Friday, November 24, 2006

புறத்திட்டு வாகைகள் (project phases)

testing பற்றி நண்பர் இளங்கோவன் ஒரு பொழுது கேட்டதற்குத் தொடர்ச்சியாய் நடந்த உரையாடல் (பார்க்க பொன்னும் சோதனையும் என்ற பதிவு.). இந்த உரையாட்டில் ஒரு புறத்திட்டு (project) நகரும் போது உள்ள வெவ்வேறு வாகைகளைத் (phases; இதை stages என்று சொல்லும் போது நிலைகள் என்று சொல்லலாம்) தமிழில் சொல்லுவது பற்றி அவர் கேட்டிருந்தார். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

1) Inception

conceive/conception என்பதைக் கருவுறுதல் என்று சொல்லுவது போல inceive/inception என்பதை வித்திடுதல் என்று சொல்லுவதே சரியாக வரும். தொடங்கு என்ற சொல்லை start என்பதற்கு மட்டுமே வைத்துக் கொள்ளுவது நல்லது. introduction என்பதற்கு (முன்)தொடக்கம் என்று சொல்லலாம். இனி, initiation என்ற சொல்லை ஈனித்தல்/ஈனிப்பு என்று சொல்லலாம். (initiation என்பதும் ஒருவகையில் ஈனுதல் தான், தாய் குழவி ஈனுவது போல). Initiation Phase = ஈனீட்டு வாகை. inception என்பதற்கும் initiation என்பதற்கும் உள்ள வேறுபாடு புரிந்திருக்கும் என எண்ணுகிறேன். வித்திட்டுக் கரு வளர்ந்து, ஈனிப்பது வரை அக வளர்ச்சி - தாய்க்குள்ளேயே நடப்பது; அதற்கு அப்புறம் உள்ளது, வெளிப்பட்டபின் நடப்பது, புற வளர்ச்சி.

2) Elaboration

உழுதல்>உழைத்தல் என்று தமிழில் பொருள் விரிந்திருக்கிறது. ஆங்கிலத்தில் labor என்று வந்த உடனேயே, நமக்கு உழைப்பு என்பது நினைவிற்கு வரவேண்டும். இவை இரண்டும் ஒன்றிற்கொன்று சரியான இணைச் சொற்கள். உழவாரப் பணி என்றால் சிவனியக் குரவர் அப்பர் தான் நம் மனத்திற்கு வருகிறார். உழவாரம் என்பது ஒரு கருவி கூட. கடின உழைப்பும் உழவாரம் என்றே சொல்லப்படும். புல், பூண்டு இல்லாமல் ஒரு தளத்தை நறுவிசாகச் செய்வதே உழவாரப் பணி. உழவாற்றல் என்பதும் இப்படி ஒரு கடின உழைப்பே. உழவாற்று = elaborate. உழவாற்றம் = elaboration. ஆங்கிலச் சொற்பிறப்பில், கீழே வருவது போல் காட்டுவார்கள்.

elaboration - 1578, in a physiological sense relating to tissue development, from L. elaborationem (nom. elaboratio), from elaborare "work out, produce by labor," from ex- "out" + laborare "to labor." Elaborate in the sense of "conducted with attention to detail" is from 1649.

3) Expansion

விரிவாக்கம் அல்லது விரிவாக்குதல் என்பதை "Expansion" என்பதற்கு மட்டுமே வைத்துக் கொள்ளுதல் நல்லது. expand - 1422, "spread out, spread flat," from Anglo-Fr. espaundre, from L. expandere "to spread out," from ex- "out" + pandere "to spread." Sense of "grow larger" first recorded c.1645. Expansionist "one who advocates the expansion of the territory of his nation" is from 1862.

4) Development phase

ஆக்க நிலை என்று இதைச் சொல்லியிருக்கிறீர்கள். நான் வளர்ப்பு வாகை என்று சொல்லுவேன். growth என்பதற்கும் development என்பதற்கும் ஒரு குழப்பம் நம்மில் பலருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது. growth என்பது வித்திட்ட பின் கரு வளர்வது போல் உள்ள ஓர் இயல் வளர்ச்சி (natural growth; இது அகத்தில் நடைபெறுவது.) development என்பது திட்டமிட்டு, வளர்வின் ஒவ்வொரு நிலையிலும், மாந்த உள்ளீடு இருந்து, வளர்ப்பது. growth என்பது வளர்ச்சி; development என்பது வளர்ப்பு; இந்த நுணுகிய வேறுபாட்டை விட்டு விடக் கூடாது. வளர்த்தல், வளருதல் என்ற வேறுபாட்டையும் அறிக. "பிறத்தியார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழியை நோக்குங்கள். இனி evolution phase என்பது எழுவு வாகை. வளர் நிலை என்று சொல்லுவது மேலே growth, development என்ற சொற்களின் நொதுமல் (neutral) வெளிப்பாடு. அதாவது, தன்வினையும் இல்லாது பிறவினையும் அல்லாத ஒரு நொதுமலான பேச்சு. அது இங்கே பொருந்தாது. எழுவுதல் என்று சொல்லுவதில் எப்பொழுதுமே ஒரு தொடர்ச்சி உண்டு. "சூரியன் கீழ்வானத்தில் எழுகிறான்" என்னும் போது அந்த வினை தொடர்ந்து கொண்டு இருப்பதை உணருகிறோம், அல்லவா?

5) Testing phase = சோதிப்பு வாகை; சோதிப்பு பற்றி வேண்டியது பேசியாகி விட்டது.

6) Cessation Phase = ஒழிவு வாகை என்பது சரியாக இருக்கும். (இங்கும் ஒழிவு என்பது தானாக முடித்தல்; நாம் முடிக்கும் போது ஒழிப்பு என்று வரவேண்டும்; ஆனால் இந்தக்காலத் தமிழில் கெடுதல் பொருள் வந்துவிடும். எனவே கவனமாகக் கையாளவேண்டும்.)

7) Closing Phase = முடிப்பு வாகை என்று பிறவினையாகச் சொல்ல வேண்டும் தன் வினையான முடிவு வாகை என்ற தொடர் ending phase என்பதற்கு இணையாக வரும்.

Quality Control என்ற சொல்லுக்குத் தரக் கட்டுப்பாடு என்பதே இருக்கட்டும். இங்கு மாற்றுக் காண்பது குழப்பத்தை விளைவிக்கலாம்.

Zero Defect என்பதைச் சுழிய மறு என்று சொல்லலாம்; மறு = defect என்ற சொல் நெடுநாட்களாய் நம்மிடம் உள்ள சொல்; முகத்தில் மறு ஏற்படுவதும் ஒரு defect தானே? அதை ஏன் தவிர்க்க வேண்டும்? மறுவில்லாத பண்டம் = defectless object.

சுழி/சுழியம் என்று zero விற்கு இணையாய்ச் சொல்ல (எண்ணைச் சொல்லும் போது சுழி என்றும், கருத்தைச் சொல்லும் போது சுழியம் என்றும் ஒரு பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம்), நாம் எல்லோரும் ஏன் தயங்குகிறோம்? சுழியத்தின் மருவுதலைத் தயங்காமல் பலுக்கி சூன்ய என்று இந்திக்காரன் அருமையாகச் சொல்லுகிறான். நாமோ புழையம் என்பதன் மருவான பூஜ்யத்தையே பிடித்துக் கொண்டு தொங்குகிறோம். தமிழ்ச்சொல்லை ஒதுக்குகிறோம். குறைந்தது புழையம் என்றாவது சொல்லலாமே? நல்ல தமிழ் பழகுவதில் ஏன் அப்படி ஒரு நாணம்?

அன்புடன்,
இராம.கி.

Thursday, November 23, 2006

பொன்னும் சோதனையும்.

முன்பு ஒருமுறை நண்பர் நாக. இளங்கோவனுக்கும் எனக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் (2003) நடந்த உரையாடல் இது. அவர் testing பற்றிக் கேட்டிருந்தார். பேசாது சோதனை/சோதித்தல் என்று நான் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் தான். இருப்பினும் தொடர்புடைய சொற்களான examine, exact, essay போன்றவற்றையும், பொன், மாற்று, சரி, எடுத்தல், நிறுத்தல், சுமத்தல், தூக்குதல், வீக்குதல் போன்றவை பற்றியும் ஓரிடத்தில் சொல்ல, வாய்ப்புக் கிடைத்ததால் இதை எழுதினேன். மீண்டும் பலருக்கும் பயன்படும் என்று கருதி இங்கு பதிகிறேன்.

ஒரு பொருளைத் தரங்காணும் தேவை முதலில் எழுந்ததே பொன் மாழையால் (metal) தான். இயற்கையில் எளிம (element) நிலையில் கிடைக்கும் அரிய பொருள்களில் ஒன்றானது பொன்.

சிலபோது பொன்னெனும் இம்மாழை, அஃகுதையாகக் கிடந்தாலும் (oxide; அஃககம் = oxygen; அஃகு = ஊறுநீர்; ஊறப்போடுகிற காய் ஊறுகாய்; ஊறுகின்ற நீர் அமிலமாகக் காடித்துப்போய்க் கிடக்கும். அமிலத்திற்குக் காரணியாக ஒரு காலத்தில் oxygen என்ற எளிமம் கருதப்பட்டது. எனவே பொருள்நீட்சியில் அஃககம் என்பது oxygen ஆயிற்று. இதுபோல நீரின் காரணியான hydrogen-யை நீரகம் என்கிறோம்.), பெரும்பாலும் எளிம நிலையிலே ஆற்றுப் படுகைகளில் பொன் கிடைத்தது. [நம்மூரில் பொன்னியான காவிரிப் படுகை இப்படிப் பொன் கிடைத்த படுகை தான்; ஆற்றிற்குப் பெயர் வந்ததும் பொன் மாழையை ஒட்டித் தான். குவலாள புரத்தை (Kolar) ஒட்டி ஓடும் இந்த ஆற்றுப்படுகையில் பொன்னைக் கண்டது தமிழர் வரலாற்றில் மிகவும் பெருத்த செய்தி.]

பொன்னாகிய இம்மாழை எளிதில் வளையக் கூடிய, அவ்வளவு வன்மை (strength) இல்லாத, மெல்லிய மாழை. தமிழர் பொன்னை முதலில் அறிந்ததால் தான் பொன் என்ற சொல், விதுமையாகத் தங்கத்தை உணர்த்திப் பின் நாளா வட்டத்தில் பொதுமையாக எல்லா மாழைகளையும் உணர்த்தியது. செம்பொன் (copper), வெள்பொன் (silver), இரும்பொன் (iron) எனப் பொன்னுக்கு அடுத்துத் தோன்றியவை எல்லாவற்றிற்குமே பொன் என்பது சொல்லீறாக மாறிற்று.

வெறும் பொன்னை அடுத்து, காலத்தால் தமிழ்மாந்தன் அறிந்த மாழை தான் செம்பொன் எனப்படும். இயல்நிலையில் (natural) செம்பொன்  பெரும்பாலும் அஃகுதை (oxide) அல்லது கந்ததையாகவே (sulphide) கிடைக்கிறது. இந்த அஃகுதையைக் கரிமத்தோடு சேர்த்து ஓர் உலையில் இட்டு, உயர் வெம்மையில் (high temperature) வினைக்க (react) வைத்து, செம்பொன் எளிமத்தையும், கரிம-இரு-அஃகுதையையும் (carbon-di-oxide) உருவாக்குகின்ற நுட்பத்தை தன்னேர்ச்சியாக மாந்தன் கண்டு பிடித்தானா என்பது தெரியாது. (செம்புக் கந்ததையைக் காற்றில் எரித்து, கந்தக-இரு-அஃகுதை உண்டாக்கிச் செம்பைத் தனியே பிரிப்பதே இக்காலத்தில் பெரும்பாலும் நடக்கிறது.)

எளிதாகப் பானை சுடும் சூளையில் கிடைக்கும் வெம்மையே, செம்பொன் செய்யும் நுட்பத்திற்குப் போதுமானதாகும். இந்த அரிய உண்மையை (The first widely used metal was copper, which can be reduced from its ores by a kiln not more efficient than that needed for pottery) டி.டி.கோசாம்பி The Culture and Civilisation of Ancient India என்ற தன் நூலில் எடுத்துரைத்திருப்பார். (அக்கால சுமேரிய, மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் மட்டுமே இக்கூறுகளைக் கொண்டிருந்தன. 

எகிப்திய நாகரிகம் செம்பொன் பொருட்களைக் கொண்டிருந்தது; ஆனால் நுட்பம் பயன்படுத்தியதற்கான கூறுகள் அங்கு நமக்குத் தெரியவில்லை. இன்றைக்கும் இந்தியாவில் வடக்கே இருக்கும் இராசத்தான கேத்திரிச் சுரங்கம் பழங்காலத்திலும் பயன்பட்டிருக்க வேண்டுமென்று சிந்து சமவெளி நாகரிகக் கூறுகளால் அறிந்து கொள்கிறோம். 

அண்மையில் சிங்களத்தைச் சேர்ந்த ஒரு அகழ்வாராய்ச்சி வல்லுநர், அக்காலத்தில் ஈழத்தீவில் செம்பொன் கிடைத்திருக்கக் கூடிய கூறுகளை எடுத்துரைத்திருக்கிறார். தாம்பர பெருநை (தாமிர வருணி) என்பது நம்பக்கத்து ஆற்றிற்கு மட்டும் அல்லாது, அந்தப் பக்க நிலத்திற்கும் பெயராக இருந்தது. தாம்பர பெருநைக்கும் தாம்பரத்திற்கும் தொடர்புண்டா என்பது செய்யப் படவேண்டிய ஆய்வு. ஆதிச்ச நல்லூர் புதைகுழிகளில் இரும்புப் பொருள்கள் மட்டுமல்லாது செம்புப் பொருள்களும் கூட ஒன்றிரண்டு கிடைத்திருக்கின்றன. செம்புக் காலம் நம் பக்கம் தெற்கே நடைபெறவே இல்லை என்பதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது இருக்கிறது.)

செம்பைப் பொன்னோடு கலந்து அதன் வன்மை(strength)யைக் கூட்டி ஒரு மாழைக் கலவையை உருவாக்கி நகை செய்யத் தொடங்கிய பின் தான், கலவையின் தரம் அறியவேண்டிய தேவை ஏற்பட்டது. (இக்காலத்தில் வெள்ளி, நாகம், நிக்கல், உரோடியம், பல்லேடியம் போன்றவற்றைப் பொன்னோடு கலக்கிறார்.) 

பொற்கொல்லர் என்போர் நம்மூரில் தட்டார் என்றும் சொல்லப் பட்டார். சிறிது ஓர்ந்து பார்த்தால், பொற்கொல்லர் என்பது ஓர் இரட்டைக் கிளவிச் சொல் என்பது புலப்படும். கொல்லர் என்றாலே தமிழில் "பொன்னைக் கையாளுபவர்" என்ற பொருள் வந்துவிடும். ஏனென்றால் கொல் என்பதே பொன்னைக் குறிக்கும் சொல் தான். 

பிற்காலத்தில் கொல்லர் என்ற அச்சொல் இன்னும் விரிவடைந்து விதுமை (specific) நிலையில் இருந்து பொதுமை (generic) நிலைக்கு வந்து, மாழை வேலை செய்பவருக்கெல்லாம் ஒரு பெயராய் ஆனது. எனவே பொற்கொல்லர் என்ற பெயர் "நல்ல எண்ணெய்" போலக் கூட்டுச்சொல்லாய் எழுந்து, தங்க வேலை செய்பவரைக் குறித்தது. 

தட்டார் என்ற சொல் தட்டு = பொற்கிண்ணம், பொற்குவை பற்றியும், பொன்னைத் தட்டி நகை செய்வதாலும், வந்த பெயர். தட்டாரைப் பத்தர் என்றும் சொல்லுவதுண்டு. பத்தர் என்ற சொல்லும் கூட ஒரு குவை, அல்லது கிண்ணத்தையே, குறிக்கும்.

பொன்னின் தூய்மை அறிய எழுந்த சொல் தான் மாற்று (to metre, to measure) என்பதாகும். இதன் பொருள் அளவை என்பதே. பத்தரை மாற்று என்பது தூய பொன். இன்றைக்கு வெள்ளைக்கார முறையில் தூய பொன்னின் அளவையாக 24 காரட் என்று குறிப்பார். தூய பொன்னில் அரச முத்திரையை பொதித்த காரணத்தால், அது ஆணைப் பொன்னும் ஆயிற்று. (பேச்சு வழக்கில் ஆணைப்பொன் என்ற கூட்டுச்சொல் ஆணிப்பொன்னாயிற்று. 

இதே போல ஆணிமுத்து என்பதும் ஓர் உயர்முத்து; அதுவும் அரச முத்திரை பெற்றது போலும்; ஆணத்தி என்பவர் அரச உயரதிகாரி). நம்மூர் நாட்டுப் புறங்களில் நகை செய்வதற்கு இன்றுங் கூட, 18 காரட் தங்கத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கி, 22 காரட் தங்கத்தையே பெரிதும் நாடுவார். அதே பொழுது நகரத்தில் உள்ளவர் 18 காரட்டிற்குப் பழகி விட்டார். குதிரைப் பொன் என்பதும் உயர்பொன்னைக் குறிக்கும் சொல்லே; முன்பு கொன்றை பற்றிய கட்டுரையில் அதைச் சொன்னேன்.

கையிலுள்ள கலப்புத் தங்கத்தில், எவ்வளவு பொன், எவ்வளவு செம்பு உள்ளது என்று தெரியவேண்டும் அல்லவா? இதற்கு 2 முறைகளுண்டு. ஒன்று திண்ணிமையை (density; திண்ணிமையை அடர்த்தி என்றும் கூறுவதுண்டு.) அளந்து கண்டுபிடிப்பது; இன்னொன்று உருகு வெம்மை (fusion temperature) வைத்துக் கண்டுபிடிப்பது.

முதலில் திண்ணிமை வழிக் கண்டு பிடிப்பதைப் பார்ப்போம். தங்கம் செம்பைப் பார்க்கக் கூடவே திண்ணியது (19.3 Kg/litre. ) செம்பின் திண்ணிமை, தங்கத்தைப் பார்க்கக் குறைந்தது (8.92 Kg/litre). ஒரே பருமன் கொண்ட இரு பொருட்களின் திண்ணிமை வேறுபாட்டைப் பொறுத்து அவற்றின் எடைகள் மாறுபடும். எடைபார்த்துப் பொன்னின் தரத்தைக் கண்டுபிடிப்பதையே examination என்று மேலை நாட்டில் முதலில் சொன்னார். 

எடை சரியாக இருந்தால் அதை exact என்று சொல்வார். இப்படி எடையைக் காணும் முறையை assay என்பார். இக்காலத்தில் வேதியல் முறையில், கொடுத்துள்ள பொருளிலுள்ள கூம்புனைகளின் (component - கூடிச் சேர்ந்த புனைகள் கூம்புனைகள்) செறிவைக் (concentration) கண்டுபிடிப்பதைக் கூட assay என்றுதான் சொல்கிறார்.

பார்த்தீர்களா? பொன்னின் தரம் அறிவதிலிருந்து எவ்வளவோ தொலைவு தள்ளி examination என்ற சொல் நம் நடைமுறையில் வந்துவிட்டது. இப்பொழுது எல்லாவிதமான தரம் பார்த்தலையும் examination என்றழைக்கிறார். ஆளைத் தரம் பார்த்தலும் கூட examination தான். examination க்கு இணையாகத் தேர்வு என்ற தமிழ்ச் சொல் தெரிவு என்பதை உணர்த்துகிறது. examine என்ற சொல்லின் ஆங்கிலச் சொற்பிறப்பை இங்கு கீழே கொடுத்துள்ளேன்.

examine - c.1303, from O.Fr. examiner "to test, to try," from L. examinare "to test or try," from examen "a means of weighing or testing," probably ult. from exigere "weigh accurately" (see exact). First record of examination in the sense of "test of knowledge" is from 1612; shortened form exam first attested 1848.

இனி exact என்பதற்கு நாம் புழங்கும் தமிழ்ச்சொல்லைப் பார்ப்போம். தமிழ்ப் பழக்கத்தில் கூலங்களை அளக்கும் ஒரு படியில், அரிசியோ, பருப்போ, பொடியோ ஏதோ ஒரு குறுணைப் பொருளை அளக்கும்போது, படியில் நிறைந்த கூலம் கூம்பாகிக் காட்சியளிப்பதை கையால் தட்டிப் படி விளிம்பின் அளவுக்கு, அதைச் சரித்து அளப்பதை, சரியான அளவு என்கிறோம். சரிப்பதால் அது சரியானது. நாம் சரி என்று பொதுவாகச் சொல்லும் சொல்லாட்சி கூட இப்படிப் பருமன் அளவையில் தான் வந்தது. exact என்பதற்குச் சரியென்ற சொல்லையே நாம் புழங்குகிறோம். சரியான சில்லறை = exact change. [ஒரு வேறுபாட்டை உணர வேண்டும். நம்மூர் exact = சரி என்பது பருமனளவையில் வந்தது. மேலையருடைய exact என்பது, எடுத்தல் அளவையில் வந்தது.] exact -ன் ஆங்கிலச் சொற்பிறப்பை, இங்கு கொடுத்துள்ளேன்.

exact (adj.) - "precise, rigorous, accurate," 1533, from L. exactus, pp. of exigere, lit. "to drive or force out," also "demand, finish, measure," from ex- "out" + agere "drive, lead, act." The verb (1380, implied in exaction) is older in Eng. and represents the literal sense of the Latin. Exacting "too demanding" is from 1583. Elliptical use of exactly for "quite right" not recorded before 1869. Exacta as a type of horse-racing bet is first attested 1964, said to have originated in N.Y.

