரிதும் ஏமாளிகளாய் இருந்தாலும், தமிழர் ஏதோ இந்திய இறையாண்மையில் ஒன்று படாதவர்கள் போலவே சித்தரிக்கும் கூத்தும் அவ்வப்பொழுது நடந்து கொண்டுதான் இருக்கிறது.)

அருவா நாடு, அருவா வடதலை நாடு ஆகிய இரண்டுமே தெலுங்கருக்கு அண்மையில் இருந்த காரணத்தால், அருவாளர் என்ற சொல் (அருவம் ஆடு>அரவம் ஆடு = அரவமாடு; ஆடும் ஆளும் ஒரே பொருள் கொண்ட சொற்கள் தான். ஒன்று தெலுங்கிலும், இன்னொன்று தமிழிலும் பரவலாகிப் போனது.) மொத்தத் தமிழரையும் குறிப்பிடும் சொல்லாய் ஆனது. இதே போல தென்கேரளத்தில் பாண்டி என்ற சொல் மொத்தத் தமிழரையும் குறிக்கும் சொல்லாக அமையும்; திகிளர் என்ற சொல் கன்னடத்தில் மொத்தத் தமிழரையும் குறிப்பதாக அமையும். பொதுவாக எல்லைப் புறத்துச் சொல், மொத்தப் பரப்பாளரையும் குறிப்பதாக அமைவது குமுகவியல், மாந்தவியலில் இயற்கையே.]

அப்பொழுது வேங்கடம் என்பது பகுதிதானா. மலை இல்லையா என்றால், இரண்டும் தான் என்றே விடை சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Monday, July 09, 2007

எற்றி நகரல்

டிங்டாங் டிங்டாங் டிங்டாங் கென்றே
திண்'னுன்னு கிணுக்குது கோயில்மணி;
எங்கள் பேரனோ எற்றி நகர்கிறான்,
எங்கள் வளவினில் வலமாக!

தாவி விழுகிறான்; மீண்டு எழுகிறான்;
தந்தனத் தந்தனச் ச(ல)ங்கையொலி;
கூவி அழைக்கிறேன் "இனிய, வா!"வென;
குடுகுடு என்றே காலசைப்பு;

கூறுவோர்களை குமிண்சி ரிப்பினால்
கொள்ளை கொள்கிறான்; என்ன,இது?
ஏறும் மடியினில், மீறி இரங்கலும்
எத்தனை முறைதான் செய்திடுவான்?

வாவிக் கொள்கிறேன்; விரல்க டிக்கிறான்;
வலிக்க வில்லையே? என்ன,இது?
நா,வி தழ்களும் நனையும் அண்ணமும்,
நக்கி உணருதல் எதனாலே?

ஊறும் எச்சிலில் ஒத்தை விரலையே
உறிஞ்சிச் சப்புவ தெதனாலே?
தேறும் பொதியெலாம் தேடி மெல்வதும்,
தெளிந்து அறிந்திட முயலுவதோ?

ஐம்பு லன்களால் உலகம் அறிவதில்,
ஆகும் ஊறு.ஒளி, சுவைக்காலம்;
செய்ம்பு லன்களில் ஓசை, நாற்றமோ,
சேரக் கூர்ந்திடும் வருங்காலம்!

அன்புடன்,
இராம.கி.

Friday, July 06, 2007

தாலி - 7

மஞ்சள் பற்றிப் பல செய்திகளை முன்னே கூறிய நான், ஒரு முகன்மையான மஞ்சட் காய்/பழம் பற்றிச் சொல்ல மறந்துபோனேன். வேறொன்றுமில்லை, மாங்காய்/மாம்பழம் பற்றித் தான் சொல்ல மறந்தேன். மாங்காய் மரத்தை மா என்ற ஓரெழுத்து ஒருமொழியால் இப்பொழுது குறிப்பிட்டாலும் அதற்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்பது ஆய்விற்குரிய கேள்வி. [அது இடுகுறிப் பெயராய் அமையமுடியாது. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே", "மொழிப்பெயர்க் காரணம் விழிப்பத் தோன்றா" என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் வெறும் இடுகுறிப் பெயர்க் காரணத்தை மறுக்கின்றன. பொதுவாக ஓரெழுத்தொரு மொழிகள் எல்லாமே (மனிதனோ, விலங்குகளாக எழுப்பிய) இயற்கை ஒலியாக இல்லையெனில், அவை ஈரெழுத்து அல்லது மூவெழுத்துச் சொற்களின் மரூஉ ஆகத் தான் ஆய்வில் தென்பட்டிருக்கின்றன.]

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

என்பது திருக்குறள் காமத்துப் பாலில் வரும் பாட்டு. அது என்ன "மாலும் என் நெஞ்சு"? என்றால், வேறு ஒன்றுமில்லை, மாலுதலுக்கு மயங்குதல் என்றே பொருள் உண்டு. ["அணங்கு என்று நினைப்பேனா? அழகிய மயில் என்று நினைப்பேனா? தங்கக்குழை போட்ட பெண் என்று சொல்வேனா? என் நெஞ்சு மயங்குகிறது" என்று சொல்லுகிறார் வள்ளுவர்.] சூரியன் மறைகிறான், அது வரை ஒளியோடு இருந்த பகல் இப்பொழுது மயங்குகிறது, வெய்யில் மஞ்சளாய் மாறி கொஞ்சம் கொஞ்சமாய் இருள் கூடுகிறது. (மயங்கலே மங்கலாகி, மஞ்சளாயிற்று என்று முன்னே சொன்னேன் அல்லவா?) ஒளியில் தொடங்கி இருளில் முடியும் நேரத்திற்கு, மாலுகின்ற நேரத்திற்கு, மாலை என்றே தமிழன் பெயரிட்டான்.

மால் என்று ஓர்ந்து பார்ந்தால் மழுங்குதல், மயக்கம், மங்கல், மஞ்சள், மையிருட்டு (= கருப்பு) என்ற பொருட்பாடுகள் அடுத்தடுத்து வந்து சேரும். மால்>மாலம் = மயக்கும் வித்தை, நடிப்பு; மால்>மான்>மான்றல் = மயங்குதல்; மாலை = பல பூக்கள் மயங்கிக் கலந்து கிடக்கும் தொடை. மாலின் நீட்சியாய் மாள் என்பதும், மாழ் என்பதும் அவற்றின் வளர்ச்சிச் சொற்களும் பொன்னைக் குறித்தும் வரும். [மல்>மால்>மாள்>மாழை = பொன், உலோகம்; மல்>மால்>மாள்>மாழ்>மாழை>மாசை = பொன், உழுந்து நிறை அளவுள்ள பொன் நாணயம்; மல்>மால்>மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்; மல்>மால்>மாள்>மாடு>மாடை = பொன், உலோகம், அரை வராகன், ஒரு பழைய நாணயம் - மகத அரசில் புழக்கத்தில் இருந்தது] இது தவிர, மால்>மாழ்குதல் = மயங்குதல்; மாழாத்தல் = மயங்குதல்; மாழை = மருட்சி, மயக்கம் என்ற பொருட்பாடுகளும் மாழ் என்பதை ஒட்டி வரும். மள்>மாள்>மாளம் என்பது கத்தூரி மஞ்சளைக் குறிக்கும்.

