Tuesday, April 04, 2006

புகை

அந்தப் பழக்கம் நுட்பியல் (technology) படிப்பின் முதலாண்டில் எற்பட்டது. எப்படி வந்தது என்று இப்பொழுது நினைவில்லை.

நண்பர்கள் அளித்த ஊக்கமா, அல்லது வெறும் வறட்டு படியமா (fashion), இல்லை ஒருவித உணர்வின் ஏங்கலா என்று இப்பொழுது சொல்ல முடியாது இருக்கிறேன். ஆனாலும் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியாக அப் பழக்கம் எனக்குள் வளர்ந்தது. முதலில் சார்மினார் தொடங்கி, அடுத்து மார்க்கோ போலோ, பின் வில்சு, கடைசியில் கத்திரி (சிசர்சு) எனப் பொரிந்தை மாறியதே மிச்சம்; (பெயரை நெருப்பால் பொரித்து எழுதுவதைத் தான் brand என்று ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது தானே பொரிந்தது கண்ணிற்குச் சட்டெனப் புலப்படும்?) கையில் பிடித்தது, முதலில் ஒன்று இரண்டானது; இரண்டு நாலானது; அப்புறம் பத்தானது; இப்படி ஒரு பெட்டி, 2 பெட்டி எனப் போய், ஒரு நாளைக்கு 3 பெட்டி வரைக்கும் அப்பழக்கம் நீண்டது.

இப்பழக்கம் எப்படியெல்லாம் ஒருவனை நிறைக்கும் என்பதை நுகர்ந்தே அறிந்தவன் நான். (நுகருதல் = முகருதல் = to smell; முகல் என்பது அடிச்சொல். smell எனும் ஆங்கிலச் சொல்லுக்கு அப்படியே இணையானது. நாம் மணம், நாற்றம் என்ற சொற்களை இன்று பயனாக்குகிறோம். முகலும் அதற்கு இணையானதே. முகல்ப்பது மோப்பதாகும். முகல்க்குதல் = மோந்துபார்த்தல். smoke உம் முகல்(ர்)க்கல் வினையில் எழுந்தகருத்தே. ஒரேபொருளை 2 விதம் பார்ப்பதில்லையா? இந்தையிரோப்பியக் கருத்து ஒருவிதம்; நம்முடையது இன்னொன்று. இப்பழக்கம் வெளியே இருந்து தம்மிடம் வந்துசேர்ந்த போது, முகர்க்கும் கருத்தில் பார்த்தது இந்தோயிரோப்பியக் கிளை; உயரும் கருத்தில் பார்த்தது தமிழியக் கிளை. புகுதல் = உயருதல் பொருள் கொள்ளூம்; புகு+ஐ = புகை; அதாவது உயர்ந்து போகும் ஆவி.)

கல்லூரிக் காலத்தில் இப்படி ஒரு புகைப் பழக்கம் என்னுள் தொற்றியதை என் குடும்பத்தினர் யாரும் அறியார். வேறென்ன? கண்டிப்பு மிகுந்த தந்தையிடம் இதைக் கூவியழைத்தா சொல்லமுடியும்? கூட இருந்த நெருங்கிய நண்பர் மட்டுமே, இப்பழக்கத்தின் முழுவீச்சை என்னில் கண்டார். விட முடியாது இருந்தேன் என்பதைக் காட்டிலும் விட வேண்டும் என்று தோன்றாது இருந்தேன் என்பதே சரி.

ஐந்தாண்டுப் படிப்பில், தமிழ் ஆய்வு, நூற்றுக் கணக்கான நண்பர், செம்மீன் (இறால் மீன்) மேல் ஈர்ப்பு, பல்நூறு திரைப் படங்கள், கணக்கற்ற கால் நடைகள் (ஆடுமாடு இல்லைங்க, காலாலே நடக்குறது), ஓரளவு குமுகப் பணி, தலைநிறைய இடதுசாரி மெய்யியல், இன்னும் பலப்பல கற்று, கூடவே கொஞ்சூண்டு வேதிநுட்பியலும் கற்று வெளிவந்த போதும், இப்பழக்கம் ஓயவில்லை; என்னைத் தொடர்ந்து வந்தது.