எடுத்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையாக இன்றும் நிறுத்தல், சுமத்தல், தூக்குதல், வீக்குதல், தாங்குதல், தரித்தல், பொறுத்தல், பரித்தல் போன்றவை உள்ளன. ஒவ்வொன்றும் தமக்குள் சிறிது வேறுபட்டவை. கீழே இவ்வரிசையில் சில சொற்களுக்கு மட்டும் விளக்கம் கொடுத்துள்ளேன்.

எடுத்தல் அளவு மாந்தனால் எடுக்க/தூக்க முடிகிறதா என்று பார்க்கும் அளவை. அந்த அளவைமுறை தொடங்கிய போது அவ்வளவு துல்லியம் இல்லாததாய் இருந்தது. "இக் கல்லை என்னால் தூக்க முடிகிறது; இதை என்னால் தூக்க முடியவில்லை." எனவே இரண்டாம்கல் முதற்கல்லை விடப் பளுவானது என்று முடிவுசெய்துகொள்ளும் முறையை எடுத்தல் முறை எனலாம். 

இத்தகைய அளவு முறையில் மாந்தனின் பின்னூட்டு என்பது பெரிதும் ஊடுறுவிக் கிடக்கிறது. இந்த அளவையில் இருந்து, மாந்தனை முற்றிலும் தனித்துப் பிரிக்க எழுந்தது தான், துலை (balance = தராசு) என்ற கருவி. துலை என்பது தூக்கு என்றும் இன்னொரு வகையால் சொல்லப்பெறும். ஒரு பக்கம் எடையைப் போட்டு இன்னொரு பக்கம் பொருளை வைப்பதே இதன் அடிப்படை.ஆகும்.  கிணற்றிலிருந்து நீரிறைக்கும் ஏற்றம் கூட துலை போன்ற கருவி தான்.

ஒரு நெம்பு கோலின் நடுவில் கூர்ந்த ஊசியைப் பொருத்தி நெம்பு கோலின் இரு முனையிலும் இரண்டு தட்டுக்கள் அல்லது பல(ங்)கைகளில், ஒரு பக்கம் தரப்படுத்திய எடைகளையும், இன்னொரு பக்கத்தில் எடையறியாப் பொருளையும் வைத்து, நெம்புகோலின் அசைவு நிற்கும்வரை காத்திருந்து, நின்று நிலைக்கும் போது ஒரு பக்கம் உள்ள தரப் படுத்திய எடைகளில் இருந்து இன்னொன்றின் எடையை அறிகிறோம் அல்லவா? அம் முறைக்கு நிறுத்தல் அளவை என்று பெயர். நில்+து> நிற்று>நிறு. இன்னொரு வகையிலும் நிறைதல் / நிறைத்தல் என்ற கருத்தும் இதில் வழங்கும். அது பருமன் அளவையின் வழியாக வருவது. ஒரு படி நிறைகிறது; ஒரு லிட்டர் நிறைகிறது. இத்தகைய சொல்லாட்சி குறைந்த அளவே இருக்கிறது.

பருமனுக்கும், எடைக்கும், நம்மூரில் ஒரு குழப்பம் தொடர்ச்சியாக நிலவி வந்துள்ளது. எடுத்துக்காட்டாய் கன அளவு என்ற சொல்லைச் சொல்லலாம். இது எடையைக் குறிக்கிறதா? பருமனைக் குறிக்கிறதா? ஓர்ந்து பாருங்கள்.

இதுவரை நிறுத்தலைப் பார்த்தோம். இனிச் சுமத்தலைப் பார்ப்போமா? சுமை, சும்மாடு போன்றவை சுமத்தலுடன் தொடர்பானவை. சும், சும்மை என்பவை மிகுதியைக் குறித்து, அதன் வழியாகப் பருமனைக் குறித்து, முடிவில் கனத்தையும், எடையையும், குறித்தன.

தூக்குதல் என்பது துலையோடு தொடர்பு கொண்டது. தூக்குதல் என்பதன் வேர் தூல். தூல்ங்குதல் என்பது தொங்குதலே; தொங்கிக் கிடக்கும் எல்லாமே தூக்கு என்று சொல்லப்பட்டன. தொங்கும் காரணத்தால் துலை>துலாம் என்ற சொற்கள் ஏற்பட்டன. தூலி>தூளி = தொங்கும் துணித் தொட்டில்;

வியல வைத்தல் என்பது விரிய வைத்தல்; இதுவும் பருமச் செயலை ஒட்டி வந்தது. வியல்ங்குதல்>வீங்குதல் என்றும், வியல்க்குதல்>வீக்குதல் என்றும் திரியும். இந்தையிரோப்பிய weigh க்கு அருகிலுள்ள தமிழ் வினைச்சொல் இது தான்.

இனித் தரித்தல், தாங்குதல் போன்றவை துல் எனும் வேரிலிருந்தும், பொறுத்தல், பரித்தல், பாரம் போன்றவை புல் எனும் வேரிலிருந்தும் பிறந்தவை. அவற்றைப் பற்றி இங்கு சொல்ல முற்படவில்லை.

இப்படி எடையை ஒட்டி வரக்கூடிய பல தமிழ்ச் சொற்களும் பருமன் கருத்தில் எழுந்து, கொஞ்சம் நீட்சி கொண்டு, எடைப் பொருளைக் காட்டுகின்றன. இந்தக் குழப்பம் பிற மொழிகளிலும் உள்ளது. மாந்தனால் எடையையும் பருமனையும் பிரித்தறிய, நெடுங்காலம் பிடித்திருக்க வேண்டும் போலும்.

முடிவில், கடைசியாக ஒரு செய்தி.

எடை பார்ப்பதில் மட்டுமல்லாமல், பொன்னை உருக்கி அதன் உருகுநிலை வெம்மையை அறிந்தும் கூடப் பொன்னின் தரஞ் சொல்லலாம். முற்றிலும் பொன்னாக இருந்தால் 1063 பாகை செல்சியசிலும், செம்பாக இருந்தால் 1083 பாகை செல்சியசிலும் மாழைகள் உருகும். அதே பொழுது, பொன் - செம்புக் கலவை அதன் தரத்திற்கு ஏற்ப வெவ்வேறு வெம்மையில் உருகும். பொன்னில் செம்பைக் கலக்கக்கலக்க, கலவையின் உருகு நிலை 1063 deg. க்கும் கீழே குறைந்துகொண்டே வரும். கிட்டத்தட 22% கலக்கும் போது, மிகக் குறைந்த உருகு நிலையை (கிட்டத்தட்ட 905 deg.) அது அடைந்துவிடும். அதன் பின் மேலும் செம்பைச் சேர்க்கும்போது உருகுநிலையானது மீண்டும் கூடத் தொடங்கும். ஆகச் செம்பை 18/19 காரட் வரை சேர்க்கையில், கலப்புத் தங்க உருகுநிலை குறையுமென்று தெரிந்தால், இத் தரக் கண்டுபிடிப்பின் உள்ளுறை(content)யைத் தெரிந்து கொள்ளலாம்.

கொடுத்த தங்கத்தில் ஒரு சிறு துண்டை எடுத்து, ஒரு சிறு கிண்ணத்தில் (இக் கிண்ணத்தைக் குவை; தட்டம் என்றும் சொல்வதுண்டு) வைத்து உருக்குவதால், உருகுநிலையைக் கொண்டு, தங்கத்தின் தரத்தைக் கண்டு கொள்ளலாம். (அதாவது 18 காரட் தங்கம், 22 காரட்டை விடக் குறைந்த வெம்மையிலே உருகிப் போகும்.) இப்படித் தட்டை வைத்துத் தரம் கண்டுபிடிப்பதற்கே, தட்டச் சோதனை என்று பெயர். ஆங்கிலத்தில் test என்பது இத்தட்டத்தையே குறிக்கிறது.

test என்பதற்கு இணையாய்த் தமிழில் நாம் சோதனை என்றே சொல்கிறோம். முன்பு கொன்றைக் கட்டுரையில் சொன்னது போல, சோதித்தல் என்பது சோதிநெருப்பில் வாட்டிச் சோதிப்பதையே உணர்த்தும். தமிழில் சோதனை என்ற சொல்லின் புழக்கம் கூட, வெகுவாக நீண்டு, எங்கோ வந்துவிட்டது. ஆன்மச் சோதனை என்பதற்கும், நெருப்பிற்கும் எவ்வளவு தொலைவு இருக்கிறது?

test என்பதின் ஆங்கிலச் சொற்பிறப்பு இப்படி வரும்.

test - c.1395, "small vessel used in assaying precious metals," from O.Fr. test, from L. testum "earthen pot," related to testa "piece of burned clay, earthen pot, shell," and textere "to weave." Sense of "trial or examination to determine the correctness of something" is recorded from 1594. The verb in this sense is from 1748. The connecting notion is "ascertaining the quality of a metal by melting it in a pot." Test-tube is from 1846.

ஆக ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால், ஒவ்வொரு கதையும் பொருளும் இருக்கின்றன.

அன்புடன்,
இராம.கி.

Sunday, November 12, 2006

பின்னூட்டுக் கேள்விகள் - 2

helicopter யை உலங்கு வானூர்தி என்று ஈழத்தார் அழைப்பது பற்றி ஒரு நண்பர் கேட்டிருந்தார்.
--------------------------
உலங்கு வானூர்தியை வேறு சொல்லால் அழைக்கமுடியுமா என்று கூறவும். ஏனெனில் தும்பியின் வடிவமான உலங்குவானூர்தியைத் தும்பி சம்பந்தப்பட்ட சொல்லால் அழைத்தால் நன்றாக இருக்கும் அத்தோடு உலங்கு வானூர்தி என்பது நீண்ட வார்த்தையாக உள்ளது.
-------------------------

இராம.கி மறுமொழி:

உலங்கு வானூர்தி என்ற சொல்லை ஈழத்தார் கட்டுரைகளிலும், பதிவுகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கும் helicopter -க்கும் உள்ள தொடர்பை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. உலங்கு என்ற சொல்லை அகரமுதலிகளில் தேடிப் பார்த்தால், வேறு ஏதேதோ பொருட்பாடுகள் (திரண்ட கல், கொசு, புழு, திரட்சி, வலிமை, துன்பம், பிணம், பட்டாடை, வாசல், நீர், காற்று, அகற்சி) போடப்பட்டு இருக்கின்றன. ஈழத்தில் இந்தச்சொல் எப்படி வந்ததென்று தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது. என்னுடைய பரிந்துரைக்குப் போகுமுன் அந்தச் சொல்லையும் அதனோடு தொடர்புடைய helix என்ற சொல்லையும் சரியான படி புரிந்து கொள்ளுவோம்.

Helicopter

1861, from Fr. helicoptere "device for enabling airplanes to rise perpendicularly," thus "flying machine propelled by screws." The idea was to gain lift from spiral aerofoils, and it didn't work. Used by Jules Verne and the Wright Brothers, the word transferred to helicopters in the modern sense when those were developed, 1920s. From Gk. helix (gen. helikos) "spiral" (see helix) + pteron "wing" (see petition). Nativized in Flemish as wentelwiek "with rotary vanes." Heliport is attested from 1948, with second element abstracted from airport.

Helix

1563, from L. helix "spiral," from Gk. helix (gen. helikos), related to eilein "to turn, twist, roll," from PIE base *wel- "to turn, revolve" (see vulva).

தமிழில் spiral என்பதைப் புரி என்ற சொல்லால் சொல்லுகிறோம். வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு என்ற சொல்லாட்சிகளைப் பார்த்தால் அது புரியும். புரி என்பது கிடைப் பரிமானத்தில் (horizontal dimension)மட்டுமே விரியும். helix என்பதோ, குத்துப் பரிமானத்தில் (vertical dimension) விரியும்.

தமிழில் சுழிப்பு என்பது வட்டத்தை முதலிற் குறித்தாலும் வேகமான நீரோட்டத்தில் உள்நோக்கிய குழிவு ஏற்படும் சுழிகையாகவே அது காட்சியளிக்கும். "அந்தச் சுழலுக்குள் மாட்டிக் கொண்டான்" என்னும் போது நம்மை அறியாமல் helix என்பதைப் பேச்சில் உணர்த்துகிறோம். சுல் என்ற வேரில் இருந்து சுழி எழுந்தது போல சுரி என்ற இன்னொரு சொல்லும் அதே பொருளில் எழும். சுரிகுழல் என்பது helical ஆகச் சுருண்டு கொண்டு கிடக்கும் முடிக்கற்றையைக் குறிக்கும். சுரிமுகம் என்பது குத்துத் திசையிலும் சுருண்டு கொண்ட சங்கைக் குறிக்கும். நத்தையின் கூட்டைக் கூடச் சுரிமுகம் என்று அழைப்பர். இன்னொரு விதமாய் திருகாணி (helical screw)என்று சொல்லும் போது திருகு என்ற சொல்லும் helical motion - யைக் குறிக்கிறது. முறுக்கு என்ற சொல்லும் கூடத் திருகிக் கொண்ட தன்மையைக் குறிக்கும். முறுகு, திருகு, சுழிகை, சுரிகை என்ற நான்கும் ஒரே பொருளைக் குறித்தாலும், வேற்றுமை காட்டும் முகத்தான் இந்தக் கால அறிவியல் புழக்கமாய்ச் சுரிகை என்பதையே helix-க்கு இணையாக வைத்துக் கொள்ளலாம்.

இனி helico+pter என்பதில் வரும் pter என்பதைப் பட்டம்>பத்தம்>பத்ர = pter இலை, இறகு என்ற வளர்ச்சியோடு பொருத்தலாம். இங்குமே தொடக்கம் தமிழாயும், முடிவு சங்கதமாயும் இருக்கும் இருபிறப்பிச்சொல் பெறப்படும்.

இன்னொரு வகையில் பார்த்தால் படபட என்ற இரட்டைக்கிளவிச் சொல் அசைதல் என்ற பொருளைக் கொடுப்பதைப் பார்க்கலாம். படபட என்ற ஒலி பொதுவாக வடக்கே போகப் போக பதபத என்று ஆகும். தெற்கே வரவரப் பறபற என்று ஆகும். படபட எனல், பதபத எனல், பறபறத்தல் ஆகிய எல்லாமே அசைத்தல், விரைவாகச் செல்லுதல் என்ற பொருள்களைக் குறிக்கும். தமிழில் பறத்தல், பறவை, பறல் என்ற சொற்கள் எழுந்தது இப்படித்தான். பக்கச் சிறகுகளை படபட என்று அடித்து அசைப்பதால் தானே பறக்க முடிகிறது?
பக்பக் என்ற இரட்டைக் கிளவிக்கும் அடித்துக் கொண்டது, அசைத்துக் கொண்டது என்றே பொருள் கொள்ளுகிறோம். "மனம் பக் பக் என்று அடித்துக் கொண்டது". பக்கு எனல் என்பதும் விரைவுக் குறிப்பைத் தரும்.

பக்கு>பக்கம் = பறவையின் சிறகு
பக்கம்>பக்ஷம் (சங்கதம்) = பறவையின் சிறகு
பக்ஷி = பறவை
பக்கம்>பக்தம் (சங்கதம்)>பத்தம் (பாகதம்) >பத்ரம் (சங்கதம்)
பத்ரி (சங்கதம்) = பறவை
படபட> பதபத>பதகம், பதங்கம், பதசம், பதமம் (நாலும் சங்கதம்) = பறவை

தமிழ், சங்கதம், பாகதம் ஆகிய மூன்றுமே ஒன்றை ஒன்று சொல்லாட்சிகளில் ஊடுருவி இருக்கின்றன. இதை விடுத்து "எல்லாமே சங்கதம் என்ற மேட்டில் இருந்து தமிழ், பாகதம் என்ற மடுக்களுக்குப் பாய்ந்தன" என்ற ஆளுமை உணர்வு பலருக்கும் பரந்து கிடக்கிறது. குறிப்பாக பெருவோட்ட (mainstream) இந்தியவியலிலும், மொழியியலிலும் இது ஆழப் பதிந்திருக்கிறது. ஒழுங்கான புரிந்துணர்வுக்கும், ஆய்வுக்கும் அது வழி வகுக்காது. எத்தனை முறை தான் சொல்லுவது?

பறத்தல் என்ற வினைச்சொல்லில் இருந்து இன்னொரு ஈற்றை வைத்து பறனை (plane) என்ற சொல்லை அட்லாண்டா சந்திரசேகரன் பரிந்துரைத்தார். சிறிய சொல்லான அதைப் பலரும் புழங்கிக் கொண்டு இருக்கிறோம். அதை ஒட்டி வான்பறனை (aeroplane) என்றும் சொல்லிவருகிரோம். வானூர்தி என்பதை aircraft என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறோம்.

சுரிப் பறனை என்ற சொல் helicopter க்கு இணையாக அமையும். இன்னும் சுருக்க வேண்டுமானால் சுரினை என்றே சொல்லலாம். (தும்பியின் வடிவு என்பதைக் காட்டிலும், சுரிப் பறனை சுரிகை இயக்கத்தால் பறக்கிறது என்பது முகன்மையான செய்தி. தும்பி என்பதோ, பறவைகளைப் போலச் சிறகை அசைத்தே பறக்கிறது. வெறும் வடிவ ஒற்றுமை மட்டுமே பார்ப்பது இங்கு சரிவராது.)

மேலும் பறனையும், சுரினையும் ஒரே போல அமையும்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, November 11, 2006

பின்னூட்டுக் கேள்விகள் - 1

என்னுடைய வலைப்பதிவில் compiler பற்றிய ஒரு நண்பரின் கேள்வி:

1985 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் தமிழ் கொம்பைலர் (கொம்பைலருக்குத் தமிழ் என்ன? ) ஒன்றைத் தொடங்கியதாம். அதன்மூலம் தமிழில் சிறுசிறு கணக்குகளைச் செய்யும் வகையிலும் அந்தக் 'கொம்பைலர்' அமைக்கப்பட்டதாம். பின்னர் அந்தத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டதாம். இது உண்மையா? அந்தக் கைவிடப்பட்ட தமிழ்க் கொம்பைலரை எங்காவது பெறமுடியுமா? சில தமிழ் ஆர்வலர்கள் அதைத் தேடிக்கொண்டுள்ளனர்.
--------------------------------
இராம.கி.யின் மறுமொழி:

அண்ணா பல்கலைக் கழகத்தின் அந்த compiler பற்றிய செய்தி எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் இந்த நண்பருக்கு விடை சொல்லுங்கள்.

நான் compiler என்பதற்கான இணைச்சொல்லை இங்கு தர முயலுகிறேன்.

compiler என்பதற்கு அண்ணா பல்கலைக் கழக, வளர்தமிழ் மன்ற வெளியீடான "கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி"யில் 'தொகுப்பி' என்று போட்டிருக்கிறார்கள். "அப்படியானால் integrater க்கு என்ன சொல்வது?" என்று பார்த்தால் 'ஒருங்கிணை' என்று போட்டிருக்கிறார்கள். "அப்படியானால் make it uniform என்பதை எப்படிச் சொல்வது?" என்று தொடர்ச்சியான கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன. பொதுவாக, differentiation என்பதற்கு வகைப்பு என்றும், integration என்பதற்கு தொகை/தொகுப்பு என்றே 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் அறிவியல் கட்டுரைகளில் பலரும் சொல்லி வருகிறோம். (வளர்தமிழ் மற வெளியீட்டிலேயே integration என்பதற்குத் தொகுப்பு என்று போட்டிருக்கிறார்கள்.) எனவே compile என்ற சொல்லிற்கு தொகுப்பி என்று சொல்லாமல் வேறு சரியான சொல்லைப் பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது.

compile என்பது com+pile என்ற இருசொற்களின் கூட்டுச் சொல். com என்பது குவிதல் என்ற பொருளைக் காட்டும். குவித்த pile, compile. தமிழில் சொல் தேடும் போது பெரும்பாலும் இந்த com என்னும் முன்னொட்டைத் தவிர்த்தாலும் பொருள் குறையாது.

pile என்பதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று கட்டடங்கள் கட்டும் போது போடும் கடைகால். [பெரிய பெரிய உறுதிபெறு கற்காரை(reinforced concrete)களால் ஆன ஊன்றுகோல்களின் மேல் தான் பெரிய கட்டடங்கள் நிற்கின்றன. தமிழில் பொல்லு என்றாலே தடி, ஊன்றுகோல் என்றுதான் பொருள். பொல்லின் பெரியதைப் பொல்லம் என்று சொல்லலாம். எனவே பொல்லங்களின் மேல் கட்டடங்கள் நிற்கின்றன என்று சொல்லும் போது பொரூல் குறைவதில்லை.]

pile என்பதற்கு இன்னொரு பொருள் a tidy heap, esp. as made of a number of things of the same kind placed on top of each other என்பதாகும். இங்கே இந்தப் பொருளை ஒட்டித்தான் compile என்பதற்குப் பரிந்துரைக்க வேண்டும்.