இன்னும் நீட்சியாய், மாழை, மாந்தி, மாகந்தம் ஆகியவை மாமரத்தைக் குறிக்கும் சொற்களாகும். மாழை, மாந்தி, மாகந்தம், மா, மாங்காய், மாம்பழம் ஆகிய தொடர்புடைய வெவ்வேறு சொற்களை ஏரணமுறைப்படி பொருத்திப் பார்க்க வேண்டுமானால் *மால் என்ற அடிச்சொல் இருந்திருக்க வேண்டும். (*மால் என்பதற்கு மாறாய் *மா(ம்) என்ற சொல்லையும் கூட இங்கு ஓர்ந்து பார்க்கலாம். தமிழில் மகம் என்றாலும் ஒளி பொருந்திய, மஞ்சளான என்ற பொருட்பாடுகள் உண்டு. மகக் குழை என்றாலே, மாவிலை என்ற பொருளும் வந்து சேரும்; தவிர, மகரம் = மங்கிய சிவப்பு நிறம், மகவன் = இந்திரன், சிவன், மகவின் கோள் = வியாழன், மக உலகம் = மேல் ஏழு உலகினுள் ஒன்று என்று ஒளிப்பொருள் கிடைக்கும் சொற்களும் இது தொடர்பாய் உண்டு. இனி, மகன்>மான் என்று ஆவது போல, மகசி>மாசி என்று ஆவது போல, மகம்>*மாம் என்றும் ஆகலாம். *மாம் என்ற சொல்முடிவில் வரும் மூக்கொலியைத் தவிர்த்து மா என்றும் பலுக்கலாம்.)

*மால்>மாள்>மாழ்>மாழை
*மால் + ந் +தி = மாந்தி
*மால் + கு > மாகு>மாகந்தம்
*மால் > மா
*மால் +ந் +காய் = மாங்காய்
*மால் +ந் +பழம் = மாம்பழம்

"அதெப்படி *மால் என்ற சொல் இந்த மரத்திற்கு இருந்திருக்க முடியும்?" என்று சொற்பிறப்பியல் வழி கேட்டால், இதே போன்ற ஏரணம் இன்னொரு மரப்பெயரிலும் இருப்பதைத் தான் இணை காட்ட வேண்டியிருக்கிறது.

*தெல்+ந்+கு = தெங்கு
*தெல்+ந்+ஐ = தென்னை
*தெங்கின் காய் = தெங்கங்காய்
*தென்னையின் காய்>தென்னையங்காய்>தென்னங்காய்
*தெல்+ந்+காய் = தெங்காய்>தேங்காய்
*தெல்+கு = தெற்கு, வடமரம் (=ஆலமரம்) மிகுந்து இருந்த திசை வடதிசை ஆனது போல், தெல் மரம் மிகுந்து இருந்த திசை தெற்கு என்று ஆனது. தமிழில் கிழக்கும் மேற்கும் மலையை ஒட்டி ஏற்பட்டது போல வடக்கும் தெற்கும் மரங்கள் மிகுந்திருந்த காரணத்தை ஒட்டியே அமைந்தன.
*தெல்+ந்+திசை = தென்திசை
*தெல்>தெள்>தெளிவு = கள்

"சரி, மாலிற்கும் மஞ்சளுக்கும் புதலியல், உயிர்வேதியல் ஆகியவற்றின்படி என்னதான் தொடர்பு?" என்பது அடுத்த கேள்வி. [இந்த புதலியல் / உயிர்வேதியல் எல்லாம் பழந்தமிழனுக்குத் தெரியாது தான். ஆனால் பெயரிடுவதற்கு வாய்ப்பாய்ப் பட்டறிவும் கூர்ந்த அவதானிப்பும் அவனுக்கு இருந்திருக்க வேண்டும்.]

தமிழில் பல்வேறு காய்/கனிகள் தரும் மரங்களைக் குறிக்கிறோம். இவற்றிற்குப் பெயரிடும் போது, தமிழ் மாந்தர்கள், மரத்தில் இருந்து காய்/கனிகள் பெயரிட்டார்களா? காய்/கனிகளில் இருந்து மரத்திற்குப் பெயரிட்டார்களா என்பது ஆய்விற்கு உரிய கருத்து. இருக்கும் தமிழ்ச் சொற்களைப் பார்த்தால், பெரும்பாலும் (முற்றிலும் அல்ல.) காய்/கனியில் இருந்தே மரத்திற்குப் பெயரிட்டிருக்க வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது. (இன்னுஞ் சொன்னால் பழைய மாந்தனுக்கு காய்க்கும் கனிக்குமே வேறு பாடு தெரிய வாய்ப்பில்லாது இருந்திருக்கலாம்). அவன் காய்/கனியைப் பார்த்தால், அவனைக் கவர்வது அதன் உள் நிறமாகத் தான் இருக்க முடியும். மாவின் தளிர் இளமஞ்சள்; ஓரோவழி சிவப்பு ஊடுறுவிய மஞ்சள்; மாவின் காய் வெளிர் மஞ்சள்; அதன் கனியோ ஆழ்ந்த மஞ்சள். மற்ற பழங்களின் உள் நிறம் ஓரோவழி மஞ்சளாய் இருந்தாலும், மா ஒன்று தான் எல்லா வகை(variety)யிலும் உட்பகுதி மஞ்சளாய் இருக்கிறது. வேறொரு நிறத்தில் மாங்கனி/காய் இன்னும் காணப் படவில்லை.

பழுப்பு அல்லது சாம்பல் கருமை நிறமுடைய, Mangifera indica என்று புதலியலில் (botony) கூறப்படும், மாமரமானது திசம்பர் மாதத்தில் பூக்கிறது. பூக்கும் போது, ஒரு பூங்கதிரில் நிரவலாய் (average) ஆயிரம் மஞ்சள் பூக்கள் இருக்குமாம். இந்தப் பூங்கதிரில் ஆண்பூக்களும் பெண்பூக்களும் கலந்து இருந்தாலும் அவை ஒன்றிற்கு ஒன்று என்ற கணக்கில் இருப்பதில்லை. பெண்பூக்கள் மிகக் குறைவாயும் ஆண்பூக்கள் அதைப்போல ஆறு மடங்கிற்கு மேலுமாய் இருக்குமாம். இது தவிர பூங்கதிரில் இருந்து பூக்கள் உதிர்வதும் நடக்கும். முடிவில் ஒவ்வொரு கட்டத்திலும் பூக்கள் உதிர்ந்து ஒரு கிளைக்கு ஒரு கனி கூட நிரவலாய் அமைவதில்லை.

மஞ்சள் என்ற கருத்து மாமரத்தின் பல உறுப்புக்களில் தொடர்ந்தே வருகிறது. பூக்களில் இருந்து நீராவி மூலம் வடித்தெடுத்தால், 0.04% அளவில் பழுப்பு மஞ்சள் நிறத் தைலம் ஒன்றை எடுக்கலாமாம். எனவே, மஞ்சள் இல்லாமல் மாம்பூ இல்லை. துளிர் இலைகளில் அசுகார்பிக் காடி என்னும் சி உயிரூட்டு (ascorbic acid - Vitamin C) அதிகமாக உள்ளது. அசுகார்பிக் காடியும் மஞ்சள் நிறமானதே!. முதிர்ந்த இலைகளில் மாங்கிவெரின் (mangiferin) என்ற குளுகொசைடு (glucoside) உள்ளது. [முதிர்ந்த இலைகளைப் பொதுவாகக் கால்நடைகளுக்குத் தொடர்ந்து கொடுப்பதில்லை. ஏனென்றால் அவை கால்நடைகளின் குடலில் நச்சுப் பொருள்களாக ஆகி விடுகின்றன. ஓரோவழி முதிர்ந்த இலைகளை உண்ட பசுக்களின் சிறுநீர் மஞ்சளாகவே போகுமாம்.] இலைகளில் இருந்து 0.1% அளவில் வடித்தெடுக்கும் எண்ணெயும் கருஞ்சிவப்பு நிறத்திலேயே இருக்கும்.

