Thursday, November 01, 2012

சொவ்வறை -1

சொவ்வறை என்ற சொல் இன்று, நேற்றுப் பிறந்ததில்லை. 10/12 ஆண்டுகளுக்கு முன், ”மென்பொருள், மென்கலன்” போன்ற சொற்களை ஏற்கத் தயங்கி, நீண்ட விளக்கத்தின் பின்னால், அடியேனாற் பரிந்துரைக்கப்பட்டது. ”மென்மம், கணியம்” போன்றவை அப்போது எழுந்திருக்கவில்லை. ”யம்மும், மம்மும் ஒட்டினால் தமிழில் எதுவும் பண்டம்/ ஆக்கம்/ விளை/ பொருள்/ சரக்காகி விடும்” என்ற சூழ்க்குமம் தெரியாத காலமது:-). சொவ்வறையின் பரிந்துரை கேட்டுச் சில சட்டாம்பிள்ளைகள் வீறு கொண்டு, கடைந்த சொற்களால் ’உள்ளுக்குள் துரோகம் செய்யும் இராம.கி” என அருச்சிக்க முற்படுவதும் தெரியாது. ”இப்படிச் சொற்களை அமைக்கும் நெறி, மொழியை புற்றுநோய் போல் மறைந்திருந்து அடியோடு அழுகடிக்கும்” என்று செய்யப்படும்  பேரழிவுக் கணிப்பும் அப்போது தெரியாது :-))))).

அண்மையில் நண்பரொருவர் கூறியதினும் இழிந்து வல்லடியாகக் குடத்தை வரிசையில் இருத்திக் குழாய்ச்சண்டை போட எனக்கும் நேரம் பிடிக்காது. ஒரு வேளை இளந்திமிரில் 40/45 ஆண்டுகளுக்கு முன் செய்திருப்பேனோ, என்னவோ?. இப்பொழுது மூத்த அகவையில், சற்று நாகரிகம் கற்றதாற் புன்சிரித்து நகர்கிறேன். 1000-ங்களுக்கும் மேற்பட்டுப் புதுச்சொற்கள் பரிந்துரைத்த நான், அவை நிலைக்க என்றுமே முயன்றதில்லை. ஆணவம் தொனிக்க அரசியலும் பண்ணியதில்லை. ”பயனர்க்கு எது உகப்போ, அது நிலைக்கும்” என்றே அமைந்துள்ளேன். நிலைத்தவை பல. அழிந்தவை ஒரு சில.

சொவ்வறை என்ற சொல் எழுந்தது தமிழிணையம் மடற்குழுவிலா (ஆம், எல்லோரும் எளிதாய் மறந்துவிட்ட பாலாப் பிள்ளையின் tamil.net), அன்றித் தமிழுலகம் யாகூ மடற்குழுவிலா என்று இப்போது நினைவில்லை, ஏதோ ஒன்றில் எழுதினேன். 2 குழுக்களும் அன்று தகுதரத்தில் (TSCII இல்) இயங்கியன. தமிழுக்கு வந்த போகூழ், அவ்விரு குழுக்களுமே இன்று இல்லாது போயின. (’தமிழுலகம்’ ஒருங்குறி ஆக்கத்தில் இப்போது கூகுளில் இயங்குகிறது.) இக்குழுக்களில் எழுதி இணையத்தில் அழிந்துபோன கட்டுரைகள் ஏராளம். அவை என் கணி நினையங்களிலும் (memory devices) கூட அழிந்துவிட்டன. அங்குமிங்குமாய்த் தேடி எம் நண்பர்கள் பழையதை அனுப்ப, இப்போது ஒன்றொன்றாய்ச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த ஊற்றுக் கட்டுரை மூலமும், குமுகக் கணுக்கத்தின் மூலமும் [ஒரு முரண்நகை தெரியுமோ? கணுக்கம் - connection - என்ற சொல்லைப் படைத்து விளக்கமெலாஞ் சொன்னவர், தான் படைத்த முறையை வசதியாய் மறந்து, இப்போது அடம்பிடிக்கிறார்], என் வலைப்பதிவின் மூலமும், தமிழ்-விக்சனரியிற் பேசப்பட்டதன் மூலமும், சொவ்வறை என்ற சொல் தயக்கத்தோடு சிச்சிறிதாய்ப் பலருக்குந் தெரிய வந்தது.