பொல் என்னும் வேரடிக்கு பெருகுதல், அதிகப்படுதல், மிகுதல் என்ற பொருள்கள் உண்டு. பொல்லுதல் என்பதும் இந்தப் பொருள்களே கொள்ளும். மிகுதலின் இன்னொரு பரிமானமாய் இணைத்தல், சேர்த்தல், தைத்தல் என்ற பொருட்பாடுகளும் எழும். பொல்லம் என்ற சொல் தைக்கை, இணைக்கை, சேர்த்துத் தைக்க உதவும் சிறுதுண்டு ஆகியவற்றைக் குறிக்கும். பொலுகுதல் என்பதும் அதிகப்படுதல் என்றே பொருள் கொள்ளும். பொலுவு என்பது profit. பொலிசை என்பது வட்டித்துப் பெருகும் தொகை [interest என்னும் சொல்லுக்கு இணையாய் கல்வெட்டுக்களில் பயிலும் சொல்.] "பொலியோ பொலி" என்பது அறுவடையான நாளில் கதிரில் இருந்து கூலங்களைப்(grains) பிரித்து அளக்கும் போது, விளைச்சல் பெருக்கத்தைக் களத்து மேட்டில் கொண்டாடும் முகமாய் உழவர்கள் முழங்கும் சொலவம் (slogan). பொலிதல் என்பது செல்வ வளத்துடன் இருத்தல், உடல் நலத்தோடு இருத்தல் என்ற நிலையில் பெருகிய தன்மையையே குறிக்கும். பொலிதலின் திரிவான பொழிதலும், மிகுதியாகத் திரண்டு கொட்டுவதைக் குறிக்கும். "மழை பொழிகிறது". மரங்களின் திரட்சி செறிந்து கிடக்கும் போது அந்த இடத்தை, சோலையை, பொழில் என்றே சொல்லுவோம்.

இனிப் பெருகியது பொல்தியது என்று சொல்லப் படும். பொல்தில் இருந்து விளைந்தது பொது என்னும் சொல். பொல்து>பொது. மக்கள் கூட்டத்தைப் பொதுமக்கள் என்று சொல்லும் போது திரண்ட மக்கள் என்றே நாம் பொருள் கொள்ளுகிறோம். பொது என்ற சொல் இ என்னும் ஈற்றைச் சேர்த்துக் கொண்டு பொதி என்ற இன்னொரு சொல்லை உருவாக்கும். மூட்டை, குவியல், திரட்சி என்ற பொருள்கள் கிடைக்கும். body என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாய் இதைத் தான் கையாளுகிறோம். [ஏனென்றால் பொதிதல் என்ற வினைச்சொல்லிற்கு மிகுதியின் நீட்சியாய் நிறைதல் என்ற பொருள் வந்துவிடும். "ஆள் பொதி பொதி என்று இருக்கான் பார்த்தியா?" என்ற சொல்லாட்சியை உன்னித்து நோக்குங்கள்.] பொதி கூடிப் போய் அதிக எடையோடு ஊதிப் போய் இருப்பவனை பொதுக்கை (obese) என்று சொல்லுகிறோம். facist என்பவரைக் கூட பொருள்நீட்சி கருதி பொதுக்கையர் என்று சொல்லலாம்.

பொதுக்கை என்ற சொல் சற்றே திரிந்து பதுக்கை என்று ஆகி கற்குவியல் என்ற பொருள் கொள்ளும். இன்றையச் சேலம், தருமபுரி, திருவண்ணாமலைப் பக்கங்களில் பெருங்கற்காலப் புதை குழிகளைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த புதைகுழிகளின் மேல், பெரிய கற்பாளத்தை வைத்து மூடி அதற்கும் மேல் கற்குவியலைக் கொட்டி வைத்திருப்பார்கள். இந்த விதமான புதைகுழிகளைப் பதுக்கை என்று சங்கப் பாடல்கள் குறிக்கும்.

பொது என்னும் அடியில் இருந்து நெருங்குதல், நிறைதல், தழைத்தல் என்ற பொருளில் பொதுளுதல் என்ற வினை பிறக்கும். பொதுளித்தல் என்பது செறிவூட்டுதல் என்ற பொரூளில் செறிவு (concentration) கூடிய நிலையைக் குறிக்கும். பொதுளி என்ற பெயர்ச்சொல் செறிவுற்றது, செறிவூட்டு என்ற பொருள் கொள்ளும். பொதுவில் இருந்து இன்னொரு நீட்சியாய் பொதும்பு என்ற சொல் மரச்சோலையையும், பொதை என்ற சொல் செடிப்புதர்களையும் குறிக்கும்.

பொல் எனும் வேரில் இருந்து உருவான பொதுளி என்ற சொல்லையே இங்கு compiler என்ற சொல்லுக்கு இணையாகப் பரிந்துரை செய்கிறேன். மரச்செறிவைப் போல நிரல் ஆணைகளின் செறிவை ஏற்படுத்துவது பொதுளி.

அன்புடன்,
இராம.கி.

Friday, November 10, 2006

சோதிடம், நிமித்தகம், ஆரூடம்

"சோதிடம், நிமித்தகம், ஆரூடம் இவை மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்ன?" என்று ஒரு நண்பர் அண்மையில் என்னுடைய வேறொரு பதிவிற்கான பின்னூட்டில் கேட்டிருந்தார். அதற்கான மறுமொழி அவ்வளவு சுருக்கமாகச் சொல்லக் கூடியது அல்ல. தவிரவும் இக் கேள்வி பலருக்கும் பொதுமையானது என்பதால் என் மறுமொழியை தனிப்பதிவாகவே இடுகிறேன். (இதுபோன்ற மற்ற சில பின்னூட்டுக் கேள்விகளுக்கு இன்னும் மறுமொழி சொல்லாமல் இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது சொல்வேன்.)

முதலில் சோதிடம் என்பதைப் பார்ப்போம்.

சொல்+தி = சொல்தி>சோதி = ஒளிவிடுகிற நெருப்பு. சோதி என்ற இந்தச் சொல் தமிழில் ஒளி, சொலிப்பு, நெருப்பு என்று பொதுவாகக் குறித்தாலும் (பார்க்க: கொன்றையும் பொன்னும் என்ற இராம.கி. கட்டுரை), விதப்பாக, வானில் சொலிக்கின்ற கோள்களையும், விண்மீன்களையும் குறிக்கிறது. (அதே நேரத்தில் சொலிப்பு என்ற தமிழ்ச்சொல்லையே ஜொலிப்பெனப் பலுக்கும் அளவிற்கு நம்மில் சிலரின் வடமொழி விருப்பம் போயுள்ளது.)

சோதியின் வழிச்சொல்லான சோதியம் (விண்ணில் ஒளிவிட்டிருக்கும் விண்மீன்கள், கோள்களை வைத்துக் கணித்தல்) என்பது முதலில் வான நூலையே (Astronomy) குறித்தது. காட்டாக, புறநானூற்றில் 30-ஆவது பாட்டு, சோதியம் எனும் வானியலையே குறிக்கிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழந்த மண்டிலுமும்
வளிதிரிதரு திசையும்
வரிது நிலைஇய காயமும் என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
(புறம் 30)

(தமிழரறிந்த வானவியல் பற்றிய தொடரைக் ”காலங்கள்” என்ற தலைப்பில் முன் மடற்குழுக்களில் எழுதத் தொடங்கினேன். இவ்வலைப்பதிவின் தொடக்க காலத்திற் கூட, அத்தொடர் தகுதரத்தில் (TSCII) மீள்பதிப்பாய் வெளியானது; என் தனிக் காரணத்தால் பாதியோடு நின்றுபோன அத் தொடரை என்று முடிப்பேன் என்று இப்போது சொல்ல முடியவில்லை.)

சோதியம் என்ற தமிழ்ச் சொல்லே வடக்கே சோதிஷம்> ஜோதிஷம்> ஜ்யோதிஷம் என்றாகிப் பின் மீண்டும் தமிழில் சோதிடமாக வந்துசேர்ந்தது. ஒருகாலத்தில் வானியல் என்ற அறிவியலாய் நின்ற சோதியம், பின் நிமித்திகத்தோடு சேர்ந்து, "கோள்நிலை, கோள்களுக்குப் பின் நிற்கும் விண்மீன்கள் நிலை ஆகியவற்றை வைத்து, மாந்தருக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும்?" என்று சொல்லும் கலையாக, வான்நிமித்திகமாக (astrology) அது உருமாறிப் போனது. (இப்படி அந்நூலின் குறிக்கோளே மாறிய பின்னும் கூடச் சோதிடம் என்ற சொல்லே புழக்கத்தில் இருந்தது. தொடக்க காலத்தில் அது வான்நூலைக் குறித்ததெனில் இன்று பலரும் வியக்கவே செய்வர். அதே நேரத்தில், சோதியம் என்ற சொல்லையே மூடநம்பிக்கை எனவுணர்ந்து அதனுள் இருக்கும் பழந்தமிழர்/இந்திய வானியல் அறிவை பெரும்பாலோர் புறக்கணிக்கிறோம்.)

இந்திய வானியல் என்பது, இன்று பெரிதும் வடமொழிக் கலைச்சொற்களால் குறிக்கப் பட்டு, தன் கருதுகோள்கள், கணக்கெடுப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. [அது குத்தர்(குப்தர்) காலத்தில் ஓர் இயக்கமாகவே, தமிழ் போன்ற வழக்கு மொழிகளிலிருந்து வடமொழி என்ற படிப்பு மொழிக்குப் பெயர்ப்புச் செய்ததால் உருவான விளைவு.] அதே பொழுது, சங்க இலக்கியங்களில் அறிவர் / கணியர் / வள்ளுவர் என்ற வல்லுநர் (திருக்குறள் எழுதிய வள்ளுவர் பற்றிய அடையாளக் கேள்வி சட்டென எழலாம்; இப்போதைக்கு அதைத் தேக்கி வையுங்கள்; பின் ஒருமுறை பார்க்கலாம்.) பற்றியும், அவருடைய வானியல் அறிவைப் பற்றியும், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் குறிப்புக்கள் பரக்கவுள்ளன. கூடவே, வடமொழியில் உள்ள வானியற் கலைச்சொற்களை அலசிப் பார்த்து அவற்றின் வேரைத் தேடினோம் எனில், வடமொழி வேர்கள் ஏற்கும் படியாய்க் கிடைக்காததும், ஆழப் பார்க்கையில் தமிழ்வேர்களே கிடைப்பதும் நம்மை வியக்க வைக்கும்.

இந்த அறிவர் / கணியர் / வள்ளுவரின் மெய்யியலாக, அவருக்குப் பின்னால் அறுவிகம் (ஆசீவிகம்) என்ற தமிழ்நெறி இருப்பதும் கூர்ந்து அறியத் தக்கது. (இன்றைக்கு அறுவிக நெறி அழிந்து போயிருப்பினும், அவற்றின் மிச்சசொச்சம் செயின நெறி, சிவ நெறி, விண்ணவ நெறிகளில் ஓரளவு கலந்தே கிடக்கின்றன. ஆசீவிகத்தின் பங்களிப்பை முற்றிலும் மறைத்து ஆசீவிகப் பள்ளிகளையும், அவர்களின் ஆக்கங்களையும் செயினரின் பங்களிப்பாகவும், சமணர் என்ற பொதுச்சொல்லில் அவரை ஆட்படுத்துவதும் கால காலமாய் நடந்துள்ளது.) பொதுவாக, 

அணுவியம் (atomism), 
ஊழியல் எனப்படும் நியதிக் கொள்கை (determinism), 
வினைமறுப்பியம் (முற்பிறவியின் தாக்கம் இப்பிறவிக்கு உண்டு என்ற கருமத்தை மறுப்பது) 

எனும் 3 கொள்கைகளின் வழி ஆசீவிகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். சங்க காலத்தில் இக்கொள்கைகள் பரவி யிருந்ததற்குச் சான்றாக பல பாடல்களைக் கூறமுடியும். (அதைச் சொன்னால் இங்கு நீண்டு போகும். எனவே அதற்குள் நான் போகவில்லை.)

அற்றுவிகக் கொள்கைகளில் முகன்மையானது நியதிக் கொள்கை. அக் கொள்கையின் படி, "இவ்வுலகம் ஓர் ஒழுங்கின்பால் கட்டுப்பட்டது. இந்த ஒழுங்கும் கூட, நமக்கு முன்னே கட்டப்பட்டது (pre-ordained)". 

இக் கட்டுதலை, இயற்கை  தானாகக் கட்டியதா, அன்றி கடவுளெனும் ஒரு கருத்தா கட்டியதா என்ற கேள்விக்குள் நாம் போகவேண்டியதில்லை (இரு வேறுபட்ட கருத்தாளர் இருந்திருக்கிறார். 

ஆசீவிகம் கடவுள் மறுப்பாக இருந்துள்ளது. மாறாக அதிலிருந்து, முன் சொன்னது போல், கடவுளை நம்பும் மதங்களும் இச்சிந்தனையை எடுத்தாண்டுள்ளன.) "ஏற்கனெவே எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்ட பிறகு, நடப்பது நடந்தே தீரும்" என்ற நிலையை, நியதி என்று சொல்வார். "ஊழில் பெருந்தக்க யாவுள" என்ற குறட்கருத்து ஆசீவிகத்தின் அடிப்படை உள்ளதே. "ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்" என்பது சிலம்பின் அடிக்கருத்துகளில் ஒன்றும் அப்ப்டியனதே. (சிலம்பைச் சமண நூல் என்பதா என்ற கேள்வி எழுவது ஊழ்வினைக் காரணம் பற்றியே.) 

பொதுவாக, ஊழ்வினையை முற்பிறப்பு வினை என்று பொருள் கொள்வது பிறழ்ச்சியானது. ஊழ்வினை என்பது pre-ordained action என்பதையே குறிக்கும். அதற்கும் முற்பிறப்பிற்கும் தொடர்பில்லை. ஆசீவிகம் ஊழோடு வினைமறுப்பையும் சேர்த்தே சொல்லும்.

இக்கால அறிவியல், நுட்பியற்காரருக்கு கணிதவழி சொன்னால் ஊழ், நியதிக் கொள்கை இன்னும் புரியக் கூடும். நியதிக் கொள்கை என்பது கலன (calculus) நூலில் தொடக்க மதிப்புப் புதிரிகளைப் (initial value problems) போன்றது. 

ஒரு வருதையான வகைப்புச் சமன்பாட்டையும் (ordinary differential equation), அதன் தொடக்க மதிப்பையும் (initial value) கொடுத்துவிடின், கால காலத்திற்கும் ஓர் இயக்கம் நடந்துகொண்டே இருக்குமென்று கலனவியலின் வழி புரிந்து கொள்வோம் அல்லவா? 

காட்டாக, மக்கள்தொகைப் பெருக்கத்தின் ஓர் எளிய மாதிரியாக (simple model)

dx/dt = kx; x(0)= a

என்ற சமன்பாட்டைச் சொல்வார். அதாவது, பெருகு வளர்ச்சியின் கண நேர வீதம் (instantaneous rate of growth), அந்தப் பொழுதில் ஏற்கனவே வளர்ந்துள்ள தொகையைப் பொறுத்தது என்று இச்சமன்பாட்டின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இச்சமன்பாட்டை வழக்கமான தொகைக் கலன (integral calculus) முறையில் இனம் பிரித்து தொகையேற்றிச் (if integrated) சுளுவி எடுத்தால் (solve)

x = a*exp (kt)

என்ற சமன்பாடு கிடைக்கும். இதில் exp(kt) என்பது kt என்பதன் இயல் மடக்கைக் (natural exponentiation or exponentiation of the number e) குறிக்கும். மேலும், k என்ற புறமதிப்பை (parameter) அல்லது நிலையெண்ணைப் (constant) பொறுத்து, a என்னும் தொடக்க மக்கள் தொகை, மடங்கி மடங்கிப் (exponential) பெருத்துக் கொண்டே போகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், நியதி அல்லது ஊழ்க்கொள்கையின் அடிப்படை புரியும்.

"இன்றைக்கு இருக்கும் உலக நிலை, நடப்புக்கள் என்பவை என்றோ தீர்மானிக்கப் பட்டவை. உலகத்தில் இருக்கும் ஒவ்வொன்றின் வளர்ச்சியும் கோள்நிலைகளையே பொறுத்தது (அதாவது k என்ற புறமதிப்பைப் - paramter -போல.) என்று நியதிக் கொள்கை கருதிக் கொள்கிறது. அதன் விளைவால், எந்தவொரு மாந்தனும் பிறக்கும் போது இருந்த கோள்நிலைகளைக் கணித்து வைத்துக் கொண்டால், அவன் வாழ்க்கையின் வெவ்வேறு கால நிலைகளில் "குறிப்பிட்ட நிகழ்வுகள் நடக்குமா, நடக்காதா?" என்று சொல்லிவிடலாமாம்.

அதே நேரத்தில், இதழுக்கும், கோப்பைக்கும் நடுவில் எவ்வளவோ துளிகள் சிந்தலாம் என்ற மொழிப்படி, இது போன்ற நியதிக் கொள்கையை மீறி எத்தனையோ நடக்கலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது; (அது சரிதான் நியதிக் கொள்கை ஆசீவிகத்தின் ஒரு பகுதி. அதுவே முழுப்பகுதியும் அல்ல. நான் ஆசீவிகத்தை வேறொரு தொடரில் விளக்குவதாய்ச் சொல்லி வந்துள்ளேன். செய்வேன். சற்று பொறுங்கள்)  ஆனாலும் நியதிக் கொள்கை மாந்த வரலாற்றை வெகுகாலம் நடத்தியிருக்கிறது. 

அண்மையில் இழுனாச் செயற்பாடுகளைப் (non-linear processes) பற்றியும், கசகு (chaos) பற்றியும், வண்ணத்துப்பூச்சி விளைவு (butterfly effect) பற்றியும், இன்னும் இது போன்றவை பற்றியும் அறியாத மட்டும், அறிவியலின் முகன்மைப் பகுதியான பூதியல் கூட நியதிக் கொள்கையின் படிதான் பல இடங்களில் வேலை செய்து கொண்டிருந்தது. (இக் கட்டுரையில் நியதி பற்றியே பேசுகிறேன்.)

இந்திய நியதிக் கொள்கையின் படி, ஊழ் என்பது நான்கு நிலைகளில் இயங்குமாம். (கீழே வரும் செய்திகள் தமிழக ஆய்வரண் வெளியிட்ட வெங்காலூர் குணா எழுதிய ”வள்ளுவத்தின் வீழ்ச்சி” என்ற நூலை ஒட்டியது. இந்திய மெய்யறிவியல் பற்றிய, குறிப்பாக ஆசீவிகம், விதப்பியம் (வைஷேடிகம்) பற்றிய, அருமையான நூல் அது. நூல் கிடைக்குமிடம்: பஃறுளி பதிப்பகம், 183, வேங்கடரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.)

அவை
------------------------
ஆவதாம் (அதுவாம் அது)
ஆமாங்காம் (அதுவாம் வகை)
ஆந்துணையாம் (அதுவாம் துணை)
ஆங்காலத்தாம் (அதுவாம் பொழுது)

ஒரு சினை (முட்டை) கருவாகி, அக்கரு குழந்தையாகி, குழந்தை அரிவை யாகும் (20 முதல் 25 அகவையாகும் பெண்) எவ்வளர்ச்சி (evolution), ஈன்களில் (genes) அமைந்துள்ள செய்திக் கோவையின் (message) படி ஏற்படும் இயற்கையைத் தான் "அதுவாம் அது (this is it)" என்று கூற்று சுட்டிக் காட்டுகிறது.

"இந்தச் சினை பின்னால் ஓர் அரிவைப் பெண்ணாகும், இன்னொரு சினை அப்படிப் பெண்ணாகாது" என்று வகைப்பதும் இயற்கையே (அதுவாம் வகை - classification).

"ஓர் அரிவையாக வேண்டுமானால் இவ்வளவு திரட்சி, இன்னின்ன சூழ்நிலைகள் இதற்கு இருக்க வேண்டும்" என்று தேவைப்படும் துணைகளை விதிப்பதும் இயற்கையே (அதுவாம் துணை - auxiliary conditions).

அரிவையாவது இன்ன பருவத்தில் என்பதும் இயற்கையே (அதுவாம் பொழுது - timing).
---------------------------------
நிமித்திகத்தின் அடித்தளமும் கூட இதுதான். அதாவது நியதிக் கொள்கை (determinism). "நியந்து கொள்ளப் பட்ட உலகில் ஓரளவு தான் நீங்கள் உங்கள் வாழ்வை மாற்ற முடியும்" என்ற புரிதல் நியதிக் கொள்கையின் வழியாய் அறியப் படுவது. இன்றைய அறிவியலின் படி நியதிக் கொள்கையைப் பல கேள்விகளுக்கு உள்ளாக்க முடியும்.

வான்நிமித்திகத்தின் படி, நாம் பிறந்த போது இருந்த கோள்கள் நிலையை வான நூலின் படி ஒரு படமாகப் பிடித்து, ஒரேவிதமான படப்பிடிப்புகளை எல்லாம் ஒரு தனி வகையாகப் பார்த்து, அந்த வகையில் இருப்பவருக்கு இன்ன விதமான வாழ்க்கை இருக்கும் என்று சொல்லுவது வான்நிமித்திகம். 