மாங்காய் ஊறுகாயில் சிட்ரிக் காடி அதிகம் உள்ளது. (இதுவும் வெளிர் மஞ்சளே.) வட இந்தியாவில் புளிக்குப் பகரியாக ஊறுகாய் மாங்காய் சில இடங்களில் பயன்பெறுவது உண்டு. அறுவடையின் போது காய்களில் இருக்கும் காடித் தன்மை, பழுத்த பின்பு பெரிதும் குறைந்து விடுகிறது. அதே போல அசுகார்பிக் காடியும் குறைந்து விடுகிறது. பழத்தில் இருக்கும் மொத்தச் சருக்கரையும் பழுத்தபின் கூடுகிறது. (அதிலும் இனிப்புச் சருக்கரை - sucrose - அதிகரித்தால் சுவை மிகவும் அதிகமாகவே கிடைக்கும்.)

மாம்பழத் தோலியில் இருக்கும் குருத்திய வண்ணங்களும் (carotenoid pigments) பழுக்கும் போது அதிகரிக்கும். மாங்காயில் சி உயிரூட்டும் (vitamin C), அது பழுக்கும் போது குருத்தியமும் (carotene) நிறைந்திருக்கின்றன. நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகளில், மாம்பழமும் குருக் கிழங்கும் (carrot) குருத்திய (carotene) வண்ணங்களைத் தேக்கி வைத்திருப்பதால், மிகுந்த அழகுத் தோற்றம் காட்டுகின்றன. இந்தக் குருத்தியங்கள் பல வேறுபாடுகளுடன் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர்ந்த நரங்கை (orange) நிறம் வரை தோற்றம் காட்டுகின்றன. [பீட்டாக் குருத்தியம் - beta carotene - 30 நுல்லியன் கீழ்ப் பங்கு (நு.கீ.ப. parts per million) இருந்தாலே மஞ்சள் நிறம் ஏற்பட்டுவிடும்; கனிந்த மாம்பழத்தில் இது உண்டு. ஒரு சில வகைகளில், பீட்டாக் குருத்தியம் 30 ppmக்கும் மேலே இருப்பதனால், நரங்கை நிறம் சற்றுத் தூக்கியே தெரியும். தவிரக் கனிந்த பழத்தில், மேலும் நிறம் கொடுக்கும் சாந்தோவில் (xanthophyll) என்ற வண்ணமும் இருப்பது உண்டு.]

பீட்டாக் குருத்தியம் என்பது ஒரு மதிப்புமிக்க, அஃகன எதிர்ப்பிப் (anti-oxidant) பொருளாகும். அதோடு இந்த பீட்டாக் குருத்தியம், கண்பாதுகாப்பிற்கும், திசுக்களை வளர்ப்பதற்கும் உதவியான ஏ உயிரூட்டு (vitamin A) உருவாக்க பயன்படும். பீட்டாக் குருத்தியங்களில் இரண்டுவிதம் உண்டு. ஒருவிதம் இசைக் குருத்தியம் (cis-carotene) என்றும், மற்றது துரன் குருத்தியம் (trans-carotene) என்றும் கூறப்படும். இசை வகை என்பது மாம்பழத்திலும், துரன்வகை என்பது குருக்கிழங்கிலும் அதிகம் உண்டு. தவிரக் குருத்தியமானது, மாம்பழத்தில் சிறுசிறு எண்ணெய்ப் பொட்டுக்களாயும் (oil specks), குருக்கிழங்கில் சிறுசிறு படிமத் துகள்களாயும் (small crystals) இருப்பதால், அவை உடலில் சேர்மானம் ஆவது கூட மாறுபடும். பொதுவாய், சாப்பிடும் போது, குருக்கிழங்கிற் கிடைக்கும் பீட்டாக் குருத்தியத்தைக் காட்டிலும், மாம்பழத்தில் கிடைப்பது எளிதில் நம் உடம்பில் உட்செரிக்குமாம்.

மாம்பழ மஞ்சளின் கதை இதோடு முடியவில்லை. (பட்டுச் சேலை நிறங்களில் மாம்பழ மஞ்சள் என்றே ஒரு வண்ணத்தைக் காஞ்சிபுரத்தில் அடையாளம் காட்டுவார்கள்.) மாம்பழத்தின் கனிவு கூடிவரக் கூடிவர, மாம்பழத் தோலில் கருப்புத் திட்டுக்களும் கூடிவரும். கருமை கூடியிருந்தாலே மிகுந்து கனிந்துவிட்டது என்று பொருள் (மீண்டும் மாலை என்ற சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள், மஞ்சள் கூடிச் சிறிது சிறிதாக இரவு கனிய, கருப்பு கூடும். மஞ்சள் நிறப் பட்டுச் சேலைக்கு கருப்பு நிற விளிம்பும் அழகு கூட்டித் தான் காட்டும்.)

கொஞ்சம் கூட ஐயப்பாடே கிடையாது, *மால்/*மாம் என்ற சொற்கள் மஞ்சள் நிறம் காரணமாகவே இந்த மரத்திற்குப் பெயராகி இருக்கின்றன. மாமை என்பது மஞ்சள்நிறம் அல்லது வெளிர்நிறம் (pale) கூடிய கருப்பைக் குறிக்கப் பயன்பட்ட சொல். அவன் சிகப்பா, கருப்பா என்றால் மாநிறம் என்று சொல்லுகிறோமே? அதன் பொருள் ஒளி கூடிய, களையான, கொஞ்சம் வெளிரிய முகம் என்று பொருள். பெண்ணாயிருந்தால் மஞ்சள் பூசி ஒளி கூட்டிக் கொள்கிறவள் என்று பொருள்.

மாமை என்ற சொல் வடபுலப் பலுக்கலில் ஆமையாகும். ஆம் என்பது மாமின் இந்திப் பெயர்; மற்ற வடபால் மொழிகளிலும் அதே பெயர்தான், அல்லது அதை ஒட்டிய பெயர். சங்கதத்தில் ரகரம் உள்நுழைத்து ஆம்ர என்று வரும். [ஆமை என்ற உயிரி, அதன் ஓடு போன்றவற்றை முன்குறித்த ஆழ்வார் பாடலில் நான் ஏன் ஏற்காது போனேன் என்று புரிந்திருபீர்கள்.]

பெரியாழ்வார் மாமை என்று சொல்லாமல் ஏன் ஆமை என்று தாலிக்கு முன்னால் சொன்னார் என்றால் பாட்டைப் பாருங்கள், மாமை என்று போட்டால், யாப்பு அந்த இடத்தில் சற்று இடிக்கும். ஆமை என்று சொன்னால் பாந்தமாய்ப் பொருந்திக் கொள்ளும். தவிர அவர் பட்டர்பிரான்; அவர் பேச்சு வழக்கில் அந்தக் காலத்திலும் வடசொற் கலந்து தமிழ் இயற்றுவது இயற்கை தான்.

அக்குவடம் உடுத்(து) ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனன்
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ!

"சங்குமணி மாலையும், மங்கலத் தாலியும் பூண்ட அறிதுயிலான், மணிவண்ணன், வாசுதேவன், தளர்நடை போட மாட்டானோ?" என்று சொல்லுகிறார் ஆழ்வார். வளர்ந்த ஆண், அதுவும் மனைவி அருகிருக்கத் தாலி போட்ட ஆண், தமிழர் மரபில் இருந்திருக்க வேண்டும்.!!

"தாலி ஒரு பெண்ணடிமைச் சின்னம்" என்பது ஆய்வில்லாத அவக்கரப் பேச்சு.

அன்புடன்,
இராம.கி.

(பி.கு. மாமரம் பற்றிய பல கட்டுரைச் செய்திகளை பி.எஸ்.மணி, என்.கமலா நாகராஜன் எழுதிய, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட 1994 ல் வெளியிட்ட "வளம் தரும் மரங்கள் - 5" என்ற பொத்தகத்தில் அறிந்து கொள்ளலாம். வளம் தரும் மரங்கள் என்ற ஐந்து பொத்தகத் தொகுதியுமே வாங்கிப் பேணவேண்டிய தொகுதி.)