”இராம.கி. பரிந்துரைத்த சொற்களெலாம் ஆங்கில ஒலிப்புக் கொண்டவை.” என்ற அவதூறை இணைய அரசியல்வாதி ஒருவர் ஓதி, இன்னுஞ் சிலரைத் துணுக்குற வைத்ததால், நான் என்றும் கவன்றதில்லை. ஆங்கிலமும், சங்கதமும் உடன்பிறப்புக்கள் என (மாக்சு முல்லரோ, ஜோன்சோ) யாரோ ஒரு மேனாட்டார் சொன்னாராம். நம்மவரும் இக்கருதுகோளை ஏற்று அதை உண்மையாக்கித் தமிழை நம் ஆய்விலிருந்து விரட்டி அகற்றுவதிற் துணை நிற்கின்றனர். இக் கருதுகோளின்படித் தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும், ”மிளகுத் தண்ணீர், கட்டை மரம்” போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய இணைகளைத் தவிர்த்து வேறு ஒட்டுதல் கிடையாதாம். இப்படிச் சில படித்தவர் செய்தது, மாற்றாருக்கு வசதியாயிற்று. நூற்றுக்கணக்கில் தமிழ்ச்சொற்களை தன்மய ஒப்பீட்டிற் பார்த்து, அவற்றின் முன்னுரிமையைச் சங்கதத்திற்கே கொடுத்து, 50%-க்கும் மேற்பட்ட தமிழ், சொற்கள் கடனுற்றதாய்க் காட்டி, நம் பெருமிதத்தைக் குலைத்தார். ”செம்மொழி” என்பதெலாம் முடிவில் ஒரு பாவனை தான் போலும்.

"எந்த முன்முடிவும் இன்றி தமிழ்வேர்களின் வழி பாருங்கள், தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பியத்திற்கும் இடை ஏதோ உறவு தென்படுகிறது" என்று கரட்டிக் கத்தியும் பலனில்லை; மேலையர் கருதுகோளைச் சிக்கெனப் பிடித்து “எங்கெழுந்து அருளுவது இனியே!” என அமைகிறார். அறிவோட்டம் குறைந்து தொண்டூழியங் கூடி, மூதிகம் மூடி, தமிழரும் உணராதிருக்கிறார். 

”வறை”க்கும் ”ware”-க்கும் உள்ள உறவு புரியாது (புரிவது மட்டுமின்றி, மேலும் அது பற்றி வியக்காது) குளிப்பாட்டிய குழந்தையை குழிதாடியோடு தூக்கியெறிவும் செய்கிறார். மொத்தத்திற் தமிழ்மூலம் காட்டுபவரைப் பித்தர், வெறியரெனக் காட்சிப் பொருளாக்கி, மேனாட்டுக் கருதுகோளைப் பிடித்து ஆடுவாரை ”வல்லார்” என வியக்கும் பம்மாத்து குமுகாயத்தில் தொடர்கிறது. கேட்கத் தான் ஆளில்லை. கடக்க வேண்டிய தொலைவும் அதிகமாகிறது. எவனொருவன் தன் வாழ்விற் பெருமிதம் தொலைத்தானோ, அவன் சொந்தச் சிந்தனை வற்றி அந்தி நாள் அளவும் அடிமையாயிருக்கக் கடவன் ஆகுக.

வறை என்பது சரக்கு. உலர்ந்த பண்டம். (பல தமிழிய மொழிகளுக்குள் இந்தச் சொல் இருக்கிறது. த.சரக்கு, ம.சரக்கு, க.சரகு,சர்கு, தெ.து. சரக்கு) வேடுவச் சேகர (hunter - gatherer) வாழ்க்கையில், தொல்பழங்காலத்தில் இயற்கையில் உலர வைத்துக் கிட்டிய பொருட்களையே (பின்ன்னால் கிட்டாத நாட்களின் பயன்பாட்டிற்காக) பண்டம் மாற்றி விற்றனர். கருவாடு, உப்புக் கண்டம், உலர்ந்த மீன், உலர்ந்த காய், பழங்கள் என வெய்யிலில் வற்றியவை இவற்றில் ஒரு சில. இவற்றையே பின்னால் நாகரிகம் வளர்ந்த நிலையிற் காசுக்கு விற்றார். இப்படி உலர்பொருட்களில் தான் மாந்தரின் முதல் வாணிகம் தொடங்கியது. மாந்தரின் செயற்கை ஆக்கம் பின்னாற் சேர்ந்துகொண்டது.