[அந்தப் படப்பிடிப்பைத் தான் சூல்தகம்>*சொல்தகம்>சாதகம் என்று சொல்வார். சூல்தல் = கருவுறுதல். சூல்த்தல் = கருவாக்குதல் (பிறவினை); சூலி, சூற்பெண்டு = கருவுற்ற பெண். கரு வளர்ச்சியுற்றுப் பிறக்கும் செயலை சூனித்தல்>சினைத்தல் என்று சொல்வார். இதேபோல கனித்தல் என்ற சொல்லும் பருவநிலை எய்தி உருவாதலைக் குறிக்கும். கனித்தல் / ஈனித்தல் / சினைத்தல் என மூன்று வினைகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. சினை என்ற சொல் பொதுவாக அஃறிணையில் கன்று, மகவு என்பதைக் குறிக்க, சூனு என்ற சொல் வடமொழியிலும், sun/sonne என்ற சொற்கள் இந்தையிரோப்பிய மொழிகளிலும் மகனைக் குறிக்கப் பயன்படும். இதேபோல, சூல்த்தம்> சூத்தம்> சூத்ரம் = சொல்ல வருவதை சுருக்கமாய், எல்லாம் அடங்கிய கருப் போலச் சொல்லுதல்.]

இனி நிமித்தம் என்பதைப் பார்ப்போம். நிமித்தம் என்பதற்குக் காரணம், சகுனம் என்று பலபொருள் சொல்வார். தொல்காப்பியத்தில் சில இடங்களில் இச்சொல் ஆளப்படுகிறது. குறிப்பாக, அகத் திணையியலில் உரிப்பொருள் பற்றிப் பேசும்பொழுது 960 ம் நூற்பாவில்,

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊட்ல் இவற்றின் நிமித்தம் என்று இவை
தேருங் காலை திணைக்கு உரிப் பொருளே

என்று வரும். இங்கே நிமித்தம் என்பதற்குக் காரணம் என்ற முதற்பொருள் குறிக்கப் பெறும். இதே போல 1037ம் நூற்பாவில்,

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பில்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே.

இதில் சகுனம் என்ற பொருள் குறிக்கப் படும். மேலும், 1050 ம் நூற்பாவில் "பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப" என்னும் போது காரணம் என்ற பொருளும், 1123ம் நூற்பாவில், "ஆவொடு பாட நிமித்தம் கூறலும்" என்னும் போது,   மீண்டும் சகுனம் என்ற பொருளும் வரும். தொல்காப்பியத்திற்குப் பிறகு வந்த சங்க நூல்களிலும் கூட இச்சொல் காரணம், சகுனம் என்று பொருள்களில் ஆளப்பட்டிருக்கிறது.

நிமித்தம் என்ற சொல்லாட்சி வடமொழியில் இருந்தே வந்திருக்க வேண்டும் என்று பலரும் எண்ணுகிறார். ஆனால் நிமித்த என்பதின் சொற்பிறப்பு அறிய மோனியர் வில்லியம்சு வடமொழி சொற்பிறப்பு அகரமுதலிக்குப் போனால், வழக்கம் போல சொல்லை உடைத்து, நி-மித்த என்று பிரித்து, மித்த என்னும் பகுதி மா என்னும் வேரில் இருந்து எழுந்திருக்கலாம் என்று ஊகமாகச் சொல்வார். விளக்கம் முழுதும் படித்தால் நம்மால் ஏற்கமுடிய வில்லை. "சரி, தமிழில் பிறந்து திரிந்து கிடக்குமோ?" என்ற ஐயம் உடன் எழுகிறது.

நிமித்தம் என்பதற்கு, திவாகரத்தில் நிபம், பொருட்டு, ஏது, திறன், வாயில் என்று சொற்களை இணையாகக் கொடுத்து "காரணந் தெரிசொல்" என்று பொருள் சொல்வார். [பின்வரும் நிகண்டுகளில் நிபம் என்ற சொல்லையே காணோம்.]

காரணம் என்பது கரு என்னும் சொல்லடியிற் பிறந்ததென்று  சொல்லறிஞர் ப.அருளியார் கருதுவார். கருவின் அணம் காரணம் என்றாகும். அதாவது கருவிற்கு நெருங்கியது காரணம். கருத்தல் என்பது தோன்றுதல் பொருளைக் குறிக்கும். காரணம் தமிழாக இருக்கையில், ”கரு”வில் ஏற்பட்ட காரியமோ ஓர் இருபிறப்பிச் சொல் என்பார். ”கருமம்” அதற்கு இணையான தமிழ்ச்சொல்.

இதே போல இயல் எனும் சொல்லடியில் பிறந்த வினைச்சொல் இயல்தல்; இதற்குப் பொருள் ஏற்படுதல், உண்டாகுதல் என்பதாகும். இயல்தலின் திரிவு ஏல்தல். ஏல் எனும் அடியில் கிளைத்ததே ஏற்படல் என்ற கூட்டு வினைச்சொல். இனி, ஏல்து என்னும் சொல்லடி ஏல்து>ஏது என்றாகும். ஏது என்ற சொல் காரணப் பொருளைத் தருவது இப்படித்தான். ஏதுசாற்றம் என்ற கூட்டுச்சொல் hethusAsthra என வடமொழியில் திரியும். Logic என்பது இதன் பொருள். இதைக் கற்கக் காஞ்சிபுரத்திற்கு புத்தர் காலத்தில் வந்திருக்கிற செய்தி புத்த நூல்களில் தெரிகிறது.

காரணத்தோடு தொடர்புடைய பொருட்டு என்ற சொல்லை 2,3 வகையாய்ப் பயன்படுத்துகிறோம். "எதன் பொருட்டு இவர் இப்படிக் கத்துகிறார்?" எனும் போது காரணம் என்ற பொருளும், "அப்படி எல்லாம் அவர் நினைத்தால் எனக்குப் பொருட்டில்லை" என்னும் போது "மதிப்பிற்குரியது" என்ற பொருளும் காணப்படுகிறது.

"ஒன்றின் வாயிலாய் இன்னொன்று பிறக்கும்" எனும் போது, வாயில் என்ற சொல்லும் காரணப் பொருளைப் பெறுகிறது. திறவு/திறன் என்ற சொல்லும் கூட வாயில்/கதவு என்ற பொருளின் வழியாகக் காரணத்தை உணர்த்துகிறது.

இனி நிமித்தத்திற்கு வருவோம். தமிழில் தன்வினைச் சொல்லான நிற்றல் என்பதன் பொருளை நாம் அறிவோம். அதைப் பிறவினையாக்கும் போது நிருவுதல்> நிறுவுதல், நிருமுதல்> நிருமித்தல், நிற்பு+ஆட்டுதல் = நிற்பாட்டுதல்> நிப்பாட்டுதல் என்றெல்லாம் வட்டாரத்திற்கு ஏற்பச் சொற்கள் எழும். இவை எல்லாவற்றிற்கும் நிற்கவைத்தல் என்றே பொருள் கொள்கிறோம். இதே பொருட்பாட்டில் தான் ஏல் + படுதல் = ஏற்படுதல் என்ற கூட்டு வினைச்சொல் எழும். ஏற்படுதல் என்பது தன்வினையாகும் போது, அதன் பிறவினையாய் ஏற்படுத்தல் என்ற சொல் எழும். நிருமித்தல் என்பதும் ஏற்படுத்தல் என்பதும் ஒரே பொருட்பாடு உடையவையே.

ஒன்றை ஏற்படுத்தினால், இன்னொன்று விளையும் என்ற பொருளில் ஏற்பாடு என்ற சொல் காரணமாயும், ஏற்படுவது விளைவாயும் கொள்ளப் படுகிறது. சில போது இவ்விளைவை நிருமானம்> நிருமாணம் என்கிறோம். நிருமித்தம், ஏற்பாடு போன்ற சொற்களுக்குக் காரணப்பொருள் உண்டாவதை மேற்கூறிய கருத்துக்களின் வழி புரிந்து கொள்ளலாம். . இனி பெருநை> பெண்ணை என்று ஆவதுபோல, பெருமான்> பெம்மான் என்று ஆவது போல, நிருமித்தம் என்பது நிம்மித்தம்>நிமித்தம் என்று திரியும். [நிருவுதல் என்பதன் வழியாக, நிருபா தானம் = முதற் காரணம் இன்மை, நிருபாதி = காரணம் இன்மை, நிருபாதிகம் = காரணம் அற்றது என்ற இருபிறப்பிச் சொற்களும் உருவாகி இருக்கின்றன.]

வாழ்வின் ஒவ்வொரு விளைவுகளுக்கும் நிமித்தம்(=காரணம்) கண்டுபிடித்துச் சொல்வதும், இந்நிமித்தம் ஏற்பட்டுவதால், இன்னது விளையும் என்பதும் நிமித்திகத்தின் புலனமாகும். இந்நிமித்திகத்தில் செய்கணம் (=சகுனம்) என்பதும் ஆழ்ந்து பார்க்கப் படுகிறது. எப்படி இலக்கியத்திற்கு இலக்கணம் ஆதாரமோ, எப்படிக் கருமத்திற்குக் காரணம் ஆதாரமோ, அதே போல செய்கைக்கு அணம் செய்கணம்> செகுணம்> செகுனம்> சகுனம் ஆதாரம் என்று முன்னோர் நம்பினார். (இச் செகுனம் என்பது இற்றை அறிவியலில் signal என்று சொல்லப்படும்.) பல நேரம் இது அறிவியலின் படி இருந்தாலும், ஓரோ வழி மூட நம்பிக்கையாயும் இது அமைந்து விடுவதுண்டு.

மேகம் கருத்தால், மழை வரும் என்பது பட்டறிவு. இதில் மழை என்பது செய்கை. கருத்த மேகம் என்பது செய்கணம் அல்லது நிமித்தம். கருத்த மேகத்தைப் பார்த்து மழைவரும் என்று சொல்வது நிமித்திகம். 

இன்னொரு எடுத்துக்காட்டையும் கூறமுடியும். ஒரு இடத்தில் பெரும் நில அதிர்வு ஏற்படப் போகிறது; அந்த அதிர்வு ஓர் அலையுயரம் (amplitude), அல்லது பருவெண்ணைக் (frequency) காட்டினால் தான் மாந்தரால் அறியமுடிகிறது. அதற்குள் பெரும் அழிவுகள் ஏற்பட்டுவிடக் கூடும். மாறாக ஒரு சில பறவைகள் (புள்கள்), நுண்ணுயிரிகள், குறுவிலங்குகள் போன்றவை, மிகச் சிறிய அதிர்வுகளால் கூட அங்குமிங்கும் ஓடத்தொடங்கும் அல்லது பறக்கத் தொடங்கும். அதைக் கவனித்து இன்னும் இத்தனை மணி நேரத்தில் பெரிய நில அதிர்வு ஏற்படப் போகிறது என்று சொல்வதும் நிமித்திகம் தான். அதே போல மழை வரப் போகிறது என்று கணித்துச் சொல்லுவது, இம்முறை வெய்யில் அதிகமாய்  வாட்டும் என்று முன்கூட்டிச் சொல்வது, கடல் பொங்கும் என்று ஆருடம் சொல்வது என்பவை எல்லாமே நிமித்திகம் தான்.

நாளாவட்டத்தில், பல்லி கவுளி சொல்லுவது, பூனை குறுக்கே போவது என்று மூடநம்பிக்கைகளுக்குப் போய்ச் சேரினும். தொடக்கத்தில் நிமித்திகத்தில், இயற்கையைக் கூர்ந்து கவனிக்கும் ஈடுபாடே இருந்தது புலப்படுகிறது.

நிமித்திகத்திற்குப் பக்க வலுவாக சோதியத்தைச் சேர்த்து வான்நிமித்திகம் வந்தது எப்பொழுது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை; ஆனால் சங்க காலத்தில் இக்கலை ஏற்பட்டு விட்டது என்பது பல பாடல்களால் தெரிகிறது. காட்டாக, "எரிமீன் விழுந்தது; சேர அரசன் இறக்கப் போகிறான்" என்று நிமித்திகம் கூறும் புறநானூற்றின் 229ம் பாடல்,

ஆடியல் அழற்குட்டத்து
ஆரிருள் அரைஇரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயங்காயப்
பங்குனிஉயர் அழுவத்துத்
தலைநாள்மீன் நிலைதிரிய
நிலைநாள்மீன் அதன் எதிர் ஏர்தரத்
தொல்நாள்மீன் துறைபடியப்
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பி னானே
(புறம் 229)

வழியாக, வான்நிமித்திகத்தின் தாக்கம் சங்க காலத்தில் இருந்ததைத் தெளிவாகவே அறிகிறோம். இதுபோன்ற பாடல்களில் இருக்கும் வானியல் அறிவு ஒருபக்கம் நம்மை வியக்க வைக்கும் போது, இன்னொரு பக்கம் நிமித்திகத்தின் ஊடுருவலையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இனி மூன்றாம் சொல்லுக்கு வருவோம். ஆரூடம் என்ற சொல்லிற்கும் வடமொழியில் வேரில்லை, ஆரூடம் என்பது முதலில் வான்நிமித்திகத்தின் விதப்பான முறையாகவே உணரப்பட்டது. அதாவது சூல்தகம் (=சாதகம்) பார்க்காமல், கேட்க வரும் நேரத்தில் "ஓரைகள் (ராசிகள்) எந்த அளவிற்கு உச்சம் பெற்றிருக்கின்றன; இந்நேரத்தில் கோள்கள் எப்படிப் பாதிக்கும்?" என்று கணித்து நிமித்திகம் சொல்வதே ஆரூடம் என்று அறியப் பட்டது.

நாளாவட்டத்தில் எல்லாவிதமான ஊக வேலைகளையும் (guesswork) கூட ஆரூடம் என்று சொல்லத் தொடங்கினார். எண்சோதிடம் கூட இன்னொரு கிளையாகப் பிரிந்தது. ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலனைச் சொல்லி, அவ் எண்களுக்குக் கோள்நிலைகளோடு தொடர்புறுத்தி, எண்களை தாயக் கட்டைகள், சோழிகள் மூலம் போட வைத்து, மொத்தத்தில் பெரிய ஊக வேலைகள் இங்கு நடந்து கொண்டிருந்தன.

ஆரூடம் என்பதை ஆர்+ஊடம் என்ற கூட்டுச் சொல்லாகப் பிரித்தே சரியான சொற்பிறப்பு காண்கிறார். ஏர்தல்>ஏறுதல், ஊர்தல் = ஏறி நகருதல்; ஏகாரம்/ஊகாரம் போன்றவை ஆகாரமாய்த் திரிவது தமிழில் இயற்கையே. ஏறிவந்து ஒருவர் நிமித்திகரிடம் ஆரூடம் கேட்கும் போது, கோள்கள் ஓரைகளின் உச்ச நிலையில் இருப்பதை ஒட்டி, அதனூடாகப் பலன் சொல்வது ஏரூடம்> ஆரூடம் ஆகும். இதைப் ப்ரசன்ன சோதிடம் என்றும் வடமொழிப் படுத்திச் சொல்வார். அண்மையில் கேரளாவில் அய்யப்பன் கோவிலில் சோழிகளைப் போட்டு ப்ரசன்னம் பார்த்த குழப்பம் செய்தித் தாளில் படித்திருப்போமே? இந்த ஆரூடம், ப்ரசன்னம் பார்ப்பது கேரளத்தில் மிகுதியானது. தமிழகத்தில் குறைவு.

இப்படிச் சோதியம், நிமித்திகம், ஆரூடம் போன்றவை சற்றே வேறுபட்டாலும், எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒன்றிற்கு மாற்றாக இன்னொரு சொல் புழங்குவது இன்று வழக்கமாகிப் போனது.

இக்கட்டுரை நெடுகிலும், நிமித்திகம், ஆரூடம் போன்றவை சரியா, மூட நம்பிக்கையா என்ற கேள்விக்குள் நான் போகவில்லை. இதை மறந்து விடாதீர்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, October 21, 2006

தீபாவளி வாழ்த்துக்கள்

கீழே வருவது மூன்றாண்டுகளுக்கு முன் தமிழ் உலகம் மடற்குழுவில் எழுதியது. இங்கு இப்பொழுது அதை மீளும் பதிகிறேன்.
-----------------------------------------

திடீரென்று அலுவ வேலையாற் பணிக்கப் பெற்று, மறுபடி சென்னை. இன்று காலை வந்தேன். நாலே நாட்களில் சவுதி செல்ல வேண்டும்.

வான்பறனை கீழிறங்கும் போது, அதன் செலுத்தியார் சென்னை அருகாமை வந்தவுடன் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி, இருக்கைகளை நேராக்கிக் கொள்ள நம்மைப் பணிக்கிறார். பறனை கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. கண்ணாடிச் சாளரத்திற்கு வெளியே பனி கலந்த மேக மூட்டம். எத்தனை பேர் இதற்குப் பொறுப்பு? நகரம் எங்கிலும்? வழமையான சென்னை. அதன் வேடிக்கைக் கூத்துகள்.

அருகே இருந்த பிரஞ்சுப் பெண்மணி, இந்த மேக மூட்டத்திற்குக் காரணம் கேட்கிறார். நான் "நாலைந்து நாட்களாக நல்ல மழை; சில இடங்களில் நகரத்துள் வெள்ளம்; வடியச் சில நாட்கள் ஆகலாம்; தவிரத் தீபாவளிநாள்; முன்னாளின் இரவிலும், இன்று அதிகாலையிலும் வெடிகள், மத்தாப்புக்கள் என்று பலதும் கொளுத்தப் பட்டிருக்கும்; அதனால் எழுகிற புகை இந்தப் பனியோடு கலந்து கலையாத மேக மூட்டத்தைக் கிளப்பிவிட்டிருக்கும்", என்று விளக்கம் சொன்னேன்.

"என்னது வெடியா? நேற்று வந்திருக்கலாமே? வாண வேடிக்கை அழகைப் பார்த்திருக்கலாமே?" என்று என்னிடம் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு தன் தோழியரோடு பிரஞ்சில் அதை ஆர்வத்தோடு சொல்கிறார்.

"தீபாவளி எதற்குக் கொண்டாடுகிறார்கள்?" என்ற அவரது கேள்விக்கு, ஓரளவு சுருக்கமாக கூடவே விரைவாக மறுமொழி சொல்லி முடிக்கிறேன்.

பறனை ஓடுகளத்தைத் தொட்டுவிட்டது. உள்ளே ஈரப்பதம் மாறிக் கொண்டிருப்பதை உணருகிறேன்.

வான்பாலத்தை அணைந்தாயிற்று.

நான், வான்பறனைப் பணிப்பெண்ணுக்கு முகமன் சொல்லி தீபாவளி வாழ்த்தும் சொல்லி வெளியேறுகிறேன். அந்த பகுரைனி அரபுப் பணிப்பெண் வியந்து கொள்ளுகிறாள். முகம் நிறையப் புன்சிரிப்பு.

வெளியே வந்து வண்டியில் ஏறி வீட்டிற்குப் புறப்படும் போதும் மேக மூட்டம் கலையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே மேகமூட்டம் தான். மழை இருந்தாலும், இல்லாவிட்டாலும். நகரத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையெங்கும் ஈரம்; அதன் மணம்; மணத்துள் ஒரு பாந்தமான உணர்வு. இதுதான் சென்னை. உள்ளிழுத்துக் கொள்ளுகிறேன். நெஞ்சுகள் நிறையட்டும்.

இந்த மண் தாகத்தால் ஏங்கியதே? தாகம் அடங்கியதோ? வழி நெடுகிலும் அஞ்சடிகளில் நாலைந்து நாட்களில் முளைத்த புல்வெளிப் பச்சை. ஆங்காங்கே சாலைகளில் ஈயென்று வாய் பிளந்த பள்ளங்கள்; மதகு இல்லாச் சிறு சிறு நீநீர்த்தேக்கங்கள். எங்கள் நகரம் மாறவே மாறாதோ?

நான் வாழும் பகுதிக்கு அண்மையில் வந்தாயிற்று. "நிறுத்துக்கள். அங்கு ஏதோ ஒரு சிறுவன் வெடி வைக்கிறான்" என்று உந்து ஓட்டுநருக்குச் சொல்லுகிறேன். ஆயிரம் இழைச் சீனச் சரவெடி (இப்பொழுதெல்லாம் சீனவெடி என்ற சொல்லே இளையருக்குத் தெரிவதில்லை. எல்லாம் தௌசண்ட் வாலா தான். எங்கோ மரபுத் தொடர்புகள் அறுந்து கொண்டு இருக்கின்றன. வணிக வேகம் சிந்தனையை மறைக்கிறது.) வெடி காதை அடைக்கிறது. புகை கண்ணை மறைக்கிறது.

நின்று காத்து வண்டி தொடருகிறது.

வீட்டுக்கு வந்தாயிற்று; எண்ணெய்க் குளியல் செய்தே ஆகவேண்டும் என்று துணையாள் அடம் பிடிக்கிறாள். அவள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டோ? குளியல் ஆயிற்று. புத்தாடைகள் வீட்டில் குத்து விளக்கிற்கு எதிரே. இதையெல்லாம் சொல்லவேண்டுமோ? மஞ்சள் தடவி, பக்கத்தில் மாதிரிக்குக் கற்கண்டு வடையை ஏனம் நிறைய வைத்துப் படைத்து, பல்லாண்டு சொல்லித் தண்டனிட்டு, வணங்கி, புத்தாடைகளை எடுத்துக் கொள்ளுகிறோம்.