Thursday, July 05, 2007

தாலி - 6

சென்ற இடுகையில், 6 மாதத்தில் இருந்து 8 மாதம் ஆகிய குழந்தை, தன் மழலைக்கு நடுவில், வாய்நீர் சிந்தி, ஐம்படைத்தாலியை நனைத்த காட்சியைக் கண்டோம். நம்மூர்த் தாய்மார்களின் அடுத்த எதிர்பார்ப்பு, "8 மாதப் பிள்ளை 8 நடை போடாதோ?" என்பதே. "தன் மகன் கண்ணனும் தளர்நடை நடக்க வேண்டும்" என்று தாய் யசோதை ஏங்குவதாக நாலாயிரப் பனுவலின் முதற் பத்தில் எட்டாம் பதிகத்தின் முதற்பாடலில் பெரியாழ்வார் கூறுகிறார். (பெரிய திருமொழி முழுதுமே அரிய சுவை கொண்டது; மாற்றுக் கருத்து கொண்டார் கூடப் பட்டர்பிரான் தமிழுக்கு இறங்கி வந்துதான் ஆகவேண்டும். :-))

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல
நக்கசெந் துவர்வாய்த் திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக
அக்குவடம் உடுத்(து) ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனன்
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ!

உண்மையான யசோதைக்கும், யசோதையைப் போல் பாவனை செய்கின்ற ஆழ்வாருக்கும் இடையே உள்ள ஒரு வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான யசோதைக்கோ, "பின்னால் தன் மகன் என்னென்ன செய்வான், எப்படி ஆவான்" என்றெல்லாம் தெரியாது; ஆனால் கதைக்கு அப்புறம் வரும் ஆழ்வாருக்கோ எல்லாமே தெரியும்; தவிர "உலகத்துக்கே அருளும் பெருமாள், இங்கே தாரத்தில் இருந்து (தாரம் = உயர்ந்த நிலை. தாரப் பண் = இற்றைக்கால நிஷாதம்), அவலுக்கு (=கீழுக்கு, புவிக்கு) இறங்கி அவல்தாரமாய் (அவல் தாரம் > அவதாரம்), கண்ணனாய் வந்துள்ளார்" என்ற தொன்மத்தையும் தெரிந்தவர் பெரியாழ்வார். எனவே பெரியாழ்வார் பாடும் தளர்நடைப் பாட்டு, முன்னும் பின்னுமாய், வளர்ந்த நிலையும், குழந்தை நிலையுமாய்ப் பருவங்களையும், நிகழ்ச்சிகளையும், கலந்து கலந்தே தரும்.

இது போன்ற கலவைப் பாட்டுக்களை உரையாசிரியர்கள் கூட சற்று முன்பின்னாக மாறிப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. அப்படி உரை மாறிய பாட்டுத் தான் மேலே உள்ளது. மீண்டும் மீண்டும் மீள்வாசிப்பு செய்தால் ஒழியச் சரியான பொருள் நமக்குக் கிடைக்காது. (நான் சொல்லும் பொருளை, ஆழ்ந்த விண்ணவ நெறியில் தோய்ந்தவர்கள், "உனக்கென்ன தெரியும்" என்று தள்ளி ஒதுக்கலாம். பொதுவாகப் பெரியவாச்சான் பிள்ளைக்கு மாறி என்ன பொருள் சொன்னாலும் 'ஆழ்ந்து போன விண்ணவர்கள்' ஏற்க மாட்டார்கள்; வலுதியான - valid - சில காரணங்கள் பற்றியே நான் அவரிலிருந்து இங்கு மாறுபடுகிறேன்.)

மலங்கும் நேரமாகிய மாலை (தமிழர் வழக்கில் 18 மணியில் இருந்து 22 மணிவரை உள்ள நேரம் மாலை எனப்படும். 14 மணியில் இருந்து 18 மணி நேரம் என்பது எற்பாடு ஆகும்.) அப்பொழுது தான் தொடங்கி இருக்கிறது. செக்கச் சிவந்த வானம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கருத்துக் கொண்டு வருகிறது. கிடக்கை மட்டமான ஒரு மரத்து நுனிக்கொம்பு வழியே நிலவைப் பார்த்தால், அது சிறுபிறையாய் முளைத்துத் தோன்றுகிறது; அதே போன்ற காட்சியை ஆழ்வார் கண்ணனை வைத்து எடுத்துரைக்கிறார்.

"தாயைப் பார்த்து நகைக்கிறான் பிள்ளை; சிவந்த இதழ் திறந்து (செக்கர் வானத்திற்கு ஒப்பு), அதன் வாய் முரணைக்கு (நுனிக் கொம்புக்கு ஒப்பு) மேலே எழும் பல்வரிசை (சிறுபிறைக்கு ஒப்பு) முளைவிட்டு எழுந்து, ஒளி வீசுகிறது."

இதற்கு அப்புறம் "சங்குமணி மாலை (=அக்குவடம்) போட்ட கண்ணன் தளர் நடை போடமாட்டானோ?" என்று சொல்லிவிட்டுப் போகாமல், சட்டென்று பெருமாளின் பாற்கடல் தோற்றத்தை நினைவு கொள்ளுகிறார். முன்னால் சொன்னேனே, அதுபோல ஒரு பருவப் பிறழ்ச்சியில் ஆழ்வார் ஆழ்ந்து போகிறார். கண்ணனை எண்ணிப் பார்த்த கையோடு தொடர்ச்சியாய், "சங்குமணி மாலை போட்டு, ஆமைத் தாலிபூண்ட, முடிவற்ற அறிதுயில் கொள்ளும் தகை சிறந்த மணிவண்ணனை, வாசுதேவனை" நினைவு கூர்கிறார். இரண்டு காட்சிகளையும் பிணைத்து, "தாயார் அமர்ந்திருக்க அருகே கிடந்திருப்பவன் தானே கண்ணனாய் அவதரித்தான்" என்ற புரிதலில், பெருமாளையே தளர்நடை போட்டு வரும்படி பாட்டில் பெரியாழ்வார் கூப்பிட்டு விடுகிறார்.

இதைப் படித்த நமக்குக் கேள்வி சட்டென்று வருகிறது. நாலு பதிகத்தின் முன்னால் தானே (பெரிய திருமொழி 1.4.5)

எழிலார் திருமார்வுக்கு ஏற்கும் இவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுவ னாய்நின்றான் தாலேலோ!
தூமணி வண்ணனே தாலேலோ!!

என்று சொல்லி ஐம்படைத் தாலி போட்ட கண்ணனுக்கு, அதுவும் கொடைவள்ளல் குபேரன் (மேலே வரும் வயிச் சிரவணன்) தொழுது நிற்கத் தாலேலோ போட்டார்; இப்பொழுது எப்படி ஆழ்வார் வாக்கில் ஐம்படைத் தாலி திடீரென்று ஆமைத் தாலியாயிற்று?

"செக்கரிடை நுனிக்கொம்பில்...." என்ற பாட்டில் "அக்குவடம் உடுத்(து)ஐம்படையே பூண்ட அனந்த சயனன்" என்று சொன்னால் யாப்பு ஒன்றும் குறைபடப் போவதில்லையே? இருந்தாலும் ஆமைத்தாலி என்ற பயன்பாட்டை ஆழ்வார் ஏன் சொல்லுகிறார்? அது என்ன ஆமைத் தாலி? இங்கே ஏன் அது பேசப் படுகிறது? ஆமைத்தாலி என்பது ஐம்படைக்கு அப்புறம் ஆண்மகன் அணிகின்ற ஒரு தாலியா?