உணங்குகள் (உலர்ந்த பொருட்கள்)
கருவாடுகள் (கருத்து, உலர்ந்த, ஊன் தசைப் பிண்டங்கள்)
கண்டங்கள் (புலவின் உப்புக் கண்டங்கள்; கண்டுதல் என்பதும் வற்றுவதே; கண்டுமுதல் - களத்தில் காய்வதற்கு முன்னிருக்கும் ஈரமில்லாக் கூலத்தை வேளாண்மையிற் குறிக்கிறது.)
சருகுகள் (உலர் இலைகள், பூக்கள்; சருகிக் கிடந்தது சரக்கு),
சுக்குகள் (காய்ந்த இஞ்சி)
சுண்டுகள் (நீர்வற்றிச் சுண்டியது. சுண்டின் திரிவு சண்டு. ”சண்டும் சருகும்” என்பது தென்றமிழ் நாட்டுச் சொல்லிணை)
சுவறல்கள் (வற்றிக் கிடைத்த பொருள்)
துவட்டல்கள் (நீர் வற்றிய பொருட்கள்)
பண்டங்கள் (பண்டிக் கிடந்த பொருள் பண்டம்; பண்டு = உலர்ந்த பழம்),
பொருக்குகள் (காய்ந்த சோற்றுப் பருக்கைகள்)
வற்றல்கள் (வெய்யிலில் உலர்த்தி வற்றிய காய்கள்.)

எனப் பல்வேறு சொற்கள் தமிழில் உலர்பொருளைச் சுட்டும். இயலிரை கிடைக்காத காலத்தில் இவற்றில் பலவும் மாந்தருக்கு உணவும் ஆயின. நடையும் பயணமும் பண்டமாற்று வழியாகி, பாலை தாண்டும் பழக்கம் பண்டைத் தமிழர்க்கு ஏற்பட்டது. பாலையாகிய மொழிபெயர்த் தேயம் பெரும்பாலும் இற்றை இராயல சீமை தான். (சங்க இலக்கியத்தில் உலவும் இராயல சீமையின் தாக்கத்தை இன்னும் நாம் உணர்ந்தோமில்லை.) 50%க்கும் மேற்பட்ட சங்கப் பாக்கள் பாலைத்திணையையே பேசுகின்றன. பாலைத் திணையில் வணிகம் பிணைந்தது நம்மேல் பூகோளம் விதித்த கட்டுப்பாடு.

இடைக்காலத்திற் சரக்காறு என்று ஆறுவகைச் சரக்குகளைக் குறிப்பார். ஒவ்வொரு பகுதிக்கும், வெவ்வேறு வகைகள் முதன்மையாகின. சில பகுதிகளின் ஆறு சரக்குகளைச் சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி குறித்துள்ளது.

அ. வங்காள நாட்டின் அறுவகைச் சரக்குகள்:

1. இலிங்கம்: cinnabar
2. பச்சைக் கற்பூரம்: crude camphor
3. குங்குமப்பூ: European saffron
4. படிகாரம்: alum
5. சாரம்: sal ammoniac
6. சுக்கு: dried ginger

ஆ. மலையாள நாட்டின் அறுவகைச் சரக்குகள்

1. கொச்சிவீரம்: Cochin corrosive sublimate
2. மிளகு: black pepper
3. திப்பிலி: long pepper
4. ஏலம்: cardamon
5. கிராம்பு: clove
6. சிற்றரத்தை: lesser galangal

இ. கிழக்குக் கடற்கரையில் விளையும் அறுவகைச் சரக்குகள்

1. கல்லுப்பு: inslouble sea salt
2. இந்துப்பு: sindh slat
3. பொட்டிலுப்பு: nitre
4. அப்பளாகாரம்: sub-carbonate of soda
5. பலகறை: cowry
6. கடல்நுரை: sea froth

ஈ. வடமேற்குக் கடற்கரையில் விளையும் அறுவகைச் சரக்குகள்

1. கோதளங்காய்: fruit of common Indian rak
2. கடுக்காய்: gall nut
3. சீயக்காய்: soap pad
4. பொன்னங்காய்: soap-nut
5. தேற்றான்கொட்டை: water clearing nut
6. வலம்புரிக்காய்: Indian sarew tree (right)

உ. உள்ளூரின் (நமது நாட்டின்) அறுவகைச் சரக்குகள்

1. சவுரிப் பழம்: shavari fruit
2. தூதளம் பழம்: fruit of prickly shoonday
3. பிரண்டைப் பழம்: cissus fruit
4. கண்டங்கத்திரிப் பழம்: fruit of prickly birinjal
5. கோவைப் பழம்: red bitter-melon fruit
6. இந்திரகோபப் பூச்சி: leady's fly

மேலேயுள்ளவை நீரின்றியோ, நீர்வற்றியோ, கிடைத்த இயற்பொருட்கள். வறட்டி என்பது வைக்கோலும் உலர்சாணமுங் சேர்ந்த கலவை. வறுவல்- வினையையும் பெயரையும் அது குறிக்கும். வறல், வறழ், வறள், வறை என்பன எல்லாம் வறுத்தலில் பிறந்த சொற்கள். ஈர மண்ணிற் செய்து உலரக் காய வைத்துச் சுட்ட கலமே வறையாகும். அது வெறுங்கலமல்ல. சுட்ட கலம். 