கற்கண்டு வடையை எத்தனை நாளுக்கு அப்புறம் பார்க்கிறேன்? நாக்கில் நீர் ஊறுகிறது. "அதெல்லாம் முடியாது கோயிலுக்குப் போய்வந்த பிறகுதான்" என்கிறாள் மனைவி. அவளை ஆற்றுப் படுத்தி என் வழிக்கு மாற்றுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரிலும், தொலைக் காட்சியிலும் நடைபெறுகின்றன.

ஆயிற்று; கோயிலுக்குப் போக வேண்டியதுதான். எங்கள் வீட்டின் முன்னும் ஒரு சீனச் சர வெடி (போன ஆண்டு ஆயிரங் கண்ணிச் சர வெடி வாங்கிய என் மனையாள் இந்த ஆண்டு நூறு கண்ணிச் சரவெடி தான் வாங்கியிருக்கிறாள்.)

இதோ, கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியே உறவினர், நண்பர்கள் பார்த்துத் திரும்பவேண்டும்.

எப்படியோ எதிர்பாராமல் சென்னைக்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு தீபாவளி. எப்பொழுதும் உள்ள சடங்கு அதே கதியில் தொடர்கிறது. நரகாசுரன் எதற்காகத் தீபாவளியைக் கொண்டாடச் சொன்னான்? புரியவில்லை.

"அடச்சே! எதற்காக என்று தெரிந்து என்னாகப் போகிறது? :-) எல்லாமே ஒரு பூடகமான நம்பிக்கை தானே? கலகலப்பு இருந்தால் தானே வாழ்க்கை?" நான் என்னையே ஆற்றுப் படுத்திக் கொள்ளுகிறேன்.

"இந்தா, வந்துட்டேன். தீப்பெட்டியைக் கொண்டு வரேன்" என்கிறாள் என் மனைவி.

உடைந்த செங்கற் சில்லின் மேல் சீனச் சரவெடி...........

மறுபடியும் சத்தம்...... மறுபடியும் புகை..... மேக மூட்டம் விளைவிப்பதில் எங்களின் பங்கு.

தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, October 12, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 4

மீண்டும் குவி விளக்குக்கு வேலை வந்திருக்கு; ஏன்னா, மேற்கொண்டு சில அடையாளங்களையும் காட்டோணும். இந்தத் தொல்காப்பியரை ஒரு தேர்ந்த நாடகக் காரர்னு முன்னாடிச் சொன்னேன். தேர்ந்த நாடகக் காரர் ஆடுநர்களையும் ஆட்டத்திகளையும் சரியான நேரத்திலே நாடகத்துக்குள்ளே கொண்டாருவார்; அவர்களுடைய குணநலன்களைக் கொஞ்சம் கொஞ்சமா வெளிப்படுத்துவார்.

அந்த வகையிலெ, தொல்காப்பியர் முதல்லே 30 பேரைச் சிறப்பான எழுத்துக்களாச் சொன்னார்; அப்புறம் அலங்கடையா, இன்னும் மூணுபேரைக் காட்டினார்; மேலே, கொஞ்சம் போய் 30 பேருலெ அஞ்சு பேரைக் காட்டி இவங்கள்லாம் குற்றெழுத்துக்காரர்ன்னு சொன்னார்; அப்புறம் இன்னும் ஏழு பேரைக் காட்டி இவங்கள்லாம் நெட்டெழுத்துக்காரர்ன்னு சொன்னார்; அவற்றுக்கு அளபும் சொன்னார்; மூவளபு வேணும்னா, ஒரு நெட்டெழுத்து, ஒரு குற்றெழுத்துன்னு பக்கத்திலெ பக்கத்திலெ வச்சு சரி பண்ணிக்கிங்கோன்னு வழிமுறை சொன்னார். கடைசியா, அளபு அல்லது மாத்திரைங்குறதுக்கு ஒரு வரையறையும் சொன்னார்.

ஆனா, குற்றெழுத்து, நெட்டெழுத்துன்னு சொல்ற இந்த பன்னிரண்டு பேரும் யாரு, ஒரே மாதிரி ஆட்களான்னு சொல்லலை. அதாவது உயிரெழுத்துன்னு எதையும் இதுவரை நேரடியாச் சொல்லலை; அதே போல மெய்யெழுத்து எதுன்னும் நேரடியாச் சொல்லலை. அப்புறம், மெய்யும் உயிரும் கலந்தா, உயிருக்கு என்ன ஆகும்? ஞாயமான கேள்வி. இதுக்கெல்லாம் மறுமொழி சொல்றாப் பொலெ, அடுத்து 8ம் நூற்பாவில் இருந்து 13 வரை ஒரு தொகுதியாகப் பார்ப்போமா?

8. ஔகார இறுவாய்ப்
பன் ஈர் எழுத்தும் உயிர் என மொழிப

9. னகர இறுவாய்ப்
பதின் எண் எழுத்தும் மெய் என மொழிப

10. மெய்யோடு இயையினும் உயிரியல் திரியா

11. மெய்யின் அளபே அரை என மொழிப.

12. அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே.

13. அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையுடன் அருகும்;

தொல்காப்பியம் எழுந்த காலத்திலே, மெய்யியல் (philosophy) கொஞ்சம் கொஞ்சமாத் தென்னகத்துலே பரவியிருக்கோணும். உடல்(body)ங்குறது வேறே; அதுலே இருக்குற இயக்கம் (movement) வேறேங்குற புரிதல் எப்படியோ தமிழ் மாந்தனுக்கு ஏற்பட்டிருக்கு. பொதுவா, தொல்காப்பியத்துக்குள்ளே வெவ்வேறு நெறிகளை (சமணம், சிவநெறி, வேத நெறி, உலகாய்தம் எனப் பலவற்றைத் துழாவித்) தேடி இனங் காட்டுறதுலே சிலபேருக்கு ரொம்பவுமே ஆசை. அந்த வேலைக்கு நான் இங்கே போகலை. ஆனா, ஒன்றைச் சொல்லாமப் போகக் கூடாது.

உடல், உயிர்னு தொல்காப்பியத்துலே பிரிச்சார் பாருங்க, அது மெய்யியல் சார்ந்த கருத்துன்னு ஆணித்தரமாச் சொல்லலாம். ஒரு மொழி இலக்கணத்துக்கு மெய்யியல் வழி ஒரு போல்மம் (model) உருவாக்குறது என்பது தேவையா? ஆனா, அப்படி ஒரு போல்மத்துலே தான் தமிழ்மொழி இலக்கணம் உருவாகி நிக்குது. இந்தப் போல்மத்திற்கு இயற்கையிலே பெற்ற பட்டறிவும் (experience) காரணமாய் இருக்கலாம்.

பொதுவா, இறப்புங்குற ஒரு நிகழ்ச்சி, மாந்தனைப் பெரிதும் யோசிக்க வைக்குது. அதுவரை இயங்கிக்கிட்டிருந்த உடல் இறப்புக்கு அப்புறம் இயங்காமப் போகுது. அதுவரைக்கும் உசு, உசுன்னு மூச்சு விட்டுக் கொண்டிருந்த உடல் அப்பாலெ, மூச்சு விடமாட்டேங்குது. உசிர்>உயிர் நின்னு போச்சுங்குறோம். உய்த்துக் கொண்டு இருத்தலை உயிர் உள்ள நிலையாகக் கொள்ளுவது, நம்பா மதமான (religion which does not believe in existence of God) உலகாய்தத்துக்கும் (Lokaytham), நம்பும் மதமான (religion which believes in the existence of God) மற்ற நெறிகளுக்கும், எதிரான நிலையில்லை. ஆனா, உயிர் தனித்து இயங்குமா என்பதில் நம்பா மதமான உலகாய்தம் மாறுபடும். உயிர் தனித்து இயங்கும் என்ற மெய்யியல் உலகாய்தத்திற்குப் புறம்பாகி, நம்பும் மதங்களின் மெய்யியலுக்குள் தான் அமைகிறது.

எனவே நூற்பா 8ன் வழியாகத் "தான் ஒரு நம்பும் மதத்தானே (believer)" என்று தெளிவாகத் தொல்காப்பியர் சொல்லுகிறார் என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன்.

ஆகப் பன்னிரு எழுத்தும் உயிர் என்று சொல்வார். மொழிதல் என்பதும் சொல்லுதல் என்பதும் ஒரே பொருள் உள்ள சொற்கள் தான். இதே போல னகரம் முடிய மீந்து இருக்கும் பதினெட்டும் மெய்யெனச் சொல்லுவார்கள் - இது ஒன்பதாம் நூற்பாவின் கருத்து.

இந்த 8, 9ம் நூற்பாக்கள் வெறுமே அடையாளமும் பேரும் சொல்ற நூற்பாக்கள். ஆனாப் பத்தாவது நூற்பா, கொஞ்சம் ஆழமானது.

"மெய்யோடு சேர்ந்தாலும் உயிர் தன்னோட இயல்பில் திரியாது"

இயைதல்ங்குற சொல்லுக்குப் பொருந்துதல், புணருதல், கலத்தல்னு பொருள் உண்டு. [ஒரு காலத்துலே கோவை நுட்பியல் கல்லூரி "தொழில்நுட்பம்" மலர்க்குழுவிலெ இருந்த நாங்க, இயல்பியல்னு பூதியலுக்கு (physics) பெயர் கொடுத்த அதே நேரத்துலெ, வேதியியலுக்கு இயைபியல்னு பேர் கொடுத்தோம். இந்த இயல்பியல்ங்குற சொல் நிலைச்சுப் போச்சு (முட்டாத் தனமா, இயற்பியல்னு பலுக்கல் மாறியது ஒரு சோகம். இனியாவது பிழை தெரிஞ்சுதுன்னா, சரியான சொல்லை உருவாக்குன நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம்.) ஆனா, இயைபியல்ங்குற சொல் நிலைக்காமலே போச்சு. எந்தச் சொல் நிலைக்கும் எது நிலைக்காதுன்னு சோதியமா (=ஆருடம்) கூறமுடியும்? ஒரு மொழியிலெ, சொற்களைப் பரிந்துரைக்கத் தான் முடியும்; மிச்சதெல்லாம் மக்கள் கையிலெ.]

உடலோட உயிர் பொருந்தோணும், புணரோணும், கலக்கோணும். அப்படிப் பொருந்தினா, உயிர் தன் இயல்பை விட்டுருமா? விடாதுன்னு சொல்றார் தொல்காப்பியர். இதுவரை உயிர் எழுத்துக்கு என்ன இயல்பு சொன்னார்? "சிலது குறுகி ஒலிக்கும்; சிலது நெடிது ஒலிக்கும். குறுகி ஒலிக்குற போது ஓரளபு, நெடுகி ஒலிக்குற போது ஈரளபு. அளபுக்கு வரையறை நமக்குத் தெரியும்". இதுதான் அவர் சொன்னதின் உள்ளடக்கம்.

உயிர் தன் இயல்பு திரியாது - அப்படின்னா என்ன? மெய்யோடு சேர்ந்தாலும், உயிர் எப்படி ஒலிக்கணுமோ, அப்படித்தான் ஒலிக்கணும் அவ்வளவு தான்.

முன்னாலெ சொன்னாப்பொலெ, மூடிய அசையா இருக்கலாம், அல்லது திறந்த அசையா இருக்கலாம். சில மொழிகள் இரண்டையுமே வச்சுக்கும். (காட்டு: ஆங்கிலம், bii - திறந்த அசையொலி, ef - மூடிய அசையொலி). தொல்காப்பியர் திறந்த அசையை மட்டுமே வச்சிக்கிட்டு தமிழ் இலக்கணம் சொல்லுறார். ஆனா, திண்ணைப் பள்ளிக்கூடத்துலெ நாங்க படிக்குற காலத்திலே, 1950 கள்லெ, மூடிய அசையை வச்சு மெய்யைச் சொல்ற பழக்கமும் உண்டு. இக், இங், இச், இஞ், இப்படி அந்த வரிசை போகும். இந்த அசை மாற்றம் எப்ப வந்ததுன்னு எனக்குத் தெரியலை.

இயல்பு திரியாதுங்குறது மாத்திரையைப் பற்றியது. க் ங்குற மெய்யும் ஓ ங்குற உயிரும் சேர்ந்தா, கோ ங்குற உயிர்மெய்க்கு 2 1/2 மாத்திரை வரணும் இல்லையா, ஆனா, அந்த அரை மாத்திரை காணாமப் போயி, உயிருக்கு எவ்வளவு மாத்திரை இருந்துதோ, அதே மாத்திரை அளவுதான் உயிர்மெய்யான கோ - வை ஒலிக்குறதுக்கு எடுத்துக்கிறோம். இதையும் கவனத்துலெ கொள்றது நல்லது.

பல குறியேற்றக்காரர்கள், மெய்யும் உயிரும் பொருந்துறது, இயைகிறது ஏதோ ஓர் இழுனிய செயலாக்கம் (linear process)னு நெனைச்சுக்கிறாங்க. தங்களுடைய பேச்சுக்கள்லெ சொல்லவும் செய்கிறாங்க. அப்படி இல்லைங்க. அது பிழை. மாத்திரை குறைஞ்சுது பாருங்க, அப்பவே அது இழுனிய செயலாக்கம் இல்லை; இழுனாச் செயலாக்கம் (non-linear process) னு புரிஞ்சிக்கோணும். கிட்டத் தட்ட ஒரு வேதிச் செயல் போலவே உயிரும், மெய்யும் இங்கு பொருந்துகின்றன; இயைகின்றன. 

இழுனிய செயலாக்கம்னா, இப்படிப் பொருந்தியிருக்காது. ஒரு சின்னத் தட்டு தட்டுனா, உயிர் ஓடியே போயிடும். [இழுனிய செயலாக்கம் = linear process; இழுனை = line; இதைக் கோடு என்று சொல்லிப் போனால் அது, பல முன்னொட்டுப் பயன்களைத் தருவதில்லை. அதே போல, நேர் என்பதும் direct என்ற பொருள் தருகிறதே ஒழிய, line என்ற பொருள் தருவதில்லை. நேர்கோடு என்பது நீர்வீழ்ச்சி மாதிரியான பயன்பாடு; என்னைப் பொறுத்தவரை அது சொல்விளக்கத்திற்குப் பயன்படுமே ஒழிய, கலைச்சொல்லாகப் பயன்படாது. மிகுந்த யோசனைக்கு அப்புறம் தான், இப்பொழுது இரண்டு மூன்று ஆண்டுகளாக, இழுனை என்ற சொல்லை ஆண்டு வருகிறேன். என்னுடைய கசகு - chaos - பற்றிய பாடலில் பயன்படுத்தியிருந்தேன்.]

அடுத்து, 11, 12 ஆம் நூற்பாக்களில் மெய்க்கும், சார்பெழுத்துக்களும் ஒலிக்கும் அளபு அரை மாத்திரை என்று சொல்கிறார்.

இனிப் பதிமூன்றாம் நூற்பாவிற்குப் போவோம். இதுலே இளம்பூரணர்லேர்ந்து நான் சிறிது மாறுபடுறேன். என்னோட புரிதலின் படி, மேலே எழுதியிருக்குற நூற்பாவின் இரண்டாவது வரி அரையடி தான். மிச்ச அரையடியை 14ம் நூற்பாவோட சேர்க்கணும். அப்பத்தான் 14ம் நூற்பா விளங்கும். அந்த நூற்பா மகரத்தின் வடிவைப் பற்றிச் சொல்லுகிறது. மேலே சொன்ன அரையடி 14ம் நூற்பாவோடு சேரலைன்னா, திடீர்னு இருந்தாப் பொலெ, ஏன் வடிவு பத்திச் சொல்றார்னு கேள்வி எழும். ஒரு கணுத்தம் (continuity) இல்லாம இருக்கும். (ஆனா, இளம்பூரணர் மிச்ச அரையடியையும் 13ம் நூற்பாவோட சேர்ப்பார்.) இப்போதைக்கு, நான் எழுதுன படியே பொருள் சொல்றேன்.

இந்த மகரம் இருக்கும் பாருங்க, அது வாய் தொறக்காம முணகுற ஒலி. இந்த ஒலியை மற்ற மெல்லினங்களுக்கு அப்புறம் கூடச் சேர்த்து முணகலாம். காட்டா, "கொண்ம்" - கொண்டுவா. "போன்ம்" - போலும். இப்படி முணகுறாப் பொல வர்ற இடத்துலே அரை மாத்திரை கூட இல்லாம கால்மாத்திரை அளவுதான் ஒலிக்குறோம். இந்தக் காலத்தில் அன்றாடப் பேச்சில் கூட, "ம், இப்பத்தான் வந்தீங்களோ" என்று சொல்கிறோம். ம் கொட்டுகிறோம். பொதுவா, இந்த இம்மை கால் மாத்திரையாப் பலுக்கலாம், அரை மாத்திரையாப் பலுக்கலாம், ஏன், இன்னும் நீட்டிக் கொண்டு வேணும்னாலும் செய்யலாம். இந்த முணகுற ஒலி கொஞ்சம் நுணுகிய ஒலி. கவனம் வேணும்.

அடுத்து, 14ல் ருந்து 17 வரையான நூற்பாவைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் கால எழுத்துமுறைகளை கல்வெட்டு ஆசிரியர்களை வைத்துக் கொண்டு முழுக்கப் புரிந்து கொள்வது நல்லது. அதை அடுத்த பகுதியிலெ பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 10, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 3

கூத்து மேடைங்கள்லெ கூத்தை முன்கொண்டு செல்றது அதில் நடிக்குற ஆடுநர், ஆட்டத்தி மட்டுமில்ல. மேடையின் ஓரத்தில் இருக்குற இசை வல்லுநரும், கதைசொல்லியும் கூடப் பொறுப்பு கொண்டவக தான். சில இடங்கள்லெ, கதைசொல்லி மேடைக்கு நடுவிலும் கூட வந்துபோவார். இந்தக் கதைசொல்லியைச் சூத்ரதாரின்னு வடமொழிலெ அழைப்பாங்க. சூதர்>சூத்ரர் என்பவரைப் பாணர் = பாட்டுப் பாடுபவர் என்று தமிழில் சொல்லுவாக. இவக, பொதுவாக, அரசன் / தலைவன் ஆகியோரின் புகழ் பாடுறவுக.

இங்கே தொல்காப்பியக் கூத்தில், ஓரத்தில் நின்னுக்கிட்டு, கதை சொல்லியாவும், விளக்கம் கொடுப்பவராவும், இருக்காரு இளம்பூரணர். குறிப்பா, முதல் நூற்பாவிற்கு அதிக விளக்கம் தர்றார். மூணாவது நூற்பாவுக்குப் போறதுக்கு முன்னாலெ, அந்த விளக்கத்தைத் தந்துடுறேன். ஏன்னா, குறியேற்றம் செய்ய முனையுறவுகளுக்கு அதுவும் ஒரு தேவையான விளக்கம்.

பொதுவா, எந்த நூற்பாவையும் தொகுத்துக் கூர்றது தொகை. அதை வகுத்துப் பிரிச்சுக் கூர்றது வகை. அதை இன்னும் பெருக, விரிச்சுக் கூர்றது விரி. தொகை / தொகுத்தல்ங்குறது கலனக் கணக்கில் (calculus) integration, summary ன்னு சொல்லப்படும். வகை / வகைத்தல்ங்குறது differentiation / differencing ன்னு புரிஞ்சு கொள்ளப்படும்; விரித்தல்ங்குறது expansion.

இன்னும் ஆழம் போய்,

தொகைக்குள் தொகையும், தொகைக்குள் வகையும், தொகைக்குள் விரியும்,
வகைக்குள் தொகையும், வகைக்குள் வகையும், வகைக்குள் விரியும்,
விரிக்குள் தொகையும், விரிக்குள் வகையும், விரிக்குள் விரியும்

என ஒம்போது முறையாலும் பார்க்குறது உண்டு.

தொகைக்குள் தொகைங்குறது சுருக்கத்திலும் சுருக்கம். வரலாற்றில் முகன்மையான செய்திகளெ எல்லாம் ஒர் பாரசீக அரசன் தொகுக்கச் சொன்ன கதை பற்றி முன்னாடிச் சொல்லியிருந்தேனே, ஞாவகம் இருக்கோ? அதிலெ, "மாந்த வரலாற்றில் முகன்மையிலும் முகன்மையான செய்தி என்ன?" ங்குறதுக்கு, அந்த நாட்டுச் சான்றோர், "அவர் பிறந்தார், வாழ்ந்தார், இறந்தார்" ங்குற வாசகத்தை ஒரு மரப்பட்டையிலெ எழுதி, மணிப்பேழைக்குள்ளே வச்சு அரசனிடம் கொடுத்தாங்களாம். நடந்த நிகழ்ச்சிகள்லெ அழிஞ்சு மண்ணோடு மண்ணாகிப் போகாம, மீந்து கிடக்கும் மாந்தரின் வாழ்வுத் தொடர்ச்சியே, மாந்த வரலாற்றில் தொகையிலும் தொகையாய் அமைஞ்சுதாம்.