மறுபடியும் 2 ஆண்டு முதுநிலை வேதிநுட்பியல்; இம்முறை சென்னையில் ஒரு காட்டினுள் இருக்கும் இந்திய நுட்பியற் கழகம். முதலில் இடது சாரிப் போக்கின் வேகத்தில் வலுக்கட்டாயமாகத் தமிழை இறுத்தினேன் (இற்றுதல்> இறுத்தல் = to end). 6 மாதத்திற்கு, மேலோட்டமாய் அன்றிப் படிப்பின் பக்கமே தலைகாட்ட வில்லை. புகை மற்றும் புரட்சிப் போதையில் ஊரெங்கும் சுற்றினேன். யாராரோ பெருந்தலைகளைச் சந்தித்தேன். "இதுவே என் எதிர்காலம்" என்று செம்மாந்திருந்தேன். அச் செம்மாப்பு சரிய, நெடுங் காலம் ஆகவில்லை. பலரின் உண்மைமுகம் வெளிப்பட்டது. ஏமாற்றம் கூடக் கூடத் தலையில் குவிந்துகிடந்த இடதுசாரித் தலைக்கனம் குறைந்தது. "உருப் படியான வேலை பார்ப்போம்" என்று 2 ஆம் துவ்வத்தில் (semester)  நுட்பியலில் ஆழத் தொடங்கினேன். கூடவே இப்பழக்கம் குறைந்தது. ஆனாலும் விட்டுத் தொலைக்கவில்லை.

வேலைகிடைத்துத் தூத்துக்குடி வந்து திருமணம் ஆனபின்னும் பழக்கம் தொடர்ந்தது. மனையாள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை; ”இவன் ஒரு திருத்த முடியாத ’வாலி’ " என்று தண்ணீர் தெளித்ததாலோ என்னவோ,  பொறுத்துக் கொண்டாள். வீட்டில் அவளுக்கு முன் புகைபிடிக்க வெட்கப் பட்டு, வெளியே மட்டுமே இப்பழக்கத்தை வைத்துக் கொண்டேன். ஒரு நாளைக்கு 5, 10 என்ற நிலையில் அப்போது இருந்தேன். மகன் பிறந்தான். பொறுப்புக் கூடியது மாதிரித் தோற்றம் ஏற்பட்டது.

கும்பணியின் குடியிருப்பில் ஒரு அடுக்கு மாடியில் முதல் அடுக்கில் என் வீடு இருந்தது. வீட்டின் எதிரே அதுவரை மணம் செய்துகொள்ளா நண்பர் இருவர் இருந்தார். அவரைப் பார்க்க மற்ற நண்பரும் வருவதுண்டு. 2 வீட்டிற்கும் முன்னுள்ள முகப்பில் குட்டைச் சுவரின் விளிம்பில் உட்கார்ந்து, இப்புகையை முகர்ந்து, உரையாடியிருப்பது நண்பரின் பழக்கம். நான்மட்டும் வீட்டு முகப்பில் புகைப்பது கிடையாது. வெட்கம் பற்றி முன்சொன்னேன் அல்லவா?

திணைக்களக் கட்டுமானம் (construction of the plant) முடிந்து முந்துறுக்கும் பருவம் (commissioning phase) முடிந்து, ஒருவழியாக மாறுகைக்கென விளைக்கும் பருவம் (commercial production phase) வந்து விட்ட காலம். இருந்தாலும் பொறிஞர் பலரும் நேரம்காலம் தெரியாமல், பட்டறையின் (factory) உள்ளே கண்ட நேரம் போய், கண்ட நேரம் வெளியே வந்து, ஈடுபட்டுக் கொண்டிருந்தார்; குவித வேலை (shift work) (வேலைகளை இனம்பிரித்துக் குவித்துக் கொண்ட வேலை குவித வேலை; ஆங்கிலப் பொருளும் இது தான்.) என்பதெலாம் பெயருக்குத் தான்; வேலைப்போதை, புகைப்பதைப் போல் விடமுடியாப் பழக்கம்; சொல்லித் தெரிவதில்லை பொறிஞரின் கலை.

இக்கால கட்டத்தில் தான், சரியான வேளை வந்தது.

திணைக்களத்திற்கு, முதல்நாள் இரவு சென்ற நான், 18 மணி நேரம் கழித்து, அடுத்தநாள் மாலை 4.00 மணிக்குத் திரும்பி வந்தேன். வரும்வழியில், குடியிருப்பில் உள்ள வணிக வளாகத்தின் பெட்டிக் கடையில், "கத்திரி" வாங்கி இழுத்து விட்டே வந்தேன்.

மறுபடியும் நடை. மெதுவாக வீட்டிற்குவந்து பார்த்தால், வீட்டின் முகப்பில் கிடக்கிற தீய்ந்துபோன வெண்சுருட்டு (cigerette) அடிக்கட்டையை எடுத்து என் இரண்டரை அகவை மகன் வாய்க்குள்வைத்து இழுத்திழுத்துப் பார்த்தான்; புகை வரவில்லை.