சுடாக் கலம் விலைக்கு வாராது; பயனுக்குமாகாது. ஆங்கிலத்திற் கூட ware என்பது சுட்ட கலத்தையே பெரிதுங் குறித்தது. அதனால் தான் மென்கலன் என்பதைத் தவிர்த்து, ஆழ்ந்த சிந்தனையில் வறையில் முடியும் சொல்லான சொவ்வறையைப் பரிந்துரைத்தேன்.

[கலன், பொருள் என்பவை இங்கு சரி வராது. குறிப்பாகக் கலன், ”இன்னொரு பொருளைக் கொள்ளும்”வினையையே அது குறிக்கும். something to contain about. உண்கலன் = உணவிருக்கும் கலன், உண்ணப் பயன்படும் கலன். மின்கலன் = மின்வேதி இருக்கும் கலன், மின்னாக்கும் கலன். மட்கலன் = மண்ணால் ஆன கலன். செப்புக் கலன் = செம்பால் ஆன கலன். (பல்வேறு மாழைக் கலன்கள் உண்டு.) 

எனவே கலன் என்பது கொள்வினையைக் குறிக்கிறது. ware அப்படியிருக்கத் தேவையில்லை. இன்னொரு சொல்லான மென்பொருளில் வரும் ”பொருள்” good ஆ, material ஆ, substance ஆ? உங்களுக்குத் தெரியுமோ? எனக்குத் தெரியாது. தவிர, 2500 ஆண்டுகளாய் meaning எனும் பொருட்பாட்டையும் “பொருள்” சுமந்து வருகிறது. I don't know why do we have information overload on the word "பொருள்"?]

என்னுடைய ஒரு பதிவின் பின்னூட்டில், திரு. ஆறுமுகத் தமிழன், “வறை என்பது சுட்ட கலம் என்று நீங்கள் சொன்னதைக் கண்ட பிறகு தான்

’ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
         உதிரப்புனலில் உண்டை சேர்த்து
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
         வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே’

என்ற பாட்டில் வருகிற ”வறையோடு” என்ற பதத்தின் பொருள் அடியோடு புரிந்தது” என்று கூறினார்.

வறை என்பது சித்தர் பாடலில் மட்டுமல்ல. ”நெய் கனிந்து வறையார்ப்ப” என்பதால், மதுரைக்காஞ்சி 756 -இல், ”நெய் போட்டு வறுக்கும் செயல்” உணர்த்தப் படுகிறது. வறை முறுகல் = அளவிற்கு மீறிக் கருகியது (”அது வறைமுறுகல் ஆகையிலே பின்பு தவிர்த்தது” ஈடு 6.5.12) வறையல் என்ற சொல் திருவிளையாடற் புராணத்தில் வறையைக் குறித்திருக்கிறது. வறையோடு - பொரிக்கும் சட்டி/கலத்தைக் குறித்தது. தென்பாண்டியிற் சருகச் சட்டி > சருவச் செட்டி என்பது (சருகுதலை நினையுங்கள்) frying pan ஐயே குறிக்கும்.

இங்கெல்லாம் வறையும் ware-உம் வேறுபடுகிறதா? இல்லையே? சரியாய்ப் பொருந்தாத ”கலத்தை” நாம் ஏற்போம், ஆனால் முற்றும் பொருந்தும் வறையை நாம் ஏற்க மாட்டோமா? சரக்கு, கண்டம், சுண்டல், பண்டம், போன்ற சொற்களுக்கு எத்துணை ஏற்புண்டோ, அத்துணை ஏற்பு வறைக்கும் உண்டே? ”மற்றதெலாம் கொண்டு, வறையை மட்டும் கொள்ளோமா?” அதுவென்ன பித்துக்குளித் தனம்? ஒருகண்ணில் வெண்ணெய், இன்னொன்றில் சுண்ணமா? ”ஓகோ.,.பாழாய்ப் போன ஆங்கிலவொலி உள்ளேவந்து தொனிக்கிறதோ?” 