அது மாதிரி, எழுத்துங்குற ஒண்ணு இருக்குறதைத் தான், மொழி பற்றிய தொகைக்குள்ளும் தொகையா இளம்பூரணர் சொல்வார். எழுத்துகள் இல்லாத மொழிகள் அழிஞ்சு போயிருமில்லே? இனித் தொகைக்குள் வகையாக 30 எழுத்துக்களையும், தொகைக்குள் விரியாக 33 -யையும் (30 முதல் எழுத்துக்கள் + 3 சார்பெழுத்துக்கள்) சொல்வார். மேலும் தொடர்ச்சியாய்,

வகைக்குள் தொகை =30; வகையுள் வகை = 33; வகையுள் விரி = 33+ 7 அளபெடை ன்னு காட்டுவார். (அளபெடைகள் அமையுறது நெடில் எழுத்துக்களுக்கு மட்டுமே; அவை தனிச்ச ஒலிங்க. அவையும் மொழியின் கூறுகளே. அளபெடைகளை ஒரு கீற்றத்தாலெ சுட்டிக்காட்ட முடியாது. அவற்றை இரு கீற்றங்களாலெ நாம சுட்டிக் காட்டுறோம்.) ஆக வகைக்குள் விரி 40 ஆகும்.

இனி, விரியுள் தொகை = 33; விரியுள் வகை = 40; விரியுள் விரி = 12+18+12*18 + 3 சார்பெழுத்துக்கள் + 7 அளபெடைகள் = 256 எழுத்துக்கள் ன்னு ஆகும். நாம எல்லாம் ரொம்பக் காலத்துக்கு, தமிழ் நெடுங்கணக்கு 247 எழுத்துக்கள்ன்னே சொல்லிப் பழகி வந்திருக்கோம். அதை மறுத்து, ஒலியியலின் படி, தமிழ் எழுத்தில் விரியுள் விரி, அதாவது நெடுங்கணக்கு என்பது, 256 ன்னே இளம்பூரணர் சொல்றார். நச்சினார்க்கினியரும் 256 -யைத்தான் விரியுள் விரியாகச் சொல்றார். பின்னே எப்படி நமக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்குற போது, மாறிச் சொல்லிக் கொடுக்கிறாங்கன்னு எனக்கு விளங்கலை. உங்களுக்குத் தெரியுதா?

குறியேற்றக்காரங்களே! கொஞ்சம் கவனிச்சீங்களா? தமிழின் மொத்த எழுத்துக்கள் 2^8 = 256. அதிலெ முதல் எழுத்துக்கள் 30, சார்பெழுத்துக்கள் 3, அளபெடைகள் 7, உயிர்மெய் எழுத்துக்கள் 216. அய்யா சாமிகளா, இனிமேலும் character-ங்குற சொல்லை முதல் எழுத்துக்களுக்கு மட்டும் புழங்காதீங்கய்யா! மொழிங்குறது ஒலி சார்ந்ததுன்னா, 256 ம் character தான். எதுவும் குறைச்சதில்லெ.

[உண்மையிலேயே மெய்யெழுத்துக்கள் தான்யா, நம்மாலெ தனியே பலுக்க முடியாதவை; அவை ஒருவிதக் ஒலிக் கட்டுமானங்கள் (sound constructs). அவற்றை உணர்றது சரவலான வேலை. 

மாந்தனால் இக் என்று மூடிய அசை(closed syllable)யொலியாகவோ, கி என்ற திறந்த அசை (open syllable) யொலியாகவோ தான் ஒலிக்க முடியுமே ஒழிய, க் ன்னு தனிச்சு ஒலிக்க முடியாது. கருவிகளின் துணை கொண்டு, அந்த இக், அல்லது கி ஒலியலைப் படங்களை முன்னாலோ, பின்னோலோ கொஞ்சம் கொஞ்சமாய்க் கத்தரிச்சுக் கத்தரிச்சுத் தான், க் ங்குற ஒலிப் படத்தைப் பெறணும். 

அப்படிச் செய்யும் போது அந்த ஒலிப்படம் உயிரில்லாத அலை - உருவத்தையே (lifeless wave form) காட்டும். எனவே அதை உயிரில்லா மெய்யுன்னு சொல்றாக. மெய்யைக் காட்டிலும் உயிர்மெய் ஒலிகள் நமக்கு நெருங்கியவை. "உயிர்மெய்யை ஒதுக்குவோம்; மெய்யைத் தாங்குவோம்" னு சொல்றது வேடிக்கையான பேச்சு. உயிர்மெய் இல்லாமெ மெய்யை எப்படி இவங்க உணர்ந்தாங்க, திடீர்னு வானத்திலேர்ந்து மெய்கள் குதிச்சுதா? மெய்யெழுத்துகள்னு சொல்றவை, மாந்தனாலெ நெருங்க முடியாத (inaccessible), ஆனால் உள்ளமை (reality) உடையவைன்னு தான் பெரியவுக சொல்றாக.]

இனி மூன்றாவது நூற்பாவில் இருந்து 6 ம் நூற்பா வரை ஒரே வீச்சிலெ பார்ப்பமா?

3. அவற்றுள்
அ இ உ
எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓரளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப

4. ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.

5. மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே

6. நீட்டம் வேண்டின் அவ்வளபு உடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்

இந்த நூற்பாக்கள்லெ, ஓரளபு உள்ள அஞ்சு குற்றெழுத்துக்களையும், ஈரளபு உள்ள ஏழு நெட்டெழுத்துக்களையும் குவிவிளக்குப் போட்டு அறிமுகம் செய்யுறாரு தொல்காப்பியரு. கூடவே ஒரெழுத்துக்கு மூவளபு ஒலித்தல் (இசைத்தல்) கிடையாதுங்குறதையும் வரையறை செய்றாரு. ஆனா, மூவளபு ஒலிக்கின்ற மொழித் தேவைகள் உண்டு சாமி. அந்த நேரத்திலெ, ஒவ்வொரு ஈரளபு நெட்டெழுத்துக்கும் பக்கத்தாலெ, அதன் இணையான ஓரளபு குற்றெழுத்தை அருகெ போட்டு, பிளவுபடாமல், கூட்டி எழுதலாம்னு புலவர்கள் சொல்றாங்களாம்.

இந்த அளபெடைகள்ங்குறவை ஒருவிதமான கூட்டெழுத்துக்கள். உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் உயிரும் மெய்யும் சேர்ந்தவைன்னா, அளபெடைகள் நெட்டெழுத்தும் குற்றெழுத்துமாய்ச் சேர்ந்த கூட்டு உயிரெழுத்துக்கள். உயிர்மெய் எழுத்துக்களுக்கு எவ்வளவு உள்ளமை (reality) உண்டோ , அவ்வளவு உள்ளமை இந்த அளபெடைகளுக்கும் உண்டு.

இந்தப் "பிளவுபடாமல்" ங்குற கட்டியத்தை (condition) மறந்து, இந்தக் காலத்தில் பிளவுபட்டாப் போலெ நெடிலையும், குறிலையும் அருகருகெ போட்டு, ஏதோ நாமெல்லாம் பேர் பண்ணிக்கிட்டிருக்கோம். கூடிய மட்டும் அளபெடை இல்லாமலே பேசுறதே இக்காலத் தமிழ்முறையாவும் இருக்கு. இல்லைன்னா, எழூஉதல் என்றதை எழுதுதல்னே ஏன் சொல்றாங்க? ஆக அளபெடைங்குறது பேச்சுலெ பெரும்பாலும் இப்போ தவிர்க்கப்படுது. அளபெடை பழகுறவுங்க தமிழ்ப் பண்டிதர்னே சொல்லி ஒதுக்கப் படுறாங்க.

அடுத்தது, இந்த அளபுங்குற மாத்திரைக்கான இலக்கணம். அளத்தல்னா measurement. மாத்தல்னாலும் அளத்தல் தான். மாத்தலில் விளைஞ்ச சொற்கள் தமிழ்லெ ரொம்பவெ இருக்கு. மாதம் (month), மதி (=நிலா), மட்டம் (=அளவு) மானம் (அடிமானம், குறிமானம், தீர்மானம்; எல்லாமே measured or determined entities), மானி = அளவிடும் கருவி. கணக்கில்லாச் சொற்களை இங்கே கூற முடியும். மாத்திரைங்குற சொல்லும் மாத்தல்ங்குற வினையிலெ எழுந்தது தான். அளவிடற அலகுக்கு மாத்திரைன்னு பேரு. அந்த மாத்திரை நுணுகி உணரோணுமாம். எளிதில் உணரமுடியாதாம்.

மாத்திரையை விளக்க வந்த இடத்துலெ, ஏழு வகை அளத்தல் முறையை இளம்பூரணர் கூறுறார். நிறுத்தளத்தல், பெய்தளத்தல், தெறித்தளத்தல், தேங்க முகத்தளத்தல், சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் - அப்படி ஏழு வகை. இவை பத்தி முன்னாடி ஒரு முறை, ஏப்ரல் 2006 ல் ஒரு கட்டுரையை என் வலைப் பதிவிலெ எழுதினேன். (அதுக்கு முன்னாடி மடற்குழுக்களிலும் எழுதுனேன்.) முன்னாடி எழுதுனதுலெ இருந்த கருத்துப் பிழைகளை எல்லாம் இப்பச் சரி செய்ஞ்சு, இங்கு தொடர்பான குறிப்புக்களைச் சேர்த்துக் கொடுத்திருக்கேன்.

ஏழாவது நூற்பா இது தான்:

"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"

இதற்கு உரை சொல்ற உரையாசிரியர் இளம்பூரணர், மேலே சொன்ன ஏழு முறைகளையும் கூறி, அதற்கும் மேலாக, மாத்திரை அளந்தது சார்த்தியளத்தல் முறைன்னு சொல்றார். இந்த அளவைகள் எல்லாம் எதைக் குறிக்குதுன்னு பார்த்தால், சிலது புரியுது; சிலது புரியலை.

1. நிறுத்தல்ங்குறது எடை அளப்பதைக் குறிப்பிடுது.

2. பெய்து அளத்தல்ங்குறது நீர்மத்தின் வெள்ள அளவைக் குறிப்பிடுது. [வெள்ளத்தை (volume) இக்காலத்தில் இருபதாம் நூற்றாண்டுச் சொல்லான "கன அளவு"ங்குறதைக் கொண்டு தவறான முறையிலெ குறிச்சிட்டு வர்றோம். கனம்ங்குறதும் ஒரு வகையில் எடையைக் குறிக்கிறது தானே? நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் எந்தெந்த அளவு விரிஞ்சு பெருகி, வெளியை (space) அடைச்சிருக்கோ, அந்தப் பெருக்கைத் துல்லியம் கருதி, வெள்ளம்னே நாம குறிப்பிடலாமே? ஏன், இப்படிப் பழஞ்சொல்லைத் தவிர்க்கிறோம்னு புரியலை. வெள்ளம்குற சொல்லு பெருக்கைத் தானே குறிக்குது? சட்டுன்னு அது நம்ம மனத்தில் வெளியையும் குறிக்குமே?]

3. நீட்டி அளத்தல்ங்குறது நீளத்தை அளப்பது. சரி, பரப்பை அளக்குறது என்னவாச்சு? அது ஏன் இந்த வரிசையிலெ இல்லை? நீளம், வெள்ளம் எல்லாம் வர்ற போது, பரப்புங்குறது ஏன் வரலெ? இல்லை, எதையாவது நாம தவறாப் புரிஞ்சிக்கிட்டோ மா? தெரியலை. [பொதுவா, அகலமாக அகண்டு கிடக்குறது அகரம் (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் acre, area). பரந்து கிடப்பது பரப்பு, பரட்டு, பரத்து போன்றவை (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் broad, breadth)].

4. அடுத்தது தெறித்து அளத்தல்; தமிழ் அகரமுதலியிலெ இந்த முறைக்கு இசைக்கருவியின் நரம்பைத் தெறிச்சு (=சுண்டி) செவியின் அருகே வைத்து அளப்பதுன்னு போட்டிருக்கு. இந்த முறையிலெ, செவியின் அருகே ஒரு அதிர்வை ஏற்படுத்தி அதன் அதிர்வு எண்ணை அளக்குறாங்களா? அல்லது அதிர்வின் நேர அளவைக் கண்டுபிடிக்கிறாங்களா? என்ன செய்யுறாங்க? விவரம் அறிய முடியலை.

5. முகந்தளத்தல்ங்குறதின் மூலம், இந்தக் காலத்திலெ திண்மப் பொடிகளை (solid powders) அளக்கவும், நீர்ம(liquid)த்தை அளக்கவும் உள்ள அளவையைச் சொல்லுகிறோம். அப்படியானா, ஏன் பெய்தல் அளவைன்னு தனியா ஒண்ணு இருந்துது? முகந்தளத்தலுக்கும், பெய்தளத்தலுக்கும் இடையே என்ன வேறுபாடு? அல்லது, ஒருவேளை முகத்தல் அளவைங்குற முறை, திண்மப் பொடிக்கு மட்டுமே இருந்துச்சா? நமக்குத் தெளிவு ஏற்படமாட்டேங்குது.

ஒண்ணு மட்டும் விளங்குது. நீர்மங்கள்ங்குறவை அமுக்க முடியாதவை (incompressible). ஆனால் திண்மப் பொடிகள், அவற்றுடைய துகள் அளவைப் (particle size) பொறுத்து, புரைமை (porosity) மாறக் கூடியவை. எடுத்துக் காட்டா நாம அரிசியை எடுத்துக்குவோமே? அரிசியின் சன்னத்தைப் (thickness) பொறுத்து, முகந்தளக்குற போது கூடவோ, குறையவோ, கொள்ளளவு காட்டும் இல்லையா? ஒரே எடை காட்டுற பொன்னி அரிசியும், ஐஆர் இருபதும் ஒரே அளவு வெள்ளம் காட்டுமா? எனவே முகந்தளத்தல்ங்குறது பெய்தளத்தல் என்பதிலேர்ந்து வேறுபடலாம் இல்லியா?

6. அடுத்தது, தேங்க முகந்தளத்தல். தேங்க ங்குற முன்னொட்டு எதைக் குறிக்குது? தேங்கி இயல்பாகக் கிடந்ததையா? இல்லெ, வேறையா? முன்னே சொன்னப் பொலெ, அறிவியலின் படி, திண்மப் பொடிகளின் வெள்ளம், அவற்றின் புரைமை(porosity)க்கும், துகள்களின் சன்னத்துக்கும் தக்க மாறுபடும் இல்லையா? இந்தத் திண்மப் பொடிகளைத் தட்டித் தட்டி, அமுக்கி அமுக்கி, வெள்ளத்தை ஓரளவு நெருக்க/நெறிக்க முடியுமே? அதாவது ஓரளவு குறைக்க முடியும். அப்படி நெறிச்சுத் தேக்கி அளந்தது தான் மேல் கூறிய தேங்க முகந்தளத்தலோன்னு எண்ண வேண்டியிருக்கு. வெறுமனே, முகந்தளத்தலில், திண்மப் பொடியை முகந்து, நெறிக்காம அளந்தா, அதன் இயல்பான புரைமையோடு (natural porosity) உள்ள வெள்ளத்தை அளக்க முடியும். மாறாத் தேங்க முகந்தளத்தலில், நுணுகிய புரைமை (minimum porosity) யோடு கூடிய வெள்ளத்தை அளக்க முடியும்.

7. சார்த்தியளத்தல்ங்குறது ஒண்ணை இன்னொண்ணோடு சார்த்தி ஒப்பிட்டு அளக்குறது. கண்ணிமைக்கிற நேரம், விரல் நொடிக்கிற நேரமுன்னு சொல்றோமே, அவையெல்லாம் ஒப்பீட்டு அளவுகள் தான். இந்தக் காலத்தில் வெம்மையை (temperature) அளவிட, இதள்த் தெறுவமானியை (Mercury thermometer; தெறுதல் = சுடுதல்)ப் பயன்படுத்துற போது, வெம்மை கூடக் கூட, இதள்த் தண்டின் நீட்டம் கூடி வருதுல்லெ? அங்கே இதளின் நீட்டத்தை வெம்மையிலெ சார்த்தி, அளவெடுக்கிறோம்.

8. எண்ணி அளத்தல்ங்குறதும், நேரத்தை, அதிர்வெண்ணை, பயன்படுத்துறது போலத் தான்.

என்னவொரு நிலை பார்த்தீங்களா? சொல்லிக் கொடுக்க ஆளில்லாமல் "வேரில் பழுத்த பலாவா" இன்னும் எத்தனை கிடக்கும், இந்தத் தமிழ்லெ?

அன்புடன்,
இராம.கி.

Saturday, October 07, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 2

கூத்துன்னு சொன்னவுடனே ஒண்ணு எனக்கு ஞாவகத்துக்கு வருது.

பொதுவா, கூத்துப் பாக்குறவுக்களுக்கு, கூத்தோட கதையெல்லாம் நல்லாவே தெரியும்; இன்னுஞ் சொல்லணும்னா, அதுலே வர்ற உரையாடல், பாட்டு எல்லாமே கூட அவுகளுக்குத் தெரிஞ்சிருக்கும். பின்ன எதுக்கு வருசா வருசம் திருவிழாவுலே கூத்துப் பாக்குறாங்கன்னு நமக்கு ஒரு கேள்வி வரும். வேறெ ஒண்ணுமில்லைங்க, வாத்தியார் படத்தை எதுக்குத் திரும்பத் திரும்பப் பார்க்குறமோ, அதே மனப்பான்மை தான்; கொஞ்சம் கூடச் சலிக்கிறது, இல்லைங்களே?

கூத்துலே ஓவ்வொரு காட்சியையும் திரும்பத் திரும்பச் சுவைக்கிறதுலெ ஏதோ ஒரு மகிழ்ச்சிங்க. அது மாதிரி இந்த எழுத்து, மொழி எல்லாம் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது தான்; இருந்தாலும், இதெ நுணுக்கமாப் பார்த்து, "என்ன சொல்றாங்க; இந்தத் தடவையிலே புதுசா ஏதாவது விளக்கம் வருமா? போன வாட்டி சொன்னதையே இந்த வருசம் சொல்லுவாங்களா?" அப்படின்னு ஓர் எதிர்பார்ப்பு ["காயாத கானகத்தே" யிலே புதுசா ஏதாட்டும் பிருகா வருமாங்குற பேராசை.]

இளம்பூரணரும், அவருக்குப் பின்னால் வரும் நச்சினார்க்கினியரும், பொதுவா, எழுத்துங்குறதை எட்டு வகையாலே உணர்த்தோணும்னு சொல்லுவாங்க! முடிஞ்சா, எட்டுக்கு மேல் வகையாலும் உணர்த்தலாமாம்! நாம, எட்டோ ட நிறுத்திக்குவோம். வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவனா, நாம் ஆயிறப் படாது, இல்லியா?

முதல் வகை என்ன? - இது இதெல்லாம் எழுத்துன்னு சொல்லணுமாம். (வேறே ஒண்ணும் இல்லை, எழுத்தை ஒலிச்சுக் காட்டணும்; எழுத்துங்குறது ஒலிக்குப் பகரி-substitute தானே? அது ஒலியைக் குறிக்கலேன்னா, அப்புறம் என்ன எழுத்து? வெறும் பப்படம் ஆயிரும்.)

இரண்டாவது - இது இதுக்கு இன்ன பெயர். முதல் நூற்பாவுலே அழகாச் சொல்றார் பாருங்க, தொல்காப்பியர். அகரத்துலே தொடங்கி னகரம் வரைன்னு பெயரைச் சொல்றார். இதாங்க அந்த எழுத்துக்களுக்குப் பெயரு. TSCII மடற்குழுவுலே TSCII எழுத்துக்களே ஆணையர்கள்ட்டே பதிவு செய்யுறதைப் பத்தி இப்பப் பேசிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பேச்சுலே, இந்த எழுத்துக்களுக்கு என்ன பேரு கொடுக்கிறதுங்குறதுலே ஒரே சண்டை. Printed salvation இருக்கா? பேர்சொல்லி யாரானும் பொத்தகம் போட்டிருக்கானுவளா? 

வேறே எங்கேய்யா போகணும், தொல்காப்பியரும், இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் பத்தாதா? அவுகளுக்கு மேலே யாரு ஆணத்தி? (ஆணத்தி -ங்குறது சோழர் கல்வெட்டுக்கள்லே authority ங்குறதுக்கான சொல்; ஆணை இடக் கூடியவன் ஆணத்தி; நாம என்னடான்னா, அதைத் தொலைச்சிட்டு அதிகாரி, அத்தாரிட்டின்னு தடுமாறிக்கிட்டு இருக்கோம்.)

தொல்காப்பியர் சொன்னபடி பார்த்தா, நம்மோட எழுத்துக்கள் ஒண்ணுக்கும் ஓவ்வோர் பேர் இருக்கு; அகரம், ஆகாரம், இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம், எகரம், ஏகாரம், ஐகாரம், ஒகரம், ஓகாரம், ஔகாரம், அஃகேனம், ககரம், (இதன் விரியை உயிரெழுத்து வரிசையை மேலே சொன்னது போல் எழுத முடியும்; ககர அகரம், ககர ஆகாரம்...... இப்படிப் போகும்.), ஙகரம், சகரம், ஞகரம், டகரம், ணகரம், தகரம், நகரம், பகரம், மகரம், யகரம், ரகரம், லகரம், வகரம், ழகரம், ளகரம், றகரம், னகரம் என்று எழுத வேண்டும். இந்தக் காலத்துலே இந்தப் பேருகள்லாம் மறைஞ்சு, ஆனா, ஆவன்னா, ஈனா, ஈயன்னா ..... ன்னு புதுப்பெயரைச் சொல்லிக்கிட்டு இருக்கோம். 