இந்தக் கேள்விச் சரங்களுக்கு இடையில், "தாலி பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம், இது காலம் காலமாக பின்பற்றப் படுவதாக சரடு விடுகிறார்கள். அதற்காகத்தான் இந்த பதிவு" என்ற மகாவின் முன்னிகையையும், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கேள்வித் தொகுப்பையும் நினைவு கொள்வதைத் தவிர்க்க இயலாது. முற்போக்குச் சிந்தனையாரின் படி தாலி என்பது ஆண் பெண்ணுக்கு அணிவிக்கும் பெண்ணடிமைச் சின்னம் என்ற பரப்புரைக்கு மாறாய் இப்படி ஒரு கருத்து, அதுவும் ஆண்டாளின் தந்தையார் வெளியிடுவது நம்மைத் துணுக்குற வைக்கிறது.

"அய்யய்யோ? ஆண்மகன் தாலி போட்டிருந்தானா? அதுவும் தன் மனையாள் அருகிருக்க, இவன் தாலி போட்டிருந்தானா? அது என்ன முரண்? தாலியை எப்படி ஆண்மகனுக்கு அணிவிக்கிறார்கள்? என்னங்கடா இது கூத்து?"

ஆமை என்ற சொல்லைப் பற்றி ஒரு நீண்ட ஆய்வே செய்யாமல், "செக்கரிடை நுனிக்கொம்பில்...." என்ற பாடலின் மூன்றாவது வரிக்கருத்தைச் சட்டென்று பொருள் உணர முடியாது.

நான் சொல்லவரும் பொருள் உரையாசிரியர் கொடுத்த பொருளுக்கு மாறுபட்டது. இதைப் பலரும் ஏற்காது போகலாம். ஆனாலும் ஆழ்ந்து ஓர்ந்து பார்த்த பிறகு தான் சொல்லுகிறேன். மேலே கொடுத்துள்ள பெரிய திருமொழிக்கு உரை செய்யும் போது, உரையாசிரியருக்கும், பாடியவருக்கும் இடையே 600/700 ஆண்டுகள் ஆகிவிட்டன. பொதுவாய் உரையாசிரியர்கள் என்பவர்கள் ஆய்வாளர்கள் அல்ல. அவர்கள் காலத்தில், தங்களுக்குத் தெரிந்த செய்திகள், மரபுகள், பழக்க வழக்கங்களை ஒட்டி, அன்றிருந்த தொன்மங்களையும் கூடக் கொண்டுவந்து, உரை செய்திருக்கிறார்கள். அதனால், மூலத்திற்கும் உரைக்கும் இடையே கருத்துமுரண் ஏற்படலாம்; அது இயற்கை தான்.

காட்டாகத் திருக்குறளில் வரும் சமணக் கருத்தை பரிமேலகர் போன்ற விண்ணவ உரையாசிரியர் மாற்றிப் புரிந்து உரை செய்ய முடியும்; செய்திருக்கிறார். பரிமேலகர் காலத்தில் சமணம் பெரிதும் தமிழ்நாட்டில் வழக்கிழந்து போனது. மிகுந்த முயற்சியில்லாமல், சமணச் சொல்லாட்சிகளுக்கும், சொற்றொடர்களுக்கும் உரை சொல்லுவது கடினம். உரையாசிரியர் தம்மையும் அறியாமல் சிவநெறி, விண்ணவநெறி முறையில் உரை செய்ய முயலுவார். அதே போல ஆமைத் தாலி என்ற சொல்லின் பொருள் பெரியவாச்சான் பிள்ளையின் காலத்தில் பெரிதும் அறியப்படாமலே போயிருக்கலாம்.

எனவே, பெரியவாச்சான் பிள்ளை என்ற விண்ணவ நெறிக்காரர், ஆண் தாலி போட்டுக் கொள்ளும் பழக்கம் முற்றிலும் மாறிப் போன நிலையில், "இது ஏதோ இறைவன் பாற்கடலில் போட்டுக் கொண்ட நிலை" என்று உன்னிப் பார்த்து, ஆமை என்ற கடல்உயிரியோடு தொடர்புறுத்தி, ஆமையோட்டுத் தாலி என்ற தவறான புரிதலில் உரைசெய்யலாம். அது இன்றுவரை தொடர்ந்தும் வரலாம். இந்த உரைகளில் "ஆமையோடு" என்ற பொருட்பாடு "ஓடு" இல்லாமலே எப்படி வந்தது என்று எனக்குப் புரியவில்லை. தவிர ஆமையோட்டைப் பெருமாள் பாற்கடலில் அறிதுயிலின் போது ஏன் அணிய வேண்டும்? ஆமையின் சிறப்பு இங்கு என்ன? [கூர்ம அவதாரம் என்று சொல்வதெல்லாம் பொருந்தச் சொல்வதாகவே நான் கொள்ளுகிறேன். அதற்கான தரவுகள் பாடலில் இல்லை.]

பாட்டை ஆழ்ந்து படித்துப் பொருள் கொண்டால், ஆமை என்ற சொல்லிற்கு வேறு ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும் என்பது புலப்படும். அதைப் புரிந்து கொள்ளுமுன், மஞ்சள் நிறம் பற்றி நாம் இன்னொரு செய்தியைப் பார்க்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, July 03, 2007

தாலி - 5

தாலி என்ற சொல்லிற்குப் பலரும் "மணமகளுக்குத் திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலன்" என்றே விதப்பாகப் புரிந்து கொள்கிறார். ஆனால் அது மட்டுமே பொருட்பாடல்ல; வேறு சிலவும் இச்சொல்லிற்கு உண்டு. சரியாகச் சொன்னால், "வளமை (prosperity), பிறக்கம் (fertility)" ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், வெவ்வேறு பேர்கள், வெவ்வேறு ஆட்களுக்கு அணிவிக்கும் ஒரு கலனாகவே தாலி எனும் பொதுச்சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும். தாலி எனும் பொதுச்சொல்லோடு வெவ்வேறு சொற்களை முன்சேர்த்து, 'மங்கலத் தாலி, ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி' என்றெலாம் பலவிதக் கூட்டுச்சொற்களை பழந்தமிழர் உண்டாக்கி இருக்கிறார்.

[இங்கே பேச்சுவழக்கில் பொதுமை/ விதுமைச் சொற்கள், ஓர் எழுகைச் சுற்றாக (helical) மாறிமாறி, எழும்விதம் பற்றிச் சொல்லவேண்டும். நெய்/எண்ணெய் பற்றிச் சொன்னபோது, முன்னே ஒருமுறை இதை விளக்கியிருக்கிறேன். விலங்குக்கொழுப்பின் வழியாக நெய்ப்பொருளை அறிந்திருந்த பழந்தமிழன், எள்ளைக் கடைந்தபோது வெளிப்பட்ட பிசிபிசுப்பு நீர்மமும், நெய்யைப் போலவே தோற்றமளிக்க, அதை எள்நெய்>எண்ணெய் என்று விதப்பாகச் சொல்ல முற்பட்டான். இவ்வழக்கில் நெய் என்பது முதலில் விதப்பாய் இருந்து, பின்னால் விலங்கு, நிலத்திணை ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்படும் பொருளுக்கு பொதுமைச் சொல்லாய் மாறிநிற்கும். அப்புறம் அந்தப் பொதுமையில் இருந்து, எள்நெய் என்ற சொல்லாட்சியில் இன்னொரு விதப்புச் சொல் உருவாகும்.