அந்த நாளில் எங்கள் கோவை நுட்பியற் கல்லூரி விடுதியில், புதிதாய்ச் சேர்ந்த நாட்டுப்புற இளைஞன் ஒருவன் வேளாண்மை மரபு பொருந்திய தன் தகப்பனை தன்னோடு படிக்கும் நண்பருக்கு அறிமுகஞ் செய்ய வெட்கி, ஒதுக்கி வைத்த மடமை எனக்குச் சட்டென நினைவிற்கு வருகிறது.

ஒலியொப்பீட்டை மட்டுமே நான் பார்ப்பதாய்ப் பெரிய பரப்புரை செய்யும் மெத்தப் படித்த மேதாவிகளே! தொனியைப் பார்க்காது, ஆழமாகப் போய் உள்ளே இருக்கும் வேர்ப்பொருளைக் காணுங்கள். ”எந்த ஆங்கிலச்சொல் ஊடே தொனிக்கிறது? அதைத் தவிர்க்க வேண்டுமே?” என்று குத்திக் கிளறுவது என் வேலையில்லை. அப்படித் தொனித்தால் தான் என்ன குறை வந்துவிடும்? தமிழன்னை தவித்துப்போவாளா? தடுக்கி விழுவாளா? தமிழ்ப்பொருள் உள்ளிருந்தால் எனக்குப் போதும்.

present- ற்கு இணையாய்ப் ”பரத்துதல்” என்பது தோன்றினால் அது தீண்டத் தகாததோ? "இராம.கி சொன்னானா? போட்டுச் சாத்து” என்ற முனைப்புடன் ”பரத்தீடு” கேட்டுக் கிடுகிப் பரந்த நண்பர், ஒரு பரிமானப் பார்வையில் அதைச் சாடாது, பல்வேறு நாட்டுப்புறங்களையும் சற்று நுணுகி அறியலாமே? 

பரத்தி இடுதல் ஒப்பொலியா? தமிழன் பரத்தி இட்டதே இல்லையா? பரத்தும் வினை நெல்வயல், உப்புவயல்களில் உண்டு. நெற்களத்திற் பரம்புக் கட்டை என்றும், உப்பளத்திற் பரத்துக் கட்டை என்றுஞ் சொல்வார். அதற்குப் பரவுக் கட்டை > பலுவுக் கட்டை > பலுகுக் கட்டை என்ற பெயரும் உண்டு. 

பலுகுக் கட்டையை ஓரோவழி மொழுக்கு மரம் என்பர். [இச்சொற்களை உப்பளத்திலும், களத்து மேட்டிலும் நானே கேட்டிருக்கிறேன். எங்கள் உரச்சாலை யூரியாப் பரற் கோபுரத்தின் - Urea prill tower - அடியில் விளவப் படுகையில் (fluid bed) கட்டிகளை வெளிக்கிட்டிக் குருணைகளைப் (granular particles) பரப்பப் பரத்துக் கட்டையைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்.]

முகன்மை வாசகங்களை, படங்களை, கருத்துக்களை, விழியங்களை(videos)ப் பரத்திக் காட்டி விளக்குவதைப் பரத்தீடு என்று சொல்லக் கூடாதா? இங்கு தமிழ் முகன்மையா? இல்லை, மாக்சுமுல்லர், ஜோன்சின் தேற்றம்/கருதுகோள் முகன்மையா? 19 ஆம் நூற்றாண்டுத் தேற்றத்தைத் தலைமேற் சுமந்து பணிவோடு காப்பாற்ற, எம் நாட்டு நடைமுறையைத் தவிர்க்க வேண்டுமா? நேரே தொடவேண்டிய மூக்கைச் சுற்றிவளைத்துத் தொடவேண்டுமா? நாம் எங்கே போகிறோம்? எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை.

ஈடு என்ற சொல் இடுதல் வினையடிப் பெயராய் எழும். [விதப்பாக, விண்ணவர் (வைணவர்) வழக்கில், ஈட்டிற்குப் பல்வேறு விளக்கமுண்டு. ஈடு = கவசம் என்பது ஒரு பொருள், இடுதல் = எழுதுதல் என்ற அளவில், நம்பிள்ளை பேசியதை வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிவைத்ததால், ஈடு என்று மணிப்பவள ‘வியாக்கியானத்தை’ச் சொல்லுவர்; ஈடு = ஒப்பு என்ற பொருளும் அதற்குண்டு; இறைவனோடு ஈடுபடச் செய்வதால் ஈடு என இன்னொரு வகைப் பொருளுமுண்டு.] பரத்தி இடப்பட்டதால் பரத்து ஈடு (=பரத்தீடு) ஆயிற்று.