எங்களுக்கெல்லாம் 1950 கள்லே, திண்ணைப் பள்ளிக்கூடத்துலே இதே மாதிரி "ன்னா" போட்டுத்தான், சொல்லிக் கொடுத்தாங்க. இப்போதைய சிங்கள மொழிப் பேர்களும் கூட இதே மாதிரித் தான் இருக்கு. (அந்த முட்டாப் பயல்களும் தமிழோட, தமிழனோட, தங்களுக்கு என்ன உறவுமுறைன்னு விளங்கிக்கிடவும் இல்லே. மாமன் முறை, மச்சான் முறைங்க. வரலாற்றின் படி, விசயனும், விசயனோட தோழர்களும் கட்டிக்கிட்டது தென்பாண்டித் தமிழச்சிகள் தான். அவங்க மொழிலே தமிழ் ஊடுறுவாமலா இருக்கும்? பாகதத்துக்கும், தமிழுக்குமாப் பொறந்தது தான் சிங்களம்.) இந்தப் புதுப்பெயர் வரிசை எப்ப வந்ததுன்னு தெரியலே! ஏன் வந்ததுன்னும் தெரியலை.

மூணாவது இன்ன முறைமை (முறைமைன்னா வரிசை. என்ன வரிசைலே எழுத்து இருக்கு? தொல்காப்பியர் சொல்றார்: அ-வுலே ஆரம்பிச்சு ன-வுலே முடி. இதெ விட்டுப் போட்டு, வேறே மாதிரி எழுத்து வரிசை எழுதாதேன்னு சொல்றாரு. ஆனா, இப்ப இருக்குற குறியேற்றக்காரங்கள்லாம் இதையெல்லாம் எங்கே படிக்குறாங்க? கன்னாப் பின்னான்னு ஏதோ ஒரு குறியேற்றத்தைச் செய்ஞ்சு போடவேண்டியது; அப்புறமா, "குறியேற்ற வரிசைங்குறது ஒண்ணு, அணிமுறை (collation) ங்குறது இன்னொண்ணு"ன்னு ஒரு சப்பைக்கட்டு கட்டி, ஒவ்வொரு மொழிக்கும் அணிமுறை ஒழுங்கைக் கொண்டார்றதுக்கு, ஒரு நிரலி எழுதி, சரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஏன்னா, நாமல்லாம் மர மண்டைங்க, பாருங்க.)

நாலாவது இன்ன அளபின (அளபு ன்னா அலகு - ஒரு unit. அகரமா, அதுக்கு ஓரளபு; ஆகாரமா, அதுக்கு ஈரளபு. க் ங்குற மெய்யா, அது அரையளபு, மகரம் சில இடத்துலெ, கால் அளபுன்னு விவரிச்சுக்கிட்டே போவாரு இந்தத் தொல்காப்பியர். அந்த ஒரு unit ங்குறது எவ்வளவு நேரம் ஒலிக்கணுங்குறதை இன்னோர் எடத்துலே வரையறை செய்வார்.)

ஐந்தாவது இன்ன பிறப்பின (இந்த எழுத்துக்கு ஒலி எங்கே பிறக்கோணும்? வாய்க்குள்ளே இருக்குற மேல் அண்ணத்தை எப்படித் தொடணும்? எங்கே தொடணும்? நாக்கு எங்கே? பல்லு எங்கே? எப்படி ஒலியை விடோணும்? எல்லாத்துக்கும் சின்னச் சின்னமா, ஒரு விளக்கம் கொடுப்பார்.)

ஆறாவது இன்ன புணர்ச்சிய (இந்த எழுத்துக்குப் பக்கத்தாலே, இன்னொரு எழுத்து வந்தா, முதல் ஒலி எப்படி மாறும்? இரண்டாவது ஒலி எப்படி மாறும்? கணக்கில்லாத காட்டுக்கள் இருக்கு. எல்லாத்துக்கும் விளக்கம் எழுத்ததிகாரம் தருது. இந்த எழுத்ததிகாரம் மட்டும் இல்லைன்னு வச்சுக்குங்க, கணியிலே பேச்சுத் தெரிப்பு - speech recognition செய்யுறது ரொம்பச் சரவலாய்ப் போயிரும். இன்னார் பேசுறார், என்ன பேசுறார் னு எப்படிங்க பொருள் விளங்கிக்குறது? கேக்குறதெல்லாம் நமக்குப் புரிஞ்சு போகுதுங்களா?)

ஏழாவது இன்ன வடிவின (இந்த எழுத்து என்ன வடிவிலே இருக்குன்னு சொல்றது. இங்கே தாங்க ஒரு டொக்கு. தொல்காப்பியர் காலத்துலே இரண்டு விதமான தமிழி எழுத்து இருந்திருக்கு. இரண்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் சிக்கல் இருந்திருக்கு. ஒரே எழுத்து, இரண்டு வேறே ஒலிகளுக்கு வடிவமா இருந்திருக்கு. (ஒரு தமிழி முறையிலெ, ககர அகரமும், ககர ஆகாரமும் ஒரே மாதிரி கண்ணுக்குத் தெரியும்; இன்னொரு தமிழி முறையிலே, ககரமும், ககர அகரமும் ஒரே மாதிரி கண்ணுக்குத் தெரியும்.) இது போக விந்தியத்துக்குத் தெக்கே கிட்டத் தட்ட ஒரே நேரத்துலே இரண்டு எழுத்து முறை (தமிழி I, தமிழி II) இருந்தா அது குழப்பம் தானே?

இது கல் - ஆ, கால் - ஆ, அப்படின்னு தெரியாம, குழம்பிப் போனா?

சாத்தங்குற இடத்துலே ”த்த” ங்குறதுக்கு புள்ளியில்லாமெ இரண்டும் ஒரே எழுத்தா இருந்தா? தடுமாற மாட்டோம்? "இல்லையில்லை, தமிழ்லெ தத ன்னு வராது; அது த்த என்றுதான் இருக்க முடியும்"னு கொஞ்சம் யோசிச்சிட்டுல்லே சொல்ல வேண்டியிருக்கு. இருந்தாலும் குழப்பம், குழப்பம் தான்.

இப்படி ஒரு குழப்பம் ஊரெங்கும் இருந்தது தொல்காப்பியர் போல படிச்சவங்களுக்கு ஏற்கனவே இருந்த தமிழி I, தமிழி II எனும் எழுத்து முறைகள்லெ ஒருப்பாடு இல்லைங்க. ககரம், ககர அகரம், ககர ஆகாரம் ஆகிய மூன்றிற்கும் வடிவுலே வேறுபாடு காட்டோணும்னு சொல்லி அவுங்க தான் (படித்தவக தான்) புள்ளிங்குற ஒண்ணைப் பரிந்துரைச்சிருக்கோணும்னு இன்னைக்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அதனாலே, இப்படித் தாங்களே சில திருத்தம் சொன்னதாலே, இது தான் வடிவம்னு அழுத்தம் திருத்தமாச் சொல்லாமே, அவரோட ஆட்கள் பரிந்துரைச்ச திருத்தங்களை மட்டுமே தொல்காப்பியத்துலெ எடுத்துச் சொல்லிட்டு, தொல்காப்பியர் கொஞ்சமா வழுவிக்கிறாரு. இந்த ஆளு பெரும் எமகாதனுங்க!

எட்டாவது இன்னின்ன தன்மைய (இந்த எழுத்துக்களுக்கு இன்னின்ன property இருக்குன்னு சொல்றது இந்த எட்டாவது வகை. இதிலும் தொல்காப்பியர் அமைதி காக்குறார்னுட்டு இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் சொல்றாங்க.)

ஆகக் கடைசி ரெண்டு வகையிலே "கம்முன்னு கிட"க்கிறார் தொல்காப்பியர். எழுதுற போது அவருக்கென்ன சிக்கலோ? யாரு அவர் கூற்றுகளை எதுத்தாங்களோ, நமக்குத் தெரியலை.

இனி இரண்டாவது நூற்பாவுக்கு வருவோமா?

முன்னாடிச் சொன்ன மூணு அலங்கடை (=exception) ஆட்களைப் பத்திய நூற்பா இது.

2. அவைதாம்
குற்றியல் இகரம் குற்றியல் உகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன.

குற்றியல்னா குறுகி ஒலித்தல்னு பொருள். வேறே ஒண்ணுமில்லை, கூழைக் கத்திரிக்காய் மாதிரி ஒலியிலே சிறுத்தது; ஆனாலும், கடுகு சிறுத்துக் காரம் போகுமா?

குற்றியல் இகரம், குற்றியல் உகரம் எல்லாம் இப்பப் பேச்சுலே இருக்கான்னு கேட்டா, நிரம்பவே இருக்குன்னு தான் சொல்லணும். குறிப்பா, தரும மிகு சென்னையிலும், வட ஆர்க்காட்டுப் பேச்சிலும் நிறையவே இருக்கு; இன்னும் சொன்னாப் புது உருவம் எல்லா எடுக்குது. 

"இன்னாபா, வூட்லெ சொல்ட்டு வண்டியா!"ங்கிற போது, அந்த சொல்ட்டுலே, கடைசியா ஒரு டு வருது பாருங்கோ, அது குற்றியல் உகரம் தான். முழு உகரம் (முற்று உகரம்னு இலக்கணத்துலே சொல்லுவாங்கோ) இல்லை. 

குறைச்ச நேரமே, அரை மாத்திரை நேரமே, ஒலிப்பது சென்னைக்காரர்களுக்கு ஒரு வழக்கம். இங்கே எல்லாமே "போலாம், ரைட்" தான். இனி அப்பாலிக்கி, "வண்டியா"ங்குறதுலே, (vaNdia இல்லைங்க; சென்னைக்காரங்க மாதிரி சொல்லிப் பாருங்க) அந்த டி வருது பாருங்கோ, அது வேறெ ஒண்ணுமில்லை, குற்றியலிகரம். மெய்யாலுமே, அரை மாத்திரை தானுங்க அங்கே வருது.

இன்னும் சொல்லப் போனா, குற்றியல் எகரம் கூடப் புதுசா வந்துரும் போலேருக்கு, இவுங்க பேச்சுலெ. அந்த "வூட்லெ" ங்குறதுலே, லெ - யக்கூட முழுசா பலுக்குறதுக்குச் சோம்பற் பட்டு இவுங்க அரை மாத்திரை ஆக்கிப் புடறாங்கோ. தமிழ் புதுசு புதுசா வளருதுப்பா.

இந்தக் குற்றியல் இகரத்துக்கும், உகரத்துக்கும் இந்தக் காலத்துலே தமிழ்லெ எந்தக் குறியும் இடுறதில்லை. இடம் பார்த்துச் சிலர் புரிஞ்சிக்கிறோம், பலர் புரிஞ்சிக்கிறதே இல்லை. இன்னா, செய்யுறது போங்கோ? நாம மொழியெ என்னைக்குத்தான் புரிஞ்சு காப்பாத்திருக்கோம்? 

ஆனா, மலையாளத்துலே ஓலைக்கட்டுகள்லே, சந்திர பிந்துன்னு ஒண்ணு இட்டதாப் பலரும் சொல்றாங்க. அது என்ன சந்திர பிந்துன்னு முழிக்க வேண்டாம். சந்திரன்னா பிறை. நிலாவோட மூன்றாம் பிறை மாதிரி ஒரு வளை கோடு. அந்த வளை கோட்டுக்கு நடுவுலே ஒரு புள்ளி. புள்ளியைப் பிந்துன்னு வடமொழி சொல்லும். (நெத்தியிலே பொட்டு வச்சுக்கிறோம் இல்லையா? அது பிந்து) ஆங்கிலத்துலே point னு சொல்லுவோம். 

வேறே ஒண்ணுமில்லே. பொள், போழ்-னா தமிழ்லே பிளந்து தள்ளுன்னு அருத்தம். "புள்ளுவதும், பொள்ளுவதும், போழுவதும், பிளப்பதுவும்" எல்லாமே குத்துறதுலே தொடங்குறது தான். புள்ந்தது, பொள்ந்தது, போழ்ந்தது, என்ற வினை புந்து, பொந்து, போந்து, பொட்டு (point) ன்னு பெயரா மாறிப் போகும். ஆக, வேர் தமிழில் இருக்கிறது. நாம தான் கண்ணை மூடிக்கிணு பார்க்க மறுக்கிறோம்.

இப்படி, பிறைப்புள்ளி போட்டு குற்றியல் இகரத்தை (டி போட்டு, மேலே கொஞ்சம் ஒதுங்கினாற் போல், பிறைப்புள்ளி இடவேண்டும்), குற்றியல் உகரத்தைக் காட்டும் பழக்கம் மலையாளத்திலும், நாஞ்சில், குமரி நாட்டுத் தமிழ் நூல்களிலும் உண்டு என்று தான் சொல்கிறார். (எல்லா character க்கும் ஒருங்குறியிலே இடம் கொடுத்திருக்காக்கும், அது ரொம்ப principle ஆனது என்னு பரயும் கணிஞமாரே!, தமிழின் குற்றியல் இகரமும், குற்றியல் உகரமும் உங்க குறியேற்றத்தில் எவிடே போயி? சந்திர பிந்து என்ன குறி காணாது போயோ? :-))

அது செரி, அப்போழ் ஆய்தம்?

முதல்லே ஆய்தம் கிற பெயர் பற்றிச் சொல்லோணும். நூற்றுக்கு, தொண்ணுத்தெட்டு தமிழர் அதை ஆயுதம் என்றே தவறாகப் பேசுகிறார்; எழுதுகிறார். எல்லாம் வடமொழியும், நகரியும் சேர்ந்து செய்த குழப்பம். தமிழாசிரியரும் அதைச் சரி செய்ததாகத் தெரியவில்லை. அது ஆயுதமும் அல்ல, கேடயமும் அல்ல. அது ஆய்தம்; ஆய்வு என்றால் நுணுகித் தேடுவது. கீரையை ஆய்ந்து கொடு என்றால், நுணுகிப் பார்த்து இலைகளைக் களைந்து கொடு என்று பொருள். ஆய்தம் என்பது நுணுகிய ககர ஓசை. அது வடிவில் புள்ளியால் ஆனது. எனவே அது ஆய்தப் புள்ளி.

இந்தக் காலத்துலே ஒரு புதுப் பழக்கம்; நானும் ஒரு காலத்துலே இதுக்கு அடிமைப் பட்டிருக்கேன். இந்த ஆய்தப் புள்ளியை, மந்திரப் புள்ளி போல் நினைச்சு, ப வுக்கு முன்னாடி ஆய்தம் போட்டா, F ங்குற ஆங்கில ஒலி வந்துரும்னு சொல்றோம். இது கொக்கு தலையிலே பனங்காய் வைக்குற மாதிரி. இதெல்லாம் முட்டாப் பயக வேலை. 

நமக்கு F ங்குற ஒலி வேணும்னு நினைச்சா, ஒண்ணு தற்பவமா, கம்பர் பண்ணின மாதிரி பண்ணோனும்; அவரு F-யை வகரமா மாத்திருவார். செருமானிய மொழிகள் பலவற்றிலே, குறிப்பா, டச்சு, விரிசியன் போன்ற மொழிகள்லெ இந்த F-V மாற்றம் நிறையவே உண்டு. அவுங்கள்லாம் அதைத் தப்புன்னு நினைக்கலை. இருக்குறதை வச்சு, இல்லாததைக் காட்டுங்குற மனப்பான்மை; நம்ம தமிழன் மட்டும் ஒரு மாதிரி. வெள்ளைக்காரர்ஒலியை வெள்ளைக்காரரை விடச் சிறப்பா ஒலிச்சுக் காட்டுனாத் தான் அவர் நம்மளைச் சேர்த்துப்பாங்குற வெறியிலே, F ங்குற ஒலியை அப்படியே பலுக்கணும்பான். 

அதை ஒழுங்காச் செய்யணும்னா, "கனடா C.R. செல்வக்குமார் ஒரு முன்னொட்டுக் குறிமுறையை பரிந்துரைச்சார். என்னைக் கேட்டா, வெள்ளைக் காரனை மிஞ்ச நினைக்குற தமிழர் அவர் முறையைப் பின்பற்றலாம்".

எனக்கென்னவோ, கம்பரோட தற்பவ முறையே, இன்னைக்கும் பொருந்தும்னு தோணுது. நானு கொஞ்சம் கருநாடகங்க.

இந்த ஆய்தப் புள்ளிக்கு மூணு புள்ளி வைக்குற முறை இளம்பூரணர் காலத்துலே (கிட்டத்தட்ட 11ம் நூற்றாண்டு) வந்துருச்சு. ஆனா, கால வரிசையாப் பார்த்தா, முப்பாற் புள்ளிங்குறது அதுக்கு முன்னாடி இருந்ததுக்குக் கல்வெட்டுக்கள்லே சான்று கிடைக்கலைங்கண்ணா! இது தான் ரொம்ப வியப்பு. 

இன்னும் சொல்லப் போனா, ஒரு 2300, 2500 ஆண்டுகளுக்கு முன்னாடி, தமிழி எழுத்தின் ஆரம்ப கட்டத்துலேயும், குறிப்பாப் பெருமி(brahmi) எழுத்துலேயும், மூணு புள்ளியை முக்கோணமா இட்டா, அதை இ -ன்னு தான் ஒலிக்கணும். அப்ப, ஆய்தப் புள்ளி எப்படி இருந்திருக்கும்னு கேள்வி கேட்டா, எனக்கு மறுமொழி சொல்லத் தெரியலை. ஏதோ ஒருவிதப் புள்ளியா அது இருந்திருக்கோணும்னு மட்டும் சொல்லத் தெரியுது.

இவ்வளவு விவரத்தை வச்சிக்கிணு, இரண்டாம் நூற்பாவைப் பார்ப்போமா?

அதுலே முப்பாற் புள்ளின்ன உடனே, இளம்பூரணர் முதற்கொண்டு முக்கோணமாய் இருக்குற மூணு புள்ளிங்குற கருத்தையே எல்லோரும் கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்லுறாங்க. ஆனா, கல்வெட்டைப் பார்த்தா ஒரு சான்றையுங் காணோம். எனக்கென்னமோ, முக்கோண மூணு புள்ளிங்குறது சரின்னு படலை. ஆனா, நான் மரமண்டை, நான் சொல்ற கருத்தை யாரு கேட்பா?

முப் பால் புள்ளிங்குற கூட்டுச் சொல்லுலே, பால் என்பதற்குப் பக்கம் என்றே இவர் எல்லாம் பொருள் கொள்ளுறாக. அது ஏன் வகையாக இருக்கக் கூடாது? பால் னா வகையின்னும் பொருள் இருக்கே? ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்னு 5 வகைகளைச் சொல்றோமே? குற்றியல் இகரத்திற்கான பிறைப்புள்ளி ஒரு வகை; குற்றியல் உகரத்திற்கான பிறைப்புள்ளி இன்னொரு வகை; நம்மால் இப்போது இனம் காணமுடியாத, ஏதோ ஓர் உருவம் கொண்ட, ஆய்தப் புள்ளி மூன்றாம் வகை.

நூற்பாவுலே வர்ற கடைசி வரி. எழுத்து ஓர் அன்ன = எழுத்தோடு சேர்ந்தது போல. அன்ன ன்னு சொன்னாப் போலன்னு அருத்தம். அன்னளகை = analogy. அன்னளகையாய் = analogous. அன்னளகைக் கருவிகள் = analog devices.

அடுத்த நூற்பாவுக்கு போறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லோணும். முட்டாத் தனமா, ஒருங்குறிலே ஆய்தமும், நகரிலே வர்ற விசர்க்கமும் ஒண்ணுன்னு எழுதி வச்சிருக்காக. விசர்க்கம்கிறது ஓர் உயிர். அஹ் னு ஒலிக்கும். அது எல்லா மெய்யோடும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கும்.

ஃ என்பது உயிரும் இல்லை; மெய்யும் இல்லை. அது தனிக் கட்டுக்கூறு (category). அது உயிருக்கும் மெய்க்கும் நடுப்பட்டதுன்னு தான் தமிழிக் குறுங்கணக்குலெ நடுவுலே வச்சிருக்காங்க. யாப்புலெ (பாட்டுலே) மட்டும் சில இடத்துலே அது உயிர் மாதிரித் தோற்றம் காட்டும்; சில இடத்துலே மெய் மாதிரித் தோற்றம் காட்டும். கொஞ்சம் சிக்கலான ஒலி. எனக்குத் தெரிஞ்சு அந்த ஒலி, தமிழை விட்டு, டச்சுலேயும், விரிசியன்லேயும் இருக்கு; ஆனா, அங்கே அது மெய்யெழுத்து.

நல்லாக் குழப்பி விட்டுட்டேனோ?

அஃகேனம் கொஞ்சம் கவனமாக் கையாள வேண்டியது. இந்தக் காலத் தமிழ்லே அஃகேனம் முற்றிலும் மறைஞ்சிருச்சுன்னு தான் சொல்லோணும்.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 06, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 1

கொஞ்ச காலமா, இந்த 16 மடைக் குறியேற்றம் பற்றி எங்கே பார்த்தாலும் பேசிக்கிட்டு வர்றேன். அது தொடர்பான உரையாடல்களிலும் பங்கெடுத்து வர்றேன்.