எனக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் வலி. அருகில் வதியும் என் நண்பரை இவன் பார்த்திருக்க வேண்டும். எப் பழக்கத்தையும் அப்படியே திருப்பிச்செய்து தெரிந்துகொள்ளத் துடிக்கும் அகவை அல்லவா? குழந்தை அப்படியே செய்தது. இதை அதட்டிச் சரி செய்யலாம் தான். ஆனால் எந்த முகத்தோடு?

அடுத்த நாள் நிறுத்திவிட்டேன்.

ஆயிற்று 28 ஆண்டுகள். எல்லாவற்றிற்கும் வேளை உண்டல்லவா?

அன்புடன்,
இராம.கி.

பி.கு. பின்னால் ஒருமுறை எனக்கும் என் மக்களுக்கும் நடந்த உரையாடல்:

"தம்பிகளா, ஏதேனும் இப்படிப் பழக்கம் இருக்கா?" - இது நான்.
"என்னப்பா நீங்க, உங்களை மாதிரி நினைச்சுக்கிட்டீங்களா? அப்படி எல்லாம் கிடையாது" - இது என் மக்கள். இக்காலப் பிள்ளைகளுக்கு மப்பு கொஞ்சம் கூடத் தாங்க! :-)

7 comments:

வசந்தன்(Vasanthan) said...

ஒரேயடியாக நிறுத்திவிட்டீர்களா?
புகைப்பழக்கத்தை நிறுத்த ஆலோசனையென்று சொல்பவர்கள்கூட படிப்படியாகக் குறைத்துவந்து பின் நிறுத்துவதே சாத்தியம் (நல்லதும்கூட) என்பதுபோல்தானே சொல்கிறார்கள்?

சிவக்குமார் (Sivakumar) said...

சுவையான (புகையான? :-)) பதிவு.

இப்னு ஹம்துன் said...

புகைப்பழக்கம் பற்றிய என் கவிதை இது!http://ezuthovian.blogspot.com/2005/05/blog-post.html

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்கள் காலச்சுழலில் அழைத்துச் சென்று நல்ல விதயம் சொல்லி முடித்த பாங்கும் உரையும் மிக நன்று.

Mookku Sundar said...

வசந்தன்,

புகைப்பதை நிறுத்த ஒரே வழி, அதை உடனடியாக நிறுத்துவதுதான்.
படிப்படியாக நிறுத்துவது மிக மிக மிக கடினம்.

என் அனுபவம்:

http://mynose.blogspot.com/2004/04/blog-post.html

இராம.கி said...

அன்பிற்குரிய வசந்தன்,

நான் ஒன்றும் திட்டமிட்டு நிறுத்தவில்லை. அந்தக் கணம் தோன்றியது. நிறுத்திவிட்டேன். அவ்வளவு தான்.

மற்ற நண்பர்கள் இங்கு சொன்னது போல், ஒரேயடியாக நிறுத்தினால் தான் நிறுத்த முடியும் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அன்பிற்குரிய பெருவிஜயன்,

வருகைக்கு நன்றி.

அன்பிற்குரிய அபிராமம்,

இன்னும் ஏதோ ஒரு நாளில் நீங்கள் நிறுத்த முடியும். ஆனால் உங்களின் ஆழ்மனத்திற்கு அது உறுத்த வேண்டும்.

அன்பிற்குரிய இப்னு ஹம்துன்,

உங்கள் வலைப்பதிவு சென்று படித்தேன். வாழ்த்துக்கள்.

அன்பிற்குரிய செல்வராஜ்,

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

அன்பிற்குரிய மூக்கு சுந்தர்,

உங்களின் பட்டறிவும் உடனே விடும்படித்தான் சொல்லுகிறது.

அன்பிற்குரிய தமிழ்க் குழ்ந்தை,

கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

அன்பிற்குரிய வித்யா,

வெறுமே தூவற்சில் (pencil) பிடித்ததற்கே இவ்வளவா? உங்கள் வீட்டின் கண்டிப்பு கூடப் போலிருக்கிறது.

வருகைக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

தருமி said...

ஒரேயடியாக நிறுத்தினால் தான் நிறுத்த முடியும் என்பது என் பட்டறிவு ( அனுபவம்...இராமகி அவர்கள் பதிவுக்கு வந்தால் நல்ல தமிழில் எழுத ஒரு முனைப்பு வருமோ?)நான் பட்டதை, என் பட்டறிவை இங்கே எழுதியுள்ளேன்.