வறு, வறல், வறள், வறழ் என்ற தொடர்ச்சியில் நூற்றுக் கணக்கான கூட்டுச்சொற்கள் உள்ளன. எல்லாவற்றையும் சேர்த்து ஆங்கில ஒப்பொலி தருவதாய்க் கருதி, வங்காள விரிகுடாவில் நாம் கொட்டி விடலாமா? இப்படித் தான், ஒரு காலத்தில் சங்கத ஒப்பீடு பார்த்து ”இது தமிழில்லை, அது தமிழில்லை” என ஒதுக்கிய மூடத்தனம் எழுந்தது. இக் காலத்தில் ஆங்கில ஒப்பீடு பார்த்து இன்னும் பல தமிழ்ச்சொற்களைத் தவிர்த்து விட்டால், முடிவில் எங்குபோய் நிற்போம்? ”உள்ளதும் போச்சுடா, தொள்ளைக்காதா.”

 ஜியார்ச்சு ஆர்வெலின் ”1984” என்ற புதினத்தில் வரும் good, plus good, double plus good, double plus ungood என்பது போல் வெறும் 2000, 3000 சொற்களை மட்டும் வைத்து முன்னும், பின்னும் ஒட்டுக்களைப் பிதுக்கியொட்டிச் சரஞ்சரமாய் sausage மொழியாக்கி எதிர்காலத் தமிழ்ச் சொற்களை உருவாக்கலாமா? அப்படித் தானே படித்த மக்கள், வழக்குத் தமிழைப் புத்தாக்கஞ் செய்கிறோம்? பின்னொட்டு மரபு சுத்தரவாய் மாறி, சிறிது சிறிதாய்த் தமிழை முன்னொட்டு மொழியாய் ஆக்குகிறோமே? [post-modernism பின்நவீனத்துவமாம்:-)))] கூடிய மட்டும் பெயர்ச்சொற் சரங்களைத் தவிர்த்தால், அல்லது பெரிதுங் குறைத்தால், தமிழ், செருமன் மொழி மாதிரித் தோற்றம் காட்டாது.

தமிழ்நடையின் சிக்கலே படித்தோரின் நினைவிற்கு வரும் சாத்தார (இது தான் சாதாரணம் என்ற சொல்லின் தமிழ் மூலம்.) வழக்குச் சொற்களை மட்டுமே வைத்துப் பூசிமெழுகி, இட்டளி கிண்டிய உப்புமாவைப் போலப் புரட்டி எடுத்து, புது/பழஞ் சொற்றொகுதியைக் கூட்டிக் கொள்ளாது, துல்லியம் பாராது, விதப்பு நோக்காது, பொதுச்சொற்களோடு முன்னும், பின்னும் ஒட்டுப்பெய்து, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது தான். மேலைநாட்டுப் புலவுக்கடைகளில் மாலை மாலையாய் ஊன்சரம் தொங்குவது போலத் தமிழ்க் கலைச்சொற்கள் தமிழ்க் கடைகளிற் இப்பொழுது தொங்கிக் கொண்டிருக்கின்றன:-)))). இவற்றை வாங்கிப் புழங்கத் தான் ஆட்களில்லை.

show, exhibit, display, demonstrate, present என எல்லாவற்றையும் ”காட்டலாக்கி”, “ஷொட்டு”க் கொடுத்து ஒட்டுக்கள் பிசைந்து மழுங்க வேண்டியதன் தேவை என்ன? [example என்பதைக் கூடக் காட்டு என்று இக்காலத்திற் சொல்கிறோம். அப்புறம் எங்கே காட்டலின் பொருளை அகலப்படுத்துவது?] 

இவையிடையே பொருட்பாட்டில் வேறுபாடே கிடையாதா? எல்லாம் ஒரே களிமண்ணா? இடம், பொருள், ஏவல் பாராமோ? இவற்றை வேறுபடுத்த வெவ்வேறு சொற்கள் வேண்டாமா? ஆங்கிலம் அறிவுலகில் வெற்றி பெறுவது நுண்ணிய வேறுபாடு காட்டுவதில் தானே? தமிழ்நடை அதற்கு ஈடு கொடுக்காது எனில், துல்லிய விதப்புக் காட்டாது எனில், அப்புறம் ஏணி வைத்தாலும் குறிக்கோளை எட்டுவோமோ? அடுத்த பகுதியில் தொடர்வோம்.