அடுத்த சுற்றில், எள்நெய்>எண்ணெய் என்னும் விதப்புச் சொல்லே இன்னொரு பொதுமைச் சொல்லாகி இன்னும் புதிய விதப்புச் சொற்களை உருவாக்கும். அதாவது, எள்ளில் இருந்து மட்டுமல்லாமல், கடலை, தேங்காய் போன்ற பொருட்களிலிருந்தும் எள்நெய்யைப் போன்றதொரு நீர்மத்தைப் பெறமுடியும் என்றவுடன் எண்ணெய் பொதுமையாகி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்ற விதப்புச் சொற்கள் உருவாகி விடுகின்றன. இவ் வளர்ச்சியின் ஊற்றுமூலமான (origin) எள்நெய், நல்ல எண்ணெய் ஆகிவிடுகிறது.

இது போன்று, பேச்சு வழக்கில், ஓர் இயல்மொழியில் ஏற்படும் சொல்லாக்க முறைகளின் அடிப்படையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கருத்தைக் குறிக்கும் ஓரகைச் (unique) சொற்கள் விதப்பாகத் தான் ஓர் இயல்மொழியில் முதலில் எழுகின்றன. பின்னால் இது போன்ற இன்னொரு விதப்பும் அதே கருத்தைச் சுட்டிக்காட்டும் போது, முன்னால் குறித்த விதப்புச் சொல் பேச்சு வழக்கில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொதுமைச் சொல்லாகி விடுகிறது. அடுத்த சுற்றில், மேலும் ஒரு பெயரடையை அதற்கு முன்னால் கொணர்ந்து நிறுத்தி இன்னும் பல விதப்புச் சொற்கள் புடைத்து எழுகின்றன.

தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்; பின் செல்வம் படைத்தோரால் அம் மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான் தாலியின் அடையாளம் என்நாம் பொருள்கொள்ளக் கூடாது. மஞ்சள்தான் அதன் அடையாளம்.) அடுத்த வளர்ச்சியில் இன்னும் பல விதப்புப் பயன்பாடுகள் பெருகிய பின்னால், 'மணமகளுக்கு திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலனை' விதப்பாகக்' குறித்த 'தாலி' பொதுமைச் சொல்லாகி, நல்லெண்ணெய் போல், மங்கலத்தாலி எனும் விதப்புவழக்கை உருவாக்கியிருக்க வேண்டும்.

மற்ற விதப்புப் பயன்பாடுகளாய், 'ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலை), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி' போன்றவையும் புழக்கத்திற்கு வந்துள்ளன. அவற்றை முடிந்தவரையில் விளக்கமாய் இனிப் பார்ப்போம்.

முதலில் ஐம்படைத் தாலி. இது பெற்றோர் சிறுவருக்கு அணிவிக்கும் ஒருவகைத் தாலியைக் குறிக்கும். இந்தக் குறிப்பை இலக்கியங்கள் மூலமாகவும், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நடைமுறையிலும் கூட நாம் அறியலாம். சங்கு, சக்கரம், வாள், வில், தண்டு (=கட்டை>கத்தை>கதை; இதைச் செண்டு என்று கூட இலக்கியங்கள் குறிக்கும். விழாக்களில் பூச்செண்டு கொடுப்பார்களே! அதன் வடிவத்தை ஓர்ந்து பாருங்கள்; கதை போல இருக்கும்), என ஐந்து விதமான படைக் கருவிகளின் சிறு போல்மங்களைச் செய்து அவற்றை ஒரு மஞ்சள் கயிற்றில் தொடுத்து ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவருக்குப் பெற்றோர் அணிவிக்கும் பயன்பாடு புறநானூறு 77ம் பாட்டின் 7 ஆம் வரியிலும், அகநானூறு 54 ஆம் பாட்டின் 18 ஆம் வரியிலும், திணைமாலை நூற்றியைம்பதின் 66 ஆம் பாட்டில் 3வது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138 ஆம் வரியிலும், கலிங்கத்துப் பரணியின் 240 ஆம் பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது.

புறநானூற்றின் 77ம் பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் செருவில் தேரூர்ந்து வந்துநின்ற காட்சியையும், பின்னர் பகைவரோடு பொருதி அவரைக் கொன்றவிடத்து அமைந்த தோற்றத்தையும் பற்றி இடைக்குன்றூர் கிழார் பாடுவதாகும். நெடுஞ்செழியனின் தந்தையும் (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்) தாயும் (பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு), நெடுஞ்செழியனின் இளம் அகவையில் தவறிப் போக, இவன் தன் பகைவரோடு பதின்ம அகவையில் தலையாலங்கானத்தில் போரிட நேருகிறது. பையனாயும் அல்லாது, பெரியவனாயும் அல்லாது, ஒரு கலவையாய்க் காட்சியளிக்கும் இந்த நெடுஞ்செழியனின் தோற்றத்தைப் புலவர் இங்கே எடுத்துரைக்கிறார்.

"கிண்கிணி களைந்து கழலை இப்பொழுது தான் அணிந்திருக்கிறான்; சென்னியில் வேம்பின் தளிரும், உழிஞைக் கொடியும் இப்பொழுதுதான் குடுமி ஒழித்த முடியில் சூடிக் கொண்டிருக்கிறான்; வளையல் தவிர்த்த கைகளில் வில்லைப் பிடித்திருக்கிறான்; இப்பொழுது தேரின் மேல் நிற்கிறான்." என்று சொல்லிய புலவர் மேலும் சொல்லுகிறார்.

"................................................. தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன்"

"மாலை அணிந்தருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது இருக்கிறானே! பால் இல்லாத உணவு இன்றுதான் உண்டிருக்கிறான்." என்று புலவர் சொல்லும் போது பதின்ம வயது வரை ஒரு சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப் படுவதும் கூட இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது. இனி, அகநானூற்றில் வினைமுடித்து மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகற்குச் சொல்லுவதாய் வரும் பாட்டைப் பார்ப்போம்,

"முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால்" என
விலங்க அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே

இந்த வரிகள், மகனுக்காகப் பொய்சொல்லி நிலாவை அழைக்கும் தாய் நிலையைத் தேர்ப்பாகனுக்குத் தந்தை உரைப்பதாய்க் காட்சி காட்டும். "முகிழ்த்து ஒளிகாட்டும் மூன்றாம் பிறை நிலவே! பொன்னால் ஆன ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என்மகனோடு விளையாட நீயும் வந்தால் உனக்குப் பால்தருகிறேன் என்று புதல்வனுக்காக பொய்யுரைக்கிறாள் என் காதலி" - என்று சொல்லுகிறது இந்த வரிகள்.

ஆக பதின்மப் பருவத்திலும் இளைஞன் அணிந்து கொள்ளும் ஐம்படைத் தாலி, பால்குடிப் பருவத்திலேயே அவனுக்கு அணிவிக்கப் பட்டுவிடுகிறது. இனி திணைமாலை நூற்றைம்பதைப் பார்ப்போம். (இது சங்கம் மருவிய காலத்தில் கி.பி. 300-400 களில் எழுந்த நூல்)

வல்வருங் காணாய் வயங்கி முருக்கெலாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேற் பொன்தாலி பாஅய்த்
திகழக்கான்று இட்டன தேர்ந்து.

"செல்வச் சிறுவர்கள் அணியும் பொன்தாலியில் பொற்கொல்லர்கள் பவளம் இட்டுப் பொலிவித்தது போல, ஒளிவீசும் முருக்க மரத்தில் மலர்கள் பூத்திருக்கின்றன; பார்த்துக் கொள்ளம்மா! வேனிற் காலம் வந்தாயிற்று; இனிமேலும் நம் தலைவன் வேறிடத்தில் தங்கான்; உன்னைத் தேடி வந்துவிடுவான்" என்று தோழி தலைவிக்குச் சொல்லுகிறாளாம். இந்தப் பாட்டின் மூலம் செல்வச் சிறார்களின் தாலியில் சிவந்த பவளத்தைப் பொதிப்பதையும் நாம் அறிந்து கொள்ளுகிறோம். (மஞ்சளில் குங்குமப் பொட்டிடுவது இயற்கையில் நடக்கக் கூடியது தான். இன்றும் சில பெண்கள் கோயிலில் குங்குமத்தை எடுத்துத் தாலியில் இட்டுக் கொள்ளுகிறார்கள்.)