அந்தச் சமயங்கள்லே, ஒரு சில கணிஞரும்(computer experts), ஆர்வலரும் (enthusiasts) திடீர் திடீர்னு "அவரு சொன்னார், இவரு சொன்னார்"னு நாலஞ்சு குழூஉக் குறி முழக்கங்களை (group jargons) எடுத்து விடுவாங்க; அப்பவெல்லாம் சட்டுன்னு நானு தடுமாறிப் போனதுண்டு. இவுங்க, சொவ்வறை நிரலி (software programme) எழுதுறதைப் பத்தியோ, அதுலே பயன்படுத்தும் நுட்பங்கள் (techniques) பத்தியோ சொன்னா, வாலைச் சுத்தி வச்சிக்கிட்டு ஒழுங்காக் கேட்டுக்கிறது தான்.

நடு நடுவே தொல்காப்பியர் பேரைச் சொல்லி, "அவரு சொல்லியிருக்கார், தமிழுக்கு 30 character தான்; ஆய்தத்தைச் சேர்த்துக்குனா 31 தான். மிச்சதெல்லாம் வெறும் letters. அவரொன்னும் உயிர்மெய் எழுத்தை எல்லாம் கண்டுக்கோணும்னு சொல்லலையாக்கும், அவரோட 17 ஆம் நூற்பாப் படிச்சிருக்கியா? அந்தா, இந்தா"ன்னுட்டு சில கேள்விக்ளை விடவும், "என்னடா இது, இவ்வளவு காலம் தொல்காப்பியத்தை விழுந்து விழுந்து படிச்சமே, ஊர்ப்பட்ட உரைகள்லாம் படிச்சமே, ஒண்ணுமே நம்ம மரமண்டைக்கு விளங்காமப் படிச்சமோ?"ன்னு ஒரு சமுசயம் (அய்யப்பாடு) வந்திட்டுதுங்க!

"சரி, மீண்டும் பர்ணிலேர்ந்து தொல்காப்பியத்தை இறக்குவோம்; கூடவே இளம்பூரணத்தையும், நச்சினார்க்கினியத்தையும் பக்கத்துலே வச்சிக்கிறுவோம். வரிக்கு வரி, திரும்பவும் படிப்போம்"னு நினைச்சேன். அந்தப் படிப்புலே எழுந்தது தான் இந்தப் பதிவு. இங்கே நூன்மரபு பற்றி மட்டுமே சொல்லிக்கிர்றேன்.

"என்னத்தை வெளங்கி, என்னத்தைச் சொல்றது?"ங்கிறவுகளுக்கும், "ஆமா, பொரிச்செடுக்கப் (bore) போறதுக்கு, இவ்வளவு சோடனையாக்கும்?" என்பவருக்கும் ஒரு கும்பிடு. உங்களுக்கு இது புடிக்கலேன்னா, அடுத்த பதிவுக்குப் போயிருங்க.

இத நான் எழுதியே தீரணும். ஏன்னா, கண்டதுக்கெல்லாம் "அவரு சொன்னார், இவரு சொன்னார்"னு பேருவிடுற பழக்கம், நம்மூர்லெ இப்ப ஒரு கெட்ட பழக்கமாவே ஆயிப் போயிருச்சுங்கண்ணா! பாவம், தொல்காப்பியரை இவங்கள்டேந்து தப்புவிச்சுக் கொண்டாரணும். அவ்வளவு தான்.

உள்ளே போகலாங்குளா!

தொல்காப்பியம் எழுத்ததிகாரம். நூன்மரபு. முதல் நூற்பா:

1. எழுத்து எனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே

நூற்பாவோட பொருளைப் புரிஞ்சிக்கிறது முன்னாடி "அது என்ன, எனப்படுப?" என்ற கேள்வி நமக்கு எழுகுது.

நம்ம பேச்சுலே "ஆம்புளைன்னு சொன்னா அவன்தாய்யா ஆம்புளை"ன்னு சொல்றோம் இல்லியா, என்ன பொருளிலே சொல்றோம்? அவன் ஏதோ சிறப்பான செயலைச் செய்திருக்கிறான்" என்ற பொருள் வருது இல்லையா?

"காளைன்னா இதுதான் காளை" - மஞ்சி விரட்டுலே சொல்றோமில்லெ? ஏன், யாராலும் புடிக்கமுடியாத படிக்கு அது உருண்டு திரண்டு வெளியே ஓடிப் போயிருது; ஒரு பயலாலும் அதன் கொம்பையோ, திமிலெயோ புடிக்க முடியுறதில்லை. கட்டிவச்ச பவுன் அப்படியே இருக்கு.

"ஊருன்னா இதுல்லய்யா ஊரு; மிச்சதெல்லாம் ஊத்தை"ன்னு சொல்றோம் இல்லையா? ஏன்? இந்த ஊரு சிறப்பா அமைஞ்சிருக்கு, நமக்குப் பிடிச்சுப் போச்சு; அதனாலே சொல்றோம்.

ஆனாப் பாருங்க, நம்ம பேச்சுலே சிறப்புங்குற சொல்லையே புழங்கக் காணோம். வெறுமே ஒரு பொதுமைச் சொல்லை வச்சுக்கிட்டே, சொல்ற முறையிலே (எனப் படுப) சிறப்புங்குற பொருளைங் கொண்டு வந்துர்றோம். இது தமிழ்ப் பேச்சுலே ஒரு மரபு. பொதுமையைக் (generic) கொண்டு விதப்பை (specific) உணர்த்துவது.

இதைத்தான் இளம்பூரணரும் சொல்றார். (அவர் உரை நச்சினார்க்கு இனியருக்கும் முந்தியது; உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் பல இடங்கள்லே அப்படியே இளம்பூரணரைப் பின்பற்றுவார்; சில இடங்கள்லே மட்டும் வேறுபடுவார்.)

"எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப் படுவன" - இது இளம்பூரணம்.

அப்படின்னா மிச்சதெல்லாம் எழுத்தில்லையா, என்ன? அவையும் எழுத்துக்கள் தான். இன்னும் மற்ற நூற்பாக்களில் மற்றவற்றையும் எழுத்து என்று தான் தொல்காப்பியர் சொல்கிறார். அதைப் பின்னாடிப் பார்ப்போம். (இளம்பூரணரும் "எனப்படுப என்ற சிறப்பால், அளபெடையும், உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப் பட்டன" என்பார். ஆக எல்லாம் எழுத்துத் தான். ஒண்ணு சிறப்பான எழுத்து; இன்னொண்ணு சிறப்பில்லாத எழுத்து. அம்புட்டுத் தான்.)

இந்தக் காலத் தமிழ்க் கணிஞர்கள் சிலர் character னு ஒரு ஆங்கிலச் சொல்லை உள்ளே கொண்டு வந்து போட்டு, "இதெல்லாம் characters, மற்றதெல்லாம் letters" அப்படிங்கிறாங்க.

எப்படி, எப்படி?

"இது எல்லாம் தங்கம், மற்றதெல்லாம் பித்தளை".

"இது என்ன கூத்துடி அம்மா, இவுகளா எதையோ வச்சுக்கிட்டு, அதைப் போய்த் தொல்காப்பியர் வாயிலே திணிக்கிறது?"

இப்படித்தாங்க தாங்களாகவே ஒரு தேற்றைக் கொள்ளுவது, அதைக் கொண்டு போய், நமக்கு முன்னாடி இருந்தவர் மேலே திணிச்சு, அவரே சொல்லிட்டார்னு திரிச்சு விடுறது. இதுவும் பல தமிழர்களுக்கு வாடிக்கையாப் போயிருச்சு; அன்னைக்கே திருவள்ளுவர் சொல்லியிருக்கார், இளங்கோ சொல்லியிருக்கார், கம்பர் சொல்லியிருக்கார்னு ஆளாளுக்குப் பேரெ அவுத்து விடுறது. எந்தப் பய மூலத்தைப் படிக்கப் போறான், எவன் ஒப்பிட்டுப் பார்க்கப் போறாங்கிற மதப்பு. (திருவள்ளுவர் ஒரு கிறித்தவர், அவர் ஒரு இந்து - இப்படி இல்லாதது, பொல்லாததெல்லாம் சொல்றதை ஒரு சிலர் பெருமைன்னு நினைச்சிக்கிடுறாக.)

சரி. இப்ப, எழுத்துன்னா என்ன?

"இழுத்துக்கிட்டே வந்தது எழுத்து"ம்பார் பாவாணர்.

யோசிக்கிறீகளோ? இப்ப, தாழை மடல் இருக்கில்லையா? அது ஒரு காலத்துலே நம்மோட எழுது கருவி. அதுலே தூரிகை வச்சு மைக்குழம்புலே தோய்ச்சு, கோடாய் இழுத்து, இழுத்துச் சின்னச் சின்னமாப் படம் போடலாம். அந்தச் சின்னப் படங்கள்லே ஒரு சில தான் இன்னைக்கு எழுத்துக்களா மாறிருக்கு. ஆ ங்கிற மாட்டைக் கொம்போட போட்ட படம் தான் இன்னைக்கு அ, ஆ ன்னு மாறிருக்கு. எழுத்துங்குற சொல்லு தமிழ்லே கொஞ்ச காலம் ஓவியத்தையும், பலகாலம் நாம எழுதுகிற எழுத்தையும் குறிச்சிருக்கு.

எழுதும் பரப்புங்கிறது முதல்லே கல், பின்னாடி ஓடு (பானையோடாகவும் இருக்கலாம்), அப்புறம் தாழை, பின் பனை ஓலை, முடிவிலே தாளுன்னு பல விதமாய் வந்து சேர்ந்திருக்கு. இப்படி எழுதுகிற முறைகள்லாம் ஒண்ணுக்குப் பின்னாடி ஒண்ணு வந்ததுன்னு பொருளில்லை. பல காலம் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுது முறைகள் சம காலத்துலே நம்மூர்லெ இருந்திருக்கு.

கல்லுங்குற எழுதுபொருள்ளே உளி வச்சுக் கீறுனாங்க. ஓடுங்கிற எழுது பொருள்லேயும் ஆணி வச்சுக் கீறுனாங்க. இப்படிக் கீறுனது கீற்றுன்னு ஆச்சு. கீற்றுங்கிறது சிலநேரம் பகுதியா நின்னு போயிரும். கீற்றுலே முழுமையானது கீற்றம். கல்லில் கீறிய அந்தக் கீற்றமும் தாழை, ஓலையில் எழுதிய எழுத்தும் ஒண்ணுதாங்க. ஏன்னா, இரண்டும் ஆ ங்கிற ஒரே படத்தைத் தான் காட்டியது. இதே ஆ தான் A என்ற படமா, Phoenician களிடமும், அ என்னும் வடிவா நம்மிடமும் இருக்கு. இந்த எழுத்து ஒப்புமையை விவரிக்கணும்னா வேறேயொரு கட்டுரைத் தொடருக்குப் போகணும்.

மேலை நாகரிகங்களும், நடுக் கடல் நாகரிகங்களும், சீன நாகரிகங்களும் இதே மாதிரித் தான் புரிந்திருந்தன. நமக்குத் தாழை, ஓலை போல, அங்கே மரப்பட்டை, தோல், பட்டுத்துணி இப்படிப் பலவாறு இருந்தன. இவையெலாம் அழிந்து போகக் கூடிய எழுதுபொருட்கள். இன்னொருவகை, கல், களிமண் செங்கல், ஓடு இப்படி நெடுநாள் இருக்கக் கூடிய எழுதுபொருட்கள்.

முதல்லே இழுத்தது நமக்கு எழுத்தாச்சு; அவனுக்கு லிபி, (இ)லத்தர், லித்தொ, லித்தெரேச்சர் (நம்மூரு இலக்கியமும் இழுக்கியது தான்.) பொறுமையா வேர்ப்பொருள் பார்த்தா, ஊரம்புட்டுச் சொல்லு கிடைக்கும்; எல்லாம் இழுத்ததுலே வந்தது தான்.

இரண்டாவதுலே கீறுனது நமக்குக் கீற்றம் ஆச்சு, கீறலாச்சு, பொருளில்லாமப் போனா கிறுக்கிறது ஆச்சு; அவுங்களுக்கோ, script ஆவும், inscription, scribe, scripture, character, graph - இப்படி ஒரு நூறு சொல்லையாவது சொல்லலாம். எல்லாம் கல் மேலெ கீறனதை ஒட்டி வந்த சொற்கள்.

ஆகக் character ங்குறதும், letter ங்குறதும் ஒழுங்கா யோசிச்சுப் பார்த்தா ஒண்ணு தான். இரண்டும் வெவ்வேறு எழுதுமுறைகளிலே எழுந்த, அதேபொழுது ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள்.

எனவே, அன்பிற்குரிய கணிஞர்களே, சும்மா உள்ளே புகுந்து இல்லாத பொருளை எல்லாம் ஊடே கொண்டாந்து புகுத்துற வேலையெலாம் வேணாம்.

நாம, இப்பத் தொல்காப்பியத்துக்குத் திரும்ப வருவோம். இந்தத் தொல்காப்பியரு ஒரு கைதேர்ந்த மேடைநாடகக் காரர். நாடக அரங்குலே குவி விளக்குகள் (focus lights) இருக்கும் பாருங்க. அதைப்போட்டு ஒரு பக்கம் வெளிச்சத்தைக் குவிச்சு, சட்டுன்னு குவி விளக்கைச் சுற்றவிட்டு இன்னொரு பக்கம் கடைசிலே கொண்டுவந்து நிப்பாட்டுவாங்க பாருங்க, அது போல,

அ - வுலே முதலாய் வச்சு, ன ங்குற கடைசி வரைக்கும் இருப்பது சிறப்பு எழுத்துக்கள்னு சொல்லி குவிவிளக்கைச் சுத்தி விடுறார். நாம வாயைப பொளக்குறோம். மொத்தம் 30 ஆட்கள்னு சொல்லுவாங்கன்னுட்டு பின்புலத்தை எடுத்து விடுறார். அப்புறம் "இன்னம் மூணு பேர் இருக்காங்க, இவுங்களைச் சார்ந்தவுங்க, ஆனா அவுங்க கொஞ்சம் அலங்கடை - exception, அப்படி"ன்னு சொல்றார்.

கூத்துப் பார்க்குற நமக்குக் குறுகுறுப்பு கூடிப் போகுது. அடுத்துப் போவோமா?

அன்புடன்,
இராம.கி.

Wednesday, September 27, 2006

மெய்யுணர்தல்

என்னைத் தூக்கி அந்த நீண்ட தடுக்கில் (stretcher) வைத்து, நகர்த்தி மின்னெழுவைக்குக் (lift) கொண்டு போன போதே முகம் மேல் நோக்கிப் பார்த்தவாறே இருந்தேன்.

"இந்தாய்யா, உன்னையே சரணாகுதின்னு அடைஞ்சு ரொம்ப நாளாச்சு; எல்லாத்தையும் நீ பார்த்துக்குவேன்னு தெரியும். நல்லா முடிச்சுக் கொண்டாந்து சேரு. சேரு என்ன சேப்பே."

அப்புறம் மேலே நாலாவது மாடியில் பண்டுவ அரங்கிற்குள் (operation theatre) கொண்டு போகு முன்னால் ஓரமாய் பத்தியில் (verandah) நகர்தடுக்கை (moving stretcher) சார்த்தி வைத்து ஒரு மார்வின் (morphin) ஊசி போட்டார்கள். அதற்குள் ஏதோ ஒரு அவக்கர கட்டாம் (emergency case); அவக்கு, அவக்கு என்று இன்னொருவரை நகர்த்திக் கொண்டு வந்து என்னைத் தள்ளிவைத்து, அவரை உள்ளே கொண்டு போய் விட்டார்கள். அந்தப் பண்டுவம் (operation) முடிய 2 1/2 - 3 மணி நேரம் ஆகியிருக்கிறது. அப்புறம் மருத்துவர்கள் (doctors), பண்டுவர்கள் (surgeans), செவிலியர்கள் (nurses) ஆகியோர் சாப்பிட்டு ஓய்வெடுத்து, என்னை உள்ளே கொண்டு போன போது பகல் 1 மணி ஆகியிருக்கிறதாம்.

இதற்கிடையில் சுணக்கம் (delay) கருதி இரண்டாவது மார்வின் ஊசியை எப்போதோ கொடுத்திருக்கிறார்கள். நான் சட்டென்று தூங்கிப் போனேன். எப்போது பண்டுவம் தொடங்கினார்கள், எப்படி மயக்கம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு ஐந்து மணி நேரம் கழித்துப் பண்டுவம் முடிந்திருக்கிறது. அப்புறம் என்னை ஈர்க் கவனிப்பு அறைக்குக் (intensive care unit; ஈர்த்த கவனிப்பு - ஈடுபாடு மிகுந்த கவனிப்பு) கொண்டு போயிருக்கிறார்கள்.

முழிப்பு வந்த கதையை அல்லவா சொல்ல வேண்டும்?

திடீரென்று மூடிக் கிடந்த இமைக்கும் வெளியே மங்கலான வெளிச்சம் இருப்பது திரைக்கு நடுவில் கசிவது போல் தெரிந்தது. இமைகளைத் திறக்க முயல்கிறேன். அழிச்சாட்டியம் பண்ணுகிறது.

"ஊகும்", ஒன்றும் நடக்கவில்லை.

"சரி, வலது கை விரல்களை மூடி வத்திருக்கிறேனே, அவற்றைத் திறக்கலாம்" என்று பார்க்கிறேன். வெளிமனத்தில் இருந்து கட்டளை போய் திறக்கச் சொல்லுவதை ஆழ்மனத்தின் வழி உணருகிறேன்.

"ஊகும்", செயன்மை ஒருங்கிழந்து கிடப்பதை உணர முடிகிறது.

என் மன வலிமை எல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்து, அந்த விரல்களை விரியச் செய்வதில் ஒன்று படுத்திப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் ஓர் ஒருங்கின்மை (in-co-ordination).

இப்பொழுது தலையை அசைக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். தலை சிறிது சிறிதாக மேலும் கீழும் அசைகிறது. என்னால் அசைக்க முடிகிறது என்பதே பெரிய நிறைவாயிற்று.

அடுத்துப் பக்கவாட்டில் அசைப்பு; அதிலும் கெலிப்பு.

அடுத்தடுத்து, தலை மேலும், கீழுமாய், இடதும், வலதுமாய் அசைக்கத் தொடங்கினேன். என்னால் செய்யமுடியும் என்று தோன்றியது.

இப்பொழுது மீண்டும் வலது கைவிரல்களின் மேல் எண்ணவோட்டத்தைச் செறியவைத்து விரிக்கப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து விட்டன.

இமைகள் இன்னும் திறந்தன.

இத்தனையையும் நான் செய்வதை அங்கு இருந்து ஒரு செவிலி பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். கொஞ்சம் வாய்விட்டுச் சிரிக்கவும் செய்திருக்கிறார்.

ஓரிரு நுணுத்தங்கள் போய், தொண்டையைக் கணைத்து, "இப்பொழுது எத்தனை மணி?" என்றேன். நுணுக்கமாய் என் விளையாட்டைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த செவிலி "இராத்திரி பத்தே முக்கால்; அது என்னய்யா, அவ்வளவு அசைப்பும் ஆட்டமும்; எல்லோருக்கும் நடப்பது தானே! கொஞ்ச நேரத்தில் தானாய் விழிக்கத்தானே செய்யணும். உங்களுக்காக கீழே யார் வந்திருக்காங்க?"

"என் தம்பி"

யாரோ ஆளை அனுப்பி அவனைக் கூட்டிவந்தார். அவன் அருகே வந்து செய்கையாலே "நலமாய் இருக்கிறீர்களா?" என்றான்.

"எத்தனை மணிக்கு வந்தே?"

"எட்டு மணிக்கே வந்துவிட்டேன். மற்றவர்களெல்லாம் ஒன்பது மணிக்குத் தான் போனார்கள்"

அப்புறம் அவனை அங்கிருந்து நகரச் சொல்லி விட்டார்கள். நான் மீண்டும் அயரத் தொடங்கினேன்.

"இந்த உடம்பு என்ற ஒன்று என்னுடைய மனத்தின் கட்டையும் மீறி நிற்கும்" என்று அறிவது கொஞ்சம் திகைக்க வைக்கும் உணர்வு.

இந்த உடம்பு என்பதை நாம் உணருகின்ற நிலை அரிதிலும் அரிதான ஒரு பட்டறிவு.

என் கைவிரல்களை விரிப்பதற்கு விடாது முயன்றேன் பாருங்கள், அப்பொழுது தான் மெய் உணர்ந்தேன். (மெய் = உடம்பு; அது உண்மையும் கூட). அதைச் சொற்களால் விவரிக்க முடியாது.

இதற்கு முன்னால் என்றைக்கு என் உடம்பை உணர்ந்திருக்கிறேன், என்று எண்ணிப் பார்க்கிறேன்; ஒன்று கூட நினைவிற்கு வரவில்லை.

மெய் இருக்கிறது என்று அறிவது வேறு; உணருவது என்பது வேறு. திருமூலர் தெரியாமல் சொல்லவில்லை.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே

உடம்பினை முன்னம் அழுக்கு என்று இருந்தேன்;
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!"

- திருமந்திரம் 717, 718 ம் பாடல்கள்.

"அய்யா, பெருமாளே, எனக்குப் புரியவச்சே பாரு, இனி உடம்பை ஓம்புவேன்."

அன்புடன்,
இராம.கி.