அதற்குமுன் சொவ்வறையை ஒட்டிய மற்ற வறைச் சொற்களை இங்கு மாதிரிக்குப் பட்டியல் இடுகிறேன். இவற்றையெல்லாம் ஒருங்குபடச் சொல்ல நான் அறிந்த வரையில் மென்பொருள், மென்கலன் போன்ற சொற்கள் வாய்ப்புத் தரா. (ஒரு பக்கம் அறைகலன் - furniture - என்று புதிய, ஆனாற் தவறான, முறையிற் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் மென்கலன் என்றால் பொருந்துமா?) கலைச் சொற்கள் என்பவை துறை சார்ந்து தமிழ்நெறியின் படிச் செய்யவேண்டியவை. இதை மறக்கக் கூடாது. பட்டியலுக்கு வருகிறேன்.

 software = சொவ்வறை, [softness என்பது மென்மையா? கலன்/பொருளோடு சேரும் போது, என்ன பொருளில் மெல்லெனும் பெயரடை (adjective) அமைகிறது? மெல்லுதல் என்பது வினையா? மெலிவு என்பது என்ன? 

thin, nice, smooth, tender, supple, fleecy, spongy, flexible, pliable, malleable, ductile, tractile, extendable, plastic, mellow - இவற்றிடையே அமைந்துள்ள நுணுகிய, அறிவியல் தழுவிய, பொருள் வேறுபாட்டைத் தமிழிற் காட்டவேண்டாமா? தமிழ்ச் சொற்களின் துல்லியம், கூர்மை என்பன எங்கே? soft - இன் அடிப்படை வறையறையை எங்கேனும் பார்த்தோமா? இராம.கி.யின் முதுகை மத்தளம் ஆக்கிச் சாடுமுன், தமிழில் அடிப்படைச் சொற்களை வற்று ஆழப் பார்க்கலாமே? Have we got precision in our choice of words?

இன்னும் mass-க்கும் weight-க்கும் கூட வேறுபாடின்றி, நிறை, எடையைக் குழப்பிக் கொள்கிறோமே? volume பற்றிச் சொல்வதிற் கனத்தின் குழப்பம் - எண்ணிப் பார்த்தோமா? இயற்பு என்ற சொல் தமிழிலுண்டா? கேள்விப் பட்டுள்ளீரா? (இயல்பு உண்டு) physics ற்கு இணையாய் ”இயற்பியல்” புழங்குகிறோமே? Is it not meaningless? ”இயல்பியலை” முதலிற் பரிந்துரைத்த நானே இற்றை ”இயற்பியலைக்” கண்டு வியக்கிறேன். வழக்குத் திரிவு என்பது எண்ணிப் பார்க்க முடியாத நேர்ச்சி போலும். முதற் கோணல் முற்றுங் கோணல். இன்னும் பல சொற்களின் பொருந்தாமையை எடுத்துரைப்பின். விரியும் என்றெண்ணி விடுக்கிறேன். soft-ஐ மட்டும் அடுத்த பகுதியில் நீளச் சொல்கிறேன்.]

hardware = கடுவறை (இது கணி சார்ந்தது மட்டுமல்ல, இரும்புக்கடைச் “சாமான்”களையும் குறிக்கிறது. சாமான் என்ற கடன் சொல்லே எப்படிப் புழக்கத்திற்கு வந்தது? உரிய தமிழ்ச்சொல்லை நாம் பயிலாததால் தானே?) shareware = பகிர்வறை,
firmware = நிறுவறை (கணியாக்கர் நிறுவிய சொவ்வறைகள்)
freeware = பரிவறை, (பரிக்கு விளக்கம் வேண்டில் என் வலைப்பதிவிற்குப் போங்கள்.)
free software = பரிச் சொவ்வறை,
licensed software = உரி(ம)ச் சொவ்வறை
office software = அலுவச் சொவ்வறை
spyware = உளவறை (உளத்தல் = தோண்டியெடுத்தல். உளத்தலின் திரிவு உழத்தல். உழவும் போது நிலத்தில் தோண்டிக் கீறுகிறோம். இங்கே செய்தி, புலனங்களை, நம்மிடமிருந்து உளந்தெடுக்கிறார்.)
anti-spyware = உளவு ஒழிவறை (எதிர் என்ற முன்னொட்டுப் போடாது, ஒழி வினையாய்க் காட்டுவது தமிழ்நடைக்கு உகந்தது.)
open source software = திறவூற்றுச் சொவ்வறை
pirated software = பறியாண்ட சொவ்வறை.
warehouse = வறைக்கூடம்.  (இது சொவ்வறையைப் பற்றி மட்டுமல்ல. எல்லாத் தொழிலங்கள், சேகரங்கள் போன்றவற்றிலிருக்கும்  ஆன சொல் “வறைகள் சேர்ந்து கிடக்கும் கூடம்”. மின்சாரத்திற் சாரம் போனது மாதிரி, தொழில் நுட்பத்தில் தொழிலைப் போக்கி நுட்பியல் ஆக்கியது மாதிரி, அலுவலகம், தொழிலகம் போன்ற சொற்களில் ”க” என்பது மறையவேண்டும்.)
data warehousing software = .தரவு வறைக்கூடச் சொவ்வறை