முடிவில் மணிமேகலையில் மலர்வனம் புக்க காதையில் 137-138 ஆம் வரிகள் முருகன் கோயில் திருவிழாவின் கால்கோள் காணப் புகும் தாய்மார்கள் தங்கள் செல்வச் சிறார்களை யானையின் முதுகில் வைத்துக் கொண்டு வரும் காட்சியைச் சொல்லுகின்றன. பொதுவாய் ஐந்து, ஆறு மாதத்தில் இருந்தே, பிள்ளைகளுக்கு வாய்நீர் கொட்டும். [ஏதொன்றையும் சுவையுணர்வால் அறியும் பருவம் அது.] காட்சியில் சொல்லப் படும் குழந்தைகள் பிறந்து எட்டுமாதம் ஆகியிருக்க வேண்டும். பேசத் தொடங்கும் நிலை. "எட்டு மாதத்தில் குளறிக் குளறி மெய்பெறாத மழலையிலும் வாய்நீர் கொட்டிக் கொள்வதால், அப்படிக் கொட்டும் வாய்நீர், பிள்ளைகள் போட்டிருந்த ஐம்படைத் தாலியை நனைக்கிறதாம்." என்ற பொருளில் இந்த வரிகள் அமைகின்றன.

"செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப"

ஆக, எட்டு மாதக் குழந்தை கூட, மணிமேகலைக் காலத்தில் (கி.பி.200) ஐம்படைத் தாலி போட்டிருக்கிறது. இதே போலப் பெரியாழ்வார் (கி.பி. 690-775), முதல்பத்து, திருத்தாலாட்டு 5 ம் பாட்டில் "எழிலார் திருமார்புக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு" என்று சொல்லித் தாலப் பருவத்திலேயே ஐம்படை அணிவதைச் சொல்லுவார். இன்னும் நிறைந்த முறையில் பெரிய திருமொழி 1:6:10 -இல், மங்கல ஐம்படை என்றே கூடச் சொல்லி மஞ்சள் நிறத்தோடு பெரியாழ்வார் ஐம்படைத் தாலியைத் தொடர்புறுத்திச் சொல்லுவார்.

ஆக, அகநானூற்றின் காலத்தை வைத்துப் பார்த்தால், தாலி என்ற சொல்லின் பொதுமைப் பயன்பாடு, 2400 ஆண்டுகளுக்கும் முந்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கி.மு.400 ல் இருந்து கி.பி.800 வரைக்கும் கிட்டத் தட்ட 1200 ஆண்டுகள் ஐம்படைத் தாலிப் பழக்கம் இருந்திருக்கிறது. அதற்கு அப்புறமும் இலக்கியச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியும். (அப்புறம் எப்படி பத்தாம் நூற்றாண்டில் தான் தாலி எழுந்தது என்று கூற்றுச் சரியாகும்?) இந்தக் ஐம்படைத்தாலிப் பழக்கம் 50 ஆண்டுகளுக்கு முன்வரைக்கும் கூட, சிவகங்கை மாவட்டத்தில் நகரத்தார் குமுகத்தில் ஆண் சிறாருக்கு எனத் தொடர்ந்து வந்திருக்கிறது. (இந்தக் காலத்தில் ஐம்படைத் தாலி என்பது தென்மாவட்டங்களில் வெறும் பொற்சங்கிலியாய் மாறிப் போனதும் உண்டு.)

பொதுவாய்த் தற்காப்புக் கலைகள் பயின்று வெளிவரும் வரை, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறமை ஒரு இளைஞனுக்கு வரும் வரை, இந்த ஐம்படைத் தாலி என்பது அந்தக் காலத்தில் அணிவிக்கப் பெறும். இனிக் கலைகள் பயின்று வெளிவரும் நாள் என்பது எப்போது? அந்த நாளின் எச்சங்களும், சடங்குகளும் இன்று தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மீந்து கிடக்கின்றன.

இதை அறிந்து கொள்ள மீண்டும் சிவகங்கை மாவட்டத்திற்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஒவ்வோர் ஆண்டின் கார்காலத்தில் (புரட்டாசி மாதத்தில்) ஒன்பான் இரவுகளுக்கு (நவராத்திரி) அப்புறம் வரும் பத்தாம் நாள் நிகழ்ச்சியில் ஐம்படைத் தாலி அணிந்த ஒவ்வொரு இளைஞரும் கிலுக்கி எடுத்து வாழையில் குத்தும் சடங்கு சிவகங்கை மாவட்டத்தில் உண்டு. (வடமொழியில் இந்த பத்தாம் நாளை விசயதசமி என்று சொல்லுவார்கள். சிவகங்கைப் பக்கமோ இதை மகார் நோன்பு என்பார்கள். காரைக்குடிக் கவிஞர் முடியரசன் இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காரைக்குடியில் மகார்நோன்புப் பொட்டல் என்று ஊர்நடுவில் ஒரு பொட்டல் கூட இருக்கிறது. மக்கார்>மகார் என்ற சொல்லுக்கு இளையவர் என்ற பொருள் உண்டு. இளையவரில் இளம்பெண்களுக்கான சில சடங்குகள் பற்றி இங்கு நான் சொல்லப் போவதில்லை. கன்னி ஞாயிற்றில் கன்னியர் இறைவியை வழிபடுவது ஒருவகை. இங்கே நான் சொல்லப் புகுவது ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் பொதுவான இளையர் பற்றியது.)

ஒன்பான் இரவுகள் புரட்டாசி மாதம் அமையுவா (அமாவாசை) யில் தொடங்கி 10 ஆம் நாளில் ஊரில் உள்ள ஊருவலத் திருமேனிகள் (உர்ச்சவ விக்ரகங்கள்) அம்பு போடும் திருவிழா நடைபெறும். ஒன்பான் இரவின் முதல்நாளைக் கிளுக்கியெடுப்பு என்று சொல்லுவார்கள். கிளுக்கி என்பது குஞ்சம் வைத்த ஈட்டி/அம்பு போலத் தோற்றம் காட்டும் ஒரு படையாகும். இது செல்வநிலைக்குத் தக்க மரக்கிளுக்கியாக, பட்டுக் குஞ்சம் கட்டிய மரக்கிளுக்கியாக, இரும்புக் கிளுக்கியாக, வெள்ளிக் கிளுக்கியாக, ஏன் தங்கக் கிளுக்கியாகக் கூடவும் இருக்கலாம். மகார் நோன்பு விழா தொடங்கும் கிளுக்கியெடுப்பு நாளில் குடும்பத்தில் உள்ள இளையோர் (குறிப்பாக ஆண்பிள்ளைகள்) கையில் கிளுக்கியை எடுத்துக் கொண்டு சென்று கோயிலில் வழிபட்டுத் திரும்புவர்.

இந்தக் கிளுக்கி பள்ளிசெல்லும் சிறார்கள் ஒன்பானிரவுக் காலத்தில் ஒலித்துக் காசு திரட்டும் கிலுகிலுப்பையாகவும் பயன்படும். கிலுகிலுப்பை என்பது கிலிகெ (க), கிலுக(தெ); சிலிகெ (பட) என்று பல்வேறு மொழிகளில் கூறப்படும். கிளுக்கியின் அடிப்பொருள் குத்துதலே.