வறையை வைத்து இப்படிப் பல்வேறு படியாக்கங்களை (applications) எளிதில் ஆளமுடியும். கலனையோ, பொருளையோ வைத்துச் செய்ய முடியாது.

அன்புடன்,
இராம.கி.

8 comments:

அரையாய் நிறை said...

iyya ungal pathivugalai padipathe mikka makilchi..ungalai pola tamil arivu petru thooya tamilil pesa aasaiyai irukirathu...tamil valara vendum..vaala vendum..ipoluthu aangilam kalantha tamilil eluthinalum vegu seekiram tamilil pulamai adaiya muyarchipen..ungaluku thonuvathai ellam ungalin alagiya nadaiyil thooya tamilil eluthi pathivugali veliyida vendi kolkiren...indrila vitalum endravathu oru naal kandipaga thirumpa thirumpa padithu thooya tamilin aanandhathai adaiven..nandri

தங்கமணி said...

வழக்கம் போல பொருத்தமான, அழகான தமிழில் அமைந்த சொற்களும் வார்த்தைகளும். நீங்கள் ஏன் ஒர் தமிழ்-ஆங்கில அகராதியை (தமிழ் வேர்ச் சொற்களுடன்) உருவாக்கக்கூடாது? அது மிக்க பயனுடையதாக இருக்கும். அது மிகவும் தேவையுடைய ஒன்று. வறை என்ற உடனேயே எனக்கு அது வறையோட்டை நினைவுக்குக் கொண்டுவந்தது. செருவச்சட்டி என்ற பாத்திரத்தை/சொல்லை நானும் இளவயதில் பயன்படுத்தி இருக்கிறேன். பொருளரிந்து கொண்டேன்.

இப்படி பல சொற்களின் வேர் சொல்லை அறிந்தால் தான் மின்னொட்டு இல்லாமல் புதிய சொற்களை உருவாக்க முடியும். அதற்கு ஒரு வேர்ச்சொல் அகராதி அவசியம் வேண்டும்.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

ஆகா! ஆகா! ஆகா! எப்பேர்ப்பட்ட தமிழ் ஆராய்ச்சி! ஐயா! இந்தச் சொற்களையெல்லாம் தமிழ் விக்சனரியில் பதிவிட விரும்புகிறேன். செய்யட்டுமா?

இராம.கி said...

அன்பிற்குரிய ஞானப்பிரகாசன்,

உங்கள் விருப்பம் போற் செய்யுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

ப.பாண்டியராஜா said...

அன்புள்ள ஐயா! இப்படி ஒரு தளம் இருப்பது எனக்கு இப்போதுதான் தெரியவந்தது - அதுவும் தங்கள் மூலமாகவே. ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். எத்தனை வகை கருத்துகள்! ஒவ்வொன்றும் எத்துணை ஆழம்! படித்து ஏதேனும் சொல்லப் பல நாட்களாகும். உங்கள் தளத்துக்கென்றே ஒரு note book ஒதுக்கியுள்ளேன். படித்துப் படித்துக் குறித்துக்கொள்ள. அன்புடன், ப.பாண்டியராஜா

இ.பு.ஞானப்பிரகாசன் said...

இப்பொழுதுதான் தங்கள் பதில் பார்த்தேன். நன்றி ஐயா! விரைவில் செய்கிறேன்!

Unknown said...

அய்யா
சாத்தார>இந்த சொல்லை முழுமையா விளக்கவும்

இராம.கி said...

http://valavu.blogspot.com/2018/07/1.html
http://valavu.blogspot.com/2018/07/2.html
https://valavu.blogspot.com/2018/09/3.html
https://valavu.blogspot.com/2018/09/4_14.html
https://valavu.blogspot.com/2018/09/5.html
https://valavu.blogspot.com/2018/09/6.html