(குல்>குள்>கிள்; கிள்ளுதல் = குத்துதல்;
கிள்>கிள்ளி>கிளி = கூரிய அலகினால் கொத்தும் பறவை வகை; இதை மலையாளத்தில் கிள்ளு என்றும், கன்னடம், தெலுங்கில் கில்லு என்றும், தெலுங்கில் சிலுக்க என்றும் சொல்லுவார்கள்.
கில்<கீல்; கீலுதல்>கீளுதல் = கிழித்தல் (சூடா)
கெல்லுதல் = தோண்டுதல்
குற்றி = தண்டு;
குந்தம் = வேல்.
என்ற சொற்களை அறிந்தால் கிளுக்கியின் சொற்பிறப்பு புலப்படும்.)

கிளுக்கியை வைத்து மகார்நோன்பு - 10 ஆம் நாளில் வாழை மரத்தில் இளையோர் குத்துவார்கள். இங்கே வாழை மரம் என்பது விலங்குகளுக்குப் பகரியாய்ப் பயன்படுகிறது. (ஒரு காலத்தில் வேட்டைக்குப் போய் வெற்றிபெற்று விலங்கைக் கொன்று வந்ததை இங்கே நடாத்திக் காட்டுகிறார்கள். இவர்கள் வழிபடும் திருமேனிகளும் குதிரையில் எழுந்தருளி அம்பு போட்டு வெற்றியை விளம்பிக் காட்டுவதை ஓர்ந்து பார்க்கலாம்.)

காரின் கடைசிப் பாதி புரட்டாசி மாதம். இதில் வரும் ஒன்பது நாட்களைப் போலவே பின்பனியிலும் ஒன்பது நாட்கள் உண்டு. இந்தப் பின்பனிக் கால ஒன்பது நாட்களின் முடிவில் அந்தக் காலத்தில் பூந்தொடை விழா நடைபெறும். படைக்கலம் பயின்ற மழவ வீரர் அரங்கேறும் விழா என்பதே பூந்தொடை விழா எனப்படுகிறது. அகநானூறு 187-ல் படைக்கலப் பயிற்சி விழாவான பூந்தொடை விழா பேசப்படும். தொடை என்பது இங்கே அம்பு தொடுத்தலைக் குறிக்கும். போர் கருதித் தொடுக்காமல் பயிற்சி கருதித் தொடுப்பதனால் இது பூந்தொடை விழா ஆயிற்று. இளைஞர்களின் திறமை ஊரார் அறியச் பூந்தொடை விழா என்ற ஒன்றில் தான் சோதனை செய்யப்படும். அதைக் கொஞ்சம் விளக்கமாய்ப் பார்ப்போம்.

அந்தக் காலத்தில் ஆசான்கள் வழி நடந்த திண்ணைப் பள்ளிக் கூடங்களில் எண்ணும் எழுத்தோடு, களரிப் பயிற்று, வருமக்கலை, வில், வாள், சிலம்பம் போன்ற படைக்கலப் பயிற்சிகளும், பச்சிலை மருத்துவம் போன்ற இன்ன பிறவும் கூடச் சிறாருக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பயிற்சியைக் தொடங்கும் முகமாய் "கார்த்திகைப் புதுமைச் சடங்கை" நடத்தி, அதை ஊருக்குச் சொல்லி, பயிற்சிக் கூடத்திற்குப் பெற்றோர்கள் சிறாரை அனுப்பி வைப்பார்கள். குறிப்பிட்ட காலம் கலைகளைக் கற்ற இளையோர்கள், சில ஆண்டுகள் கழிந்த பின்னால், பின்பனிக் காலத்தில் வரும் ஒன்பான் இரவுகளுக்கு அடுத்த நாளில் நடைபெறும் பூந்தொடை விழாவில், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ தோழி!

"பூந்தொடை விழாவின் முதல்நாளைப் போல புதுமணல் பரப்பிய திருநகர் முற்றம் தனிமையடையுமோ தோழி?"

இங்கே தொடை என்பது அம்பு தொடுத்தலைக் குறிக்கும். போர்கருதித் தொடுக்காமல் பயிற்சிகருதித் தொடுப்பதனால் புதிய தொடுப்பு இங்கே பூந்தொடை என்றாயிற்று. அதாவது "புதிய அம்பு தொடுக்கும் விழா, அம்பெய்கை" என்பது பூந்தொடை விழா ஆகும். பூ என்ற முன்னொட்டின் பொருட்பாட்டை இன்னும் இரு கூட்டுச் சொற்களின் மூலம் அறியலாம். பூங்குட்டி = ஈன்று சிறிது நேரமே (அல்லது நாட்களே) ஆன குட்டி; பூங்குழந்தை = பிறந்து சில நாட்களே ஆன குழந்தை. [தன் பயிற்சி அறிவைக் காட்டுதற்கு மாறாய், இளம் பிள்ளைகள் பள்ளிப்படிப்பு தொடங்கும் நாளாகவும் இந்தப் பத்தாம் நாள் அமையலாம்.]

பூந்தொடை விழாவையும் ஐம்படைத் தாலியையும் சேர்த்து எண்ணுமாப் போல, (பதின்ம வயது கூட அடையாத) இளைய வயதுக் கண்ணனை முன்னே காட்டித் தன்னை யசோதையாய் உருவகம் செய்து கொண்டு, பெரியாழ்வார் (கி.பி.690- 775) நாலாயிரப் பனுவலில் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் ஆறாம் திருமொழியில் முதற்பாட்டில் சொல்லுவார்.

கண்ணன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிற பையன்; மற்ற பிள்ளைகள் மாட்டு மந்தைகளை ஓட்டிச் செல்லுகிறார்கள்; தானும் போகவேண்டும் என்று அன்னையிடம் மாட்டுக்கோலைக் கேட்கிறான். "தான் பார்க்க வளர்ந்த பிள்ளை இப்பொழுது வீரக் கலைகளைக் கற்றுக் கொண்டாலும், வீட்டில் மாடுமேய்க்கும் கோல் எங்கிருக்கிறது என்று கூடத் தெரியாதிருக்கிறானே?" என்ற நக்கலோடு, குறும்புத் தனத்தோடு, "விளையாட்டு வில்லில் ஏற்றுதற்காய் வேலிக் கோலை ஒடித்து அம்பாக்கி, சின்ன ஐம்படைத் தாலியை (கொழுந்துத் தாலி - குழந்தைத் தாலி - பொன்நிறத் தாலி) பெரிய கழுத்தில் பூண்டு, தன் வாரி முடிந்த சிகையில் பின்பக்கமாய் மயிலிறகைச் செருகி, காலிகளை(கால்களால் இயங்கும் விலங்குகள் காலிகள்) ஓட்டிப் போக விரும்பும் இவனுக்கு, காக்கையே! கோலை எடுத்துக் கொண்டுவா! என் கருப்புப் பையனுக்குக் கோலை எடுத்துக் கொண்டுவா!" என்று கூரையில் கூடியிருக்கும் காக்கையைக் கூப்பிட்டு யசோதை பொய்விளையாட்டு ஆடுகிறாள். பாட்டில் கண்ணனைப் பற்றிய விவரிப்பு நம்மைக் கொள்ளை கொள்ளுகிறது. (வேறொன்றும் இல்லை, யசோதைக்கு தன் பிள்ளையின் பெருமை பிடிபடவில்லை.)

வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்தில் பூண்டு
பூலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப்பின் போவார்க்கோர் கோல்கொண்டு வா
கடல் நிற வண்ணற்கோர் கோல்கொண்டு வா

ஐம்படைத் தாலி பற்றிய குறிப்புக்கள் சங்க காலம் தொட்டுப் பல இலக்கியங்களில் இருக்கின்றன. அவற்றை மேலும் எடுத்துச் சொல்லலாம்; கட்டுரை தான் விரியும். எனவே இனி, நாம் அடுத்த தாலி பற்றிப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.